ஜூலை, 2010 க்கான தொகுப்பு

நன்றி: உயிரோசை.காம் 100 -வது இதழ்

உயிரோசை ஆசிரியர் குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

கால்பந்து திருவிழா முடிந்துவிட்டது, ஆனாலும் எனக்கு சில சந்தேகங்கள் மனதை அரித்துக் கொண்டிருக்கின்றன. யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று நண்பர் இந்திரஜித்திடம் கேட்டால் எதற்கும் நீங்கள் ஆர்.அபிலாஷிற்கு ஒரு மெயில் தட்டி விடுங்கள் என்றார்.

என் சந்தேகங்களை அடக்கி வைக்க முடியாமல் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

1. சிறுவர்சிறுமியர்களை விளையாட்டு வீரர்கள் திடலுக்குள் நுழையும்போது கைபிடித்து அழைத்து வருகிறார்கள், ஒரு போர்க் களத்திற்கு சிறுவர் சிறுமிகளை கூட்டி வருவது சரியா?

2. வீரர்கள் அம்பயருடன் அடிக்கடி வாக்குவாதம் செய்கிறார்கள், என்றாவது அம்பயரின் முடிவை மாற்றியிருக்கிறார்களா?

3. பெண்கள் கால்பந்தில் ஜெர்சியை மாற்றிக்கொள்ள தடை உள்ளதா?

4. அணிகளுக்கிடையே ஜெர்சி கலர் வித்தியாசமாக இல்லாவிட்டால், மாற்று அணியினருக்கு அடையாளம் தெரியாமல் பந்தைக் கடத்தி வீடவிவார்கள் தானே?

5. வீரர்கள் அடிக்கடி புல் தடுக்கிக் கீழே விழுகிறார்கள், அல்லது எதிரணி வீரர்கள் காலை வாரி விடுகிறார்கள், இத்தனை முறை கீழே விழுந்தவர்கள் என்ற புள்ளிவிபரம் எடுப்பதில்லை. ஏன்?

6. கால்பந்துக்கு உதைபந்து என்று இன்னொரு பெயர் உள்ளது, சமயம் கிடைக்கும்போதெல்லாம் வீரர்கள் உதைத்துக் கொள்கிறார்கள்! அவர்களுக்கு இன்னொரு பெயர் என்ன?

7. கை தவறிப் பந்தை தவறவிட்ட கோல்கீப்பரின் மேல் அவர் நாட்டு மக்களுக்கு இவ்வளவு வெறுப்பு ஏன்?

8. ஆட்டம் முடியுமுன்பே ஜெர்சியைக் கழற்றுவது அடிக்கடி நடக்கிறது, இதில் சில அம்பயர்களுக்கு ஆட்டம் முடிந்துவிட்டதோ என்று குழப்பம் ஏற்படுவதாகச் சொல்கிறார்கள் உண்மையா?

9. கோல் போட்டவுடன் கொஞ்சநேரம் வீரர்கள் சுதாரித்து நின்று கொள்கிறார்கள் மேலே வந்து விழும் சக ஆட்டக்காரர்களின் உடல் எடை அவர்களுக்குத் தெரிந்திருப்பதால் தான் அவ்வாறு சொல்கிறார்களா?

10. இந்த உலகக் கோப்பையில் ஜப்பானிய வர்ணனையாளர் ‘ரூனி’யை ‘லூணி’ என்று குறிப்பிட்டார். ஆனால் ‘ரொனோல்டா’க்களை எப்படி உச்சரிப்பார்கள்?

11. விளையாட்டை ரசித்துக் கொண்டிருக்கும்போது ரசிகர்கள் உணர்ச்சி வசப்பட்டு பின்னால் ஓங்கித் தட்டிக் கொள்கிறார்கள் பின்னால் தட்டுவதற்கு விசாரணையோ அல்லது தண்டனையோ எதுவுமில்லை ஏன்?

12. இரண்டு கைகளையும் அம்பயரிடம் தூக்கிக் காண்பித்தால் ‘நான் எதுவும் செய்யவில்லை’ என்று அர்த்தமா? இது உலக சைகை மொழி எதிலும் இடம்பெறவில்லை ஏன்?

13. உலகக் கோப்பை நடக்கும்போது உலகம் இரண்டாகப் பிரிகிறது. ஒன்று கால்பந்து உலகம், இன்னொன்று, கால்பந்தில் தகுதி பெறாத உலகம். கால்பந்து உலகத்தில் நாடுகளின் தலைவிதியை ”பால் ஆக்டோபஸ்” கணித்துச் சொல்லி அதன் உயிருக்கு மிரட்டலைக் கேட்டு வாங்கிக் கொள்கிறது, கால்பந்தில் தகுதி பெறாத நாடுகள் வேடிக்கை பார்கின்றன ஏன்?

14. ஜெர்சியை வேண்டா வெறுப்புடன் பெற்றுக்கொண்ட தோற்ற அணி வீரர் ‘இவ்வளவு கெட்டவாசனை’ பிடித்தவன் என்று மற்றவர்களிடம் காண்பிக்க, ஜெர்சியை லாண்டரிக்குப் போடாமல் வைத்திருக்க தகுந்த ஆதாரங்கள் உண்டு என்று சொல்கிறார்களே உண்மையோ?

15. சிங்கப்பூர் மணிக்கிளியின் இறுதியாட்ட முடிவு தோல்வியடைந்ததற்காக மணிக்கிளியின் முதலாளி வருந்தியிருப்பாரா? ஆக்டோபஸ்உடன் போட்டியிட்டு மணிக்கிளி உலகப்புகழ் அடைந்ததற்கு மகிழ்ந்திருப்பாரா?

16. கடைசியாக நான் ஆதரிக்கும் அணி எப்போதும் தோற்கிறது அல்லது டிரா செய்கிறது. என்ன காரணம்?

அனைத்து வீட்டு வாசல்களிலிருந்தும் கண்ணுக்கு புலப்படாத தடம் ஒன்று கஃப்ருஸதானை நோக்கி செல்கிறது என்றான் ஒரு உருது கவிஞன்.

மாமு  என்று அனைவராலும் அழைக்கப்படும் எங்கள் மதிப்புக்குரிபௌதிக ஆசிரியர் ஹாஜி அகமது கௌஸ் 11.07.2010 காலமாகிவிட்டார்.  நண்பன் குத்புதீன். அபா.சாகுல் கமீது இருவரும் எனக்கு செய்தி சொன்னவுடன் என் பள்ளிக் கூட நாட்களில் அதிக நாட்களை ஆட்கொண்ட அவருடைய நினைவுகள் வலம்வரத் தொடங்கின.

முதல் 20வயதுப் பருவத்தில் வாழ்வை நெறிப்படுத்தக் ஆடியவர்கள் நிழல் நமக்குக் கிடைக்கும் போது அது வாழ்நாள் முழவதும் நம்மைத் தொடர்கிறது.

ஆசிரியர்களில் பலவகைப் பட்டவர்கள் ஆரம்பக் கல்வி முதல் பள்ளி கல்லூரிக் காலம் என என் வாழ்வில் வந்து போயிருக்கிறார்கள்.

நாஞ்சில் நாடன் சொல்வார் …

வாத்தியார்கள் முன்பெல்லாம் பணம் இல்லாவிட்டால்
பீஸ் கட்ட உதவுவார்கள்.
புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பார்கள்
சட்டை வாங்கித் தருவார்கள்
மதிய உணவைப் பங்கு வைப்பார்கள்
நோய்க்கு மருந்து வாங்கித் தருபவர்கள்
சைக்களில் வைத்து மிதித்து பள்ளிக்கூடம்
கொண்டு சேர்ப்பவர்கள் இருந்தார்கள்

இப்போதோ

பால் வியாரிகள்
பலகாரா வியாரிகள்
பாட புத்தகம் விற்பவர்
வட்டிக்கு விடுபவர்
பாதிநாட்களில் பள்ளிக்கு வராதவர்
ஆளும் கட்சிகளின் கூலிகள்
நடத்தும் பாடம் அறியாவர்களாக இருக்கிறார்கள்

அந்த இருந்தார்கள் என்ற முதல் வரிசையில் வைக்கக்கூடியவர்தான் ஹாஜி அகமது கௌஸ் அவர்கள்.

நத்தம் கருப்பாயூரணி படித்துறையில் அவர் குளித்து முடித்து படியேறும் வரை நானும் தியாகராஜனும் குளிக்கக் காத்திருப்போம். அவர் சென்று விட்டால் அல்லித் தண்டை தாரளமாக பறித்து விளையாடிவிட்டு வரலாம். அது அவருக்குத் தெரியும் ஒரு எச்சரிக்கை செய்யும் பார்வையுடன் கடந்து செல்வார்.

அதிரப் பேசி ஒருநாள் கூட நாங்கள் பார்த்ததில்லை, ஒருநாள் வகுப்பில் துரைராஜ் பாதித் தூக்கத்தில் விழித்த மாதிரி ஒன்றுக்கு மணி அடிச்சாச்சா என்று கேட்டான், அதைத் தன் காதில் வாங்கிக் கொண்டு அடுத்து சாப்பாட்டு மணி, அதற்கடுத்து வீட்டு மணி,

என்ன வகுப்பில் கண்ணை திறந்து கொண்டு தூங்குறே… வீட்டுக்குப் போனால் கண்ணை கண்ணை மூடிக்கொண்டு தூங்குவே!..

என்று பிளாக் போர்டை பார்த்துக்கொண்டே பேசினார்.

என்னைப்போலவே ஆசிரியரின் நீங்காத நினைவுகளுடன் ஆயிரமாயிரம் மாணவத் தோழர்கள்…

அவர் என்றும் மறக்க இயலாதவர்.

Mr.Wong நான் புளோக்கிலிருந்து வெளியாகும் போது சரியாக காலை நடையை முடித்துவிட்டு பார்க்கில் உட்கார்ந்திருப்பார். அதிகாலை 2 மணி கால்பந்தாட்டத்தை என்னிடம் விசாரிப்பார். இங்கிலாந்து ஜெர்மனியிடம் தோற்றுப் போனதைப் பற்றி அன்று பேச்சை ஆரம்பித்தார். 1970 இங்கிலாந்து தேர்தலில் ஹெரால்டு வில்சன் இங்கிலாந்து அணியை நம்பினார், ஆனால் 2-3 என்ற கணக்கில் ஜெர்மனி ஜெயித்தது. இப்போதும் இந்த ஜெர்மனிக்காரன் ஜெபுலானி பந்துகளை நன்றாக ஆடி பயிற்சி பண்ணிக் கொண்டு வந்து நன்கு முன்னேறுகிறான் என்றார்.

அர்ஜென்டினாவும், இங்கிலாந்தும் 1986ல் பாக்லாண்டு யுத்தம் செய்ததே, இந்த மாரடோனா கையால் போட்ட கோலால்தான் என்றார் .  S.A.இராஜகோபல் ஏ.சுந்தரமூர்த்தி, டோலா காசிம், சமது அல்லா பிச்சை, பாண்டி அகமது, வில்ஸ் கின்னர் இவர்களின் தொடக்கத்தையும் முடிவையும் 4 ஆண்டுகள் உலகக் கோப்பை இடைவெளியில் நுழைந்து நினைவுகள் தப்பாமல் சொல்வார்.

 உள்ளபடியே 2010 சிங்கப்பூர் குழு உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றில் வெற்றி பெற வேண்டும் என்பதே இலக்கு. இந்த முறை சவுதிஅரேபியா மற்றும் உஸ்பெகிஸ்தான் குழக்களிடம் அடைந்த தோல்வி அந்த இலக்கை அடையமுடியவில்லை.

கடந்த 80 வருடங்களில் எல்லா ஜீரங்களையும் மிஞ்சி உலகில் பல நிகழ்வுகள் நடக்கக் காரணமாக இருப்பது கால்பந்து ஜீரம் ஒரு காரணிதான்.

1949க்குப் பிறகு சீனாவில் முக்கிய நிகழ்வாக 1978ல் உலகச் சந்தைக்குத் தன் கதவுகளை திறந்து விட்ட சீனா அதே ஆண்டில் உலகக் கால்பந்து போட்டிகளை தொலைக்காட்சியில் பார்க்க அனுமதி அளித்தது.

1934 முஸோலினி கால்பந்து போட்டிகளை தன் பிரச்சார ஆயதமாக்கி தன் கொள்கைகளை தற்காக்க முயன்றது,  அதேபோல் ஹிட்லரும் பெர்லின் ஒலிம்பிக்கை பயன்படுத்திக்கொண்டதை உலகம் அறிந்த செய்திகள்.

1969ல் எல்சல்வாடரும் ஹொண்ராஸிம் (தற்போது தென் ஆப்பிரிக்கா) தேர்வுச் சுற்றுக்களில் மோதல் வெடித்தது,  போராகி மோதல் வெடித்ததில் 2000 பேர் வரைக் கொல்லப்பட்டனர்.

ஐவரி கோஸ்டில் நடந்த உள்நாட்டுப் போர் 2006ல் கால்பந்து போட்டி நாட்களில் துப்பாக்கிச் சத்தம் ஓய்ந்திருந்ததும், 1975 லிருந்து நடந்து வந்த லெபனான் உள்நாட்டுப் போர் 4 வருடங்களுக்கு ஒருமுறை அமைதி காத்ததும் கால்பந்து தீவிரத்தின் வெற்றிகள்.

இன்றைய இளைஞர்களுக்கு உள்மனதில் சரியான திட்டங்கள் இருக்கின்றது. போரை நோக்கியே தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் அரசியல் சித்து விளையாட்டுக்களை அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

என் மகன் முக்கிய பங்காற்றிய குழு சிங்கப்பூர் பள்ளிக்கான அனிமேஸன் போட்டிகளில் Gan Eng Seng பள்ளிக்கு முதல் பரிசு பெற்றுத் தந்தது. அந்த அனிமேஷனை போட்டுக்காட்டு என்ன தீம் என்று பார்க்கலாம் என்றேன். வெடிகுண்டுகள் எங்கும் வெடித்த வண்ணம் உலகே போர்களமாகிக்கிடக்கிறது இன்னும் இன்னும் மூர்க்கமாகி வரும் வேளையில் குண்டுகளெல்லாம் ஒன்றாகி ஏதோ ஒரு உருண்டை வடிவம் உருண்டு உருண்டு அப்படியே கால்பந்தாகி மனிதத் தலைகளின் ஆரவாரத்துடன் நிலை நின்றது.

http://www.youtube.com/watch?v=9FfOdWdhkkk

எத்தனையோ முறைகள் வீசப்பட்டுக் கொண்டிருக்கும் கிரிக்கெட் பந்துகள் இந்தியா பாகிஸ்தானுக்கிடையே விரோதத்தை வளர்ப்பதே தவிர ஒற்றுமையைக் கொண்டு வரவில்லை. பாகிஸ்தான் சோயப் மாலிக்கை திருமணம் செய்த சானியாமிர்சாவிற்கு இந்தியாவில் வரவேற்பில்லை.

இந்நிலையில் இரண்டு இளம் ஆட்டக்காரர்கள் பாகிஸ்தான் அசன் அல்ஹக் குரெஷி மற்றும் ரோஹன் போபண்ணா இருவரும் இந்தியா பாகிஸ்தான் எல்லைகளில் திசைகள் மாற்றி நின்று கொண்டு டென்னிஸ் விளையாடி இருநாட்டு ஒற்றுமைக்கும் பாலம் அமைக்கப்போவதாக சீறுகிறார்கள். Stope war, Star tennis  இயக்கத்தை ஆரம்பித்துள்ளார்கள்.

பந்துகள் உலக ஒற்றுமைக்கு பாலம் அமைக்கும் என்று இளையர்கள் நம்ப ஆரம்பித்துள்ளனர் (அரைபந்து, கால்பந்து என்று பந்தயம் கட்டும் இளையர்களை நாம் கணக்கில் கொள்ளத் தேவையில்லை)

ராக் ஸ்டார் போனோ “ ஐயா கால்பந்து தினத்தன்று அனுபவிக்க பள்ளிகளுக்கு விடுமுறை கொடுங்கள், கடைகளை அடையுங்கள், நகரத்தை மூடிவையுங்கள், அப்படியே போரையும் நிறுத்திவிடுங்கள் என்று பாடும் ராக் பாடல் உலகெங்கும் ஒலிக்கட்டும்.

சுனை மடி

1)

சுழலும் நாற்காலியில் சுற்றினால்
உலகமே சுற்றும் என
அவள்தான் முதலில் சுற்றிக்காண்பித்தாள்
நெல்லிக்கனி தின்று தண்ணீர் குடித்தால்
இனிக்கும் என்று ரகசியம் சொல்லிவைத்தாள்
அவள் கைபிசைந்து ஊட்டிய
”நாஸிலெம்மா” கோழி இப்போது
எந்தக் கடையிலும் கிடைப்பதில்லை
கொரியா துப்பாக்கியால் சுட்டால் மட்டுமே
உதட்டுச் சாயம் வரைந்து
நாக்கு நீட்டி செத்துப்போவாள்
எங்கிருப்பாள் எப்படியிருப்பாள்
அல்லது இருக்கிறாளா
அவள்முகவரியை அம்மா எங்காவது
எழுதி வைத்திருப்பாள் என்று தேடினால்
அமுதா அக்கா முகவரி மட்டும் காணப்படவில்லை
அனைத்துமே பணிப்பெண் என்றே குறிக்கப்பட்டிருந்தது

2)

வெளிச்சம் சேமித்த இரவு
பொழுதுகளோடு நாம் புரிந்த
யுத்தங்களையெல்லாம் முடித்துவிட்டு
இங்குதானே இளைப்பாறுகிறோம்
இந்த நிழலின் இடுக்குகளில்தான்
எங்கோ சிறையிருக்கிறது
நாளையின் விடியல்
இங்கு அடித்த மின்னலில்தான்
காலையில் காளான்கள் முளைக்கின்றன
கூவிக் கொண்டிருக்கும் குயிலையும்
உறுமிக் கொண்டிருக்கும் சிங்கத்தையும்
இங்குதானே கட்டிப் போடுகிறோம்
இங்கு நிலாப்பால் குடிப்பவர்க்கு
நித்தமும் விடிகிறது
மனப்பால் குடிப்பவர்க்கோ
இரவுகள் நீண்டு கொண்டேயிருக்கின்றன.

நன்றி: உயிரோசை (www.uyirmmai.com/Uyirosa)

வலி

Posted: ஜூலை 3, 2010 in கவிதை

எல்லா வலிகளும் எழுதப்பட்டிருக்கும்
புத்தகத்தில் பக்கங்கள் இல்லை!
எழுதியவர் பெயர் குறிக்கப்படவில்லை!
விலையும் இல்லை!

ஆனால் அதை வாங்கியவருக்கு விலை
தெரிந்தே இருக்கிறது!
அதன் பக்கங்கள்….
எல்லா வீடுகளிலும் சில காய்ந்தும்
சில ஈரம் காயாமலும்..

கிளைகள் வெட்டப்பட்ட மர நிழல்களில் கூட
எவ்வளவுதான் மறக்க முயன்றும்
தொலைந்து போகாமலும்…

இன்னும் இறுதி வலி உணரப்படாததால்
புதிய வலியும் மறத்தலும்
நீண்டு கொண்டேயிருக்கின்றன!