ஜூன், 2010 க்கான தொகுப்பு

///

2:28 பிற்பகல் இல் ஜூன் 10, 2010

ஷான், அருமையான பதிலடி. சமயோசிதமான கேள்விகள்.

http://bala-balamurugan.blogspot.com/2010/06/blog-post_03.html

முனைவர் எம்.எஸ். ஸ்ரீ லஷ்மி கருத்துபடி ஒரு எழுத்தாளன் என்பவன் எந்தவகையிலும் தன் எழுத்தின் மூலம் முரண்படவே கூடாது. அவனுக்குக் கொடுக்கப்படும் ஒழுக்கத்திலிருந்து அவன் மீளாமல் பரிசுத்த ஆத்மாவாக இருக்க வேண்டும் என்கிற கருத்தை விநியோகம் செய்திருக்கிறார்.

///

கே.பாலமுருகன்

தங்களின் வருகைக்கு நன்றி

என்னைவிட அதிகம் வாசிப்பவர் நீங்கள். என்னிடம் இலக்கிய சர்ச்சை விவகாரத்தில் சில கேள்விகள் எஞ்சியுள்ளன.

முனைவர் லட்சுமி விமர்சனத்தில் சீரியஸாக சில விசயங்களை நாம் விவாதிக்க நினைத்தால் அவர்கள் சொல்லும் பாடு பொருட்கள் “தாய் நாட்டு மண்மனம் காட்டுபவை” என்று ‘பிரம்மா’ என்ற  கவிதைத் தொகுப்பை சுட்டியுள்ளார்கள் அந்தப் பொதுப்பண்பு தவறா?

ஒரு கவிஞன் அல்லது எழுத்தாளன் முதலில் தன் வாழ்க்கை மூலம் தானறிந்த அனுபவ விவேகத்தை, இரண்டாவது தான் இலக்கிய வாசிப்பின் மூலம் பெற்ற அறிவை, மூன்றாவதாக தான் வாழும் பொதுவான அறிவுச் சூழலிருந்து பெற்றுக் கொண்ட அறிவைச் சார்ந்து உருவாக்கிக் கொள்கிறான்.

அத்துடன் கிராமம் சார்ந்த வளர்ப்புடைய படைப்பாளிகளின் ஊற்றுக் கண்கள் அவர்களுடைய இளமை அனுபவங்களின் மீது அமைந்துள்ளன என்பது சரியா?

அத்துடன் புலன் பதிவுகள், மொழி பதிவுகள் ஆகியவை கருத்தியல் நிலைப்பாடுகள் உருவாவதற்கு முந்தைய கால கட்டத்திலும் அவனுள் ஆழமாக விதைக்கப்படுகிறது இது சரியா?

///

3:32 பிற்பகல் இல் ஜூன் 9, 2010

தங்கள் எண்ண ஓட்டம் நன்று!

///

அத்திவெட்டி ஜோதிபாரதிக்கு

நன்றி. தங்களுடைய வலைதளத்தை ஆரம்பத்திலிருந்து படிக்க ஆரம்பித்துள்ளேன். கவிதை விமர்சனம் மூலமாக சிறந்த  நண்பர்களைக் கொண்டு வந்து சேர்ப்பதற்கு முனைவர் எம் எஸ் ஸ்ரீ லஷ்மி அவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும்.

சிங்கப்பூரில் தமிழ் வளர்க்க பல அமைப்புகள் இருக்கின்றன. இவ்வளவு அமைப்புகள் தேவைதானா என்ற கேள்விகள் ஒருபுறம் இருக்க அவைகள் சிறு சிறு குழுக்களாக தமிழ் மொழி கலாச்சாரத்தை வளர்ப்பதை பாராட்டலாம். ஒவ்வொருவரும் தன்னால் இயன்ற அளவு பாத்திகட்டி பயிர்வளர்க்கிறார்கள். இந்த சூழலில் படைப்புகள் மீது சரியான விமர்சனப் பார்வை இங்கு அரிதாக உள்ளது. அப்படி வைக்கப்படும் விமர்சனப்பார்வைகளும் சொத்தையாக உள்ளன.

சனி ஞாயிற்றுக்கிழமைகளில் இளைஞர்கள் வறட்டுத் தனமான சினிமா மற்றும் மற்ற பொழுது போக்குகளை தவிர்த்து தங்களுக்கு கிடைக்கும் அரிதான நேரத்தை கவிமாலை கவிச்சோலை போன்ற நிகழ்வுகளில் ஆர்வத்துடன் கலந்து கவிதைகள் படைப்பதை கீழறுக்கும் விதமாக விமர்சனங்கள் செய்வது மிகவும் வேதனைக்குரியது.

வயதானவர்கள் இளைஞர்களுக்கு வழிகாட்டிகளாகவும் உற்சாகம் கொடுத்து நல் வழிப்படுத்துவர்களாகவும் இருக்க வேண்டும். அது என்றைக்குமுள்ள தேவை அல்லவா!

கண்மணி குணசேரனின் கவிதை  இளமை முதுமை இரண்டுக்கும் பாலம் அமைக்கிறது

மூச்சுக் கட்டி ஊத வேண்டிய
முக்கியமான கட்டத்திலெல்லாம்
சீவாளியைக் கழற்றி
சரிபார்க்கிறது
வயதான நாயனம்
இட்டு நிரப்பிச் செல்கிறது
இளம் தவில்…

நன்றி

ஷாநவாஸ்

அன்பு நண்பர் பாலுமணிமாறன் அவர்களுக்கு …

” நாலுவார்த்தை” மீண்டும் புத்துயிர் பெற்றிருப்பதில் தங்கள் முதல் வாசகன் என்ற முறையில் மகிழ்ச்சி. மீண்டும் ”அப்பாவிச் சோழனாக” மாற வேண்டிய சூழல் தற்போது சிங்கப்பூர் இலக்கிய உலகில் உருப்பெற்று வருகிறது.

நல்ல விமர்சனம், மாற்றுக் கருத்துக்களுக்கான தளம் இங்கு உருவாக வேண்டும் என்று நாம் பலமுறை பேசியுள்ளோம்.

 தொல்காப்பியர் 10-வகையான எழுத்துக்கள் குறையுள்ள தன்மையுடையவை என்று சொல்கிறார்.

1. கூறியது கூறல்
2. குறை கூறல்
3. மாறு கொள்ளக் கூறல்
4. மிகை படக் கூறல்
5. பொருள் சில மொழிதல்
6. மயக்கக் கூறல்
7. கேட்போருக்கு இன்னா யாப்பிற்று ஆதல்
8. என்னவகையிலும் மனக் கோள் இன்மை
9. தன்னான் ஒரு பொருள் கருதிக் கூறல்
10. பழித்த மொழியான் இழுக்கக் கூறல்

இதில் திருமதி லெட்சுமி அவர்களின் விமர்சன எழுத்துக்கள் 10 வகையிலும் குறையுடையதாக இருக்கிறது.

நம் கவிதை வரலாறு 2000 ஆண்டுக்கால நீட்சி கொண்டது. இந்த நீண்ட கால பரப்பில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும் உள்ளார்ந்த மனம் மாற்றம் அடையவில்லை. அன்பு, பாசம், காதல் குடும்ப உறவுகள், நட்பு, பிரிவு, மரணம் சார்ந்த, அடிப்படை நிலம் சார்ந்த வாழ்க்கை இவற்றில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை.

கவிதைகள் காலப் பிண்ணனி கொண்டதாக இருக்க முடியுமே தவிர, அது நாம் வாழும் இடத்தின் தன்மைக்கு ஏற்றவாறு மாறுவதில்லை. திருமதி.லெட்சுமி அவர்கள் உண்மையிலேயே கவிதைகளை விமர்சிக்க விரும்பவில்லை என்பதே அனைவரது கருத்தாகவும் உள்ளது. அத்துடன் 21ஆம் நூற்றாண்டின் அடிப்படை ஆவணம் பிறப்புச் சான்றிதலிருந்து தற்போது பாஸ்போர்ட்க்கு மாறிவிட்டது. இந்தச் சூழலில் “குடியேறிகள்”  போன்ற சொற்கள் பயன்படுத்துவது நாம் இப்போது என்ன உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று பிரமிக்க வைக்கிறது.

மாதம்தோறும் கவிமாலை கவிச்சோலையில் பரிசுகள் வழங்குவது பற்றிய விமர்சனம் மிகவும் பழைமையானது. நான் 30 வெள்ளி பரிசை வாங்குவதற்கு சனி ஞாயிற்றுக்கிழமைகளில் 60 வெள்ளி சம்பளத்தில் ஒரு ஊழியரை என் கடையில் அமர்த்திவிட்டு செல்கிறேன். எனக்கு கிடைத்த 30வெள்ளி பரிசுகள் என்னைப் பொறுத்தவரை விலை மதிக்க முடியாதவை (உங்களிடமிருந்து கூட ஒரு பேக் (bag)  பரிசு வாங்கியிருக்கிறேன்) கவிமாலை, கவிச்சோலைக்கு வரும் நண்பர்களுக்கு ஒவ்வொரு வகையிலும் அவைகள் விலைமதிப்பில்லாதவைதான். அத்துடன் பரிசைப் பற்றி விமர்சிப்பது அதை மனமுவந்து மாதம்தோறும் கொடுக்கும் பரிசளிப்பவர்களின் நோக்கத்தை கீழறுக்கும் செயல்.

வளர்ந்து வரும் பாண்டித்துரையின் கவிதைகள், கவிதையைப் படித்து முடித்தவுடன் கனமான நினைவுகளை எழுப்பிக் கொண்டிருப்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.

நாதஸ்வரத் சப்தத்தோடு
கலைஞரின் வாழ்த்துச்செய்தியை
ஏந்தி வந்த கூட்டத்தை
திரும்பிப் பார்த்தவர்கள்
கவனிக்கத் தவறியிருக்கக்கூடும்
வாய்பொத்தி சிரித்து வந்த
சிறுமி ஒருத்தியையும்
அவளை ஒத்த சிறுவனாக மாற
வாய்பொத்தி சிரித்த என்னையும்

(பாண்டித்துரை – உயிரோசை –e.magazine)

ஒரு பழம் பாடலும் என் நினைவுக்கு வருகிறது.

குட்டுதற்கோ பிள்ளைப் பாண்டியன் இங்கில்லை குறும்பி அளவாய் காதைக் குடைந்து தோண்டி எட்டினமட்டும் அறுப்பதற்கோ வில்லி இல்லை இரண்டொன்றாய் முடிந்து தலை இறங்க போட்டு வெட்டுதற்கோ கவி ஒட்டக் கூத்தன் இல்லை விளையாட்டாய் கவிதைகளை விரைந்து பாடித் தெட்டுதற்கோ அறிவில்லாத் துரைகள் உண்டு தேசமெங்கும் புலவரெனத் திரியலாமே!

எனவே முக்கியமாக படைப்புகள் குறித்து குறைந்த பட்ச விமர்சனம்ப் பார்வைகள் சிங்கப்பூரில் உருவாக வேண்டும் அவைகள் நல்ல படைப்புகளின் உருவாக்கத்திற்கு மிகவும் பயனளிக்கும்.

நம் சிந்தனைக் கடலோரத்தை தினம் அரித்துக்கொண்டிருக்கும் மொக்கையான விமர்சனங்களின் பின்விளைவுகள், நல்ல விமர்சனக் காற்றை வீசட்டும்.

 உங்கள் கவிதைகள் மீண்டும் பிறக்கட்டும்.

பாலுவின் பதிவை படிக்க விமர்சனமா…விகாரமா….- சிங்கப்பூர் இலக்கிய விமர்…

அப்துல்காதர் ஷாநவாஸ்

மணலில் கை புதைத்து “அ” எழுதக் கற்றுத் தந்த முதலாம் வகுப்பு சகுந்தலா என் டீச்சர்

நன்றாக நினைவிருக்கிறது…

உயிரெழுத்துக்கள் அனைத்தும் அறிமுகம், திடீரென ஒரு நாள் மெய்யெழுத்துக்களை கரும் பலகையில் என் டீச்சர் எழுத புள்ளிகள் பெற்ற எழுத்துக்களை ஏற்க என் மனம் பயத்துடன் திக் திக் கென்றது.

எத்தனை எழுத்துக்கள்? எத்தனை வடிவங்கள்…..

பள்ளிக் கூடத்தின் பக்கத்தில் ஒரு பன்னீர் மரம்…

பன்னீர் புஷ்பங்கள் என்றுதான் எனக்கு அறிமுகம்…

மாலையில் உதிர்ந்த மலர்களை கோர்த்து என் பள்ளிப் பையில் பக்குவப் படுத்துவேன்.

என் அத்தம்மா சிலேட்டையும் பையையும் உதறும்போது விழும் அந்தப் பூக்கள் கோர்வையாக சிரிக்கும். என் அத்தம்மா கோபத்தால் சிவப்பார்கள், படிக்கும் பையன் பையில் “பூ” எதற்கு என்று பூவும் மரமும் புள்ளிகளாய் நமக்குள் அறிமுகம் ஆன நாட்கள் என் முதல் வகுப்பில் நடந்தது. படிப்பு வாசனையை எங்கள் குடும்பத்தில் ஆரம்பித்து வைத்த என் அத்தம்மாவின் அன்பும் தொடர்ந்தது

இரண்டாம் வகுப்பு

ஆம்பிளை டீச்சர் அதட்டலாய் வருவார் – அவர் சௌந்திரராஜன்

கூட்டல், கழித்தல் இரண்டைத் தவிர அவர் பெருக்கலுக்கு போகும் போது கைகள் நடுங்கும். தோட்டத்துப் பயிர்க் குழிக்கு விதை போட்டு வளர்ப்பார்.  விதை முளை விடும்போது இரட்டை இலையய் விரியும்… சில விதைகள் முளைக்காது முளைக்காத பயிர்க் குழிக்குள் வேறு விதை போடாமல் வெறுமெனே இருக்கும், அசெம்பிளி நடக்கும்போது பூசணிச் செடி படர்ந்து படர்ந்து நெருக்கமாய் வரும் பூசணிப்பூ
 கருவாகும் போது கை நீட்டி காண்பித்தால் கருகிவிடுமாம் நண்பர்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்வார்கள்.

3ஆம் வகுப்பு

என் வகுப்பு ஆசிரியர் நடராஜன் கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம் “தாயின் மணிக்கொடி பாரீர்” என்னை கொடி கட்டிப் பழகச் சொன்னார். என் பாட்டி வீட்டில் தோட்டத்து காட்டு ரோஜாவுக்கு காலையில் எழுந்ததும் தண்ணீர் விடுவார், பீர்க்கங்காய் பூசணிக்காய் சுரக்காய் விதைகளை என்பள்ளி நண்பர்கள் தர அவர்களுக்கு நான் என் தந்தை கொடுத்துவிட்ட சிங்கப்பூர் ரப்பரும் பென்சிலில்
 பாதியும் கொடுப்பேன்.

என் அத்தம்மா பயிர்க்குழிகள் போட்ட பின்பு தக்காளிச் செடியை மட்டும் தனியே ஊன்றச் சொன்னார். தக்காளி பெருத்தவுடன் தளர்ந்துவிட்டது. ஓமச் செடி ஒன்று என் தோட்டத்தில் வந்தது. அதை நான் தினமும் இரண்டு இலை பறித்து தின்ன வேண்டுமாம். ஓமச் செடி இலை தின்பேன் பீர்க்கங்காய் சிறிதும் பெரிதுமாக காய்க்கும்

வீட்டுக் கொல்லையில் பூத்த அந்தச் செடிகளை காண இன்று என் பிள்ளைகளை நான் எப்படிக் கூட்டிச் செல்வேன்…

ஆடி மாதத்து அற்புதங்கள் குடை சாய்ந்து அறுவடைக்கு போகும் முன் எனக்குள் அரசல் புரசலாய் தெரிந்த எலி வலைகள்

அறுவடை நடந்தபின் கதிரின் தண்டை “பீப்பீ” ஊதுவோம்

அதற்கு பிறகு எங்களுக்கு மீராளி வீட்டு வயல்கள்தான் கால்பந்து விளையாட்டுத் திடல்கள் …

நான்காம் வகுப்பு

என் வகுப்பு ஆசிரியர் பால குருசாமி

பழகும் தன்மையில் இனியவர் கையை திருப்பி வைத்துக் கொண்டு அடி கொடுக்கும் வள்ளல்

பெருக்கல் கணக்கு வாய்ப்பாடு 10க்கு மேல் பதறி பதறிச் சொல்வேன் கெழுத்தி மீன் வாய்க்காலில் கூட்டம் கூட்டமாய் போகும்

அயிரை மீன் அசத்தலாய் ஆர்ப்பரிக்கும் என் தெருவு மூலைக்குள் சுல்தான் வலை விரிப்பார் கச்சான் வலை போட்டு கெழுத்தி மீன் அயிரை மீன் அள்ளுவார் கெண்டை மீனை மட்டும் வெளியில் வீசுவார். கூட வரும் கெழுத்தி மீனை மட்டும் என் பாட்டிலுக்குள் பிடித்துக் கொள்வேன்.

அண்ணா வாத்தியார் புராணம் அடுத்து

தொடரும் ….