ஓகஸ்ட், 2010 க்கான தொகுப்பு

கடற்கரை இப்போது அவ்வளவு சுத்தமாக இருக்கிறது. தூரத்தில் ஒன்றிரண்டு கப்பல்கள் எங்கோ போய்க் கொண்டிருக்கின்றன. அலை அடித்து ஒதுங்கும் கடல்பாசிகள் அங்குமிங்கும் சிதறிக் கிடக்கின்றன. 30 வருடங்களுக்கு முன்னால் ஒப்பிலான் கிராமத்து மக்கள் சந்தோசப்படும்போது கடல் கூடவே ஆர்ப்பரித்தது, ஆத்திரம் வரும்போது கூடவே கரைந்தது, வருந்தும் மனம் சாந்தியடையும்போது தன் எழுச்சி மிக்க அலைகளால் ஆசிர்வாதம் செய்தது.

நான் சிறுவனாய் இருக்கும்போது ஊரே கூடி கரைவலை இழுத்த காட்சி நெய்மீன், வஞ்சிரம், பாறை, கட்டா, வெளமீன், கூறல், ஊழி பெருமீன்களைக் கழித்துவிட்டு சிறுவர்களை பண்ணா, கத்தாள, குதிப்பு, கணவா, நெத்திலி மீன்களை அள்ள அனுமதிப்பார்கள். அப்போதெல்லாம் கரையோரங்களில் மீன்கள் நிரம்பி வழிந்தன. இப்போது நடுக்கடலில் அல்லது அடுத்த நாட்டு எல்லைக்கு அப்பால் மீன்களைத் தேடி நம்மவர்கள் அலைகிறார்கள்.  என் கிராமத்து மக்கள் வளைகுடா நாடுகளுக்கும், சிங்கப்பூர், மலேசியாவிற்கும் புலம்பெயர்ந்து விட்டார்கள்.
 

 

என் ஞாபகப் படுக்கையைப் புரட்டிப்போட்டது சிங்கப்பூரில் 15.08.2010 – ல் நடைபெற்ற வாசகர்வட்டம்  வண்ணநிலவனின் கடல்புரத்தில்நாவலும் தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள்நாவலும் வாசிப்போம் நேசிப்போம் நிகழ்விற்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தது. இரண்டு நாவல்களையுமே அனைவரும் படித்து வந்தது கலந்துரையாடலைக் கலகலப்பாக்கியது.

திரு.கே.ஜே.ரமேஷ் தன் உரையில் வண்ணநிலவனின் ரெய்னிஷ் ஐயர் தெருபடித்தவுடன் அந்தத் தெருவைப் போய் பார்க்க வேண்டும் என்ற உந்துதலில் சென்று ஐயர் தெருவைப் பார்த்தேன், அதுபோல மணப்பாடு ஊரையும் பார்க்கத் தோன்றுகிறது! அவ்வளவு எதார்த்தமாக அந்த ஊரை நம் கண்முன்னே நிறுத்திவிடுகிறார். உறவுகளிடையே கோபம், மனவருத்தம், பகைமை, பொறுமை, நம்பகமின்மை, இன்ன பிற உணர்ச்சிகள் இருந்தாலும் கதை முழுவதும் அடிநாதமாக அன்பு இழையோடிக் கொண்டிருப்பதை உணரமுடிகிறது என்று சொன்னார்.

முகவை ராம் மற்றும் திருச்செல்வன் உரைகளும் கடல்புரத்து நாவலைப் படிப்பவர்களின் மனதில் பலகாலத்துக்கு அழுத்தமாக நிற்கக் கூடிய நாவலாகச் சுட்டிக் காட்டினர். “நாளை பிறந்து இன்று வந்தவள் மாதங்கி கதாபாத்திரங்கள் தன்னுடைய சுயத்தை இழந்து வெவ்வேறு நிலைப்பாடுகள் எடுத்திருந்தால் நாவலின் போக்கே திசைமாறியிருக்கும் என்று முத்தாய்ப்பு வைத்தார்கள். சித்ரா ரமேஸ் நிகழ்ச்சியை வழிநடத்தினார்.

 

தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள் நாவலை முழுமையாக மறுவாசிப்பு செய்து ஒரு நீண்ட கட்டுரையுடன் வந்தவர் ஜெயந்தி சங்கர். தன்னுடைய மூக்குக் கண்ணாடியை மறந்துவிட்டு வந்ததால் பாண்டித்துரை அந்தக் கட்டுரையை வாசிக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டார். அவருடைய குரல் அந்தக் கட்டுரையின் உணர்வுகளை முனை மழுங்காமல் கூட்டத்திற்குக் கொண்டுவந்து சேர்த்தது.

 தி.ஜானகிராமனின் பெண்பாத்திரங்கள் எல்லோருக்குமே காதருகே கேசம் சற்றே அதிகமாக இறங்கியிருக்கும், சருமம் இழுத்துக் கட்டிய மாதிரியும் திகுதிகுவென்று இருக்கும் முக்கிய பெண்பாத்திரங்கள் யாருமே சராசரி தோற்றத்துடன் வருவதில்லை” என்றார். பிறகு ஒரு பாத்திரத்தை உயர்த்தி இன்னொன்றை இறக்குவதால் மாத்திரம் வேறுபாட்டை ஏற்படுத்தி அவர் நினைக்கும் பாத்திர வேறுபாட்டை ஏற்படுத்தி அவர் நினைக்கும் பாத்திர மேன்மையை மேலும் தூக்கிப் பிடிக்கும் உத்தியை செம்பருத்தி’யிலும், மோகமுள்’ளிலும் தி.ஜா. கடைபிடித்திருப்பதாக விளக்கினார்.

 ‘‘அவர் காலத்தில் புரட்சியாகவும் அதிர்ச்சியாகவும் இருந்திருக்கும் அலங்காரத்தம்மாள் பாத்திரம் இக்காலத்தில் அதேபோன்ற தாக்கத்தைக் கொணருமா என்றால் சந்தேகம்தான்” என்று சொல்லி, மிகமுக்கியமாக ஜெயந்தி சங்கர் இந்நாவலில் தற்காலத்துக்கு பொருந்தாத மதிப்பீடுகளாகத் தோன்றும் திருமணம், திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு, மறுமணம் போன்றவற்றைக் குறித்து இன்றைக்கு இருக்கும் கருத்தோட்டங்களைச் சுட்டிக்காட்டி அம்மா வந்தா’ளை புரட்டிப்போட்டார்.

இந்துவுக்கு அப்புவைப் பிடிக்கிறதா?

திருமணம் செய்துகொள்ளட்டுமே,  திருமணம் வேண்டும் என்றால் வேண்டும். சரி, வேண்டாம் எனில் வேண்டாம். அதற்கேன் பவானி அம்மாளுக்கு இத்தனை குழப்பங்கள், அதேபோல் அலங்காரம் பேசாமல் தண்டபாணியை விவாகரத்து செய்துவிடலாமே? எதற்கு அவளுக்கு இந்த இரட்டை வாழ்க்கை. இதென்ன பெரியவிசயமா எனக்கேட்டு நகர்ந்துவிடும் புதிய சமுதாயத்தில் நாம் இருக்கிறோம்” என்பதைச் சொல்லி அவையை சிறப்பான விவாதத்திற்கு இட்டுச்சென்றார்.

நிகழ்வை வழிநடத்திய சித்ரா ரமேஷ், வண்ணநிலவன், ‘கடல்புரத்தில் பிரியமானவர்களுக்கு எழுதப்பட்ட பிரிவுக்கதை என்றார்.

மனதில் அன்பிருந்தால் பேசுகிற சொற்கள் மந்திரம் போலாகும். பாஷை தேவபாஷையாகத்தான் தோன்றும், கொலை செய்தார்கள். ஸ்நேகிதனையே வஞ்சித்தார்கள், மனைவி புருசனுக்குத் துரோகம் நினைத்தாள். ஆனால் எல்லோரிடமும் பிரியமாக இருக்கவும் தெரிந்திருக்கிறது. கதைக்களம். கதை சொல்லப்பட்ட மொழி, கதையின் எளிமை, “மரபுகளை மீறிய கதையின் முடிவு இவற்றைச் சுட்டிக் காட்டினார்.

 பூங்குன்றன் பாண்டியன், சொக்கலிங்கம், மூத்த எழுத்தாளர் இராம.கண்ணபிரானும் கலந்துகொண்டார்கள்.  கடைசிவரை சித்ரா ரமேஷ் அம்மா வந்தாள் அலங்காரம் இப்படிச் செய்யலாமா என்று ஆண் வாசகர்களை நோக்கி எழுப்பிய கேள்விக்குப் பதில் இல்லாமலேயே கூட்டம் முடிந்தது.
ஆஹா! நான் சொன்னதை எழுதாமல் பத்தியை முடிக்க முடியுமா?

என் பால்ய நினைவுகளில் ஒன்றிப்போன கடற்கரையும் வண்ணநிலவனின் அந்த பாஷையையும் குறிப்பிட்டுப் பேசினேன். கரைவலையில் பாடுவைப்பது தண்டோரா போடுவதை சத்தம்போடுவதுஎன்று சொல்வது, பறவர் வழக்கில் இஸ்லாமியர்கள் தண்டல்காரரை சம்மாட்டிகள்என்றழைப்பது எல்லோருக்கும் பொதுவான பண்டியல்கள்.

  கடல்புரத்தில் வண்ணநிலவன் முத்தாய்ப்பாக, ‘வாழ்க்கை எவ்வளவு கொடூரமானதாக் இருந்தாலும் கூட யாருக்கும் சாகப்பிடிக்கவில்லை. காரணம் ஸநேகங்களும் பிரியங்களும்தான் என்பார். வாசகர் வட்டம் இதுபோல் ஸ்நேகங்களால் வலுப்பெறவேண்டும்.
நன்றி:
உயிரோசை.com
வாசகர் வட்டம் (சிங்கப்பூர்)

 

 

 

சிறுவயதில் நமக்குப் பிடித்த இடங்களைப்பற்றி நினைக்கத் துவங்கினால் நம் ஊர், நாம் வாழ்ந்த வீடு, படித்த பள்ளி என்று தொடரும் நினைவில் ஒரு இடத்தை மட்டும் நம்மால் மறக்க முடியாது அது தொழுகை பள்ளி அதிலும் நோன்பு காலத்தில் சங்கத்து பிள்ளைகளின் “பைத்”.

நோன்பு வந்துவிட்டால் மூன்று மணிக்கு “தப்ஸா” பக்கிரிஷா தூங்கிக் கொண்டிருக்கும் அனைவரையும் எழுப்ப ஆரம்பித்து விடுவார். பள்ளிவாசலில் தரவிஹ் தொழுகைக்குப் பின்பு மதரஸாவில் நண்பர்களுடன் படுத்துத் தூங்க விருப்பமாக இருந்தாலும் வீட்டில் வீட்டில் அனுமதிக்க மாட்டார்கள். சில தடவைகள் நண்பன் செய்தாமுது கூட இருந்தால் அனுமதிப்பார்கள். முதலில் செய்தாமுது பற்றி சொல்ல வேண்டும். நான் உயரம், அவன் ரொம்ப கம்மி. இருவரும் 8ஆம் வகுப்பு படிக்கும்போது சென்னை சென்றோம், புகை வண்டியை வாழ்வில் முதலில் அப்போதுதான் பார்க்கிறேன். இருவரையும் TTR விழுப்புரத்தில் இறக்கி சோதனை செய்ய வேண்டுமென்றார். காரணம் பள்ளி கட்டன சலுகையில் பயணம் செய்ததால் சோதனை, ஒரே வயது இவ்வளவு உயர வித்தியாசம், அவருக்கு வித்தியாசமாக தெரிந்து விட்டது. பிறகு எப்படி எங்களை பயணம் செய்ய அனுமதித்தார் என்பது புகை மாதிரி தெரிகிறது. சரியாக சொல்ல ஞாபகமில்லை.
இறை நம்பிக்கையில் அவன் கெட்டி நோன்பு 30/30 பிடித்துவிடுவான். நான் 3/30தான். ஆனால் நான்தான் அவனுடைய ஒரே நண்பன். என்னுடைய பள்ளி Indoor & outdoor  விளையாட்டுகள் அனைத்திலும் நான்தான் சாம்பியன், பரிசுப் பொருட்களை வாங்க மேடையேறும்போது செய்தாமுது கைகள்தான் ஓங்கி ஓங்கித் தட்டிக்கொண்டிருக்கும்.
“பைத்” ஓதும்போது கமால், குத்புதீன், நஸீர், முஸ்தபா என்னையும் 3-வது அணியில் போட்டுவிடுவார்கள். SSLC படித்துக்கொண்டிருக்கும் எனது சீனியர்கள்தான் முதல் வரிசை. அவர்கள் பைத் ஓதும்போது பல்லவியை மட்டும் நாங்கள் ஓத வேண்டும். பைத் பள்ளிவாசலிலிருந்து புறப்பட்டு தெற்குத் தெருவில் நுழைந்து துபாஷ் தெரு வரும்போது இரண்டாவது அணி ஓத ஆரம்பிக்கும். சந்துகளுக்குள் சீனியர்கள் வர மாட்டார்கள் அவர்கள் திருப்பத்தில் நின்று கொண்டு எங்களை சந்துக்குள் அனுப்புவார்கள், பல்லவியை சரியாக பாடிக் கொண்டு வட்டமடித்து வரவேண்டும். அப்போதுதான் எங்கள் சேட்டைகளை ஆரம்பிப்போம், கமால் எப்போதுமே அண்ணா வாத்தியார் மகன் சாதிக் தொப்பியை தட்டிவிடுவான், நான் ஊனாநாகூர் கனி தொப்பியை கீழே தள்ளிவிடுவேன். அவரகள் தேடிக் கொண்டிருக்கும்போது மெயின் பைத்-ல் நாங்கள் சேர்ந்துகொள்வோம்.  சாதிக், ஊனாநாகூர் கனி லேட்டாக வந்ததால் சீனியர்களிடம் அடி கிடைக்கும்.
எங்கள் மூன்றாவது அணி ஒரு சந்தர்ப்பத்தில் இரண்டாக பிரிந்து கமால் ஒரு அணியின் தலைவன், நான் எதிர் அணியில்! பைத் காக்காத் தோப்பு தெரு வந்தவுடன் நானும் செய்தாமுதும் மெதுவாக வீட்டுக்குள் நழுவிவிடுவோம். கமால் அப்துல்காதரைக் காணோம் என்று காட்டிக் கொடுத்துவிடுவான்.
அந்த அனுபவங்களின் சுவைகள் எல்லையற்றவை. வாழ்க்கை மாறுந்தோறும் வண்ணங்கள் மாறுகின்றன. பால்ய பருவத்து நினைவுகள் நம் கண்முன் வந்து நிற்கும்போது அந்த அனுபவத்தின் விசித்திரம்தான் எண்ண மாயம் செய்கிறது.
தம்பி சாகுல்கமீது கமால் இறந்து செய்தி சொன்னபோது என்னுள் பதிந்திருக்கும் தடையங்கள் மெல்ல மெல்ல ஒரு சித்திரத்தை உருவாக்கி திரும்ப திரும்ப பைத்தின் நினைவுகளை கொண்டு வந்து சேர்க்கிறது.
 

 அன்புள்ள நண்பர்களுக்கு

ஆக்ஸ்ட் மாதம் வாசிப்பை நேசிப்போம் மாதம்.

இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு நூலகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டக் கதைகள் ”அம்மா வந்தாள்” –    ”தி ஜானகிராமன்”  ”கடல்புரத்தில்” – ”வண்ணநிலவன்” இந்த இரு நூல்களையும் படித்து ஒரு விமர்சனக்கட்டுரை, அல்லது புனைவுகளைப் பற்றிய ஒரு பார்வை, எழுத்து நடை, இதில் வரும் பெண் கதாபாத்திரங்கள், இவர்களை முன்னிறுத்தி பெண்ணீயம் போன்ற கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

இந்தப் புத்தகங்கள் அனைத்து நூல் நிலையங்களிலும் கிடைக்கின்றன. நிறையப் பிரதிகள் இருக்கின்றன. ஆகையால் இவற்றைப் படித்து கட்டுரைகளுடன் வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.கட்டுரைகள் படைக்கவில்லையென்றாலும் ஒரு பார்வையாளராகவோ ஒருவாசகராகவோ கலந்து கொள்ளலாம். கட்டுரைகள் படிக்கப்படும் போது அவை குறித்தான கருத்துகள் பரிமாறிக் கொள்ளலாம். ஆனால் புத்தங்களைப் படித்து வந்தால் சிறப்பு!!!!

இடம்: அங் மோ கியோ நூலகம்

அறை: டொமேட்டோ அறை (முதல் மாடி)

நேரம்: மாலை 5.00 மணி நாள்: 15-8-2010 ( ஞாயிற்றுக் கிழமை)

வாசகர் வட்டம் எந்த தலைமையும் இல்லாமல், எந்த அமைப்பையும் சாராமல் நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சி! எனவே இலக்கியப் பரிமாற்றம் என்ற ஒரே நேர்க்கோட்டில் பயணிக்க வேண்டும் என்ற விருப்புடன் மற்ற தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை புறக்கணித்து விட்டு அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று

வாசகர் வட்டம் சார்பாக அழைப்பது

அன்புடன்

சித்ரா