திசெம்பர், 2010 க்கான தொகுப்பு

ஏழாம் பொருத்தம்

Posted: திசெம்பர் 22, 2010 in பத்தி, uyirmmai.com
குறிச்சொற்கள்:

கல்லூரியில் எண்ணியல் (Arithemetic) வகுப்புதான் நான் அதிகமாக கட் அடித்தது. ஜமால்முகம்மது கல்லூரி பேராசிரியர் ஜியாவுதின் வகுப்பில் நுழைந்தவுடன் போர்டில் கை வைத்துவிட்டால் விடை எழுதிவிட்டுத்தான் திரும்பிப்பார்ப்பார். சிக்கலான கணக்குகளை அவர் தோற்கடித்து வென்றதுபோல சாக்பீஸ்களை இரண்டிரண்டாக உடைத்து கீழே போட்டுக் கொண்டிருப்பார். அவர் போர்டில் செய்முறை செய்யச் சொல்வதுதான் எனக்கு பெரிய சவாலாக இருக்கும். எப்போதாவது சில நேரங்களில் கொஞ்சமாக சிரிப்பார்.

ஒருநாள் வகுப்பிலுள்ள அனைவரையும் 10 வரையுள்ள எண்களை ஒன்றை நினைத்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு ஒவ்வொரு எண்ணாக குறிப்பிட்டு கையைத் தூக்கச் சொல்லி சரிபார்த்தார்.

01, 03, 04, என்று எண்களை யாரும் நினைவில் கொள்ளவில்லை, ஆக அதிகமாக நம்பர் 7 ஐ அதிகம் பேர் நினைத்திருந்தார்கள். ஒரே ஒரு மாணவன் 0 வை நினைத்திருந்தான். பேராசிரியர் அன்று சிரித்தபடி வகுப்பில் எண்களின் வரலாற்றையும் அதன் பண்புகளையும் பற்றிக் கொடுத்த லெக்சர் அவரை நினைவு கொள்ள வைக்கின்றன. விடை சரிதானா என்று ப்ளாக்போர்டின் முன்பு நாம் தடுமாறி நிற்கும்போது ஒரே ஒரு குளு கொடுப்பார். அது ஒரு Fibonacci நம்பர் என்று சொல்லிவிடுவார். 0,1,2,3,5,8,13 இந்த Fibonacc நம்பரை வைத்து கட்டிடக்கலை நுட்பங்கள் பல தோன்றிவிட்டன. ஆனால் என்னிடம் யாராவது மைல் கணக்கை கிலோமீட்டரில் கேட்டால் மட்டும் ஒரு நொடியில் சொல்லி எனக்கு Fibonacc சூத்திரம் தெரியும் என்று காட்டிக்கொள்வேன். பலநூறு ஆண்டுகளாக தீர்க்கப்படாத கொள்கை என்று ஒன்றிருந்தால் அது எண் கொள்கையாகத்தான் இருக்க முடியும் என்று சொல்வார்.

ஒரு 10 பேரிடம் நீங்கள் ஒரு நம்பர் சொல்ல கேளுங்கள், அதிகம் பேர் 7 ஐக் குறிப்பிடுவார்கள். 7 ஒரு அதிசயமான எண். அதனால்தான் ஏழு அதிசயங்கள், ஏழு நிறங்கள், கண்ணுக்குத் தெரியக்கூடிய ஏழு கண்டங்கள், ஏழு தலைமுறைகள், ஏழு ஸ்வரங்கள் எஸ்ரா கூட குழந்தைகள் புத்தகத்திற்கு ஏழு தலை நகரம் என்றுதான் பெயர் வைத்திருக்கிறார்.

Mr.ஞானசேகர் பக்கத்து புளோக்கில் குடியிருக்கிறார், அவரை Mr.சேகா என்றுதான் கூப்பிடுவார்கள். ஞானம், ர் சீனர்கள் வாயில் நுழையாததால் அவருடைய பெயர் அப்படி சுருங்கிவிட்டது. நீண்ட காலமாக டாக்ஸி ஓட்டுகிறார், சிங்கப்பூரில் அவருக்குத் தெரியாத இடங்களில்லை. அநேக நாட்களில் காலையில் வீட்டிலிருந்து கடைக்கு அவர்தான் கூட்டிச்செல்வார். ஹெண்டர்சனிலிருந்து CTE யில் புகுந்து அப்பர் சிராங்கூனில் வெளியேறி 20 நிமிடங்களில் கொண்டு சேர்த்துவிடுவார், அவர் ஒரு கணக்குப்புலி. பயணிகள் டாக்ஸியில் ஏறும்போது இடத்தைச் சொன்னவுடன் தூரத்தைக் கணக்கிட்டு ஹைவேயில் சென்றால் என்ன தொகை வரும் சிட்டிக்குள் புகுந்து Jam இல்லாமல் பயணித்தால் என்ன தொகைவரும் என்று துல்லியமாக சொல்லிவிடுவார். கிட்ட தட்ட அந்த தொகைக்குவந்து நிற்கும்போது என்ன ok வா என்று அவர் கணக்குத் திறமையை அவரோ அங்கீகரித்துக்கொள்வார். வாழ்வின் அனைத்து சம்பவங்களும் எண்களோடு தொடர்பு உள்ளன என்று அழுத்தமாக நம்புவார், அவ்வவ்போது பயணிகளுக்கு நியூமரலாஜி டிப்ஸ் கொடுத்துக் கொள்வார் பெரும்பாலும் அது 4D (அதிஷ்டக்குலுக்கல்) எடுப்பதில் போய் முடியும்.

அவரைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு அசோகமித்ரன் எண்கள் சிறுகதை நினைவுக்கு வந்துவிடும். காலையில் 7 மணிக்கு எழுந்து பக்கத்துகடையில் தினசரிகள் படிக்க முயன்று ஒவ்வொரு தடவையும் யாராவது படித்துக் கொண்டிருப்பார்கள். 8 குடித்தனங்கள் உள்ள வீட்டில் காலைக் கடன்களை முடித்து வேலைக்குப் போவதற்கு முன்பு மற்ற காரியங்கள் சரிந்து விழும் அபாயத்தில் தினசரிகளை படிப்பதையே விட்டுவிடும் கதாநாயகன் போல Mr..செகாவும் 7 மணிக்கு படுக்கையிலிருந்து எழ நேரமாகிவிட்டால் டாக்ஸி ஓட்டமாட்டார். அடுத்தடுத்த வேலைகளை கணக்கிட்டு எந்த வேலையும் செய்யாமல் விட்டிலிருந்து விடுவார் மனைவி கூட இருந்தால்தான் அவரிடம் சுறுசுறுப்பை பார்க்கமுடிகிறது என்பேன். மற்ற வீடுகளைப்போல் நினைக்காதீர்கள் என் வீட்டில் நான்தான் நம்பர் சத்து, மனைவி வெறும் கோஸம் தான் என்பார். ஆனால் அந்த கோஸம் (0) இருந்தால் இயல் எண் ஒன்று முழு எண் பத்தாக ஆகும் என்று புளோக்கில் அனைவருக்கும் தெரியும்.

புதிய இடங்களுக்கு வற்புறுத்திக் கூப்பிடுவார். மரினா ஸ்கைபார்க் திறந்த அன்று என்னையும் கூட்டிச் சென்று கார் நிறுத்த Lot கிடைக்காமல் மனிதர் அல்லாடி விட்டார். உலகின் தலைசிறந்த நினைவுச் சின்னங்களும் கட்டிடங்களும் சென்ற நூற்றாண்டுகளில் மதத்தை பரப்பவும், ஆள்பவர்களின் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்கும் உருவாக்கப்பட்டன. தற்போது நவீன யுகத்தில் கலாச்சாரத்தைப் பரப்புவதற்கும் வர்த்தக வளர்ச்சிக்கும் எழுப்பப்படுகின்றன. நவீன கட்டிடக் கலையின் வளர்ச்சியை ஒரு சமூகவியல் நிகழ்வாக கருதுகின்றனர். பிற அழகியல் துறைகளை ஓவியம் சிற்பம் போன்றவற்றுடன் கட்டிடக் கலை நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தபோதும் மனிதர்கள் உள்ளேயும் சென்று பயன்படுத்தும் தன்மையை தனித்துவமாகக் கொண்டுள்ளன. உலகில் ஆக அதிக உஉயரமுள்ள கட்டிடமாக 1999ல் துபாயின் Barj-al-arab சுமார் 821 மீட்டர். .

தைபேயின் தைபோ 101 சுமார் 501 மீட்டர் உயரமுள்ளது. தெற்காசியாவில் மலேசியாவின் இரட்டைக் கோபுரங்கள் தவிர அதிக உயரமான கட்டிடங்கள் எதுவுமில்லை. குறிப்பாக இந்தியாவில் மும்பையிலும், கல்கத்தாவிலும் சில உயரமான கட்டிடங்கள் தவிர வேறு மாநிலங்களில் பெயர் சொல்லும் உயர்ந்த கட்டிடங்கள் இல்லை.

சிங்கப்பூரில் சமீபத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்கைபார்க் கட்டிடம் ஒரு பொறியியல் அதிசயம் என்று சொல்லலாம். சுமார் 200மீட்டர் உயரத்தில் ஈபில் டவரை படுக்கைவசத்தில் வைத்ததுபோல நீளத்தில் சுமார் 4 1/2 மடங்கு A 380 ஜெட் விமானத்திற்கு ஈடானது. சுமார் 124000 சதுர மீட்டர் பரப்பளவில் ஒரே நேரத்தில் 3900 உள்ளே செல்லமுடியும். மின்னலைத் தாங்குவதற்கு அமைக்கப்பட்டுள்ள Cantilever உலகில் ஆக நீளமானது என்று சொல்கிறார்கள். Mr.சேகா அண்ணாந்து பார்த்துக் கொண்டே இந்த 200 மீட்டர் உயர் கணக்குக்கு கீழே உள்ள தண்ணீரின் ஆழத்தையும் சேர்த்து கணக்கிட்டதா என்றார். அவர் மாதிரியே எனக்கு இன்னம் பல விசயங்களில் சந்தேகங்கள் இருக்கின்றன.

ஒரு நாள் துலாங் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது பல்லில் குத்தி விட்டது. பல் வலி வந்தால்தான் பல் டாக்டர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தேடச் சொல்கிறது. ஒரு வழியாக முன்பதிவு செய்து டாக்டரை பார்த்தால் அவர் ஆண்டி பயாடிக்ஸ் 7 நாட்களுக்கு எடுத்துக் கொள்ளுங்கள் சரியாகிவிடும் என்றார் அது ஏன் 6 நாட்கள் 8, 9 நாட்கள் என்று டாக்டர்கள் கூறுவதில்லை. இந்த 7 நாட்கள் கிருமிகளுக்கு தவணை கொடுக்கிறார்களா அல்லது ஒரு கிருமியை கொல்ல 7 நாட்கள் என்று ஏதாவது கால அட்டவணை உள்ளதா?

கிமு 321ல் ரோமானிய அரசர் கான்ஸ்டாண்டின் (Constantic) ஒருவாரத்தை 8 நாளிலிருந்து 7 நாட்கள் போதும் என்று உலக காலண்டரை மாற்றி அமைத்தார். அப்படியெனில் அவருக்கும் இப்போதுள்ள 7 நாட்கள் கணக்கு தெரிந்திருக்குமோ? சமீபத்திய ஒரு மருத்துவ ஆய்வு சாதாரண வலி காய்சலுக்கு 7 நாட்கள் மருந்து எடுத்துக்கொள்ளச் சொல்வது மருத்துவ ஆராய்ச்சிகளின் படி நிருப்பிக்கப்படாத ஒன்று என்று தெரிவித்திருக்கிறார்கள். அப்படியானால் ஒருநாள் கூடுதலாக சாப்பிடும் லட்சக்கணக்கான மக்களுக்கு உடலின் எதிர்ப்புசக்தி சூப்பர்பக்கை எதிர் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படாதா? இன்னொன்று நோயாளிகளின் நிலைமையை 24 மணி நேரம் கழித்துதான் சொல்லமுடியும் என்று சொல்கிறார்கள். அது பூமி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிக் கொள்வதற்கான நேரமா, இல்லை நோயாளிகள் மருந்துக்கு தாக்குப்பிடிக்கக் கூடிய நேர அளவா?

பங்கு சந்தைகளில் முதலீடு செய்தவர்களுக்கு முதல்நாள் குறியீடு எண் 9.99 இருந்தால் அநேகமாக 10.01 க்கோ அல்லது அதற்குமேலோ ஏறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால் பெரும்பாலும் 10.03க்கு முதல்நாள் குறியீடு இருந்தால் அது அதற்கு மேல் ஏறுவதற்கு பகீரதப் பிரயத்னம் செய்ய வேண்டியிருக்கும். செருப்புக் கடைகளில் 19.95 வெள்ளி செருப்பு விலை சும்மா 0.05 சில்லிங் குறைத்துப் போட்டு விளையாட்டுக் காண்ப்பிக்கிறார்கள் என்று தெரியும். இருந்தாலும் 20.50க்கு செருப்பை நாம் வாங்குவதை விட 19.95 செருப்பைத்தான் வாங்குகிறோம். முக்கியமான இன்னொன்று யாரையாவது சந்திக்க நேரம் கொடுக்கும் போது 9.30க்கு சந்திக்கிறேன் 10.30க்கு சந்திக்கிறேன் என்று சொல்கிறோம். 9.32க்கு சந்திக்கிறேன் 10.26க்கு சந்திக்கிறேன் என்று சொன்னதுண்டா? இவைகளைல்லாம்தான் எண்களின் சித்து விளையாட்டாக இருக்குமோ?

Mr.சேகாவிடம் இந்தவாரம் உங்களைப்பற்றிதான் எழுதப்போகிறேன் என்று சொன்னேன் வயதைமட்டும் குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அத்தோடு ஸ்பெக்ட்ரம் முறைகேடுகளில் எத்தனையோ ஆயிரம் கோடி என்று சொன்னீர்களே அதை மில்லியனில் சொல்லுங்கள் என்றார். எதற்கு கேட்கிறீர்கள் என்றேன் கோஸமெல்லாம் போக நாலு நம்பர் வருமில்லையா! இன்று ஞாயிற்றுக்கிழமை சின்னது 10 வெள்ளி, பெரியது 10வெள்ளி வைத்து அழுத்தலாம் என்றிருக்கிறேன். பரிசு விழுந்தால் ஊரில் ஒருலட்சம் கடன் இருக்கிறது அடைத்துவிடலாம் என்றார்.

thanks: உயிரோசை.Com  ஏழாம் பொருத்தம்

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3753

©அப்துல்காதர் ஷாநவாஸ்
shaaanavas@gmail.com

நண்பர் ஜலால் அடிக்கடி விமானப் பயணம் செய்பவர். இருந்தாலும் அவர் அமெரிக்கா போகிறேன் என்று சொன்னவுடன் அவர் பயணத் திட்டத்தைப் பற்றி அறிந்துகொள்ளும் திரில்லான ஆர்வம் எனக்குத் தொற்றிக்கொண்டது. நாள் நெருங்க நெருங்க அவர் மறந்திருந்தாலும் பயண ஏற்பாடுகளைப் பற்றிக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். தொடர்ந்து 18 மணிநேரம் பயணம். சிங்கப்பூரிலிருந்து ஜப்பானுக்குச் சென்று டிரான்ஸிட் பிளைட் எடுத்து லாஸ் ஏன்ஜெல்ஸ், பிறகு லாஸ் வேகாஸ்க்கு உள்நாட்டு விமானத்தைப் பிடிக்கவேண்டும். அதனால் அவருக்கு ஜெட்லாக் (Jet lag) ஜெட் தளர்ச்சி வந்துவிடுமோ என்று பயம். அவர் ஒரு பிராக்டிகலான ஆசாமி. இரண்டுநாட்கள் உடம்பை அதற்கேற்றவாறு தயார் செய்ய ஆரம்பித்தார். மஸாஜ், பிசியோதெரபி என்று புகுந்துவிட்டார்.

இந்த ஜெட்லாக் என்பது ஒரு கால மண்டலத்திலிருந்து இன்னொன்றுக்குச் செல்லும்போது ஏற்படும் உயிரியல் ஒருங்கமைப்பு விசயம். இரவு, பகல் சுழற்சிக்கேற்ப இசைவடையாமல் உடம்பு எதிர்கொள்ளும் காலதாமதத்தால் ஏற்படும் சோர்வு என்கிறார்கள். அத்துடன் தற்போது விமான நிலையப் பாதுகாப்பு சோதனைகளைக் கடப்பதற்கு டிராவல் எக்ஸ்பர்ட் கன்ஸல்டன்ஸ் வந்துவிட்டார்கள். சிக்காகோ சென்று கொண்டிருந்த விமானத்தில் நைஜீரியர் உள்ளாடைக்குள் வெடிமருந்து வைத்த நிகழ்விற்குப் பிறகு பயணிகளிடம் உள்ளாடைக்குள்ளும் நுழைந்து சோதனை செய்வதற்குப் பாதுகாப்பு விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளனவாம். நீங்கள் கைபடாமல் பாதுகாப்பு சோதனையிலிருந்து வெளியேற சட்டையில் உலோகத்திலான பித்தான்கள், பெண்கள் உள்ளாடைகளின் ஓரத்தில் வயர் இல்லாமலும் உடை அணிந்து கொள்வது உத்தமம்.

விமானப் பயணிகள் திரில்லிங்காகவும் குதூகலமாகவும் இருந்த காலங்கள் மலையேறிவிட்டன. சிங்கப்பூரிலிருந்து ஊருக்கு வருபவர்களை மாதக்கணக்காக பயணம் எப்போது வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டுக்கொண்டிருக்கும் பழக்கம் பழசாகிவிட்டது. அதேபோல் விமானப் பயணங்களுக்கென்று பிரத்யேக உடைகள் அணிவதும் குறைந்துகொண்டே வருகிறது. சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் பாதிக்கு மேல் இப்போது பெர்முடாஸில் விமானம் ஏறுகிறார்கள். சென்னையில் ரியல் எஸ்டேட் செய்துகொண்டிருக்கும் சிங்கப்பூர் நண்பர் ஏர்போர்ட்டில் இறங்கியவுடன் ஜாக்கிங் செல்ல ஏதுவாக ஜாக்கிங் கேன்வாசுடன் இங்கிருந்து விமானம் ஏறுவதாகச் சொன்னார். ஜெட்லாக்கை சமாளிக்க சிலர் மெலமைன் மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறார்கள். அதற்கு மாற்றாக இது light தெரபி என்றார் (நிறைய பயண அனுபவமுள்ளவர். சரியாகத்தான் இருக்குமோ).

1963ல் ‘VIP’ என்று ஒரு ஹாலிவுட் படத்தில் ரிச்சர்ட் பர்ட்டனும், எலிசபெத் டெய்லரும் லண்டன் ஏர்போர்ட்டில் விமானம் கோளாறாகிக் காத்திருக்கும் கதையே அந்தக் காலத்தில் பெரிய ஹிட் கொடுத்ததாம்.

1970களில் ‘ஏர்போர்ட்’, ‘ஏர்போர்ட் 75’, ‘ஏர்போர்ட் 77’, ‘கன்கார்டு 79’ என்று வரிசையாக வந்து திரில்லிங் கொடுத்தன. 2005ல் ‘தி டெர்மினேட்டர்’ மற்றும் கொரியப்படம் ‘ரெட் ஐ’, ‘ஸ்நேக்ஸ் ஆன் தி பிளேன்’ படங்களோடு விமானக் கடத்தல் மற்றும் அனுபவங்களை வைத்து எடுக்கப்பட்ட படங்கள் குறைந்துவிட்டன.விதவிதமான கதைகளைச் சொல்லி தீவிரவாதிகளுக்கு இவர்கள்தான் கதைத் தீனி போடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

நடிகர் சுருளிராஜன் 1980ல் அவர் இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னால் நடிகர் விஜயனுடன் தாமன்ஜீராங்கில் உள்ள என் தந்தையார் கடைக்கு வந்தபோது சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் கொடுத்த டாடி பெர்ப்யூம் மற்றும் விஸ்கி சாப்பாடு பற்றி சென்னை திரும்பும்வரை சிலாகித்துப் பேசிக்கொண்டே இருந்தாராம்.அப்படிக் கொடுப்பதெல்லாம் முடிவுக்கு வந்துவிட்டன. பட்ஜெட் ஏர்லைன்ஸ்களில் வெறும் ஆம்லெட்டை மட்டும் வைத்து மதிய உணவு கொடுக்கிறார்கள். சமீபத்தில் ஓர் ஆய்வில் ஜெட் இன்ஜின் சப்தம் சுவை நரம்புகளை மழுங்கடிக்கச் செய்வதால் பறந்து கொண்டிருக்கும்போது நாக்கின் ருசி பற்றி வாயைத் திறக்காதீர்கள் என்கிறார்கள்.

 தாய்லாந்து புக்கெட் தீவுகளுக்குச் சென்றுவிட்டு சில்க் ஏர் விமானத்தில் சிங்கப்பூர் திரும்பும்போது குளிர்தாங்காமல் என் நண்பர் K ஓவர் கோட் போட்டுக்கொண்டு வந்தார். செக்யூரிட்டி செக்கில் நிறுத்தி கோட்டைக் கழற்றச் சொன்னார்கள். அப்படியெல்லாம் கழற்ற முடியாது என்கிற மாதிரி நின்று கொண்டிருந்தவரை ரூமுக்குள் நெட்டித் தள்ளிக் கொண்டு சென்று திரும்ப கொண்டுவந்துவிட்டார்கள். கோட்டைக் கழற்ற வேண்டியதுதானே என்று கேட்டோம். உள்ளே ஸ்லீவ்லெஸ் மினிகோட் அணிவதற்குப் பதில் முண்டா பணியனைப் போட்டுக்கொண்டு வந்திருக்கிறார்.

மோசமான வானிலை, என்ஜின் கோளாறு என்ற காரணங்கள் 9/11 க்குப் பிறகு பெரிய மாற்றம் கண்டுவிட்டது. கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் லேமனிலிருந்து அனுப்பப்பட்ட Fedex பார்சல் வெடிகுண்டு நிலைமையை இன்னும் மோசமாக்கிவிட்டது. ஓர்லேண்டோ ப்ளோரிடா விமான நிலையத்தில் TSA (Trasnport securtity administration officer) 8 வயது சிறுவனை சட்டையைக் கழற்றி சோதனை செய்திருக்கிறார்கள். விமானத்தில் ஏறுவதற்கு அழகாக டிரஸ் பண்ணிக்கொண்டு வந்திருந்த சிறுவனின் பெற்றோர் அதிர்ந்து விட்டார்களாம். பிள்ளைகளைத் தொட்டு விளையாடுவதற்கு அப்பா அம்மாவுக்கு அடுத்தபடி TSAக்கும் உரிமை உண்டு என்று முக்கிய பாடமாகச் சொல்லி வைக்கலாம். ஆனாலும் சில நேரங்களில் இந்த மாதிரி பாடங்களைத் தீவிரவாதிகள், முன்னாலேயே படித்துத் தேர்ந்துவிடுகிறார்கள்.

சென்ற வருடம் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வந்து திரும்பும்போது நண்பன் சம்சுவும் நானும் பழங்கள் வாங்கி ஆளுக்கு இரண்டு கூடை பேக்செய்தோம். என் கூடைகளில் நெல்லிக்காய், நாவல்பழம், சீத்தாப்பழம் இருந்தன. சம்சு காய்கறிகளை மட்டும் இரண்டு கூடைகளில் பேக் செய்துவிட்டார். சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் கன்வேயர் பெல்ட்டில் ஒரு கூடை மட்டும் சுற்றிக்கொண்டிருந்தது. எனக்கும் முன்னதாக நண்பர் சென்றுவிட்டார். பயணிகள் வெளியேறும் வரை காத்திருந்து ஏர்போர்ட் லக்கேஜ் டேக்கை கொடுத்துக் கூடை காணாமல்போன விபரங்களைச் சொன்னேன். அப்படி எந்தக் கூடையும் இல்லை என்றார்கள். அடுத்தநாள் வந்தால் கேமரா பார்த்துவிட்டுச் சொல்வதாகச் சொன்னார்கள். அங்கு அதிகமாக மறந்து விட்டுப்போன சமாச்சாரங்களில் லேப்டாப், செல்போன், மூக்குக் கண்ணாடி இவற்றுடன் பல் செட்டுகளும் இருந்தன.

 சமீபத்தில் சிங்கப்பூரில் புகழ்பெற்ற வக்கீல் தீபாவளிக்கு ஸ்வீட் எடுத்து வந்திருக்கிறார், அட்டைப்பெட்டி காணாமல்போய்விட்டது. பெட்டியை அன்றே கண்டுபிடித்துக் கொடுத்துவிட்டார்கள். ஆனால் அதற்குள்ளிருந்த ஸ்வீட்டை யாரோ காலிபண்ணிவிட்டார்கள். விசயம் கோர்ட் படியேறி வெளியே ஒரு தொகை கொடுத்து விமான நிறுவனம் செட்டில் பண்ணியது. வக்கீல் அந்த ஸ்வீட்டான தொகையை சிண்டாவுக்கு (இந்தியர் நலச் சங்கம்) நன்கொடையாகக் கொடுத்துவிட்டார்.

என் பழக்கூடையைப் பத்திரமாக சம்சு எடுத்துப்போய்விட்டான். “அல்லாம்மா, வண்டி வந்துவிட்டது. உன்னை காணோம்லா. உன் கூடையை நான் எடுத்துவந்துவிட்டேன். நெல்லிக்காய் சரியான புளிப்பு” என்றான், நான் சொன்னேன், “தண்ணீர் குடி இனிக்கும்” என்று (எரிச்சலுடன்). சமீபத்தில் ஒரு செய்தி, ஹாங்ஹாங்கில் விமானத்தில் ஏறிய வயதான வெள்ளைக்காரர் வான்கோவரில் இறங்கும்போது சீன இளைஞராக மாறிவிட்டிருந்தாராம் (ஆள் மாறாட்டம்). சிங்கப்பூரர் ஒருவர் தன்னுடைய மகன் கடவுச் சீட்டில் தவறாகப் பயணம் செய்து ஹாங்ஹாங்கில் இறங்கும் போதுதான் கவனித்தாராம், தன்னுடைய பாஸ்போர்ட் வீட்டில் பத்திரமாக இருப்பதை. மேய்ப்பர்கள் இருந்தும் ஏமாற்றிச் செல்லும் ஆடுகள்.

 பட்ஜெட் ஏர்லைனில் பயணம் கொஞ்ச மிஞ்சமிருந்த திரில்லிங்கையும் குறைத்துவிட்டது. Ryan air நின்றுகொண்டே பயணம் செய்யும் வகையில் விமானங்களை அறிமுகப்படுத்தவிருக்கிறது (குறுகிய தூரங்களுக்கு). கை லக்கேஜ் எங்கே வைத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. Air Newziland லாஸ் ஏன்ஜெல்ஸ் மற்றும் லண்டன் விமானங்களில் ஜோடிகள் தங்களுடைய இருக்கைகளைப் படுக்கை வசத்தில் மாற்றிக் கொள்ளும் விதமாக (Sky couches ) வரும் ஏப்ரலில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதில் காலியாக இருக்கும் இருக்கைகளை நிரப்புவதாக நினைத்துக்கொண்டு ஜோடிகளை மாற்றிப் படுக்கவைத்துவிட்டால் விமானப் பயணங்கள் ரொம்ப சுவாரஸ்யமாக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன (சும்மா ஒரு கற்பனை). அதுவரை நீங்கள் சீட் பெல்டைக் கட்டிக்கொண்டு இருக்கையில் அமர்ந்து கழிவறைக்கு யாராவது அதுவும் காலைச் சொறிந்து விட்டுச் செல்கிறார்களா என்பதைக் கவனித்துக் கொண்டு பயணம் செய்தால் போதுமானது.

     

thanks:http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3732 

சிங்கப்பூர் கிளிஷே – 3

Posted: திசெம்பர் 10, 2010 in பத்தி
குறிச்சொற்கள்:

“வாழ்க்கை என்பது
ஏராளமான நிகழ்வுகள்
அலுப்புணர்வுகளால்
பின்னப்பட்ட ஒன்றாகும்.
நினைவில் அலுப்புணர்வு
மறந்துபோய் நிகழ்வுகள் மட்டும்
நிலைத்திருக்கின்றன’
 
– கவிஞர் டாம் மொரைஸ்

நாங்கள் செய்த நாணய மாற்று வியாபாரம், கம்பிகளுக்குள் உட்கார்ந்து ‘வெள்ளி’ எண்ணிக் கொடுப்பதல்ல. காலையில் கடை திறந்ததும், கரன்சிக்களின் அன்றைய விலைக் குறியீட்டு மதிப்பை ஆர்கேடுக்கு ஃபோன் செய்து வாங்கி வைத்துக் கொள்வோம் (அப்போது எல்லாக் கடைகளிலும் இண்டெர்நெட் வசதி கிடையாது). வாடிக்கையாளர்கள் கரன்சி விலை விசாரித்து ஃபோன் அடிப்பார்கள். 12 மணிக்குள் பேரத்தை வித்துக் கொண்டு தேவைப்படும் கரன்சிகள் வாங்க ஆர்கேட் போவேன். நான்தான் கேரியர், டெலிவரிமேன், கேங்கர் எல்லாம். இரண்டு சட்டை பாக்கெட், நான்கு பேண்ட் பாக்கெட்களையும் சேர்த்து ஆறு பாக்கெட்டுகளிலும் கரன்சிகள். தனித்தனியே பில்போட்டு எடுத்துக் கொள்வேன். சிலநேரங்களில் கப்பலில் இருந்து ஆர்டர் வரும். ஆறு மணிக்கெல்லாம் டெலிவரி நடந்து விடும்.

இந்த வியாபாரத்தில் பல வாடிக்கையாளர்கள் இருந்தாலும், இரண்டு முக்கியமான வாடிக்கையாளர்களைப் பற்றி உங்களிடம் சொல்ல வேண்டும். ஒருவர் மிஸ்டர் ஹொசிமோட்டோ. PSA பில்டிங்கில் தோஷிபா கம்பனியில் வேலை பார்த்தவர். சிங்கப்பூரில் குடியேறியவர். ஜப்பானிய ‘யென்’னில் சம்பளம் வாங்குபவர். அவரிடம் ஒரு யென்னுக்கு 2 காசு கமிஷன் வைப்பதற்குள், ‘போதும், போதும்’ என்றாகிவிடும். அத்தோடு நான் அவருக்கு யென் கொண்டுபோய்க் கொடுக்கும் போதெல்லாம், அவரைப் பார்த்தவுடன், 1942 ஜப்பான் kempeitai போலீஸிடம் அகப்பட்ட மிஸ்டர் யூ கியான் சாங் நினைவு வந்து விடும். அவருடைய பேட்டியை எல்லோரும் படித்திருப்போம். அப்போது அவருக்கு 20 வயது. ஒன்பது பேரைப் பிடித்துக் கொண்ட ஜப்பானியர்கள், அவர்களை வரிசையாக நிற்க வைத்து ‘பாராங்’ கத்தியால் வெட்டினார்கள். கடைசியில் நின்ற இவர் கழுத்தில் வெட்டு ஆழமாக விழாமல் தப்பித்து, இன்று 4 பேரக் குழந்தைகளுடன் (வயது 92) ஆரோக்கியமாக இருக்கிறார். மிஸ்டர் ஹொஷிமோட்டோ அதில் சம்பந்தமில்லாதவர். ஆனாலும் அந்த நினைவு வந்துவிடும். அத்தோடு எனக்கு அவரிடம் பிடிக்காத ஒரு குணம், ‘யென்’ எண்ணிக் கொடுத்துவிட்டு, சிங்கப்பூர் வெள்ளியை வாங்கும்போது, ‘நிஹான் சிபான்’ என்று சொல்லுவார். கட்டை விரலை வேறு தம் பிடித்துக் காண்பிப்பார். ஆர்தர் என்று ஒரு சீன நண்பர் கீழே உள்ள பேங்கில் வேலை பார்த்தார். அவரிடம் ஹொஷிமோட்டோ சொன்ன வார்த்தையைச் சொல்லி அர்த்தம் கேட்டேன். அவர் சொன்னார், ‘ஜப்பான் இஸ் த பெஸ்ட்’ என்று அர்த்தம். நீங்கள் அவரிடம், சிங்கப்பூர் இச்சிபாங் என்று சீன மொழியில் சொல்லுங்கள். அத்தோடு ‘யென்’ மதிப்புக் குறையும்போது அப்படிச் சொல்கிறாரா என்று கவனித்துக் கொள்ளுங்கள். அப்படிச் சொல்லாவிட்டால், ‘யென்’தான் ஜப்பான் என்று நினைத்துக் கொள்கிறார். அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.’ என்றார். ஆர்தர் சொன்னது மாதிரித்தான் நடந்தது. நான் ‘சிங்கப்பூர் இச்சிபாங்’ என்று மனப்பாடம் செய்து வைத்திருந்தேன். அதைச் சொல்லச் சந்தர்ப்பம் அமையவில்லை. மிஸ்டர் ஹொஷிமோட்டோவைப் பற்றிய என் நினைவுகள் இத்தோடு முடியவில்லை. மேடம் வசந்தி, கிம்மோ பள்ளித் தமிழாசிரியை. என் பிள்ளைகள் அவரிடம்தான் தமிழ் படித்தார்கள். பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்குச் சிங்கப்பூரில் எத்தனையோ இடங்கள் இருக்கும்போது, தன் பிள்ளைகளின் பிறந்தநாளை முதியோர் இல்லத்தில்தான் கொண்டாடுவார். நாணய மாற்று வியாபாரத்தை விட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு தெலுக் பிளாங்கா முதியோர் இல்லத்தில் மேடம் வசந்தியின் மகன் பிறந்தநாளுக்குச் சென்றிருந்தேன். ஒரு பெரியவர், ‘உங்கள் பிரியாணி நன்றாக இருக்கிறது’ என்று சொல்லி என் கையை விடாமல் பிடித்துக் கொண்டிருந்தார். திடீரென்று, ‘மணிச்சேஞ்சர், மணிச்சேஞ்சர்’ என்று குரல் கேட்டுத் திரும்பினேன். மிஸ்டர் ஹொஷிமோட்டோ, ஓர் இந்திய முதியவரைப் படிக்கட்டுகளின் வழியாகக் கையைப் பிடித்துக் கூட்டி வந்து கொண்டிருந்தார். சடாரென்று எனக்குள்ளிருந்த ‘திரை’ விலகி, ஹொஷிமோட்டோ பளிச்சென்று காட்சியளித்தார். நான் இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் வேலையைப் பற்றி விசாரித்தார். மாதம் ஒருமுறை முதியோர் இல்லம் வந்து விடுவாராம்.எனக்கு இப்போது அவரிடம் பேசிக் கொண்டிருப்பது மிகவும் பிடித்தது. நான் அவரிடமிருந்து விடைபெறும்போது, ‘நிஷான் சிபான்’ என்றேன். அவர் சிரித்துக் கொண்டே, ‘ யென் விலை இப்போது ஏற்றமாக இருக்கிறதா..’ என்றார்.

அடுத்தவர் மிஸ்டர் ரகுநாதன். மெக்கானிக்கல் எஞ்சினியர். மோட்டார் பாகங்களில் வெளியாகும் ஈயக் கழிவுகள் ஆராய்ச்சி பிரிவில் வேலை பார்த்தார். அவருக்குப் பச்சையில் சம்பளம் (யு.எஸ் டாலர்). அதிகம் பேசமாட்டார். அவருக்கு டோர் டெலிவரி செய்ய வேண்டும். ஹவ்காங்கில் குடியிருந்தார். அலெக்ஸாண்டிரா ரோட்டிலிருந்து வியர்க்க விறுவிறுக்க, வெள்ளி கொண்டு வந்து கொடுத்தால், மெயின் கேட்டைத் திறக்காமல், கதவைப் பாதி திறந்து கொண்டு வாங்குவார். வெள்ளியை எண்ணி வாங்கிக்கொண்டு படாரென்று கதவை மூடி விடுவார். ஒருநாள் அவர் கதவை அப்படி மூடுவதற்குள், ‘ மிஸ்டர் ரகுநாதன், நீங்கள் south paw-வா..’ என்று கேட்டேன். கொஞ்சம் தயங்கிக் கதவை முழுவதும் திறந்து கொண்டு என்னிடம், ‘எப்படிக் கண்டு பிடித்தீர்கள்..; என்றார். ‘வெள்ளியை யாரும் இடது கையால் வாங்க மாட்டார்கள் உங்களுக்கு இடது கைதான்முதலில் நீள்கிறது. நம் பிரதமர், கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர், பில்கேட்ஸ் கூட இடது கை பழக்கம் உள்ளவர்கள்தான்’ என்றேன். என் பேச்சில் கொஞ்சம் விஷயம் இருப்பதாக நினைத்துக் கொண்டார். கடைக்குப் போன் அடிக்கும் போது, ஷானவாஸைக் கூப்பிடுங்கள் என்று சொல்ல ஆரம்பித்தார். அடிக்கடி அவர் ‘ஐ வாண்ட் டு பர்சேஸ்’ என்று சொல்வார். ‘நீங்கள் இப்படிப் பெரிய வார்த்தைகளைப் போட்டால் நான் லாரியில்தான் கொண்டு வந்து தரவேண்டும்’ என்பேன். பர்சேஸுக்கு அதுதானே அர்த்தம்! ஒருநாள் இரவு எட்டு மணி இருக்கும் எனக்குப் போன் அடித்தார். ‘ஷானவாஸ், ஒரு ஹெல்ப். உடனே என் வீட்டுற்கு வரமுடியுமா’ என்றார். அவர் குரலில் ஏகப் பதற்றம். விஷயம் ஒன்றுமில்லை. புளோக் கீழே விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகளுக்கு சாக்லேட் வாங்கிக் கொடுத்திருக்கிறார். யாருடனும் பழகாததால், இவரை அந்த ஏரியாவில் யாருக்கும் தெரியவில்லை. அதானால் அந்த பிள்ளைகளின் தந்தை போலீஸுக்குப் போன் அடித்து விட்டார். நான் போனபோது பிரச்சனை ஓய்ந்து விட்டிருந்தது. அவரை ஆர்.சி சேர்மேனிடம் அறிமுகம் செய்து வைத்தேன்.

மணிசேஞ்ச் கவுண்டருடன் பிஸ்கேட், சிகரெட், புத்தகங்கள், சாப்ட் டிரிங்க்ஸ் விற்பனையும் உண்டு. அவ்வப்போது பகுதிநேரமாகப் பள்ளிவிடுமுறை காலத்தில் மாணவர்களை வேலைக்குச் சேர்த்துக் கொள்வோம். அப்படி வந்து சேர்ந்த பையன் ரனீத்தீன் கொஞ்ச நாட்களே வேலை பார்த்தான். ஏரியாவைக் கலக்கி விட்டான். வாரம் ஒருமுறை வரும் 8 Days பத்திரிக்கையை வாங்க வரிசை பிடித்து நிற்பார்கள். பெண் வாடிக்கையாளர்களை ஓடி ஓடிக் கவனிப்பான். 1996-ல் பேஜர்தான் லேட்டஸ்ட்! PSA -யில் வேலை பார்க்கும் பெண் அடிக்கடி அவனுக்கு பேஜ் செய்ய ஆரம்பித்தது. கடை போனில்தான் பேசுவான். என்னை ஓரக்கண்ணால் அடிக்கடி பார்த்துக் கொள்வான். ஒருநாள் போன் பேசும்போது, No France, Itally, Itally என்றான். எதற்கு பிரான்ஸ் இட்டாலி என்கிறாய் என்றேன். அந்தப் பெண் எக்சேஞ்ச் ரேட் கேட்பதாகச் சொன்னான். எனக்கு சந்தேகம் வந்து விட்டது. இதையே பலநாட்கள் போனில் பேசிக் கொண்டிருந்தான். பிரான்ஸ், இத்தாலி என்று கரண்ஸிகள் இல்லை. பிரான்ஸ் கரன்சியை ‘பிரான்க்’ என்பார்கள். இத்தாலி கரன்சியை ‘லிரா’ என்பார்கள். இவன் விலை சொல்லவில்லை என்று தெரிந்து ஒருநாள் இருக்குப்பிடி போட்டவுடன், சொன்னான். இதுதான் அந்த அர்த்தம் FRANCE – Friendship Remains And Never Can End ITALY – I Trust And Love You எப்படியெல்லாம் ரூட் கண்டுபிடிக்கிறார்கள்.

அப்புறம் இன்னொரு கேரக்டர். மீடியாவில் வேலை பார்த்து, கட்டாய ஓய்வில் வெளியில் வந்து கே என்பவர் செக்கியூரிட்டியாக வேலை பார்த்தார். அவருடைய வேலை நேரம் எங்கள் கடையில்தான் கழியும். தினமும் பச்சை விலை விசாரிப்பார். ஆனால், ஒருநாள் கூட அவர் பச்சையை மாற்றியதே இல்லை. கரன்சி வரலாற்றைக் கரைத்துக் குடித்தவர். ஏசுநாதர் நாணய வியாபாரிகளினால் சர்ச்சை விட்டு வெளியேற்றியதிலிருந்து ஜூலியஸ் சீசரைக் கொல்லச் சதி செய்தவர்கள் நாணய வியாபாரிகள் என்பதுவரை எங்களுக்கு இதைப் பற்றிய செய்திகள் ஏதாவது எங்களுக்குத் தெரிகிறாதா என்று ஆழம் பார்ப்பார். அதன்பிறகு நான் அவரைப் பார்த்தவுடன் முந்திக் கொண்டு, ‘Economy boom and bust, recession, depression, business cycle’ என்று பேச ஆரம்பித்தவுடன் கொஞ்சம் அடங்கிப் போனார். பணம் எண்ணிக் கொண்டிருக்கும்போது ஒருநாள் சொன்னார், ‘பணம் சந்தோஷம் தராது, சந்தோஷம் பணம் தராது’ என்று மார்க்ஸ் சொல்லியிருக்கிறார் என்றார். நான் கரன்சியைக் காண்பித்து, ‘பணம், பணம் தரும்’ என்றேன்! என்றாவது ஒருநாள் பர்ஸைத் திறந்து பச்சையை மாற்றுவார் என்று எதிர்பார்த்தேன். அந்த நிகழ்வு நடக்கவேயில்லை. இதெல்லாம் கதையா அல்லது நடந்தவையா என்று யோசிக்காதீர்கள்.

ஒரு மனிதனின் வாழ்க்கையில் அனுபவங்கள் மிகக் குறைவாக இருந்தாலும், இலக்கியமும், வாசிப்பும், ஒரு வாழ்க்கையைப் பற்பல வாழ்க்கையாக வாழும் வாய்ப்பை அளிக்கிறது. வாழ்க்கையின் நல்ல நிகழ்வுகளை அசை போடுவதன் மூலம் இன்னும் விரிவாக நிகழ்த்திக் கொள்ள வழி செய்கிறது.

thanks: http://www.thangameen.com/ContentDetails.aspx?tid=122