மார்ச், 2011 க்கான தொகுப்பு

ஜன்னலும் 

கதவும் இருந்தும்

கத்திக் கத்தி ஓய்ந்த குருவிக்கு

கடைசி வரை

சொல்லப்படவே இல்லை

நேற்றுவரை அந்த வீட்டில்

குடியிருந்த குழந்தைகளின்

வீட்டு முகவரி……………

சிங்கப்பூரில் வக்கீல், வங்கியாளர்கள், ஆசிரியர்கள் ஓய்வு பெற்ற விமான பைலட் முதலானோர் எழுத்தாளர்களாகிக் கலக்கி வருகிறார்கள்.  26 வயது வங்கியாளர் மாதவ் மாத்தூர் 2004-ல் எழுத ஆரம்பித்த கதை பாலிவுட்டில் படமாக்கப்பட்டு வருகிறது. வக்கீலாக இருந்து எழுத்தாளரான ‘ஷாமினி பிளின்ட்’ 2005&ல் எழுதி வெளியிட்ட கிரைம் நாவல் ‘இன்ஸ்பெக்டர் கிங்’ ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளது. இலங்கையைச் சேர்ந்த ‘‘எல்மோ ஜெயவர்த்தன ஓய்வு பெற்ற பைலட் சிங்கப்பூரில் வசிக்கிறார். அவர் இதுவரை மூன்று நாவல்கள் எழுதியிருக்கிறார். அவருடைய samsstory இலங்கை அரசின் விருது பெற்றுள்ளது. ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி சென்ற வருடம் சிங்கப்பூரில் குடியேறி ஆக்ஷன் திரில்லர் நாவலை எழுதி வெளியிட்டுள்ளார். 12 வருடங்களாக இங்கு வசிக்கும் இங்கிலாந்து எழுத்தாளர் ‘மார்க்பவல்’ சோமாலியாவுக்கு பயணம் செய்து அந்நாட்டுக் கொள்ளையர்களைப் பற்றி நாவல் எழுத ஆரம்பித்திருக்கிறார். இதெல்லாம் சிங்கப்பூர் கிளிஷேயில் ஏன் சொல்கிறீர்கள் என்று நீங்கள் கேட்கக்கூடும். சிங்கப்பூரில் எழுதுவதற்கும் எழுதியதைப் படிப்பதற்கும் உகந்த சூழல் உள்ளதா என்று என்னிடம் ஒரு நண்பர் ஆவேசமாகக் கேட்டார். அதனால்தான் நானும் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன். சரி நம் விஷயத்திற்கு வருவோம். வேலையில்லாமல் இருக்கலாம். ஆனால் நண்பர்கள் இல்லாமல் இருக்கமுடியுமா? நான் வாங்கிய செல்போன் எப்படி ‘‘லா’’ ஓகேவா, ரிங்டோன் எப்படி அசத்தலா இருக்கா?என்று மட்டும் கேட்டு செல்போனை மாற்றுவது மாதிரி நண்பர்களை மாற்றிக் கொண்டிருக்கும் நபர்கள் என்னிடம் அவ்வளவாக ஒட்டுவதில்லை.  உலகத்தில் என்ன நடக்கிறது என்று கொஞ்சம் என்னைச் சிந்திக்க வைக்கும் நண்பர்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறார்கள்.

தாமன் ஜீரோங்கில் ‘‘தமிழ் சினிமா’’ ஓடும் தியேட்டர் ஒன்று இருந்தது. அப்போது செல்போன்கள் அவ்வளவு உபயோகத்திற்கு வரவில்லை. ஆனால் கைக்கடிகாரத்தில் ‘‘அலாரம்’’ பீப் பீப் என்று அடிக்கும். எங்கு பார்த்தாலும் அலாரம் உள்ள கடிகாரத்தைக் கட்டிக் கொண்டு திரிவார்கள். ‘நினைத்ததை முடிப்பவன்’ என்று நினைக்கிறேன். எனக்கு டின் ஏஜ் பருவம் பக்கத்தில் படம் பார்த்துக் கொண்டிருந்த ஆசாமி அரைமணி நேரத்திற்கு ஒரு தரம் முள்ளைத் திருப்பி திருப்பி வைத்து அலாரம் அடித்து ‘டார்ச்சர்’ பண்ணிக் கொண்டிருந்தார். என் நண்பர் H மிகவும் வேடிக்கையாகப் பேசக் கூடியவர். அவர் அந்த ‘வாட்ச்’ ஆசாமியிடம் வாட்ச் என்ன விலைக்கு வாங்கினீர்கள் என்றார். அவர் ‘‘அன்னம் புலு’’ என்று மிடுக்காகச் சொன்னார், கொஞ்சம் வாட்சைக் கழற்றுங்கள் என்று அதை வாங்கிப் பார்த்துவிட்டு ‘‘அட சாயாங் பிரதர் யாரோ உங்களை நன்றாக ஏமாற்றிவிட்டார்கள். இதன் விலை ‘‘தீகா புலு’’ அதாவது இந்த பிராண்டில் வாட்ச் வாங்கினால் இன்னொரு வாட்ச் ஃப்ரி அல் லாமா! என்ன லா’ இப்படி ஏமாந்துட்டிங்க’ என்று அள்ளிவிட்டார் அந்த ஆசாமி. இது உண்மையா, ஏமாந்து விட்டோமா என்ற குழப்பத்திலேயே அலாரம் வைக்காமல் எங்களை நிம்மதியாய்ப் படம் பார்க்கவிட்டார்.

இன்னொரு நண்பர் S எதையும் வித்தியாசமாக சிந்திப்பவர். புதிதாகக் கார் வாங்கினால் என்னை உட்கார வைத்து சிங்கப்பூரை ஒரு வலம் வருவார். அப்படி ஒரு நட்பு. எனக்குத் தமிழ் மேல் உள்ள காதல் அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று. அவருடைய தமிழ் ஆர்வத்திற்கு நானும் அவ்வப்போது புராணங்களில் ஆரம்பித்து இன்றைய காலகட்டம் வரை வலை போட்டு அலசிப் பல விஷயங்களைப் பேசிக் கொண்டிருப்போம். ஒருநாள் வந்து படகு ஒன்று புதிதாக வாங்கியிருக்கிறேன். 2 நாட்கள் புரோக்ராம் போடுங்கள் என்றார். நான் பக்கத்தில் 5. 6 கிலோமீட்டர் தூரத்திலுள்ள Kusu தீவுக்குப் போகலாம் என்றேன். Kusu என்றால் சீன மொழியில் ஆமை என்று அர்த்தம். நண்பர் S மிதக்கும் மீன் பண்ணைக்குச் செல்லலாம். அங்கு ஒரு சீன நண்பர் பழக்கம் என்றார். புத்தம் புது பைபர் கிளாஸ் dassboat  6 பேர் பயணம் செய்யலாம். நான் ஏதாவது டிரைவர் கூட்டிவருவார் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவரே ஓட்டுகிறேன் என்றார். எனக்குப் படகில் ஏறுவதற்கு முன்னாலேயே தூக்கிவாரிப்போட்டது. படகுப் பயணம் செய்யச் சிங்கப்பூரில் 4 முனையங்கள் உள்ளன. ஹார்பர் பிரன்ட், தானாமேரா, சாங்கி F.T, சாங்கி பாயிண்ட் F.T, இவை தவிர மீன் பிடிக்கவும், உல்லாச சவாரி செய்யவும் தனியார் படகுகளுக்கும் அனுமதி உண்டு. நண்பர் S வாங்கிய படகில் 24 மணி நேரத்தில் சுமார் 100 கடல் மைல் தொலைவு செல்லலாம். அதாவது 185 கி.மீ.

ஜிம்மி கார்னல்ஸ்’ கடல் பயணங்களில் மேற்கொள்ளவேண்டிய விதிகள் பற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அது பொதுவாக எல்லா மாலுமிகளும் வைத்திருக்கக்கூடிய புத்தகம் அதை நாங்கள் படகுக்குள் ஏறும்போது S கையில் வைத்துப் படித்துக் கொண்டிருந்தார்.

9 மீட்டர் நீளமுள்ள படகு அது. கார் ஓட்டுவது மாதிரி வளைத்துத் திருப்பினார். கடல் ஆழத்தைக் காட்டும் கருவியை மட்டும் அடிக்கடி பார்த்துக் கொண்டார். எனக்கு மனதுக்குள் ‘திக் திக்’ என்றிருந்தது. நான் நண்பர்களுடன் காரில் ஜொகூர் வரை சென்று திரும்புகிறேன் என்று வீட்டில் சொல்லிவிட்டு வந்தேன். மற்ற நண்பர்களும் ‘திருதிரு’வென்று விழிப்பதைப் பார்த்தால் அவர்களும் அப்படித்தான் சொல்லிவிட்டு வந்திருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அப்போது உடனடி அவசர உதவி கேட்டு குரல் எழுப்ப இப்போது இருப்பது மாதிரி gmdss சிஸ்டம் இல்லை. 1990&க்குப் பிறகுதான் VHF digital calling  உபயோகத்தில் வந்தது. பக்கத்தில் பெரிய கப்பல்கள் இடைமறிக்கும்போது அலை உயர்ந்து நாங்கள் சென்ற படகு உயரக் குதித்து தண்ணீருக்குள் விழுந்து எழுந்தது. அவசர உதவிக்கு ‘‘ Mayadaya call”  பண்ண வேண்டிய அவசியம் வந்து விடுமோ என்று மூச்சை விட்டுப் பிடித்துக் கொண்டிருந்தோம். ஒரு வழியாக மிதக்கும் மீன் பண்ணைகள் இருந்த இடத்தை (floating fish form) அடைந்து விட்டோம். நான் முதன் முதலாக அன்றுதான் அப்படி ஒரு மீன் பண்ணை சிங்கப்பூர் கடல் எல்லையில் இருப்பதைப் பார்க்கிறேன். அந்தப் பண்ணை உரிமையாளருடன் கழிந்த ஒருநாள் பொழுது இன்னும் எங்கள் நினைவுகளில் பசுமையாக உள்ளது.

கப்பற்படையிலும், வணிகக் கப்பல்களிலும் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை கழித்த தமிழக எழுத்தாளர் ‘‘நரசய்யாவின்’ சிறுகதைகளை நான் சொல்ல ஆரம்பித்தவுடன் சீன மீன் பண்ணை உரிமையாளருக்கு கம்யூனிகேஷன் பிரச்னை வந்துவிட்டது.

அதனால் பெரும்பாலும் அவரையே பேசவிட்டோம்.

அவர் சுற்று சூழல் ஆர்வமுள்ள மீன் வளர்ப்பாளர், இரால்களுக்காக வைக்கப்பட்டுள்ள வலையில் சில சமயம் ஆமைகள் சிக்கிவிடுமாம். கொஞ்சம் கொஞ்சமாக அதைச் சேர்த்து கொண்டுபோய் Kusu தீவில் விட்டு விடுவாராம். அங்கு சென்றால் நிறைய ‘‘Buaya” (முதலைக்கு மலாய் வார்த்தை) நீங்கள் பார்க்கலாம் என்றார்.

வலையில் வாருதல் என்ற புதிய மீன்பிடி யுக்தி அப்போது இருந்தது. கப்பலுடன் பெரிய வலைகளைக் கட்டி அதில் பெரிய கல் அல்லது இரும்பைக் கட்டி கடலில் சுமார் 400 மீட்டரிலிருந்து 1500 மீட்டர் ஆழத்தில் போட்டு விடுவார்களாம். (trawling) திறந்த வாயுடன் இருக்கும் பெரிய வலை கப்பலுக்கு இணையாகக் கடலுக்கடியில் ஓடும்போது வழியில் எதிர்ப்படும் எல்லா உயிரினங்களும் மாட்டிக் கொள்ளும். வேண்டியவற்றை எடுத்துக் கொண்டு மற்றவற்றை வீணாக எறிந்து விடுவது கடலில் இருக்கும் சூழல் மண்டலமே பாதிக்கப்படும் என்றார். 

பொதுவாக இம்மாதிரி மிதக்கும் மீன் பண்ணைகள் 20 அடி நீளம் 20 அடி அகலத்தில் சுற்றி வளையால் பாதுகாக்கப்பட்டு அமைக்கப்படுகிறது. 

1988-ல் சுமார் 70 பண்ணைகள் 37 ஹெக்டேர் பரப்பளவில் இருந்தன. இப்போது bulou ubin, Pasir ris, lazarus,bulau semaku பகுதிகளில் அதிகம் அமைக்கப்பட்டிருக்கின்றன. சுமார் 500 கிலோ மீன்கள் தினமும் NTUC வாங்கிச் சென்றுவிடுவார்கள்.

இவருடைய பண்ணையில்  கொடுவா, செவ்விளை மீன், சிங்கி இறால் வளர்க்கிறார்.

கடலுக்குள் போய்விட்டால் திசைகள் தெரியாது. ஜேடி குருஷ் ‘‘ஆழி சூல் உலகு’’ நாவலில் திசைகளை நேர் வெலங்க, சோழ வெலங்க வாட வெலங்க

கடற்காற்றுகளை

கச்சான், கரைக்காற்று, திரப்பு, பொழி, மடை, விரளம் என்பார்.

அதில் ஆமைகளைப் பற்றி அதிகம் கவலைப்பட்டுப் பேசினார்.

டைனோசர்கள் அழிந்தபோது கூட டிமிக்கு கொடுத்துவிட்டுத் தப்பி ஓடிய உயிரினம் ஆமை. 10 கோடிகளாக வாழ்ந்து வரும் இனம் இப்போது அழியும் நிலைக்கு வந்துவிட்டது என்றார்

அவர் பெரிய மீன்களுக்கு டின் மீன் இரைகள் எதுவும் வாங்கி வைத்திருக்கவில்லை. பிடிபடும் சிறிய மீன்களை வெட்டிப் பெரிய மீன்களுக்குப் போட்டார். மாலையில் நாங்கள் புறப்படும் முன்பாக அந்தப் பெரிய மீன்களை வெட்டிச் சுட்டுச் சாப்பிட்டோம்.

மீண்டும் பல வருடங்கள் கழித்து அந்தப் பகுதிக்கு மீன் வியாபாரிகளைப் பார்க்க நான் மட்டும் சென்று வந்திருக்கிறேன்.  அந்தப் பண்ணை நகர்ந்து வேறொரு இடம் போய்விட்டிருந்தது.

இப்போதெல்லாம் கடலுக்குள் போய் மீன் வாங்க வேண்டியதில்லை. சாங்கி மீன் விற்பனை நிலையத்தில் போய் வாங்கிக் கொள்ளலாம். நிறைய விஷயங்கள் மாறிவிட்டன. கடலுக்குள் சென்று ஜாலி அரட்டை அடித்து திரும்பிய நினைவுகள் மட்டும் மாறாமல் இருக்கின்றன.

thanks:http://www.thangameen.com/ContentDetails.aspx?tid=249

சிங்கப்பூர்த் தமிழ் இதழ்கள் 1875 – 1941 பற்றிய தங்களது பேச்சு குறித்துத் தங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப நினைத்தேன். அதைத் தங்கமீன் வழியாகப் பகிர்ந்து கொள்ள முடிவு செய்து – இந்தக் கடிதம்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு கூட்டங்களில் சந்திக்க இயலாத சில ஆளுமைகளை ஒருசேரப் பார்க்கவும், இதுவரை தெரியாத பல செய்திகளை அறிந்து கொள்ளும் ஒரு நிகழ்வாகவும் இந்தக் கூட்டம் அமைந்தது. 

தாங்கள் பேச்சின் துவக்கத்திலிருந்து இறுதிவரை குறிப்புகளை எடுத்து முடிக்கும்போது, செய்தித்தாள்களை ‘இதழ்கள்’ என்று குறிப்பிடுவது சரியா என்று கூட்டத்தில் ஒரு கேள்வி எழுப்பப் பட்டவுடன் ‘இந்திரஜித்’ மொழியில் சொல்வதானால், நான் கொஞ்சம் ஆடிப் போய் விட்டேன். வீட்டுக்கு வந்து என் பழைய சிதலமடைந்த குறிப்புகளைத் தேடிப் பார்த்ததில்,

– செய்திகளையும், கருத்துக்களையும், இயற்கால படைப்புகளையும் அறியவும், பகிர்ந்து கொள்ளவும், பாராட்டவும், ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து மீண்டும் மீண்டும் அச்சிட்டு விற்கப்படும் நூல்களை இதழ் என்று கூறுவது வழக்கம்.

இதழ்களில் –
 நாளிதழ்கள்

கிழமை இதழ்கள்

மாதிகைகள் (மாத இதழ்கள்)

என்ற குறிப்பு இருந்தது. 

 பழைய குறிப்புகளைச் சாதாரணமாகத் தூக்கிப் போட்டுவிடக் கூடாது என்பது சரிதான் போலும்.

 வரலாறு ஒரு விந்தையான விஷயம். ஒரு காலத்தில், முரண்பாடாகத் தோன்றிய விஷயம், சில காலம் கழித்து ஒரே கருத்தின் இரு கூறுகளாகத் தென்படும் என்று சொல்வார்கள். தகுதியான நபர்கள் பத்திரிக்கை நடத்தி இருந்தால், மிகக் குறுகிய காலத்தில் அவை மூடப்பட வேண்டிய நிலைக்கு உட்பட்டிருக்காது என்ற கருத்தை ஒப்பு நோக்க, இப்போது பத்திரிக்கை நடத்தத் தகுதியான நபர்கள் இருக்கிறார்கள். ஆனால் பதிப்பாளர்கள் உற்பத்தியாளர்களாகவும், எழுத்தாளர்கள் முகவர்களாகவும், வாசகர்கள் நுகர்வோர்களாகவும் ஒரு சந்தை உருவாகிக் கொண்டிருக்கிறது.

தனது பார்வை வலியுறுத்தும் இடத்திலிருந்து நின்று பேசுவது என்பது இப்போதும் ஒவ்வொரு பத்திரிக்கையாளருக்கும் வேறுபடவே செய்கிறது.

பாம்பும் நோகாமல், அடிக்கும் கோலும் நோகாமல், பத்திரிக்கையில் தன் எண்ணங்களை எழுதுபவர்களைக் கிண்டல் செய்த தகவல், இன்றைய காலகட்டத்திலும் அந்நிலை தொடரும் அவல நிலையை எண்ணிப் பார்க்க வைத்தது. 

நீங்கள்  சிங்கை வர்த்தமாணி தொடங்கி, சிங்கைநேசன், தங்கை நேசன், ஸ்நேகன், ஞானசூரியன், சிங்கை விஜய கேதன், இந்து காவலன், சிங்கை ஜனமித்திரன், நூருல் இஸ்லாம், ஞானோதயம், இந்திய நேசன், சிங்கை கிறித்துவ வர்த்தமானி, சிங்கை மித்திரன், மலாய விளக்கம், சிங்கைத் தூதன், பொது ஜன மித்திரன், உதய தாரகை, மலேயா நாடு, தனவர்த்தினி, முன்னேற்றம், மலேயா நண்பன், இன்னும் என்னால் குறிப்பெடுக்க இயலாமல் போன பத்திரிக்கைப் பெயர்களோடு சுமார் 50-க்கும் மேற்பட்ட பத்திரிக்கைகள் அது ஆரம்பித்த வருடம், அதன் ஆசிரியர்கள், அவை ஒவ்வொன்றும் அற்ப ஆயுளில் கதைகள், அவற்றுக்கான காரணங்கள் என்று அடுக்கிக் கொண்டே சென்றது, மிகவும் மலைப்பாக இருந்தது.

நீண்டகால ஆய்வுப் பணியில் தாங்கள் எடுத்துக் கொண்ட சிரமங்கள் ஆச்சரியமாக உள்ளது.

ஒரு பத்திரிக்கை மூடுவிழா நடக்கும்போது, புதிதாக ஒரு பத்திரிக்கையாளன் முளைத்து வந்து எழுத முற்படுகிறான் என்ற செய்தியும், சீனர்கள் தமிழர்களுக்காக நடத்திய தமிழ் பத்திரிக்கை ‘பொதுஜனமித்திரன்’ குறித்த தகவலும் முத்தாய்ப்பான விஷயங்கள்.

இத்துடன் நான் தாங்களிடம் கேட்க நினைத்த கேள்வி, பத்திரிக்கைகளுக்கு மூன்று விதமான இருப்பு நிலைகள் வேண்டும் என்று சொல்கிறார்கள். இகம், பரம், விளம்பரம். நீங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட காலகட்டத்தில் விளம்பரங்கள் பத்திரிக்கை வளர்ச்சியில் பங்காற்றிய குறிப்பு உண்டா ? இதை நான் கேட்க நினைத்துக் கொண்டிருந்தபோது, ‘தங்கமீன்’ பாலு, கடைசிக் கேள்வி என்று ஏற்கனவே சொல்லி முடித்து விட்டார்.

சிங்கப்பூர் நாளிதழ்களின் வரலாற்றில் ஆழ்ந்த அறிவும், நேரடி அனுபவமும் கொண்ட தங்களது பேச்சு எங்களுக்கு ஒரு சிறப்பான அரிதான கூட்டத்தில் கலந்து கொண்ட உணர்வைத் தந்தது. தங்களுக்கும், தங்கமீன் இணைய இதழ் ஆசிரியர் பாலு மணிமாறனுக்கும் நன்றி.

அன்புடன்

ஷானவாஸ் 

நிகழ்வைப்பற்றி….

மாதவி இலக்கிய மன்றமும், தங்கமீன் இணைய இதழும் இணைந்து, ‘சிங்கப்பூர்த் தமிழ் இதழ்கள் 1875 – 1941′ என்ற தலைப்பில் திரு. பால பாஸ்கரனின் உரை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. பிப்ரவரி 19, சனிக்கிழமை அன்று அங் மோ கியோ நூலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. 

பாலபாஸ்கரன், தமிழ் ஆய்வாளர், ஊடகவியலாளர் என்ற பன்முகத் தன்மை கொண்ட ஆளுமை. மலேசியாவில் பிறந்த இவர், தற்போது சிங்கப்பூர் நிரந்தரவாசி. மலாயப் பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளர், தமிழ்நேசன் பத்திரிக்கையாளர்,  சிங்கப்பூர் மலேசிய வானொலிகளின் ஒலிபரப்பு இதழாளர் என்று பலவகைகளில் பங்காற்றியவர்.  

1. Malaysian Tamil Short Story: The Historical Development, 1995 (in Tamil)

2.  The Malaysian Tamil Short Stories 1930 – 1980: A Critical Study, 2006 (in English)

இவை இரண்டும் பாலபாஸ்கரன் எழுதியுள்ள புத்தகங்கள் 

‘சிங்கப்பூர்த் தமிழ் இதழ்கள் 1875 – 1941’ என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரை அமைந்திருந்தாலும், அவரது 3 வருடத்திற்கும் மேற்பட்ட ஆராய்ச்சி என்னவோ சிங்கப்பூர்-மலேசியா ஆகிய இரண்டு நாடுகளையும் இணைத்ததாகவே இருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் சிங்கப்பூரில் 50க்கும் மேற்பட்ட தமிழ் இதழ்களும், மலேசியாவில் 60க்கும் மேற்பட்ட தமிழ் இதழ்களும் வெளிவந்திருப்பதாகச் சொன்னார் பாலபாஸ்கரன்.  பத்திரிக்கைகளின் எண்ணிக்கை அதிகம் என்றால் என்ன அர்த்தம்…ஆயுசு குறைவு என்று அர்த்தம்… என்று சொல்லிச் சிரித்தார். ஆனால், இந்தியர்கள் இந்தக் காலகட்டத்தில் ஆங்கிலம், சீனமொழி, மலாய் என அனைத்துமொழியிலும் இதழ்களை நடத்தி இருக்கிறார்கள். சிங்கப்பூரில் வெளிவந்த முதல் மலாய் மொழி செய்தித்தாளும், கோலாலம்பூரில் வெளிவந்த முதல் சீனமொழி செய்தித்தாளும் இந்தியர்களால் நடத்தப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் நிகழ்ச்சிக்கு முன்பாகவே பாலபாஸ்கரன் பகிர்ந்து கொண்ட தகவல்கள்.

தங்கமீன் இணைய இதழ் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளைச் சமூக மற்றும் தமிழ் அமைப்புகளின் உதவியோடு தொடர்ந்து நடத்தும் என்று இதழாசிரியர் பாலு மணிமாறன் தமது அறிமுக உரையில் குறிப்பிட்டார்.  80க்கும் மேற்பட்ட தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டார்கள். கலந்துரையாடல் நிகழ்ச்சியில், திரு.அருண் மகிழ்நன், திரு.இலியாஸ், திரு.சோதிநாதன், திரு.தென்றல் ரவி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கேள்விகள் கேட்டார்கள். ஊடகத்துறை சார்ந்த பலரும் கலந்து கொண்டார்கள்.  செவிக்கு உணவோடு, சென்னை தோசை-யின் வயிற்றுக்கு உணவும் சேர்ந்து மகிழ்வளித்த நிகழ்ச்சி இது, 

ஒரு அனுபவம் அது முடிந்த பிறகு
சாதாரணமாகிவிடுகிறது
அது நிகழும் நேரத்தில் பிரவாகமாக
சுழற்றி அடிக்கிறது அதை எதிர்கொள்ள
அறிவு எவ்வகையிலும் உதவுவதில்லை
ஒரு தெரு நாய் முறைத்துப்பார்த்தால் கூட
அறிவும் தர்க்கமும் கண நேரத்தில் ஓடி மறைந்து விடுகின்றன

–  ஜெயமோகன்

சென்ற மாதம் எனக்கு வேலை ‘பனால்’ ஆன விசயத்தைச் சொல்கிறேன் என்று முடித்திருந்தேன். அந்தக் காரியத்தை செய்த நண்பரின் நண்பர் என்னைத் தொலைபேசியில் அழைத்து, எதுவரை நான் விவரிக்கப் போகிறேன் என்று மிகவும் கரிசனமாக விசாரித்தார். எனக்குள் பல்ப் எரிந்து விட்டது. அந்த மனிதர் ‘தங்கமீன்’ படிக்கிறார், அதிலும் தன் செயல் வெளி உலகுக்குத் தெரியக்கூடாது என்று நினைக்கிறார். சரி, போகட்டும் விட்டு விடுகிறேன்.

நான் மீண்டும் ‘Classified” Job.com’ என்று அலசிக் கொண்டிருந்தேன். நாட்கள் செல்லச் செல்ல, ஏதாவது ஒரு வேலை கிடைத்தால் போதும் என்ற நிலைவந்து விட்டது ஒருநாள் MRT-யில் ‘டோபி காட்’ ஸ்டேஷனில் ஏறி, எந்த ஸ்டேஷனில் இறங்கலாம் என்ற இலக்கில்லாமல் பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தேன். Kathip MRT நிலையத்தில் இருந்து Yio Chu Kang MRT நிலையத்திற்கு இடையில் உள்ள தூரம் துள்ளியமாக 4.84 கிலோமீட்டர். ஆக,  அதிக தூரம். டோபிகாட்டிலிருந்து Brash Basha MRT ஸ்டேஷசனுக்கு 552 மீட்டர் தூரம்தான். இது மிகக் குறைந்ததூரம்.  காத்திப்பிலிருந்து இயோச்சுகாங்கிற்கு செல்லும் தூரத்தில் ஒரு முறைதான் கதவு திறக்கிறது.  ஆனால் இந்தத் தூரத்தில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள சர்க்கிள் லைன் MRT பாதை வழியாகக் பயணம் செய்தால், 6 ஸ்டேஷசன்கள் வந்து போகும். ஆறு முறைகள் கதவு திறந்து மூடும். இதுவே வாழ்வின் சந்தர்ப்பங்கள் என்று நாம் எடுத்துக்கொண்டால் சிலருக்கு குறைந்த இடைவெளியில் அதிக வாய்ப்புகளும், சிலருக்கு வாய்ப்புக்கு அதிக தூரத்திலும் கதவுகள் திறக்கும். எனக்கு அப்படி ஒரு கதவு திறந்தது.

கிளீனிங் கம்பெனியில் என்னுடன் வேலை செய்த நண்பர், கிளார்க்கீயில் (Clarke Quay) உணவகம் திறந்திருந்தார்.  இரவு வேலை. வெளியில் நின்று ஆர்டர் மட்டும் எடுத்துக் கொடுத்தால் போதுமானது.

கிளார்க்கீ சிங்கப்பூர் ஆற்றில் அமைந்துள்ள உல்லாசத்தளம். ‘மெரினா பே’யிலிருந்து ஆற்றில், படகு சவாரி மிகவும் பிரசித்தம். 5 வெள்ளியிலிருந்து 500 வெள்ளிவரை, ஒரே நாளில், உங்கள் பர்ஸின் கனத்தைப் பொறுத்துச் செலவழிக்கலாம். கிளார்க்கீ, இரவு 9-மணிக்கு மேல் வெளிநாட்டுக்காரர்களின் தனி உலகமாக மாறிவிடும். நான் வேலைக்குச் சேர்ந்த உணவகத்தில், பராட்டோவோடு மாமிசம் கலந்து தயாரிக்கப்படும் ‘முர்த்தபாக்’ ஸ்பெஷல். ஒரு முர்த்தபாக் 10-வெள்ளி. ஒரு முர்த்தபாக் ஆர்டர் எடுத்தால், சம்பளத்துடன் ஒரு வெள்ளி கூடுதலாக கிடைக்கும். ஒரே நேரத்தில் அதிக வாடிக்கையாளர்களைத் தன்பக்கம் இழுக்க, ஒவ்வொரு கடைக்காரரும் போட்டி போட்டுக்கொண்டு இருப்பார்கள். அதே நேரத்தில் சுகாதார பராமரிப்பு நிர்வாகம், வாடிக்கையாளர்களை வற்புறுத்தித் தங்கள் கடைக்குள் இழுக்கும் கடை உரிமையாளர்களுக்குத் தண்டனை கொடுத்து விடுவார்கள்.

வருடத்தில் அதிகபட்சம் 12 குற்றப்புள்ளிகள்தான் வாங்க முடியும். ஏற்கனவே நான் வேலைக்குச் சேர்ந்த கடைக்கு 6 குற்றப்புள்ளிகள் கொடுத்திருந்தார்கள். அதனால் வாடிக்கையாளர்களையும் இழுக்க வேண்டும், ஆனால் நாசூக்காகக் கூப்பிடவேண்டும்.

அதனால் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்று கவனித்து, சிங்கப்பூர் பற்றிய வித்தியாசமான  செய்திகளைச் சொல்லி, அடுத்த கடைக்குள் அவரின் கவனம் செல்லாமல் பேச்சுக் கொடுப்பேன். ஏதாவது ஒரு பாயிண்டில் “Oh!  Is it” என்று ஆச்சர்யக் குறி அவர்கள் காட்டிவிட்டால், ஒரு முர்த்தபாக் ஆர்டர் வாங்கிவிடலாம் என்று அப்படியே தொடர்ந்து காரியத்தை முடித்துவிடுவேன்.

அப்படியான விசயங்கள் என் நினைவில் இன்னும் மாறாமல் இருக்கின்றன

எல்லோருக்கும் தெரிந்த விசயம்தான். அதைக் கொஞ்சம் பில்ட்-அப் கொடுத்து சொல்லும்போது, பார்ட்டி வலையில் சிக்கிவிடும்.ஒரு அமெரிக்கரைப் பார்த்துவிட்டால்,  ” ஹலோ, குட் ஈவினிங்! உலகின் மிகச் சிறிய 20 நாடுகளில் எங்கள் சிங்கப்பூர் பளிச்சிடும் ஒரு புள்ளி. அது உங்கள் அமெரிக்காவை விட, 15000 மடங்கு சிறியது. ஆனால், எங்கள் கடையின் ‘முர்த்தபாக்’ உங்கள் நாக்கைச் சப்புக் கொட்டி வைத்துவிடும்.” என்று Singlish பாதி English பாதியாக அள்ளிவிடுவேன்

ஒரு நாள், ஒரு வெள்ளைக்காரர், “அது என்ன வாக்கியத்தின் இறுதியில் ‘லா’ சேர்த்து பேசுகிறீர்கள் ? அது என்ன மொழி?” என்றார். நான் அவரிடம், “அந்த வார்த்தை ஆக்ஸ்போர்ட்டு அகராதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. if you have a time check. Lah, Sinshe  என்ற வார்த்தைகள் அகராதியில் உள்ளது.” என்றேன்.

கிளார்க்கீயில் ஒவ்வொரு நாளும் வித்தியாசமான நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும். ஒரு முறை ‘Tea Artist’ கஸ்டமர்களின் டேபிளுக்கு 5 அடி தூரத்தில் நின்று கொண்டு, டேபிளில் உள்ள கப்பில் சரியாக தேநீரை ஊற்றி அசத்துவார்கள். இதில் Kung Fu Tea artist  சிலர் இருக்கிறார்கள் அவர்கள் கவாத்தெல்லாம் எடுத்து, தேநீரை ஊற்றி அசத்துவார்கள். அன்று ஒரு வெள்ளைக்காரரிடம் முர்த்தபாக் ஆர்டர் எடுத்துவிட்டு, ” தண்ணி தேதாரிக் வேண்டுமா? ” என்றேன். அவர், “அது தேயா, அல்லது சாயாவா?” என்று கேட்டார்.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்த தேயிலையில் தேநீர் தயாரித்தால், அது – தே!  சீனாவிலிருந்து இறக்குமதி செய்த தேயிலை என்றால், அது – சாயா! அந்த வார்த்தை,  சீன மொழி Chai-யிலிருந்து வந்தது என்று கொஞ்சம் எடுத்து விட்டேன். “ஜீரொங் நீரூற்று பார்த்துவிட்டீர்களா? அது 30 மீட்டர் உயரம். உலகிலேயே ஆக அதிக உயரமுள்ள நீரூற்று.” என்று சொன்னேன்..

புத்தகங்கள் படித்துக்கொண்டிருக்கும் வெளிநாட்டுப் பயணிகளிடம், “சிங்கப்பூரின் பேய்க்கதை மன்னன் ரஸ்ஸல் லீ புத்தகம் படித்திருக்கிறீர்களா? மொத்தம் 11 வால்யூம்கள் வந்திருக்கின்றன. இதுவரை ஆறு லட்சம் பிரதிகள் விற்பனை ஆகியிருக்கின்றன.” என்று பல விசயங்களைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, சிலர் நழுவி விடுவார்கள். சிலர் நின்று நிதானிப்பார்கள்.

இப்படி அறிவு பூர்வமாக நான் ஆர்டர் எடுத்துக்கொண்டிருக்க, என்னுடன் ஆர்டர் எடுத்துக் கொடுக்கும் பெரியவர் ஆபுதீன், ஒரு நாளில் குறைந்தது 15 முர்த்தபாக் ஆர்டர் எடுத்து அசத்திக் கொண்டிருந்தார். என்னுடைய ஸ்கோர் 5ல் நின்றது. நான் எங்கு தவறு செய்கிறேன் அவர் எதில் ஸ்கோர் பண்ணுகிறார் என்று கவனித்தேன். அவர் கஸ்டமரைப் பார்த்தவுடன், “ஹலோ ஜான், ஹலோ பீட்டர், ஹலோ ஆல்பர்ட்” என்று தென்கிழக்கு ஆசியாவை சேர்ந்தவர்களையும், சீனர்களைப் பார்த்தால், “ஹலோ மிஸ்டர் லீ, ஹலோ மிஸ்டர் லிம், ஹலோ மிஸ்டர் டான்” என்று பெயர் தெரிந்தது மாதிரி அவர்களுடைய கலாச்சாரத்தில் அதிகம் வைக்கப்படும் பெயர்களைக் குறிப்பிட்டு கஸ்டமர்களை சிக்க வைத்துவிடுகிறார். அத்தோடு கடையில் வேலைபார்க்கும் ஆக அதிக வயதானவர் என்ற காரணமும் சேர்ந்து கொண்டு, அவருக்கு அதிக மார்க்குகளைக் கொடுத்துவிட்டது.

ஒரு நாள் ஆபுதீன் நானாவை முந்துவதற்குப் பலத்த யோசனையில் இருந்தேன். எதிரில் நின்றுகொண்டிருந்த அவர், “என்ன ரொம்ப தூரம் யோசனை செய்கிறாய்?” என்றார். நான் அவரை மடக்கும் விதமாக, “அது என்ன குறைந்த தூரம் யோசனை? ரொம்பதூரம் யோசனை? யோசனையில் அப்படி இருக்கிறதா?” என்றேன். அவர் சொன்னார்,  “ஒரு விரல்-  3/8 இன்ச்,  6-விரல் – ஒரு சான், 2 சான் – ஒரு முழம்,  2 முழம் – ஒரு கோல், 4-கோல்- ஒரு தண்டம்,  500 தண்டம் – ஒரு கூப்பிடு, 4 கூப்பிடு – ஒரு காதம், 4 காதம் – ஒரு யோசனை.” என்றார். அடேங்கப்பா பெரிசு பெரிசுதான். ஆனாலும் என் யோசனையைத் தொடர்ந்து கொண்டிருந்தேன்.

வேலையைத் தக்க வைக்கப் பல கரணங்கள் போட்டுக் கொண்டிருந்தேன். கஸ்டமர்களை வலிய இழுப்பது மனதிற்கு மிகவும் சங்கடமாகயிருந்தது.

ஒரு நாள்  “Domim Topple”  விளையாட்டு நடந்தது. அதில் 2003ல் சிங்கப்பூரில் 24 வயது சீனப் பெண்மணி நிகழ்த்திய சாதனையை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை. அது வேறொன்றும் இல்லை அபூர்வ சகோதரர்கள் படத்தில் டில்லி கணேசனைக் கொல்லக் குட்டை கமல்ஹாசன் பொருட்களைத் தட்டிவிடுவாரே அதுதான்.

அந்த விளையாட்டு நடந்த இரண்டு வாரங்களில் முர்த்தபாக் விற்பனையை இரண்டு மடங்காக்கிச் சாதனை புரிந்தேன் எப்படியென்றால் முர்த்தபாக்கை கோணவடிவில் வெட்டி ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி ஒவ்வொரு அடுக்கிலும் டொமோட்டாசாஸை வட்டமாக ஊற்றி, Domino  முர்த்தபாக் என்று ஆர்டர் எடுக்க ஆரம்பித்தேன்

அப்படிச் சாதனை புரிந்தும் வேலை பனால் ஆகிவிட்டது. கிளர்க்கியீ புதுப்பிப்பு பணிகளுக்கு 3 மாதம் மூடியதால் அந்த வேலை முடிவுக்கு வந்தது. அடுத்தவேலை நான் தொழிலில் கால் ஊன்றுவதற்கு ஒரு கதவைத் திறந்தது.

thanks: http://thangameen.com/Archieves/ContentDetails.aspx?tid=192&iid=33