ஏப்ரல், 2010 க்கான தொகுப்பு

கடிதம் – 2

Posted: ஏப்ரல் 29, 2010 in கடிதம்

///

க.மதிவாணன்
freewebs.com/kmathivanan
mathi1dsm@yahoo.co.in
117.206.113.184

அன்பிற்கினிய தோழர் அவர்களுக்கு, வணக்கம்!
இன்று தோழர் ஆதி அவர்கள் தங்களின் இணையத்தளத்தை எனக்கு அறிமுகம் செய்தார். தங்களின் பதிப்பு மிக அருமையாக இருந்தது. பல்வேறு தகவல்களை மிக எளிமையாக இயல்பான தமிழில் பதிவு செய்து செய்துள்ளீர்கள். இனி எனது அன்றாட வலை உலாவுதலில் தங்கள் வலை தளமும் இருக்கும்.

தோழமையுடன்
க.மதிவாணன்
Deputy system manager
O/o the Supdt of POs
sivaganga Division
sivaganga 630561

///

அன்புள்ள மதிவாணன்

தங்கள் வருகைக்கு நன்றி.

 நான் சிறுவயதில் மேஜிக் நிபுணர் லால் அவர்களின் மேஜிக் நிகழ்ச்சியை பார்த்திருக்கிறேன். முதல் காட்சியில் ஒரே மதத்தைச் சேர்ந்த பலர் கூடி ஒரு சிறு குவளையில் தண்ணீரை அள்ளி குடத்தை நிரப்புவார்கள். மேஜிக் லால் அந்த குடத்தை ‘ஓம் சக்தி’ என்று சொல்லி கவிழ்ப்பார் தண்ணீர் கொட்டிவிடும். திரும்ப திரும்ப ‘ஓம் சக்தி’ சொல்லுவார் காலியான குடத்திலிருந்து தண்ணீர் கொட்டாது.

 அடுத்த காட்சியில் பல மதத்தவர்கள் ஒன்று சேர்ந்து குவளையில் தண்ணீர் எடுத்து குடத்தில் ஊற்றுவார்கள் லால் ‘ஓம் சக்தி’ என்று சொல்லிக் கொண்டே குடத்தை கவிழ்ப்பார் தண்ணீர் கொட்டிவிடும். காலியான குடத்தை வைத்துக்கொண்டு மீண்டும் கவிழ்ப்பார் தண்ணீர் கொட்டோ கொட்டென்று கொட்டும்.  மத ஒற்றுமைக்காக இந்நிகழ்ச்சி அவரின் மேஜிக் ஷோவில் சேர்க்கப்பட்டியிருக்கும்.

 நிஜவாழ்வில் நான் நேரில் காலியான மனித மனங்களிலிருந்தும் ஒற்றுமை என்ற தண்ணீர் கொட்டுவதை மானாமதுரையில் வேலை செய்யும்போது உணர்ந்தேன்.

 ஆதிமூலம் மற்றும் நணப்ர்களுடன் ஒரே அறையில் தங்கியிருந்தேன். எங்கள் படிப்பு மேஜையில் மார்க்ஸ், லெனின், ஏங்கல்ஸ் படங்களை எங்களின் சிந்தனைக்கு வழிகாட்டியாக வைத்திருப்போம்.

பல தோழர்கள் மானாமதுரையிலிருந்து ASP-க்களாக  SP-களாக APMG -களாக பதவி உயர்வு பெற்று சென்றதற்கு காரணம் எங்கள் வாழ்வின் வழிகாட்டியாக K.R என்ற அற்புத மனிதர் கலந்திருக்கிறார். அந்த மானமதுரைக் கோட்டம் தங்களை போன்ற இளைஞர்களை இன்னும் சிறப்பானவர்களாக ஆக்கும் என்று நம்புகிறேன்.

 அடிக்கடி தொடர்பு கொள்வோம்…

கடிதம் – 1

Posted: ஏப்ரல் 28, 2010 in கடிதம்

///

Abdul Rasheed from Qatar
arafaa_03@ymail.com
89.211.163.224

Dear Kadar Bhai

You have taken me back 30 years! I wonder how could you maintain such a relation with
all our colleagues!!. I am very weak. No one could forget the golden time of
his college period. I too. Very nice to see our old photographs. An unknown feelings
of eager to go back prevails in my heart!!. Keep in touch. Add me also to your Jamaliyan
group.

So surprising is your present photograph. You were one of the slim personality in our group!!!

Convey my regards to Jalal, Raja Mohamed and others in Singapore, India else where

Abdul Rasheed

///

அன்புள்ள ரசீது…

தங்களின் வருககைக்கு நன்றி.

வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் உறவும் பிரிவும் மட்டும்தான் என்று சொல்வார்கள். ஆனாலும் இந்தப் பிரிவுக்குத்தான் எவ்வளவு எடை கூடுதலாக உள்ளது. 30 வருடங்களுக்குப் பிறகு தங்களுடன் தொடர்பு கொள்ள முடிந்ததற்கு ஜலாலுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

ஜலாலும் நீங்களும் ஒவ்வொரு நாளும் விதவிதமான கெட்அப்களில் மெயின்கார்டு கேட் புறப்படும் போது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். (ஜலால் அப்படியே இருக்கிறார் தெரியுமா!) வார்டன் ‘ஷா’ எதிரில் வந்து நிற்பாரோ என்று பயந்து பயந்து ஹாஸ்டலுக்குள் நுழைவது…

Study hours-ல் பெரும்பாலும் தலை சீவிக் கொண்டிருப்பது, இருப்புச் சக்கரங்களின் உக்கிரமான ‘தடக் தடக்’ சத்தத்துடன் ஆரம்பமாகும் ஷோலே ரயில் காட்சியை அடிக்கடி மிஸ் பண்ணி கெயிட்டி திரையரங்கில் பல தடவைகள் அமிதாப் – ஜெயமாதுரி, தர்மேந்திரா – ஹேமாமாலினி உண்மையாகிப்போன காதலை திரையில் பார்த்து ரசித்தது…

நாம் எப்போதாவது கொடுக்கும் 5ரூபாய்க்காக ஹாஸ்டல் கேட்டை வணக்கம் போட்டு திறந்துவிடும் மீசைக் கோனாரின் முகம்…

கிட்டினியும், ஈரலும் தின்பதற்காக நாம் எடுத்துக் கொண்ட மெஸ் செக்கரட்டரி போஸ்ட் …

இப்படி எத்தனையோ

மறக்க முடியுமா?

காதரை மறந்தாலும் ஒப்பிலான் கடலை மறக்க முடியுமா என்ற தங்களின் ஆட்டோகிராப் இன்னும் என்னிடம் உள்ளது.

சந்திப்போம்….

(புகைப்படத்தில் நானும் பாவ்லா நண்பர் ஹாஜாவும்)

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் புதுமுக வகுப்பு விடுதி அறை எண் 124, நான் கொண்டு சென்ற ரேடியோ முதல் நாளே பாட மறுத்தது. நான் அறை நண்பர் ராஜாமுஹம்மதிடம் ரேடியோவை ‘ஒக்குட’ டோல்கேட் கொண்டு செல்வோம் வருகிறீர்களா என்றேன்.

அவர் நான் சொல்வதைக் கேட்டுவிட்டு என்னவோ ஏதோ என்று திருதிருவென முழித்தார், நான் திரும்பவும் ஒக்குட என்றேன்.

 கொஞ்சநேரம் கழித்து ஓ சரி பண்ணவா? என்றார்.

இராமநாதபுரம் நாட்டார் வழக்குச் சொல் ‘ஒக்குட’ பெரம்பலூர்க்காரருக்கு தெரியவில்லை

இங்கிருந்துதான் எனது வழக்குச் சொல் அர்த்தம் தேடும் படலம் ஆரம்பித்தது.

பந்திக்கு முந்து, படைக்குப் பிந்து (பந்திக்கு முந்தும் படைக்கு பிந்தும் வலது கை)

பலா மரம் கண்ட தச்சன் ஒரு மரத்தையும் வெட்டான் (பலா மரம் கண்ட தச்சன் வேறு ஒரு மரத்தையும் வெட்டமாட்டான் ஏனெனில் பலா மரமே எல்லா தச்சு வேலைகளுக்கும் போதுமானது)

மொங்கான் போடுதல் (பள்ளத்தை நிரப்புதல்)

சகட்டு மேனிக்கு (சக்கரம் மேடு பள்ளம் அறியாது)

கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு (பெரிய தேங்காயை எடுத்து பிள்ளையாருக்கு கடை – பெரிய )

இந்தத் தகவல்களையெல்லாம் நான் குறித்து வைத்துக் கொண்டு திரு.மாசிலா அன்பழகன் கவிமாலை காப்பாளர் பெப்ரவரி கவிமாலையை என்னிடம் வழி நடத்தச் சொன்னவுடன் வரிசையாக ஒப்புவித்தேன்.

விக்டர் ஹ்யூகோவிலிருந்து ஜெயகாந்தனை தொட்டு ஒரு கதை சொன்னேன். திரு. கோவிந்தராஜ் தான் வடித்த கவிதையில் கவிமாலைக் கவிஞர்கள் ஒவ்வொருவரையும் தொட்டு கவிபாடினார். என்னை விட்டு விட்டார். என்ன கோவிந்தராஜ் என் பெயரை விட்டுவிட்டீர்கள் நாம் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் மறந்து விட்டீர்களா? என்று சுவைக்காக கூறினேன், அப்படியே கடலாடி உங்கள் ஊர் அதன் அர்த்தம் என்ன என்றேன்…

கடலுக்குப் பக்கத்தில் உள்ளதால் கடலாடி என்றார், அதுவல்ல நண்பா அது ஒரு நெருஞ்சிச் செடி என்றேன் எம்ஜியாரும் எம் ஆர் ராதாவும் நேருக்கு நேர் சுட்டுக் கொண்டும் இருவர் உயிருக்கும் ஆபத்தில்லை ஏன் என்ற கேள்வியுடன் நான் சம்பவங்களை இணைத்ததும் சபா இராஜேந்திரன் பலே பலே என்றார்.

கலகலப்புடன் நிகழ்ச்சி களைகட்டியது சிறப்பு சொற்பொழிவாளர் திரு.சுவாமிநாதன் தேசிய பல்கலைக் கழகம் உரையில்தான் மனிதர் உருக்கிவிட்டார்.

இப்படிப்பட்ட பேச்சுக்களை கேட்க வேண்டும் என்று மாதக் கடைசி சனிக்கிழமையை கவிமாலைக்கு ஒதுக்கி வைத்தால் அன்று ஏதாவதொரு வேலை வந்து நிற்கிறது.

வரலாறு முழுவதும் பார்த்தால் வேலையின் கூறுகள் பிரிப்பதிலேயே மனிதன் காலத்தை செலவிட்டிருக்கிறான் என்பது தெரியவரும். வேலை என்பது பல கூறுகளைக் கொண்டது.

நாள்தோறும் செய்ய வேண்டிய பணிகளும் ஓய்வும் அடுத்து முன்னேற்றமும் உள்ளக் களிப்பும் இதில் பணி, ஓய்வு, முன்னேற்றம் இருந்தும் உள்ளக் களிப்பு இல்லாதவர்கள் அநேகம்பேர், எல்லாத் தொழில்களிலும் உண்டு. இந்த நான்காவது உள்ளக் களிப்பு எனக்கு இலக்கிய நண்பர்களை சந்திக்கும் போதுதான் ஏற்படுகிறது. அப்படி உள்ளக் களிப்பையும் சேர்த்துக் கொண்டாடும் பலரில் என் பால்ய நண்பர் ஹாஜாவும் ஒருவர். இதை தொடர்ந்து செய்பதற்கு பாவ்லா பண்ணவேண்டும். பாவ்லா என்றால் BAWALA (balance of work and life association)

ஒவ்வொரு மாதமும் சந்திக்கக் கூடிய உள்ளக்களிப்பு நபர்களுக்கு நேரம் ஒதுக்கி கட்டாயப் பழக்கத்தை கொண்டு வருவதுதான் BAWALA

 

ஒரு நாள் அவர் கேட்டார் நீங்கள் Impressionism, cubism, verticism, futurism, expressionsm, surealism  அனைத்தும் பேசுகிறீர்கள் நான் ஒரு கேள்வி கேட்கிறேன்

தோட்டத்து பூவினில் இல்லாததது எந்த பாட்டிலும் ஏட்டிலும் சொல்லாலது

அது எது? அது எது! எது அது என்றார் நான் சொன்ன பதில் இன்னும் அவருக்கு திருப்தி தரவில்லை

சரியான பதில் உங்களுக்குத் தெரியுமா?…

‘எனக்குள் இருப்பவள்’
‘வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும்’
‘மனிதர்கள் மத்தியில்’
‘சந்தியா’
‘சுகபோக தீவுகள்’
‘பூக்களை மிதிப்பவர்கள்’
‘குமாரசாமியின் பகல்பொழுது’

கதை சொல்வது மாதிரி இருக்கிறதல்லவா…

சிறுகதை, நாவல், சமூக விமர்சனக் கட்டுரைகள் என்று பல துறைகளில் முத்திரை பதித்த பிரபஞ்சனின் படைப்புகள்தான் இவைகள்.

தமிழக அரசும், புதுச்சேரி அரசும் இவரை சிறந்த எழுத்தாளர் என்று கௌரவித்துள்ளது.

என்னற்ற இலக்கிய மரியாதை பெற்றவர்.

அழகிய தமிழ், அங்கத நடை, அளவான பாத்திர படைப்பு, மனித நேயத்தை உன்னதப்படுத்தும் லட்சியம் இவரது எழுத்தின் சிறப்பு…

மனித சுபாவம் எல்லா எல்லா காலங்களிலும். எல்லா தேசத்துக்கும் இலக்கியத்தின் கருப்பொருளாக இருந்து வருவதை பார்க்கிறோம். உருவம், யுக்திகள் மாறலாம். இது மட்டும் மாறுவதில்லை. மனித சுபாவத்தில் இத்தனை சுழிப்புகள் இருப்பதாலோ என்னவோ, இத்தனை காதல் இத்தனை காரியங்கள் இங்கு சாத்தியமாகின்றன.

பல ஆயிரம் மைல்களை கடந்து வந்த ஐரோப்பியனுக்கும், இந்த மண்ணிலேயே பிறந்த தமிழனுக்குள்ளும் செயல்பட்ட மனித சுபாவத்தை உடைத்துப் பார்த்த இவரது நாவல் ”வானம் வசப்படும்” சாகித்திய அகடாமி பரிசு பெற்றது.

சிறுகதைகள், நாவல்களும் ஒரு அனுபவத்துளி மட்டுமல்ல அது ஒரு முழு வாழ்வின் சிறு துளி. அதில் கூறப்பட்ட தளங்களுக்குள்ளே ஒரு முழு வாழ்வை நம் நினைவில் விரித்துக்கொள்ள முடிந்த எழுத்துக்கள் பிரபஞ்சனுடையவை…

வாருங்கள் …

 

எதிர்வரும் வெள்ளி (23.04.2010) மாலை 6.30மணிக்கு தேசிய நூலகத்திலும்
திங்கள் (26.04.2010) மாலை 7.00மணிக்கு ஆங் மோ கியோ நூலகத்திலும்
பிரபஞ்சன் மற்றும் ஷாஜியின் நினைவுகளை நிரப்பிக்கொள்ள…

அப்துல்காதர் ஷாநவாஸ்

///

N.V.Sathiyamurthy
sathiyamozhi@yahoo.com
220.255.78.115

Dear brother Nawas, Today only I had time to read your articles “ROJAAK’ through Uyirosai.Really very nice. This is nothing but the history of your experiences. I also an old
student of same K.M.C of Adirampattinam..you may know one of our Asst Prof of History Mr.Batcha
He will always say THE HISTORY IS NOTHIG BUT A BUNDLE OF GAS WITH FALSE. But our HOD of History Pro.Mr.Jeyaraj always say HISTORY IS THE RECORD OF PAST RECORDS WITH FACTS & TRUES. I agree with this. Because articles reflects what you read everyday,what you experience in your day-to-day life-what you earn & learn from your circle…really superb.You touch all the topics..your way of expression very interesting.. well done..keep it up..In Tamil Naadu we are telling that MADURAI is the THOONGAA NAGAR. After I came to singapore I thought singapore but after read your article I wonder how it goes TAIWAN.. I SALUTE TAIWANESE ( may be if they spend their time in PUB I withrew my salute).Cell phone is sucking our time,money & health..there is no compromise…As a Restaurant CEO your tasty expression of fish curry is more better than Naanchil(li) Naadan..I really contribute your writings to (y)our Brother-in-Law Oppilaan A.Mohammed sithik( he is really a OPPILLAN THAAN).Your thinkings about Kavidhai is also very interesting to read (You can only write like this).Your comments,opinion on Mr.K.T.M.Iqbaal,Rahmaan,view on 4D.. I & singapore readers will be very thankful to you if you publish all these in one collection..with thanks & expectations…N.V.Sathiyamurthy

////

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

பிரான்ஸ் எழுத்தாளர் ஆன்றே ழீட் சொல்கிறார், சில ஆயிரம் பேர்கள் நான் எழுதிய சில நாவல்களை படித்திருப்பார்கள், சில ஆயிரம் பேர்களில் நூறு ஆசாமிகளாவது நான் சொல்வதில் ஏதோ அர்த்தம் இருக்கிறது என்று நினைப்பார்கள், அந்த நூறு ஆசாமிகளில் ஒரே ஒருவர் மட்டும் நான் சொல்வது சரிதான் என்பார். அது வேறு யாருமில்லை நான்தான் என்றார்.

இதுவரை நான் எழுதிய பத்திகளை தொடர்ந்து படித்து நீங்களும் நான் சொல்வது சரிதான் என்று சொல்வது எனக்கு இரண்டாவது தடவை பொன்னாடை போர்த்திய உணர்வு ஏற்படுகிறது (முதல் தடவை எப்போது என்று தங்களுக்கு தெரியும்!)

நான் ‘ஸத்து கோஸம் ஸத்து துளோர்’ அனுபவக் குறிப்புகளை ஒவ்வொரு மாதமும் எழுதுவதற்கு கவிமாலையில் உங்களிடமிருந்தும் ஊட்டச்சத்து கிடைத்தது.

எளிய அனுபவங்களாக என்னில் நிரம்பியிருக்கும் உணர்வின் விவேகத்தின் ஒரு நுனியை அனுபவக் குறிப்புகள் என்ற வடிவத்தை, வெறும் தகவல் என்ற நிலையில் விடுபட்டு வாசகனின் அனுபவமாக மாற்றும் முயற்சியில் ஒரு 30 நிகழ்வுகளை எழுதியுள்ளேன்.

இப்போதைக்கு கிடைத்துள்ள தங்களின் பின்னூட்டம் இன்னும் என்னை தீவிரமாக இயங்க வைக்கிறது மேலும்…

இந்திய சமையல் கலை ஒரு Jigsaw விடைகாண முடியாத கேள்விகளைக் கொண்டது. ஆனால் மிகவும் எளிதாக சமைத்துவிடலாம், விடை காண முடியாத கேள்விகளுக்குக் காரணம் சமையல் கலையின் பல பதிவு செய்யப்படாமல் விடப்பட்டிருக்கிறது. வம்சா வழியாக தொடரும் கலை ஞபாகத்திலிருந்து அவ்வப்போது எடுத்தாளப்படுகிறது.

தான் கற்ற கலையை மற்றவர்க்குக் கற்றுக் கொடுக்காமல் விடுபட்ட எத்தனையோ துறைகளில் சமையல் கலையும் சேர்ந்தது தான், அதனால் தான் இந்திய சமையல் கலை ஆயிரம் வருட பாரம்பரியம் இருந்தாலும் பிரான்ஸ், சீனா நாடுகளின் சமையல் கலையைப் போல் புகழ் பெற முடியவில்லை.

நான் சிறுவயதில் என் தாயார் நெல்லுமாவில் களி கிண்டுவதை பார்த்திருக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் பதம் கட்டியாகிக் கொண்டு வரும், அகப்பைக் கம்பால் குறுக்காக ஒரு கீறு கீறுவார். தண்ணீராக இருந்தால் கீரல் மறைந்துவிடும் கட்டி பதமாகிப் போனல் மறையாது. கீறிய கோடு இரண்டு நொடிகள் கழித்து மறைந்தால் அதுதான் இறக்குவதற்கு சரியான தருணம்.

இப்படியான புலன் பதிவுகள் நான் ஈடுபட்டிருக்கும் ரொட்டி பரோட்டா கடை அனுபவத்தில் நிறையக் கிடைத்தன. ஒவ்வொரு இடத்திலும் பரோட்டா வெவ்வேறு ருசியில், தரத்தில் வித்தியாசப் படுவதற்கு அந்ததந்த இடங்களில் வேலை செய்யும் நபர்களின் சமையல் கலையே காரணமாக அமைகிறது.

ஆனால் சிங்கப்பூரில் இந்திய சமையல்கலை மற்ற தெற்காசிய நாடுகளின் சமையல் கலையோடு எவ்வாறு இணைந்து விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது என்ற பதிவு இதுவரை கிடைக்கவில்லை ஒரு சிலரே முயற்சித்துள்ளனர்.

மேலை நாட்டு சமையலுடன் தெற்காசிய Fusion உணவுகளைப் பற்றிய புத்தகங்கள் தற்போது நிறைய வர ஆரம்பித்துள்ளன. கடந்த 10 வருடங்களில் வருடத்திற்கு இரண்டு புத்தகங்கள்தான் சிங்கப்பூரில் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் 2008, 2009 வருடங்களில் சராசரி 18 சமையல் குறிப்பு புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. டைம் புக் ஸ்டோர் சிங்கப்பூர் உள்ளுர் எழுத்தாளர்கள் புத்தகங்கள் ஆசிய அளவில் 60% உயர்ந்திருப்பதாக சொல்கிறது.

Singapore Heritage Food
ஆசிரியர் Silvia Tan
16000 பிரதிகள் விற்றுள்ளன

“Sit Kitchen one Passion” என்ற புத்தகத்தை சொந்தமாகவே 40000 வெள்ளி செலவு செய்து புதிப்பித்துள்ளார். Mrs.Low Siew nighee From V/P.Catholic  Junior College

Mrs.Irene Jansew 25000 வெள்ளி செலவு செய்து Foood inspiration  வெளியிட்டிருக்கிறார்.

இதில் குறிப்பிட வேண்டியது இவர்கள் அனைவருமே சமையல் துறை சாராதவர்கள்.

தங்களுடைய உணவுக் கலையில் புதிதாக வந்து சேர்ந்து கொண்ட அனைத்து விதமான உணவு வகைகளையும் ஆழ்ந்த ருசியுடன் எழுதியிருக்கிறார்.

நானும் ஸத்து கோஸம் ஸத்து துளோரில் பரோட்டாவை பதமாக எடுத்திருக்கிறேன்.

இந்த முயற்சிக்கு தாங்கள், நண்பர் பாலுமணிமாறன், பாண்டித்துரை மேலும் இதை உயிரோசையில் ( உயிரோசை வார தொகுப்பு)  தொடராக வெளியிட்டு வரும் திரு.மனுஸ்யபுத்திரன் பங்களிப்பை இங்கு பதிவு செய்வதுஎன் கடமையாகக் கருதுகிறேன்.

ஆமாம் நான் தங்களிடம் கேட்க நினைப்பது நீங்கள் மேடை ஏறி கவிதை வாசிக்க ஆரம்பித்தால் எல்லோர் முகத்திலும் ஒரு புன்னகை உதிக்கிறதே அது எதனால்…

“வேறு வழியில்லை வலி நிவாரணி மாத்திரைகளை தொடர்ந்து கொடுங்கள்”

 “அநேகமாக ஒரு வருடம் வலி இருக்கும் மற்றபடி “டெங்கி” மாதிரி ஆபத்தில்லை…

 ஊருக்கு புறப்பட்டு போவதற்கு முன்பு Tan Tok Seng மருத்துவமைனியல் 3 ஊசிகள் தொடர்ந்து போட்டுக் கொண்டால் பயமேயில்லை… இது தங்களுக்குத் தெரியாதா?

“ஜெயமோகனின் வலைத் தளத்தில் தன் மனைவிக்கு செய்த சிகிச்சையை பற்றி பத்தி எழுதியிருந்தார்”

 “உணவில் இக்காம்பிலிஸ் (நெத்திலிக் கருவாடு) சேர்த்துக் கொள்ளுங்கள் சரியாகிவிடும்…

 “ஆயர்வேதமே சிறந்தது,  டாபர் கம்பெனி மருந்துக்கள் உடனே வலியைக் குறைக்கின்றன”

“தாங்கள் இறை நம்பிக்கை உடையவரா அவனிடமே விட்டு விடுங்கள்”

“ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பாதிப்புகள் வருகின்றன, எனக்கு மூக்கு கறுத்துவிட்டது”

இவையெல்லாம் நான் என் மனைவிக்கு சிக்கன் குனியா காய்ச்சல் வந்து அவதிப்பட்டு மருந்து அலைந்தபோது நண்பர்களிடமிருந்து கிடைத்த தகவல்கள்.

பல விதமான சிகிச்சைகளுக்குப் பிறகு வலி நிவாரணி மாத்திரைகள்தான் பயனளித்தன. வலி நிவாரணிகளை எவ்வளவு நாட்கள் தொடர்வது, திருடனை பிடிக்க நாயை அனுப்பி திருடன் வெளியே ஓடிவிட்ட போதும் நாய் வீட்டுக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருந்தால் எப்படியிருக்கும்…

சிக்கன் குனியா பற்றி இன்னமும் என் கேள்விகளும், அதற்கான பதில்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன..

இந்த கொசுக்கள்தான் எவ்வளவு பேர் வாழ்வை நிலைகுலையச் செய்கின்றன. ஒவ்வொரு வருடமும் உலகில் 250 மில்லியன் மக்கள் மலேரியா நோயால் பாதிக்கப்படுகின்றனர். அதில் ஒரு மில்லியன் பேர் இறந்து விடுகிறார்கள்.

96.8 ரேடியோ செய்தியைக் கேட்டுக் கொண்டே தியோன் பாரு சிறுவர் பூங்காவினுள் நடந்து கொண்டிருந்தேன். சரியாக காலை எட்டு மணிக்கெல்லாம் மஞ்சள் பட்டாம்பூச்சிகள் கூட்டமாக பறந்து சென்று ஆங்காங்கே செடிகளை வட்டமிட்டன. தொடர்ந்து மூன்று நாட்களாக அவைகள் சரியான நேரத்திற்கு அந்த பகுதியை வட்டமிடுகின்றன. பட்சிகள் அனைத்திற்கும் தமிழில் பெயர் இருக்கிறது ஆனால் இந்த பட்டாம்பூச்சிகளுக்கு தமிழில் இதுவரை பெயர்கள் வைக்கப்படவில்லை வண்ணத்துப் பூச்சிகள் வண்ணங்களைக் கொண்டும், ஆங்கிலப் பெயர்களிலும் இயற்கை ஆர்வலர்கள் பெயரிட்டுக் கொள்கிறார்கள்.

அந்த மஞ்சள் பட்டாம்பூச்சிகளுடன் அதிசயமாக ஊசித் தட்டானும் கூடவே சென்றது, இந்த ஊசித் தட்டான் (Dragon flies) சிறுவயதிலிருந்தே நமக்கு பார்த்தவுடன் சிலிர்ப்பை ஏற்படுத்தக் கூடியவை இவைகளின் “லார்வா” பருவமே 6 மாதத்திலிருந்து 1 வருடம் வரை நீடிக்கும் ஆனால் முதிர்ந்து வெளியேறியவைகள் ஓரிரு வாரங்களே உயிரோடிருக்குமாம்.

சிங்கப்பூரில் கென்ட்ரிட்ஜ், பீஸான், தோபோயோ பூங்காக்களில் 40 வகையான தட்டாம்பூச்சிகள் இருப்பதாக அண்மையில் தேசிய சுற்றுப்புற வாரியம் ஆய்வு செய்திருக்கிறது. செயற்கை பூங்காக்களில் இவைகள் கொஞ்சம் தயங்கி தயங்கித்தான் இனப்பெருக்கம் செய்கின்றனவாம். இஸ்ரேலும் எகிப்தும் தட்டாம்பூச்சிகளை பூங்காக்களில் பெருமளவு இனப்பெருக்கம் செய்கின்றன.

இவைகளைப் பற்றி இவ்வளவு பில்டப் ஏன் எனில் இவைகள் டெங்கி மற்றம் மலேரியா கொசுக்களுக்காக தீராப் பசியை கொண்டுள்ளவைகள். தன்னுடைய 360º பார்வையில் கண்ணில்படும் ஒரு கொசுவையும் இவைகள் விட்டு வைக்காதாம்.. மனித இனத்திற்கு உதவும் இயற்கையின் இன்னொரு பரிமாணம் இந்த தட்டாம்பூச்சிகள்.

அப்படியே இன்னொரு நல்ல செய்தி British News Paper, the Daily Telegraph  பறக்கும் தடுப்பு மருந்து என்று ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. மலேரியா தடுப்பு மருந்தை உடம்பில் செலுத்தும் கொசுவை உற்பத்தி செய்ய ஜப்பான் பல்கலைகழகம் முனைந்துள்ளது.

ANOPHELES STEPHENSI கொசு Leishmania என்ற தடுப்பு மருந்தை எடுத்துச் செல்லும் வகையில் அதன் எச்சியில் (Saliva) DNA மாற்றம் செய்து வளர்க்கப்படுகின்றன இந்தவகைக் கொசுக்கள் 60 வகைகள் உள்ளனவாம்.

பேராசிரியர் Shigeto Yosida சொல்கிறார். இந்தவகைக் கொசுக்கள் நம்மை எத்தனை முறை கடித்தாலும் நம் உடம்பில் தடுப்பு மருந்து ஏற்றப்பட்டுக் கொண்டே வீரியம் கூடாமலும் குறையாமலும் இருக்குமாம். இவைகள் நம்மை கடித்தவுடன் மலேரியா கொசுக்களின் ஜம்பம் நம்மிடம் பலிக்காதாம்…

நம் பால்ய வயது விடுகதை “டாக்டர் வந்தாரு ஊசி போட்டாரு காசு வாங்காமல் பறந்து போனாரு என்பதற்கு இந்தக் கொசுக்கள்தான் சரியான விடையைச் சொல்லியிருக்கின்றன.

உதுமான் கனி நினைவுகள்

Posted: ஏப்ரல் 14, 2010 in கவிதை, பத்தி
குறிச்சொற்கள்:

வாழ்க்கையில் எந்தத் தனித்துவ பிரச்னை எழுந்தாலும், அதற்கு அதே தளத்தில் தீர்வு கிடைக்காது. அதை விட உயர்ந்த அல்லது ஆழமான தளத்தில்தான் அதற்கான தீர்வு காத்திருக்கும் என்பார்கள்.

புத்தகங்கள் அந்தத் தளத்தை எனக்கு அமைத்துக் கொடுத்தன. குமுதம், ஆனந்த விகடன் என்று ஆரம்பித்து, இன்று நவீனம், பின் நவீனம் என்று என் சிந்தனைகளை அப்படியே மாற்றிப் போட்டிருக்கிறது.
 
எழுத்தாளர்கள் வெறும் கதைக்காரர்கள் அல்ல. எந்தத் தொழிலாய் இருந்தாலும் புத்தகங்களை நேசித்து, வாசித்து தன் எண்ணங்களுக்கெல்லாம் நியாயத்தையும் ஆளுமைகளையும் தேடிக் கொண்ட எத்தனையோ மனிதர்களை நான் சந்தித்திருக்கிறேன். அவர்களின் நட்பை பெறுவதில் முயற்சி செய்து கொண்டே இருப்பேன்.

மறைந்த திரு. உதுமான் கனி அவர்களின் எனக்கு தூரத்து உறவினர். அவர் எனக்கு 3 வருடங்கள் சீனியர் ஊரில் படிப்பு படித்துக் கொண்டிருக்கும் போது ஊருக்கு வந்திருந்தார். அப்போது நான் சிங்கப்பூர் வரவில்லை. ஊரில்தான் இருந்தேன். எங்கள் இரண்டு பேருக்குமே புத்தகங்கள் ஒரு பாலமாக இருந்தது.
 
நான் அவர் ஊரில் இருந்த காலத்தில் சிற்றிதழ்களைக் கொண்டு போய்க் கொடுப்பேன். அவர் ஒரே மூச்சில் பார்த்துவிட்டு திருப்பிக் கொடுத்துவிடுவார், அவருக்கு திருமண ஏற்பாடுகளை அவரது பெற்றோர்கள் செய்து கொண்டிருந்தார்கள். அவர் எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்தார். நான் அவரிடம் பழகுவறைப் பார்த்து, அவரிடம் “ஊரில் திருமணம் செய்ய சம்மதமா?” என்று கேட்கச் சொன்னார்கள். நான் அவரை விட வயதில் சிறியவன். எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டே அவர் சிங்கப்பூர் கிளம்பி வரும் வரை “இதோ பேசுகிறேன், பேசுகிறேன்” என்று தள்ளிப் போட்டுக் கொண்டே வந்து, கடைசியில் ஒரு வழியாக “எப்போது திருமணம் செய்யப் போகிறீர்கள்?” என்று கேட்டேன். அவர் தெளிவாக ஒரு வாக்கியம் சொன்னார், “சிங்கப்பூரில் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன்” என்று. அதற்குப் பிறகு அவர் சிங்கப்பூர் திரும்பி வந்துவிட்டார்.

நான் இளங்களை பட்டப் படிப்பு முடிந்து முதுநிலைப் படிப்பு தொடர இருந்த நேரத்தில், எங்கள் கிராமத்தில் தேசிய வங்கியை அமைக்க ஊர்ப் பெரியவர்களுடன் இணைந்து முயற்சிகள் எடுத்து, வங்கியைத் திறக்க வைத்தேன். இதைக் கேள்விப்பட்ட உதுமான்கனி, என் நண்பர்கள் மூலம் “நல்ல காரியம் செய்திருக்கிறார். காதரிடம் கேட்டதாகச் சொல்லுங்கள்” என்று சொல்லி அனுப்பினார்.

நான் மத்திய அரசு வேலையை விட்டுவிட்டு சிங்கப்பூருக்கு வந்து குடும்பத்துடன் செட்டிலானவுடன் அவரை சந்திப்பதை தவிர்த்தேன். நல்ல வேலையை விட்டுவிட்டு இங்கு வர வேண்டிய காரணங்களை பேட்பார் என்ற எண்ணத்தினால், பயத்தினால் நான் அவரை சந்திக்கவில்லை. “விசு அரட்டை அரங்கம்” நிகழ்ச்சியில் என்னைப் பார்த்துவிட்டு, “விரிவாகப் பேசுவோம். போன் செய்” என்றார். நான் ரொட்டி கடைகளில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு முறை குடும்பத்துடன் அங்கு வந்துவிட்டார். நான் அவர் கண்ணில் படாமல் மெதுவாக பின் வழியாக வெளியேறி விட்டேன்.

நான் அவரைத் தொடர்ந்து சந்தித்திருக்க வேண்டும் என்ற எண்ணம் இப்போது எனக்குள் உழன்று கொண்டிருக்கிறது.

நேற்று சரியாக இருந்தது
இன்று தப்பாக இருக்கிறது
நேற்று தப்பாக இருந்தது
இன்று சரியாக இருக்கிறது
நேற்றிலிருந்து நாளையை
பைனாகுலர் எங்காவது இருக்கிறதா

என்ற தேவதச்சனின் கவிதை என்னைது துரத்துகிறது.

வாழ்க்கையும் வாசிப்பும் இணைக்கிறபோது எழுதுவது இயல்பாக வருகிறது. ஒரு வாசகன் நீண்ட காலத்துக்கு வாசகனாகவே இருக்க முடியாது. அவன் தன்னை வெளிப்படுத்தக் கூடிய ஒரு கட்டத்திற்கு வரவில்லையெனில் வாசிப்பு சோம்பேறி ஆகிவிடுவான் என்ற வார்த்தையில் உந்தப்பட்டு நானும் கவிதை எழுதினேன்.

19-12-1997

“சில்க் ஏர் விபத்து”

பட்டுக் காற்றின் சோக கிதங்கள்
 
பட்டுக் காற்றில் பறந்த குளங்களே பறந்து போன இதயங்களே!
ஆற்றுப் படுகையில் ஆழப் புதைந்தால் என்ன! தங்கள் இதயச் சுவடுகள் இங்கு பத்திரமாக உள்ளன.

இதோ இந்த மண்ணில் ஆயிரம் ஆறுகள் ‘மூசி’ ஆறு மட்டும் ஏன்அவப் பெயரைத் தேடிக் கொண்டது.
ஆகாயத்தில் அற்புதங்கள் நிகழும் ஆனால் அவலம் நிகழ்ந்தது ஏன்?
‘உயரப் பறந்த குயில்களே! உங்கள் உறவு குயில்கள் தங்கள் நிழல்களை தேடின உப்பங் கழியில்.

ஆனால் தாங்கள் மறைந்ததென்னவோ மின்னல் தோன்றும் மேகக் கூட்டத்தில் அல்லவா!
 
அம்மா, அப்பா, அன்பு மனைவி,  கணவன், தம்பி, தங்கை, காதலன் காதலி இந்த வரிசையில் நீங்கள் இழந்த உறவுகள்.ஆயிரம். இதுவே இங்கு கடைசியாக இருக்கட்டும்.

 “சேர்ந்து காத்து செலவு செய்கின்றதோர்

     ஆக்க வழியை அறிந்தவர் வள்ளல்…

ஜமால் முஹம்மது தமிழ் மக்களின்

  கல்விப் பசிக்கு கனிகள் கொடுத்தவர்

ஊரணிபோல் உலகம் முழவதும்

உண்ணக் கிடைப்பது உயர்ந்தோர் செல்வம்”

நன்றி: நாம் இதழ்

 

கல்லூரி காலத்து நண்பர்கள் திடீரென்று உங்கள் முன் வந்து நான் யார் தெரிகிறதா? என்று கேட்டு நாம் அடையாளம் தெரியாமல் அதிர்ச்சியில் நிற்கும்போது பழைய நினைவுகளை உசுப்பி விட்டு என்னை மறந்து விட்டாயே! என்று புளங்காகிதம் அடைந்த நிகழ்வுகள் ஜமால் முஹம்மது அசோஸியன் கூட்டத்தில் உணர்வுபூர்வமாக கரை புரண்டன.

“Batch Mate” ல் கிளிக் செய்து யாராவது 1980 கெமிஸ்ட்ரி பேட்ஜ் இருக்கிறீர்களா என்று கண்டுபிடித்த நண்பர் ஜலாலுதீன் காலையில் 9.30 மணிக்கெல்லாம் ஜலான் சுல்த்தான் சென்று விட்டோம். வந்திருந்த 40 பேரும் அவரவர் நணபர்களை தேடிப் பிடித்து பேசிக் கொண்டிருந்தனர். எனக்கு ஜலால் இரண்டு நண்பர்களை கொண்டு வந்து நிறுத்தினார். ஓரளவு கண்டு பிடித்துவிட்டேன். ஆனால் அவர்களுக்குத்தான் என்னை அடையாளம் தெரிந்து கொள்ள நேரம் பிடித்தது!

ஜமாலியன் உலகெங்கும் பூத்துக் குலுங்குகின்றன. சிங்கப்பூர் தோட்டத்தில் அவைகளைத் தேடீப் பிடித்து மாலையாக்கும் மந்திரக் கைகள் திரு.M.A.காதர் அவர்களுக்கு வாய்க்கப்பெற்றிருப்பதாகவே கூட்டத்தில் அனைவரும் உணர்ந்தோம்.

                  (போட்டாவில் என்னுடன் வாழ்வில் தொடர்ந்து வரும் என் கல்லூரி நண்பர் ராஜாமுஹம்மது)

 நாம் படித்தோம் பலன் பெற்றோம் அதனால்தான் கல்லூரி புகழ் பாடுகிறோம் என்பதை மறுதலித்து பெருமைபடக் கூடிய பல விசயங்களை கல்லூரி முதல்வர் கூட்டத்திற்கான தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டார்கள்.

தற்போது கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 8975

18 UG 19PG 13Mpil மற்றும் 12 PHDனு பாடத்திட்டங்கள் தற்போது உள்ளன.

சுமார் 331 பேராசிரியர்கள் பணிபுரிகிறார்கள். அனைத்து மதத்தவர்களும் இதில் அடங்கும்.

 எல்லாவற்றிக்கும் மேலாக இந்தியாவில் கேப்பிடேஸன் பீஸ் மாணவர்கள் சேர்க்கையிலும் ,கல்லூரி பேராசிரியர் சேர்க்கையிலும் பெற்றுக் கொள்ளாத ஒரே கல்லூரி நிர்வாகம் ஜமால் முஹம்மது கல்லூரி.

இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல தமிழ் மக்கள் எங்கெங்கு சிரமத்திற்குள்ளானாலும் தோள் கொடுக்க உறுதி எடுத்துக் கொள்ளுங்கள் என்று கல்லூரி முதல்வர்  Dr.M.SHEIK MOHAMED பேசியது கல்லூரியின் இன்றைய வளர்ச்சிப் போக்குக்கு கட்டியம் கூறுவது போல் இருந்தது.

ஜமாலியன்ஸை சிங்கப்பூரில் அடையாளம் கண்டு Data Base-ல் கொண்டுவர வேண்டியுள்ளது.

 நீங்கள் ஜமாலியனா….

என்னுடைய தொடர்பு எண் 82858065

அல்லது

Mr.M.A. KADAR தொடர்பு எண் 63981020

 

Acnielsen அக்நியல் சென் 2005ல் நடத்திய ஆய்வில் இரவில் கண்விழிக்கும் மக்களைக் கொண்ட (இரவு ஆந்தைகள்) நாடுகள் அதிகம் ஆசியகாக் கண்டத்தில் உள்ளன என்கிறார். அதற்கு அவர் ஒரு பட்டியல் தருகிறார்.

தைவான்  – 69
கொரியா  – 68
ஹாங்காங் – 66
ஜப்பான்  – 60
சிங்கப்பூர்  – 54
மலேசியா  – 54
தாய்லாந்து  – 43

இத்தனை சதவிகித மக்கள் 12மணிக்கு மேல் தூங்கச் செல்கிறார்கள் என்கிறார்.

மற்ற நாடுகளையும் குறிப்பிடுகிறார். இதில் அமெரிக்கர்கள் இடம்பெறவில்லை.

Mr.Poh வேலை கேட்டு வந்தவுடன் அவருடைய வயதைப் பார்த்து தயக்கமாக இருந்தது. ஆனால் வேலையில் அவர் காட்டிய சுறு சுறுப்பு என்னைத் திகைக்க வைத்தது. வீட்டுக்கு கிள்புங்கள் என்று சொல்லும் வரை வேலை பார்ப்பார். வேலை முடிந்து உடனே செல்லாமல் டேபிளிலேயே உட்கார்ந்திருப்பார். வீட்டில் யாரும் உறவினர்கள் இல்லையோ என்று நினைத்துக் கொள்வேன். ஒரு வாரம் தொடர்ந்து வேலை பார்த்தார். அதற்கடுத்த நாள் திடீரென்று 3 பேர் வந்து அவர் தட்டை கழுவிக் கொண்டிருக்கும் போது அலேக்காக அவரைத் தூக்கினார்கள் No No என்று சத்தம் கேட்டவுடன் கடையில் உள்ள அனைவரும் ஓடிவந்து என்ன  என்று விசாரித்தோம்.

எந்தக்  கேள்விகளுக்கும் அவர்கள் பதில் சொல்லவில்லை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று ஆம்புலன்ஸில் ஸ்டெரிச்சரில் படுக்க வைத்து விட்டார்கள். Please tell there to leave me’ என்று கெஞ்சிக் கொண்டிருந்தார் Mr.Poh அவருடைய பார்வை என்னை நோக்கி நான் நன்றாகத்தானே வேலை செய்கிறேன் என்னை விட்டு விடச் சொல்லுங்கள் என்று கெஞ்சியது. முதன் முதலில் அப்படி ஒரு காட்சி என் மனதை மிகவும் உருக்கியது. என்ன ஏது என்று வந்தவர்களிடம் விசாரித்தேன்.

நீங்கள் தான் கடை உரிமையாளரா ?

ஆமாம் என்றேன் எவ்வளவு நாட்கள் இவர் கடையில் வேலை செய்கிறார் என்று கேட்டனர், ஒரு வாரமிருக்கும் என்றேன் இவர் தூங்கி 5 நாட்களாகவிட்டது 48 மணி நேரத்துக்கும் அதிகமாக தூங்காமல் இருந்து விட்டார். ஏற்கனவே Wood bridge Hospital-ல் இருந்தவர், கண்காணிப்பில் இருந்தார், இவரை இன்றுதான் தேடிப்பிடித்தோம் என்றார்கள். ஆனால் பார்ப்பதற்கு அப்படி ஒன்றும் தெரியவில்லையே என்றேன். அவர் வீட்டிற்கு தூங்க வரும் நேரம் குறைந்து விட்டது. சரியான மருந்துகளும் எடுத்துக் கொள்ளவில்லை என்றார்கள்.

வாழ்வுக்கும் உறக்கத்துக்குமிடையே எத்தனை சம்பவங்கள் பின்னிப் பிணைந்திருக்கின்றன. Mr.Poh வை ஆம்புலன்ஸில் கூட்டிச் செல்லும்போது கடையில் கூட்டம் கூடிவிட்டது அந்த நபரின் குடும்ப சூழலிலும் அந்தரங்கத்திலும் யாரும் தலையிட்டு எந்த சிறு கேள்வியும் கேட்டுவிட முடியாது. ஆனால் மன நோயாளி பற்றி எழுப்பப்படும் அவ்வகைக் கேள்விக்கும் ஏதாவது பதில் சுமத்தப்பட்டுவிடும். என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள் பைத்தியமா? எப்படி கடையில் சேர்த்தீர்கள்? முதலில் உங்களுக்கு தெரியாதா? என்பதாக இருந்தது.

ஒவ்வொரு உணவு கடைத் தொகுதியிலும் ஏதாவது ஒரு மன நோயாளி அல்லது குணமடைந்தவர்கள் இருக்கிறார்கள். கண்காணிக்கப்பட்டு சரியான தூக்கத்திற்கு அவர்களுக்கு தொடர்ந்து மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.மருந்து கொடுக்கும் செவிலியர்கள் யாரையோ தேடி அலைவார்கள் சில நேரங்களில் அமைதியாக வந்து ரொட்டி வாங்கிச் செல்லும் நபராகக் கூட இருக்கும். மருந்து உட்கொள்வதை நிறுத்தியிருப்பார் கட்டுக்கு அடங்காமல் போகும் நபர்களை துரத்திப் பிடிப்பார்கள்.

மூளை திரவத்தினுள் மிதக்கிறது, அந்தத் திரவம் வற்றி விட்டாலோ திரவம் சுமக்கும் சுரப்பியில் கோளாறு என்றாலோ இவர்களுக்கு கோளாறும் தடுமாற்றமும் வருவதுண்டு. அதனால்தான் கோபமாகவும் எரிச்சலாகவும் அலைபவர்களைக் கண்டால் மூளைத் தண்ணி வத்திப்போச்சு என்று சொல்கிறார்களோ என்னவோ…

Mr.Poh என்னை விட்டு விடச் சொல்லுங்கள் என்று என்னிடம் கெஞ்சியது அவர் தொடர்ந்து தான் செய்யும் வேலையில் தன்னை மறந்திருந்திருப்பார் என்றே எண்ணத் தோன்றுகிறது. அவருடைய நன்மைக்குத்தான் சிகிச்சைக்கு கொண்டு செல்கிறார்கள் என்று அவருக்குத் தெரியவில்லை, அது தெரிய வந்தவுடன் என் கடைக்கு வேலைக்கு வர தோன்றுமா? தேரியவில்லை…

பழங்குடி மக்கள் வேட்டைக்குச் செல்லும் போது தன்னுடைய அம்பராத் துணியிலிருந்து அம்பை எடுத்துவிட்டால் அது நிச்சயமாக ஒரு விலங்கை வீழ்த்தியாக வேண்டும். அப்படி குறி தவறி எங்கேனும் காணாமல் போய் விட்டால் வேட்டைக் கும்பல் பொழுது சாய்ந்து திரும்பும்போது தொலைந்துபோய் திரும்ப கிடைக்காத அம்பின் நுனி என்றாவது ஒருநாள் குறி தவறி அம்பை தவறவிட்டவர்களுக்கு கேடு செய்ய வாய்ப்பிருக்கிறது என்ற ஒரு தகவலை நான் எங்கோ படித்த ஞாபகம் வந்துள்ளது. ஆனால் செல்லைத் தொலைத்துவிட்டால் அதோடு நாம் ரகசிய குறியீடுகள், பிரியமானவர்களின் தொடர்பு எண்கள் எல்லாம் தொலைந்து போகும். அடுத்த செல் வாங்கும் வரை நாம் பழங்குடிகள் தான்.
 
அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை நண்பர் பாண்டித்துரைக்கு போன் செய்து கடைக்கு வாருங்கள் என்றேன். கைகயில் ஒரு செல்லும் நெஞ்சில் ஒரு செல்லையும் தாங்கிக் கொண்டு வந்து இரண்டிலும் மாற்றி மாற்றி பேசிக் கொண்டிருந்தார்.
 
என் மகன் கடைக்கு வந்து சேர்ந்தவுடன் இருவரும் பேசிக்கொண்டே அல்சுனர்ட் தாண்டி பேருந்தில் வந்து கொண்டிருந்தோம். திருப்பங்கள் இல்லாத செய்திகளுடன் நாங்கள் பேசிக் கொண்டே சென்றோம். மனித வாழ்வின் வசந்த காலங்கள் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் உள்ளது போலவே புகழ்பெற்ற ஸ்தலங்கள், அமைப்புகள் ஆகியவற்றுக்கும் உள்ளன என்று கருத்துகள் பரிமாறிக் கொண்டிருந்தோம். மத்திய நூலகம் வந்தவுடன் பேருந்திலிருந்து கீழே இறங்கி டிராபிக்கை கடக்கும் போது பாண்டித்துரை “ஐயோ”! என்றார்.
 
 
எதுவும் அடிபட்டுவிட்டதோ என்று நானும் பதறிவிட்டேன். செல்லை பேருந்திலேயே விட்டு விட்டேன் என்றார். எனக்கு மிகவும் சங்கடமாகிவிட்டது.
 
செல் காணாமல் போய் விட்டதை விட அவருடைய நண்பர்கள் தொடர்பு எண்கள் திரும்ப கிடைக்காதே என்று மிகவும் வேதனையுடன் அதைப்பற்றியே பேசிக்கொண்டு வந்தேன். தொலைந்த செல்லுக்கு முயற்சி செய்து கொண்டே நூலகத்தை நோக்கி நடந்து வந்தோம், சில நிமிடங்களில் யாரோ ஒரு கண்டுபிபடிப்பாளர் கையில் அது கிடைத்துவிட்டது. அதை லாவகமாக அவர் ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டார். சரி அதை விடுங்கள் என்று பாண்டித்துரை பேசிக் கொண்டிருந்த விசயங்களை மறுபடியும் ஆரம்பித்தார் ஆனால் என்னால் இயல்பாகத் தொடரமுடியவில்லை.
 
இப்போதெல்லாம் எல்லோரிடமும் செல்லின் தொலைந்த ஞாபகங்கள் கொஞ்சமாவது இருக்கிறது. சில ஞாபகங்கள் மணிக்கணக்கானது, சிலது நாட்கணக்கானது சிலது வருடங்கள் தோறும் நம்முடன் பயணிக்கும். செல் போன்கள் வீட்டு போன்களை விட எண்ணிக்கையில் அதிகமாகி விட்டன. இது “நெக்ரோ பாண்டே ஸ்விட்ச்” என்ற விதிப்படி நடப்பதாக மறைந்த எழுத்தாளர் சுஜாதா சொல்லியிருக்கிறார். எதிர்காலத்தில் கேபிளில் போவதெல்லாம் வானில் செல்லும், வானில் செல்வதெல்லாம் கேபிளுக்கு இடம் பெயரும் என்பதுதான் “நெக்ரோ பாண்டே ஸ்விட்ச் விதி”.
 
லட்சக்கணக்கான டெலிபோன் இணைப்புகள் தரையில் கம்பிகளின் மூலம் வந்து கொண்டிருந்தது. இப்போது ஆகாய மார்க்கமாக செல்போனில் செல்கிறது. ஆனால் ஆகாய மார்க்கமாக நம் வீடுகளை அடைந்து கொண்டிருந்த டெலிவிசன் இப்போது அதிகமாக கேபிள் டிவி மூலம் வருகிறது.
 
ஒரு பன்னாட்டு செருப்புக் கம்பெனி குழந்தைகளின் காலணிகள் ஒன்றில் செல்போன் வடிவத்தில் உருவாக்கியுள்ளது. காதோரம் எப்போதும் வைத்துக் கொண்டிருந்தால் மூளைக்கு கெடுதல் என்றும், சட்டை பையில் வைத்துக் கொண்டிருந்தால் இதயத்துக்கு கெடுதல் என்றும் சொல்கிறார்கள்.
 
செல்போனை நம்பி வீட்டு டெலிபோன்களின் உறவை துண்டித்துக் கொள்ளாதீர்கள் ஏனெனில் செல்போன் “ Person specific” வீட்டு போன்கள் “Location Specific” அல்லவா!
 
நாம் என்ன வேலையாக எங்கிருந்தாலும் நம்மிடம் செல்லில் தொடர்பு கொண்டவர் கேட்கும் கேள்வி எங்கே இருக்கிறீர்கள் என்பதுதான் என்னுடைய Privacy கெட்டுவிடுகிறது. அதனால் தான் நான் செல்லே வைத்துக் கொள்வதில்லை என்று இயக்குனர் பாலா ஒரு நேர்காணலில் சொல்லியிருந்தார்.
 
காதில் வைத்து பேசிக் கொண்டே அலைபவர்களைப் பார்த்து எரிச்சலில் மூளை சூடாகிடப் போகுது என்று பேசுவோம், ஆனால் கேன்சரே வருவதற்கு காரணங்கள் உள்ளன. குறைந்த அளவே மீடியாக்களில் பிரபலபடுத்தபட்ட உலக கைத்தொலைபேசி மாநாடு கடந்த செப்டம்பரில் 2009 வாஷிங்டனில் நடந்தது 13 நாடுகளிலிருந்து இடம்பெற்ற பேராளர்கள் உலக சுகாதார நிறுவன ஏற்பாட்டில் “செல்போனும் கேன்சரும்” என்ற தலைப்பில் ஆராய்ச்சி முடிவுகளை கட்டுரைகளாக சமர்ப்பித்தனர்.
 

 


எப்படி ரேடியோ அலைகள் கைத் தொலைபேசி வழி மனிதனின் DNA வை பதம்பார்க்கிறது என்பதுதான் ஆராய்ச்சியாளர்கள் விடை காண முயலும் கேள்வி. ஆனால் எத்தனை செல்போன்கள் தினமும் உபயோகிப்பாளர் வசம் செல்கின்றன. எந்த வயதுடையவர்கள் அதிகம் உபயோகிக்கிறார்கள் என்ற விபரங்களை விஞ்ஞானிகள் செல்போன் நிறுவனங்களிடமிருந்து பெறுவதில் வெற்றி பெற முடியவில்லை.
 
பெரும்பாலும் செல்போன் நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்த மூளைக்கும், கபாலத்திற்கும் பாதுகாப்பானதே என்கிறார்கள். ஆனால் 20 வயதுக்கும் உட்பட்டவர்களை ரேடியோ அலைகள் எப்படி பாதிக்கும் என்பதில் அவைகள் மௌனம் காக்கின்றன.
 
ஜப்பானிலும் ஸ்வீடனிலும் 1990 களில் செல்போன்கள் பிரபலமாகத் தொடங்கின. இதன்படி நாம் கணக்குப் பார்த்தால் 20 வயதில் கைத் தொலைபேசியை பயன்படுத்தியவர்களின் உண்மையான பாதிப்பு 2030ல்தான் சரியாக தெரிய வாய்ப்பிருக்கிறது.
 
இருபதாம் நூற்றாண்டின் பாதியில் ஏற்பட்ட புகைப்பழக்கம் மார்பு புற்று நோய்க்கு வித்திட்டதை அறிய 10 திலிருந்து  15 வருடங்களானது அதுவே பெண்களின் பாதிப்பை கண்டறிய 10 வருடங்கள் தள்ளிப்போனது.
 
உலக நாடுகளில் இஸ்ரேல் மட்டும் தான் கைத் தொலைபேசி நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் கைத் தொலைபேசிகளில் எந்தெந்த மாடல்களில் எவ்வளவு எமிஷன் அளவு உள்ளது என்பதைக் கட்டாயமாக தெரிவிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தது. ஐரொப்பிய யூனியன் சிறுவர்கள் கைத் தொலைபேசி உபயோகிப்பதற்கான விதிமுறைகளை இப்படி சொல்கிறது.
 
1.         போனைக் காதில் வைத்து பேசாதீர்கள்
2.         SMS அல்லது ஸ்பீக்கர் போன் பயன்படுத்துங்கள்
3.         சட்டைப்பையில் எந்நேரமும் போனை ஆன் செய்து காதில் ஹியரிங் பீஸ் பொருத்திக் கொண்டு பேசுவதை தவிர்த்து எப்போது தேவைப்படுகிறதோ அப்போது ஆன் செய்யுங்கள்
 
இது எல்லாம் நடக்குமா?
 
2030க்கு பிறகு செல்லைப் பற்றி கட்டுரை எழுத விசயம் கிடைக்குமா… பார்ப்போம்…
 
அப்துல்காதர் ஷாநவாஸ்