ஜனவரி, 2011 க்கான தொகுப்பு

முகவரி மாறும் கல்லறைகள்

Posted: ஜனவரி 21, 2011 in பத்தி
குறிச்சொற்கள்:

Private JC Auton 2/19 Infantry Battalion 20 Jan 1942 – Age 27

“His duty fearlessly and nobly don ever remembered”

”நர்ஸ் ரூபி மார்க்கெரட் புருக்ஸ் கேம்பிரிட்ஜ் வயது 23 பிரிட்டிஷ் செஞ்சிலுவை சங்கத்தின் உறுப்பினர்”

கிராஞ்சியிலுள்ள இந்த கல்லறைகளை கடந்து நடக்கும் போது கல்லறைகளின் அடியில் இருப்புக் கொள்ளாமல் சவப்பெட்டியில் முடங்கியிருக்கும் ஆவிகள் பல கதைகளை தன்னுள் வைத்துக் கொண்டு முடிவில்லாமல் சவப்பெட்டியில் கதவைத் தட்டிக் கொண்டு தன் கதைகளை எழுதுவதற்கும் கதையில் கதாபாத்திரங்களாக உருமாறித் தன் நினைவுகளை மீள் உருச் செய்து கொள்ள பூமியின் நிலப்பரப்பில் பறக்கும் காகிதங்களைத் தேடி தஞ்சம் அடைவதற்கு எத்தனிக்கின்றனவோ என்று எண்ணத் தூண்டும்.

சிங்கப்பூரில் பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றி யாராவது என்னிடம் கேட்கும்போது பறவைப் பூங்காவையும், கிராஞ்சி கல்லறைத் தோட்டத்தையும் சொல்வேன். இங்குள்ள சுமார் 4500 கல்லறைகள் காமன் வெல்த் கல்லறை அமைப்பின் கண்காணிப்பில் அமைக்கப்பட்டது. சாங்கி மற்றும் சிங்கப்பூரின் பல பகுதிகளிலிருந்தும் அடக்கம் செய்யப்பட்ட உடல்கள் மீட்டெடுக்கப்பட்டு இங்கு மறு அடக்கம்
 செய்துள்ளார்கள். முறையான இடம் விட்டு அமைக்கப்பட்டுள்ள கல்லறைகளின் நடுவே அவர்களுடைய ரெஜிமெண்ட் குறிக்கப்பட்டுள்ளது. இவற்றில் சுமார் 850 கல்லறைகள் அடையாளம் காணப்படாதவை என்று குறித்துள்ளார்கள்.

நிலப்பற்றாக்குறையும் மக்கள் வாழ்விடங்களை அமைக்க வேண்டியும் 1985ல் சுமார் 20 வருடங்களுக்கு முந்தைய 21 கல்லறைகளிலுள்ள 120,000 அடக்கம் செய்யப்பட்ட உடல்களைத் தோண்டி எடுத்து முஸ்லிம்கள் யூதர்கள் தவிர மற்ற இனத்தவர்களின் உடல் மிச்சங்கள் எரியூட்டப்பட்டன. 1820 ஆம் ஆண்டு முதலே இதுமாதிரியான மறு அடக்கம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

110 வருடங்களுக்கு முன்பு ஒருலட்சம் சீனக் கல்லறைகள் பீஷான் பகுதியில் இருந்தன. இவைகள் 1870-களில் பிரிட்ஷாரிடமிருந்து சீனர்களால் மொத்தமாகக் குத்தகைக்கு வாங்கப்பட்டு கல்லறைகளுக்குப் பயன்படுத்தப்பட்டன. புதிய நகர் நிர்மாணப் பணிகளுக்கு கல்லறைகள் தோண்டப்பட்டு மிச்சங்கள் எரியூட்டப்பட்டன. இப்போது சுமார் 5.2 ஹெக்டர் நிலப்பரப்பில் பீஷான் பூங்கா சிங்கப்பூரின் ஆகப் பெரிய பூங்காவாகத் திகழ்கிறது.

இதேபோல கிறிஸ்துவ கல்லறைகள் மறு அடக்கம் செய்யப்பட்ட இடம்தான் ஃபோர்ட் கேனிங் பார்க். பிடாரி, தானா மேரா, புலாவ் தெக்கோவ் பகுதிகளில் எடுக்கப்பட்ட முஸ்லிம்களின் உடல்கள் தற்போது சுவாசூகாங்கிலுள்ள புஸாரா அபாடி முஸ்லிம் அடக்க ஸ்தலங்களில் மறு அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

மிஸ்டர். நூருல் அமீன் என் கடைக்கு வரும் வாடிக்கையாளர். இவருடைய பெற்றோர்கள் பாகிஸ்தானிலிருந்து வந்து குடியேறியவர்கள். கையில் எப்போதும் சிறு கற்கள் மற்றும் நிலவரைபடக் கருவிகள் வைத்திருப்பார். ரெனவேசன் கம்பெனி வைத்திருப்பார் என்று நினைத்தேன். ஒருநாள் நேரிடையாகவே என்ன தொழில் செய்கிறீர்கள் என்று கேட்டேன். கல்லறை பராமரிப்பு பணி  செய்யும் சொந்த கம்பெனி வைத்திருப்பதாக கூறினார். அரபி மொழியில் டிப்ளமோ பெற்றவர். நான் கல்லூரியில் பட்டப்படிப்பில் இரண்டாவது மொழியாக அரபி எடுத்து ஓரளவு எழுதப் படிக்கத் தெரியும். அரபி சொற்களை அர்த்தப்படுத்தி பல தகவல்களை வைத்திருந்தார். அவரிடம் பேசுவதற்கு எனக்கு நிறைய விசயங்களிருந்தன.

தென்னாட்டில் புளியைக் கண்ட அராபியர்கள் இந்தியாவின் பேரிட்சை என்ற அர்த்தத்தில் ”இந்த் பர்ஹிந்த” என்று அராபியில் சொன்னது ஆங்கிலத்தில் ”டே மரிண்ட்” ஆயிற்று என்று சொன்னார். அவர் இந்த தொழில் ”அலஹம்து லில்லாஹ்” மிகவும் திருத்தி அடைவதாகச் சொன்னார். பழங்காலத்தில் ஈமச் சடங்கு சார்ந்த நினைவு மண்டபங்களில் மரணத்திற்கு பிந்தைய வாழ்வுக்குத் தேவையான பயனுள்ள பொருட்கள்  வைக்கப்பட்டன. ஜப்பானில் டியுமுலஸ் காலத்தில் 3-6 நூற்றாண்டுகளில் சமாதி மேடுகள் முக்கியத்துவம் அடைந்திருந்தன. திறந்த வெளியில் காட்சி தரும் இத்தகைய நினைவுச் சின்னங்களில் சாவித் துவாரம் கூட இருக்குமாம். தற்கால நிலவறைக் கல்லறைகள் அலக்கார சமாதிகள் மூலம் சிறிதளவு நினைவு கூறப்படுவதை தவிர மறு மலர்ச்சி காலத்தில் சமாதியை வீடாகக் கருதும் எண்ணம் மேற்கத்திய  நாடுகளில் மறைந்தது.

நூருல் அமீன் கல்லறை கற்கள் அடையாளம் மட்டுமல்ல அர்ப்பணிப்பு, கொண்டாட்டம், அனுசரிப்பு இவற்றின் அடையாளங்களாக நாம் கருதிக் கொள்ள வேண்டும் என்றார். பழைய கிரேக்கக் கல்லறைகக் கல்வெட்டுக்கள் பெரும்பாலும் இலக்கியத் தரம் வாய்ந்தவை என்று படித்திருக்கிறேன். அரபியில் தாங்கள் எழுதும் வார்த்தைகளை இறந்தவர்களின் உறவினர்கள் எழுதச் சொன்னவையா என்றேன்.இலக்கியத் தன்மையுடன் கல்லறை வார்த்தைகளை எழுதச் சொல்பவர்கள் குறைவு என்றார். 20 வருடங்களாக இத்தொழிலைச் செய்துவரும் இவரிடம் தொடர்ந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேசிக் கொண்டிருப்பேன்.

தற்போது சுவாசூகாங்கில் முஸ்லிம்களின் உடல் அடக்கத்திற்கு 15 வருடங்களில் தோண்டி எடுப்பதற்கு ஏதுவாக செவ்வக வடிவ சிமெண்ட் காண்கிரிட் பலகைகள் உபயோகப் படுத்தப்படுகின்றன. இதன் நான்கு பக்கங்களிலும் சுற்றிலும் மறைகள் (Crypt) ஏற்படுத்தப்பட்டுள்ளன.

2.89 மீட்டர் நீளமும் 1.52 மீட்டர் அகலம் மற்றும் 1.8 மீட்டர் உயரம் அளவுள்ள சுமார் 12,100 கான்கிரீட் பலகைகள் முன்கூட்டியே செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. சவூதி அரேபியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் பின்பற்றப்படும் நடைமுறைகளில் இங்கு அடக்கம் நடைபெறுகிறது. இரு அடக்க ஸ்தலங்களுக்குள்ள இடைவெளி சுமார் 45 செ.மீட்டரிலிருந்து 15 செ.மீட்டர் ஆக குறைக்கப்பட்டுள்ளது.  இருப்பிலுள்ள சிமெண்ட் கான்கிரீட் பலகைகள் இன்னும் ஏழு வருடங்களுக்கு போதுமானவை. 2046 வாக்கில் நிலப்பகுதி முற்றும் பெற்றவுடன் மறைகள் (Crypt) மூலம் சுலபமாக உடல்களை வெளியில் எடுக்க முடியும் கான்கிரிட்கள் மீண்டும் பயன்படுத்துவதற்கு சுமார் 3 வருடங்கள் இடைவெளி கொடுக்கப்படுகிறது.

உறவினர்களும் நண்பர்களும் பெருநாள் தொழுகை முடிந்து அடக்க ஸ்தலத்திற்கு செல்வது இங்கு வழக்கம். பிளாக் எண்களுடன் வரிசை எண்கள் கொடுக்கப்பட்டு அடக்க ஸ்தலத்தை அடைவது மிகவும் சுலபமாக்கப்பட்டுள்ளது.

இவர் இந்த தொழிலுக்கு எப்படி வந்தார் என்று அறிந்தபோது இன்னும் பல வியப்பான செய்திகளை கூறினார். 1985ல் காத்தோங் ஐடியில் படித்துவிட்டு ஒருவருடம் படிப்பா, தொழிலா என்ற குழப்பத்திலிருந்தவரை குழி வெட்டுவதற்கு வலிமையுடைய ஆட்கள், முன் அனுபவம் தேவையில்லை, ஒரு நாளுக்கு 75 வெள்ளி சம்பளம், முஸ்லிமாக இருக்க வேண்டும் என்ற ஒரு தனியார் கம்பெனி விளம்பரத்தால் ஈர்க்கப்பட்டு இந்த வேலைக்குச் சென்றுள்ளார். சுமார் 6 மாதகாலம் பிடாரி, புலாவ் தெக்கோவ், தானாமேரா பகுதிகளிலும் குழி வெட்டி உடலின் மிச்சங்கள் அள்ளும் வேலை செய்திருக்கிறார். தானா மேரா பகுதியுலுள்ள மையத்துவாடிகள் சுலபமாக இருந்திருக்கின்றன. புலாவ் தெக்கோவ் கடினமான தரை.

ஒரு நாளுக்கு 4 குழிகள் தோண்ட வேண்டுமாம். 1.8 மீட்டர் ஆழம் 0.9மீட்டர் அகலமும் கொண்ட குழிகளைத் தோண்ட சில நாட்களில் சுலபமாகக் கற்றக் கொண்டாராம். 3 அடி தோண்டியவுடன் சிவப்பு மண் எட்டி பார்த்தவுடன் சவல் (spade) கொண்டு மண்ணை அள்ளி மேலே போட்டுவிட்டு உடல் பாகங்கள் தெரிய ஆரம்பிக்கும்வரை மெதுவாகத் தோண்டுவார்களாம். பெரும்பாலும் உடல்கள் கிப்லாவை நோக்கி அடக்கம் செய்யப்பட்டிருப்பதால் தலைபகுதி தொடங்கி நீளவாட்டில் வெட்டிக் கொண்டே வந்து சிதிலமான மரச் சட்டங்களை அப்புறப்படுத்திவிட்டால் வலது பக்கமாக சாய்ந்து அடக்கப்பட்ட உடல்களை எடுப்பதற்கு சுலபமாக இருக்குமாம். பெரும்பாலும் மண்ணே உடல்பாகங்களை தன்னுடையதாக்கி கொண்டிருக்குமாம். இரண்டு பிளவுள்ள கம்பை எலும்பில் சொருகி  வெளியில் எடுத்து கூடையில் போடுவார்களாம்.  எப்போதுமே தலை உடலைவிட்டு தள்ளிப் போய்தான் கிடக்குமாம். சில நேரங்களில் இரண்டு தலைகள் ஒரே குழியில் கிடைக்கும். இவைகள் இரண்டு காரணங்களால் நிகழ்ந்திருக்கும் என்றார். ஒன்று ஏற்கனவே அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இன்னொருமுறை அடக்கம் செய்துவிடுவது. மற்றொன்று மண் சரிவு ஏற்பட்டு இரண்டு உடல்கள் சேர்ந்து விடுவது. உடல்களில் ஆண்கள் பெண்கள் வித்தியாசம் காண முடியாவிட்டாலும் பெண்களின் உடல்கள் முறைப்படி நான்கு பக்கமும் துணியால் மறைக்கப்பட்டு தோண்டப்படுமாம்.

குழந்தைகள் அடக்கஸ்தலத்தில வேலை 15 நிமிடங்களில் முடிந்துவிடும். ஏனெனில் எதுவுமே இருக்காது என்றார். தரையோடு தரையாக ஒட்டிப் போயிருக்கும் உடல் பாகங்களை எடுக்க சிரமப்படும்போது கம்பெனியிலிருந்து “Pakala” வரைவழைக்கப்டுவார். அவர் பாத்திஹா ஓதி பன்னீர் தெளித்து முடித்தபிறகு சுலபத்தில் எடுக்க முடிந்தது என்றார.

இன்னும் பல பத்திகள் எழுதுவதற்கான விசயத்தை சொல்லி அரசாங்கம் முறையான அறிவிப்பு செய்து உறவினர்களின் முன்னிலையில் சுமார் 8.5 மில்லியன் வெள்ளி செலவு செய்து உலக நாடுகளுக்கு முன்னுதாரமானதை சுட்டிக் காட்டினார். 

 சில வருடங்களுக்கு முன்பு காலமான சிங்கப்பூர் கவிஞரின் கல்லறை வாசகம் இப்படி பொறிக்கப்பட்டிருக்கிறது.

“நாளை நிச்சயமில்லை என்பதால்
இன்றைய நாளை வாழ விரும்புகிறேன்”

அப்துல்காதர் ஷாநவாஸ்
thanks: http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3798

முகவரி மாறும் கல்லறைகள்

தை முதல் நாள் பதியம்

வயல்வெளிகளில் நெல்மணிகளின் சலசலப்பிடையே
பானைகளை சூரியனில் சூடேற்றி
தை மாதத்தின் பிறப்பினை சென்ற வருடம்
உன்னுடன் கொண்டாடிய நினைவுடன் நான்
உன் கைபேசி அழைப்புகள் கரும்புச் சாற்றைவிட
ஏனோ இன்று அதிகம் தித்திக்கிறது
சர்க்கரை பாகில் வெந்த அரிசிகளை
வெள்ளைப் பூவாய் எடுத்து நீ பறிமாறிய
சூடு இன்னும் தனியாமல் வேகிறது
சிங்கையில் விளையாத கட்டிடங்களிலிருந்து
வளையாத (தங்கக்) காப்பு வாங்க பதியம் போட்டிருக்கிறேன்
உன் மருதோன்றிக் கைகளில் மறைந்துள்ள எனக்கு
சாஸ்திரக் குறிகளை மட்டும் குறுஞ்செய்தி அனுப்பு

+++++

மின்னல் கீற்றுகள்

நிலம் விட்டு நிலம் பறந்து வந்தேன்
மேகங்கள் திரளாத என் நிலத்தின் கீழிருந்த நான்
விளையாத பயிர் கனவினை மூடிவிட்டு
கட்டிடங்கள் முளைத்த அயல்தேசம் கண்டேன்

எங்கும் இயந்திரங்கள் பெருத்த ஓசைகள்
தங்கச் சுரங்கத்தின் வாயில்களில்
உயிர்ப்புடன் நடமாடும் மனிதர்கள்
நான் என் நிலத்தின் கருணையை நினைத்தவாறிருந்தேன்

காடுகளின் உரையாடலில் என் உயிரின்
இலைகள் துளிர்த்து பூக்களை சூடுகின்றன
வலியெடுக்கும் என் கைகள் நீவும் டாலர்கள்
என் நிலத்தின் மனிதர்களுக்கு வருணபகவானாகின்றன

பொய்த்த மனிதர்களில்லா எந்த பூமியும் பொய்ப்பதில்லை
ஒரு இரவிலோ பகலிலோ
நான் என் நிலம் திரும்பும் சமயம்
கருணை கொண்ட மின்னல் கீற்றுகள்
கொஞ்சம் மேகத்தை துளைக்கட்டும்

நன்றி :தமிழ் முரசு (சிங்கப்பூர்)

© அப்துல்காதர் ஷாநவாஸ்

shaaanavas@gmail.com

 1965-70 களில் “சிங்கப்பூர் பெக்ஷியா” பள்ளியில் ஒரே வகுப்பில் சுமார் 50 தமிழ் மாணவர்கள் படித்திருக்கிறார்கள். திருமதி குணவதி நல்லதம்பி (பள்ளி ஆசிரியை) எண்ணத்தில் இந்த 50 பேரையும் ஒரு சேரப் பார்த்துவிட வேண்டும் என்ற  எண்ணம் மேலிட ஒவ்வொரு பூவாக கோர்க்க ஆரம்பித்தார். அத்தனை பேர் விபரங்களையும் திரட்டி பெரிய மாலையாக்கிவிட்டார். அந்த பெக்கிஷியா தோட்டத்தின் பூக்களில் ஒருவர் என் நண்பர் ஹாஜாமைதீன் (தொழிலதிபர்), அவருக்கு என்ன பிரச்சினை என்றால் என்னை விட்டு விட்டு எந்த நிகழ்வுக்கும் போவது அவ்வளவாக பிடிக்காது. உப்புக்கு சப்பானியாக என்னையும் அவர்களுடைய கூட்டத்திற்கு கூட்டிச் சென்றார். அடடா! என்ன ஒரு நெகிழ்ச்சி Mr.குலாம் டிவி புகழ் Mr.லிங்கம் ஒருவருக்கொருவர் கட்டி பிடித்து, சிறுவயது முகங்களைத் தேடி தேடி முகங்களை வருடி புளங்காகிதம் அடைந்தார்கள். ஓரத்தில் தனியாக விடப்பட்ட நான் என் பள்ளி கல்லூரித் தோழர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கற்பனையில் தவித்துக் கொண்டிருந்தேன். அந்தக் கற்பனையை நனவாக்க Mr.காதர் அவர்களிடமிருந்து பளிச்சென ஒரு மின்ன(ஞ்ச)ல் வந்தது. ஜமால் முஹம்மது கல்லூரியின் பழைய மாணவர் சந்திப்புக்கு ஏற்பாடாகியிருக்கிறது என்ற செய்தியுடன்…

நண்பர் ஜலாலுடன் நிகழ்சிக்கு விரைந்தேன், எத்தனைபேர் என் செட்டில் வந்திருக்கிறார்கள் என்ற ஆவல் மேலோங்கி அங்குமிங்கும் கண்களை படரவிட்டுக் கொண்டிருந்தேன்.

 1970 71 என்று ஆரம்பித்து எனக்கு 10 வருட முந்தைய செட்டில் பழைய மாணவர்கள் வந்திருந்தார்கள். 80த் தொட்டவுடன் என் பேட்ச் தோழர்கள் இருவர் எழுந்தனர், இளமை முடிந்துவிட்டது ஆனால் இன்னும் மாறா புன்னகை முகத்துடன் எழுந்து நின்றார்கள். எத்தனை எத்தனை அதிகரிகள், வங்கி ஊழியர்கள், மருத்துவர்கள், வியாபாரிகள்  சிங்கப்பூரில் இத்தனை நாட்களும் தவறவிட்டோமே என்ற ஆதங்கம் என்னுள் எழுந்தது. தென்னிந்தியாவின் அலிகார் என்று புகழப்படும் ஜமால் முகம்மது கல்லூரிக்கு இந்தவருடம் “வைரவிழா” அதில் தரமான கல்வியை பெற்றவர்கள் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவர்களாக மற்றவர்களுக்கு வழிகாட்டுகிற சிறப்பு பெற்றவர்களாக வாழ்வில் உயர்ந்த இடத்தை அடைந்திருக்கிறார்கள் என்று அந்த கூட்டமே வெளிப்படுத்தியது.

இந்த பழைய மாணவர்கள் நாம் நடந்த டோல்கேட்டில் நடந்தவர்கள், முதன்மை அரண் கதவை (மெயின்கார்டு கேட்) சுற்றியவர்கள், உச்சிப்பிள்ளையார் கோவிலின் 437 படிக்கட்டுகளில் ஏறி இறங்கியவர்கள், சங்கிலியாண்டபுரம் டூரிங் தியேட்டரில் எம்ஜியார் சிவாஜி படம் பார்த்தவர்கள், திவான் ஸ்டூடியோவில் கோட் போட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டவர்கள், ஹாஸ்டலில் குஸ்கா சாப்பிட்டு தூங்கி வகுப்புக்கு கட் அடித்தவர்கள், அத்துடன் திருச்சியின் நல உதவித் திட்டங்களில் என்றும் பங்கெடுத்துக் கொண்டிருப்பவர்கள் எல்லோருடைய அனுபவமும் ஒரே புள்ளியில் சந்தித்து மீண்டன.

திருச்சியில் மொத்தம் 30 கல்லூரிகள் இருக்கின்றன. அதில் நம் கல்லூரியின் சிறப்பையும் பழைய மாணவர்களின் ஈடுபாட்டையும் முன்னெடுத்துச் செல்ல ஜமால் முஹம்மது அலுமினி (சிங்கப்பூர்) முறையாக தொடங்கப்பட்டு அரசாங்கம் அனுமதி அளித்திருக்கிறது.

(Vist @ http://www.jmcalumni.org.sg/  ) 

வருகிற 30.01.2011 அன்று நாம் அனைவரும் ஒன்று கூடி பயணப்படவேண்டிய இலக்கை முடிவு செய்யவிருக்கிறோம்.

இன்னும் நம் சிங்கப்பூர் நண்பர்கள் பலருக்கு தகவல் சென்று சேரவேண்டியிருக்கிறது.

வாருஙங்கள் கைகோர்ப்போம்

சிங்கப்பூர் ஜமாலியன்களை அடையாளம் கண்டு கூட்டிவாருங்கள்

தொடர்புக்கு :

என்னுடைய அலை பேசி எண்: 82858065

MR.Kader  – 96933786  or 63981020

சிங்கப்பூர் கிளிஷே – 4

Posted: ஜனவரி 5, 2011 in பத்தி
குறிச்சொற்கள்:

“நீ பார்த்தாயா
என் டைரியை
அதில் என் அடையாள அட்டை
தொலைபேசி எண்கள்
சில கணக்குகள் குறித்து வைத்திருந்தேன்
அதற்காகவெல்லாம் தேடவில்லை அதை
ஒரே நேரத்தில் நான்கு திசைகளிலும்
ஊர்ந்து கொண்டிருக்கும் பாம்பு ஒன்றின்
படத்தை அதில் ஒட்டி வைத்திருந்தேன்
அதைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது எனக்கு”

-தேவதச்சன்

ஒவ்வொரு வருடம் பிறக்கும்போது நாளின் நிகழ்வுகளைக் குறித்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் வந்து பெரும்பாலும் அன்று மாலையே சருகாகி உதிர்ந்து விடும். ஆனாலும் வேலை கிடைத்த நாள், வேலை ”பனால்” ஆன நாட்களும் என்றும் மறக்காமல் மனதில் எப்போதும் நிற்கின்றன. சிங்கப்பூரில் வேலை இருப்பவர்கள், வேலை இல்லாதவர்கள் இருவருமே தவறாமல் Classfied பார்ப்பார்கள். நான் வேலை இல்லாததால் பார்த்தேன். புகழ்பெற்ற Franchise கிளீனிஸ் நிறுவனம், நல்ல சம்பளம். நேர்முகத்தேர்வுக்கு வந்திருந்தவர்களில் அதிகம் பேர் மலாய்க்காரர்கள். நான் சுத்தம், அசுத்தம் இரண்டு வார்த்தைகளையும் டைப் செய்து விக்கிபிடீயாவில் நுழைந்து ஒரு முழுமையான தயாரிப்புடன் களமிறங்கியிருந்தேன். கிளீனிங் இன்டஸ்டிரியில் 3’R’ முக்கியமானவை. Reuse, Reduce, & Recycle. குறிப்பாகத் தினந்தோறும் (2005 கணக்கு) 1000 டன் குப்பைகள் சேர்கின்றன. இது சுமார் 950 யானைகளுக்குச் சமம்.ஞாயிற்றுக்கிழமை மற்றும் விழாக்காலங்களில் 25 யானைகள் அதிகம் சேர்கின்றன.

வித்தியாசமாகப் பதில் சொல்லி நேர்முகத் தேர்வில் அசத்திவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தால் இன்டர்வியூ ரூமில் இரண்டு சீனர்களுடன், ஒரு வெள்ளைக்காரர் உட்கார்ந்திருந்ததால் சிங்கிலிஸ் மலாய் கேள்விகளை எதிர்கொள்வதற்குத் தயாராக இருந்த எனக்குப் பெரிய அதிர்ச்சியாகிவிட்டது. சில சமயங்களில் Franchise கம்பெனிகளில்  தலைமை இடத்திலிருந்து வந்து ஆள் எடுக்கும் நடைமுறைகளைக் கண்காணிப்பார்களாம். ஆரம்பத்திலிருந்தே வெள்ளைக் காரர்தான் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார். வீடு எங்கே என்றார். சொன்னேன். Govt (Or) Private என்றார். நான் HDB என்றேன். HDB என்றால் “ஹை டென்ஸிட்டி பில்டிங்” அப்படியா என்றார் தொடர்ந்து அது என்ன NTUC, PUB, NEA என்று Short பார்ம் யூஸ் பண்ணுகிறீர்கள். சிங்கப்பூரில் மொத்தம் எத்தனை Wash rooms உள்ளன இப்படிப் பல கேள்விகள் கேட்டார். சொன்ன பதில்களில் எனக்கே திருப்தி இல்லை. யூரின் பாஸ் பண்ணவதற்கு Loo என்று சொல்கிறார்களே அது என்ன மொழி என்றார். அது ஆங்கிலம்தான் “”Let us observe Ourselves” என்றேன். அநேகமாக இந்தப் பதில்தான் எனக்கு வேலை வாங்கிக் கொடுத்திருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

கம்பெனி பாஸ் Mr.Albert பிரிட்டன் திரும்பும்வரை அவரைக் கவனிக்கும் PRO வேலையும் சேர்த்து எனக்குக் கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு வாரமும் ஆங்கில மொழியில் ஒரு புதிய வார்த்தை சேர்வதாகச் சொல்கிறார்கள். பெயர்ச்சொல், வினைச் சொல்லாகவும் சில சமயங்களில் உரிச் சொல்லாகவும் மாற்றம் கொண்டு வருகின்றன. காரணம் ஆங்கிலத்தைக் கூறு போட்டால் கொஞ்சம் ஸ்கேண்டினேவியன்,  கொஞ்சம் லத்தீன், அதிகமாகப் பிரான்ஸ், ஜெர்மன் இப்போது கொஞ்சம் Chinglish-ம் சேர்ந்து கொண்டுவிட்டன.

இன்னொரு மொழியிலுள்ள வார்த்தை பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தால் அதைக் கடன் வாங்கித் தன்னுடையதாக்கிக் கொள்ளும் வித்தை ஆங்கிலத்தைத் தவிர மற்ற எந்த மொழிகளுக்கும் இல்லை. Mr.ஆல்பர்ட் டிஸோஸா சிங்கப்பூரைப் பற்றி விரிவான விபரங்களைக் கை நுனியில் வைத்திருந்தார். ஒரு தகவலை அவர் கேட்கும் போது அது வேறு ஒன்றுக்கான பிரதிவடிவமாக விரிவான அர்த்தம் கொண்டதாக இருக்கும்.

ஆர்ச்சர்டு ரோட்டிலுள்ள அந்தப் புகழ்பெற்ற கிளப்பில் வார இறுதி நாட்கள் மட்டுமல்ல வார நாட்களிலும் கூட்டம் நிரம்பி வழியும். ஒருவாரம் முன்னதாகவே நிகழ்ச்சி அட்டவணையைக் கொடுத்து விடுவார்கள். பெரிய ஹாலில் பலவிதமான நிகழ்ச்சிகள் ஒரே நேரத்தில் நடக்கும். அதற்கேற்றாப்போல் ஹாலைச் சிறு சிறு அறைகளாகப் பிரித்துத் தடுப்பு ஏற்படுத்த வேண்டும். சீலிங் பகுதியில் தண்டவாளங்களில் தடுப்புகள் தொங்கிக் கொண்டிருக்கும். பெருக்கல் வாய்ப்பாடு தெரிந்தால் மிகச் சுலபமாக 4, 8, 12 அறைகளை அரை மணி நேரத்தில் அமைத்து விடலாம். புள்ளி தவறிச் சுவரை இழுத்துவிட்டால் மொத்த தடுப்புகளையும் வெளியில் இழுக்க முடியாது. Mr.ஆல்பர்ட் டிஸோஸா மற்ற கிளை நிறுவன உரிமையாளர்களைச் சந்திக்க முழுநேரமும் அங்கே இருப்பார்.

அவர் அதிகம் உபயோகிக்கும் வார்த்தைகள்
What ever
You know what i mean
to tell you the truth
Actually

இவைகளுக்கு ஆமாம் என்றோ இல்லை என்றோ சொல்லமுடியாத நிலைமையில் நான் தவிக்கும்போது you think, think when you will get the answer என்பார்.

ஒரு நாள் சிங்கப்பூர் கிளை உரிமையாளர் Ms. கேதரின் டிஸோஸாவுக்கு சீனப் புத்தாண்டு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது ஹவ்பார்வில்லாவுக்கு எதிரிலுள்ள Seafood Restarant- ல் விருந்து நடந்தது.

பிஸ் சூப், அப்லோன், Sea cucumber, fatt choy, waxed duck மேஜையில் கொண்டு வந்து வைத்தார்கள். நான் Mr.டிஸோஸாவிடம் சில்லி ok வா என்றேன். ஏன் எப்போதும் வெள்ளைக்காரர்களிடம் இதே கேள்வியைக் கேட்கிறீர்கள் நான் மெக்ஸிகன், தாய் உணவுகளை வெளுத்து கட்டியவன் இது என்ன பிரமாதம் என்றார். ms.கேதரினிடம் சீனப்புத்தாண்டு என்றால் இதே வகை உணவுகள்தான் பரிமாறவேண்டுமா என்ன? என்றார்.

அதற்கு கேதரின் ”கொங்ஸி பட்சாய்” என்று வார்த்தையால் Fatt choy பொருந்துகிறது. Fish என்று உச்சரித்தால் கண்டனிஸில் அபரிதமான மிகையான செல்வம் என்று அர்த்தம் என்றார்.

டிஸோஸா தொடர்ந்து, ‘அப்படியானால் இனிமேல் விருந்தில் Peas, Corn, Honey மூன்று மட்டும்தான் சாப்பிடவேண்டும்’ என்று நினைக்கிறேன்.
Peas உச்சரிப்பில் Peace வருகிறது
Corn உச்சரிப்பில் Coin வருகிறது
Honey ஊற்றினால் Money OK வா எப்படி என்றார்.

எல்லோரும் சிரித்தோம்

”Lee har dai siv”
‘இந்த வருடம் முழவதும் சிரித்துக் கொண்டிருங்கள்’ என்று சீனத்தில் பேசி அனைவரையும் அசத்தினார்.

Mr.டிஸோஸா நான் வேலையில் சேர்ந்து இரண்டு வாரங்களில் எனக்கு ”Zaijiaw” (குட்பை) சொல்லிவிட்டு லண்டன் சென்று விட்டார். ஒரு வருடம் தொடர்ந்து அதே கம்பனியில் வேலை செய்தேன். நான் சூப்பர்வைஸ் செய்யும் இடங்கள் கூடுதலாகக் கிடைத்துச் சம்பளமும் உயர்ந்தது. மலேசியர்கள் தவிர Senior Citizen மற்றும் மாற்றுத் திறனாளர்கள் துப்புரவு வேலைகளில் அதிகம்.

அதில் ஒரு மாற்றுத் திறனாளி பற்றி உங்களுக்கு சொல்லவேண்டும். அவர் Ms.ஷெர்லி யங். வாய் பேச இயலாதவர், காதும் கேட்காது. இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தாய். கணவர் இறந்துவிட்டார், படித்தவர். பொதுவாக சிங்கிலீஷ், ஜப்பலிஸ், கொரிலிஷ் என்று கற்றுக் கொண்டு கம்பெனியில் பெயர் வாங்கியவர்கள் பலரை நான் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். எனக்கு கொஞ்சம் ‘Sign’lish தெரியும். அது Ms.ஷெர்லி போன்றவர்களை வேலை வாங்குவதற்கு மிகவும் பயன்பட்டது. ஷெர்லிக்கு 10 மாடிகளிலும் உள்ள Toilet களைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டிய டூட்டி.

எனக்கு Signlish எப்படிப் பரிச்சயமானது என்றால் நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் என் உறவினர் காது கேளாதோர் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தவர் என்னை அடிக்கடி சந்தித்துச் சைகை மொழியில் பேச பேச, எனக்கு அது மிகவும் சுலபமாக வந்தது.

குறிப்பாக அத்தனை எண்களையும்  2 கை விரல்களையும் பயன்படுத்திச் சொல்லி விடலாம். 1, 2, 3 கைவிரல்களைக் காண்பித்துச் சொல்லிவிடலாம். 20 என்கிற போது இரண்டு விரல்களை நீட்டி வைத்துக்கொண்டு பக்கவாட்டில் திரைவிலகுவது மாதிரி இழுத்துவிட வேண்டும். 99 வரை இதே முறையில் பக்கவாட்டில் இழுத்துவிட்டு அடுத்த நொடியில் +1 காட்டினால் சொல்லி விடலாம்.

100 என்பதற்கு ஒற்றை விரலை நீட்டி, ரஜினி கையை சுழற்றி மேலே கொண்டு போவதுமாதிரி அல்லாமல் கீழே ஒரு இழுப்பு இழுக்கவேண்டும். அதே மாதிரி 900 வரை சொல்லிவிடலாம் 1000க்கு ஆள்காட்டி விரலைக் கையின் செவ்வாய் மேட்டைத் தொட்டுக் காட்டி மேல் நோக்கி நகர்த்தினால் 1000 .. இப்படி…

நடிகர், நடிகைகள் பெயர்களை எழுதிக் காண்பிப்பதை விட அதற்கும் சைகை மொழி இருக்கிறது. MGR என்றால் ஆள்காட்டி விரலை நாடியில் வைத்து இரண்டாகப் பிரித்துக் காண்பிக்க வேண்டும் (இரட்டை நாடி). சிவாஜி என்றால் ஆள் காட்டிவிரலை முதல் கட்டையை மடக்கி வைத்துக்கொண்டு நாடியில் வைக்க வேண்டும். ஜெமினி கணேசனுக்கு கன்னத்தில் இட்லி சுடவேண்டும் (சாம்பார்) இப்படிக் கமல், ரஜினி அவர்கள் உடல்மொழிக்கு ஏற்ப….. ஷெர்லிக்கு நான் நண்பனாகி விட்டேன். அவர் வேலையைச் சுலபமாக புரிந்து கொண்டு முடிக்க நான் உதவியாக இருந்ததில் அவர் பிள்ளைகளைக் கூட்டிவந்து எனக்கு அறிமுகப்படுத்தினார். இவ்வளவு நுணுக்கமாக இருந்த ஷெர்லி நட்பால் ஒரு பிரச்சினையில் எனக்கு ஒருவாரம் சஸ்பெண்ட் கிடைத்தது. அந்த பிரச்சினை ஒரு நாள் VVIP விசிட் 6வது மாடியில் மீட்டிங். ஆட்கள் ஒரே நேரத்தில் கூடும் மாடிகளில் டாய்லெட் பிரச்சினை வந்துவிடும். நான் ஹாலில் நின்று கொண்டு ஷெர்லியிடம் 6வது மாடிக்குச் சுண்டுவிரலை காண்பித்து 6வது மாடியை பார்த்தால் போதும் கவனமாக இருக்கவும் என்று சைகை மொழியில் பேசிக் காண்பித்தேன். அவர் OK என்று கட்டைவிரலை காண்பித்தார்.

 கூட்டம் முடிந்தவுடன் கட்டிட CEO என்னைக் கூப்பிட்டார். 6 வது மாடியில் டாய்லெட் பேப்பர் இல்லை ஒரே அசுத்தம் என்ன வேலை கிழிக்கிறீர்கள் என்றார். நான் ஷெர்லியை என்ன இப்படிச் சொல்கிறீர்கள் என்றேன். 6வது மாடியை நான் சுத்தம் செய்யவில்லை நீதான் சுண்டு விரலைக் காண்பித்து கடைசிமாடி என்றாய் என்று சொன்னார். (சைகையில்தான்) 10வது மாடியைத்தான் கிளீன் செய்தேன் என்றார் சுண்டுவிரல் 6 தானே என்றேன்.

6 அப்படி அல்ல சுண்டுவிரலோடு கட்டை விரலையும் பாபா முத்திரை மாதிரிக் காண்பிக்க வேண்டும் அதுதான் சீனப் பண்பாடு என்று பாபா முத்திரை காண்பித்து இரண்டு கைகளையும் சேர்த்து நெற்றியில் வைத்து இது சீனப் பண்பாடு என்றார்

.
ஆனால் CEO பண்பாடு காக்காமல் எனக்கு மெமோவும் ஒருவார சம்பள வெட்டும் கொடுத்து விட்டார். இதே மாதிரி நான் செய்யாத தவறால் வேலை போன விசயத்தை அடுத்த கட்டுரையில் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

புத்தாண்டு வாழ்த்துகள் எப்படி சைகை மொழியில் செய்வது என்று ஷெர்லி எனக்குச் சொல்லிக்கொடுத்தார் அதை எப்படி உங்களுக்குச் சொல்வது என்றுதான் தெரியவில்லை!

thanks: http://www.thangameen.com/contentdetails.aspx?tid=155

©அப்துல்காதர் ஷாநவாஸ்
shaaanavas@gmail.com