ஜூன், 2011 க்கான தொகுப்பு

 

நாளை இந்தக் குளத்தில்

      நீர் வந்துவிடும்

இதன் ஊடே ஊர்ந்து நடந்து

      ஓடிச் செல்லும் வண்டித் தடங்களை

இனி காணமுடியாது

      இன்று புல்லைத் தின்று கொண்டிருக்கும்

ஆடு நாளை அந்த இடத்தை

      வெறுமையுடன் சந்திக்கும்

மேலே பறக்கும் கழுகின் நிழல்

      கீழே கட்டாந்தரையில்

      பறப்பதை நாளை பார்க்கமுடியாது

இந்தக் குளத்தில் நாளை

      நீர் வந்துவிடும்………………
& கலாப்ரியா&

 ஒவ்வொரு கணத்திற்குப் பிறகும் நமக்கு பல அனுபவங்கள் வந்து சேர்ந்து கொண்டிருக்கின்றன.  அடுத்த பிறந்த நாள், முதல் பிறந்தநாளை அர்த்தமற்றதாக்கி விடுகிறது. நம் நினைவுகளில் நம் எத்தனை பிறந்த நாட்கள் ஞாபகம் வைத்திருக்கிறோம்? சிலருக்கு ஒரு பத்து ஞாபகமிருப்பது மிகப் பெரிய விஷயம். ஆனால் அந்த வருடத்தில் நடந்த ஏதாவது சில விஷயங்களை நாம் நினைவில் இருத்திக் கொண்டால் ‘‘நச்” என்று ஞாபகம் வந்துவிடும். இந்த விஷயத்தில் பிப்ரவரி 29 பிறந்தவர்கள்  பாடுதான் கொஞ்சம் திண்டாட்டம். அந்த மாதமே ஒரு பரிதாபத்துக்குரியதுதான். இரண்டு முரட்டு மாதங்கள் ஜனூஸ் என்ற ரோமானியக் கடவுள், மார்ஸ் என்ற எப்போதும் மல்லுக்கு நிற்கும் கடவுள். இவற்றிற்கிடையே மாட்டிக்கொண்டு பிப்ரவரி விதியின் விளையாட்டால் சுருங்கிவிட்டது.

முதன்முதலில் வெளியிடப்பட்ட ரோமானியக் காலண்டரில் 10 மாதங்கள்தான் இருந்தன. பிப்ரவரி அதில் இடம்பெறவில்லை. முதல் மாதம் மார்ச்சில் ஆரம்பித்து டிசம்பரில் முடிந்தது. கி.மு 700 ல் ஜனவரி, பிப்ரவரி சேர்த்துக்கொள்ளப்பட்டன. ரோமானியப் பேரரசர் Numopompilsus 12 மாதங்களும் ஒற்றைப்பட எண்கள் வருவது மாதிரி மாற்றி அமைத்தார். (29 அல்லது 31) இரட்டைப்படை எண்கள் ரோமானியர்களுக்கு அப்போதே ஒத்துக்கொள்ளவில்லை.

 

நான் கல்லூரியில் படிக்கும்போது இந்தக் காலண்டர் விவாதம் நடந்தது. அதில் என் அறை நண்பர் ஒருவர் ஜனவரியிலிருந்தும் மார்ச்சிலிருந்தும் 31ந்தேதியை எடுத்து பிப்ரவரியில் போட்டு 30 ஆக்கிவிட்டால் வருடம் பிறந்து 4 மாதங்கள் 30 என்ற அளவிலேயே புதுவருடம் கரடுமுரடில்லாமல் போகும் என்றார். ஜனவரி, டிசம்பரில் 31ல் பிறந்தவர்கள் 365ல் 0.5 சதவீதம்தான் கணக்கு வரும். அவர்கள் முன் கூட்டியே 30ல் பிறந்தநாளைக் கொண்டாடிக் கொள்ளலாம் என்றார். இன்னொரு நண்பர் “Maths Major”அவர் Sexaqesima) விதிப்படி 11 மாதத்திற்கு 30 (11X30) வருவது மாதிரிக் கணக்கிட்டு டிசம்பரை மட்டும் சூப்பர் ஜம்போ 35 அல்லது 36 நாட்கள் கொடுத்து டிசம்பர் மாத விடுமுறை நாட்களை அதிகமாக்கிக் கொள்ளலாம் என்றார். இவர் இப்போது ஊரில் அரசியல்வாதியாக இருக்கிறார்.

 ஆனாலும் இந்த ‘‘கிரே கொரிலின்’’ நாட்காட்டி அப்படியே நிலைத்துவிட்டது. “Bazing Gou” என்று சீனத்தில் 80 களுக்குப் பிறகு பிறந்த இளைஞர்களைக் குறிப்பிடுகிறார்கள். இவர்கள் அபரிதமான புத்தாக்க சிந்தனைகளுடன் தம்மைப் பற்றி மட்டுமே அதிகம் கவலைப்படும் சந்ததி, வரும் காலத்தில் இந்த காலண்டரை தூக்கிப் போட்டுவிட்டு வேறு ஒரு நாட்காட்டியை கொண்டு வர முனையலாம் என்கிறார்கள்.

 

சென்ற மாதம் பல விஷயங்களில் சிங்கப்பூர் சாதனை படைத்திருக்கிறது. இளையர்களை அறிவியல் தொழில்நுட்பத்தில் ஈடுபட வைக்கும் நோக்கில் சென்ற மே 6ந்தேதி இந்திய விண்வெளித் துறையில் ஏவப்பட்ட சிங்கப்பூர் X sat மைக்ரோ சேட்டிலைட் அதற்கு அடுத்த நாளே துவாஸில் உள்ள நிலையத்திற்கு சிவப்பும், பச்சையும் கலந்த பல புகைப்படங்களை அனுப்பத் துவங்கியிருக்கிறது. 800 கிலோமீட்டர் உயரத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மிகவும் துல்லியமாக (சிவப்பு நிறம் பசுமை பூக்காங்களையும் பச்சை நிறம் நீர் பிடிப்பு பகுதிகள்) எடுத்து அனுப்பியிருக்கிறது. மற்ற நாடுகளைப் போல் பாதுகாப்பு அம்சத்திற்காக அல்லாமல் நிலப்பகுதிகளின் தன்மையை ஆராய்வதற்கு X sat சேட்டிலைட் ஒரு நாளுக்கு 14 தடவைகள் சிங்கப்பூருக்கு மேல் பறப்பதற்கு ஏதுவாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு சிறிய நாடு அறிவியல் தொழில் நுட்ப ஆராய்ச்சிகளுக்கு 16 பில்லியன் ஒதுங்கியிருப்பதை உலக நாடுகள் வியப்புடன் வரவேற்றிருக்கின்றன. அதன் முதல் பலன் சிங்கப்பூருக்கு விரைவில் கிடைக்கவிருக்கிறது.

 புற்றுநோய்க்கு மாத்திரை தயாரிப்பதில் phase (1) ல் சிங்கப்பூரின் அறிவியல்துறை வெற்றி அடைந்திருக்கிறது.

100 வருடங்களில் பெறக்கூடிய வளர்ச்சியை 25 வருடங்களில் பெற இளையர்களை ஆராய்ச்சிகளுக்கு தேர்ந்தெடுப்பதில் 28 வயதிலிருந்து 32 வரை படிப்பு 32ல் தனிப்பொறுப் பு, 35ல் ஒரு குழுவை நிர்வகிக்கும் பொறுப்பு என்று கணக்காக அரசு செயல்படுகிறது. இன்னொரு குறிப்பிடத்தக்க மே மாத நிகழ்வு சிங்கப்பூர் பொதுத்தேர்தல். நாங்கள் குடியிருக்கும் Tanjong Pagar ஏரியாவில் ‘வாக் ஓவர்’ தேர்தல் முடிவை அறிவித்த அதிகாரி நெட்டில் மிகவும் பிரபலமடைந்துவிட்டார். முன்னாள் மந்திரிகள் ஒன்பது பேருடன் இரண்டு முன்னாள் பிரதமர்களும் அமைச்சரவையிலிருந்து ஓய்வு பெற்றார்கள். அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் மந்திரிகளின் சராசரி வயது 59 லிருந்து 53 ஆக குறைந்திருக்கிறது. உங்களுக்கு 35 லிருந்து 50 ஆகியிருந்தால் அத்துடன் நடுத்தரவயது முடிந்துவிடுகிறது என்று இருந்ததை தற்போது 58 வரை நடுத்தரவயது என்று வளர்ந்த நாடுகளில் அறிவித்துள்ளார்கள்.

வயது போய்க்கொண்டிருந்தாலும் சில இளமைக் கால நினைவுகள் மறக்குமா என்ன? 1974ல் தொடங்கப்பட்ட கேபிள் காரில் முதன்முதலில் பயணம் செய்த நினைவுகள் அந்த வருடம் எனக்கு தம்பி பிறந்ததால் வருடம் ‘நச்’ என்று நினைவுக்கு வருகிறது. அந்த கேபிள் கார் 1983ல் எண்ணெய் துரப்பன கப்பலுடன் மோதி 7 பேர் இறந்துபோனது, கேபிள் கார் வருவதற்குமுன்பே ஜீரோங் பறவைகள் (1971) விலங்குப் பண்ணை (1973) ஆரம்பிக்கப்பட்டது, அந்த இடங்களை யார் யாருடன் முதலில் பார்க்கச் சென்றோம் என்ற நினைவுகள் அப்படியே பசுமை மாறாமல் இருக்கின்றன. சென்ற மாதம் ஒஸாமா கொல்லப்பட்டதும் செய்தி வாசித்துக் கொண்டிருக்கும்போதே BBC நிருபர் அதே தேதியில் 66 வருடங்களுக்கு முன்னால் ஹிட்லர் கொல்லப்பட்டதை நச்சென்று ஒரு அடி அடித்தார். (அவரும் நினைவாற்றலுக்கு ஏதோ பார்முலா வைத்திருப்பார் போலும்!)

இதற்கிடையே சென்ற மாதம் இறுதித் தீர்ப்பு நாள் Judgement day வந்துவிட்டது. உலகம் இன்னும் 24 மணி நேரத்தில் அழியப்போகிறது என்று ஒருவர் அறிவித்தார். நேரம் கடந்த்து.. மக்கள் எப்போதும் போல் நியூயார்க் சதுக்கத்தில் நடந்துகொண்டிருந்தார்கள். சொன்னவர் எங்கோ ஓடி ஒளிந்துகொண்டார். உலகில் ஒரு பக்கம் நம்பிக்கைகள் பொய்த்துப் போவதும் இன்னொரு பக்கம் நம்பிக்கை ஒளி சுடர்விடுவதுமாக அர்ப்பணிப்புகள், அக்கறைகள், தியாகங்கள் நடந்தபடியாகத்தான் இருக்கின்றன. அதில் உலகம் உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

அன்றாட வேலையின் வேலிகளையும் தன் வயதையும் கடந்து ஏதாவது ஒரு நம்பிக்கையில் வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கும் பலரை பார்த்திருக்கிறேன். அப்படியே ஒருவரை பற்றிச் சொல்லி இந்தப் பத்தியை முடிக்கலாம்.

 மிஸ்டர் ‘ஆலன்’ வயது 70 தாண்டியிருக்கும். அவரை ‘அப்பே’ என்றுதான் கூப்பிடுவோம். பைசைக்கிளில் எந்நேரமும் சுற்றிக்கொண்டிருப்பதால் அவர் பெயர் ‘‘பை சைக்கிள் அப்பே” என்றாகிவிட்டது. தேபான் கார்டனில் குடியிருந்தார்.

கடந்த 2007ல் ஜீரோங் வெஸ்ட் தெரு 42ல் ஒரு மரம் குரங்கு வடிவில் இருப்பதாக புரளி கிளம்பியது. உடனே ஒரு சீனர் ‘‘Kwan yin” அருள் கொடுக்கும் தெய்வம் என்று போர்டை மரத்தில் தொங்கவிட்டுவிட்டார். அந்த இடம்வரை ‘‘பை சைக்கிள் அப்பே” சைக்கிளில் சென்று வந்துவிடுவார். இந்த வயதில் இப்படி உடம்பை வைத்திருக்கிறாரே என்று ஆச்சரியப்படுவோம். சனி ஞாயிறுகளில் தவறாமல் அங்கு சென்று எங்களுக்கு 4D குலுக்கலுக்கு ‘டிப்ஸ்’ கொடுப்பார் (அதனால்தான் இதைப்பற்றி விரிவாக எனக்குத் தெரிந்திருக்கிறது)

 

கொஞ்ச நாளாக ஆளைக் காணோம். எனக்கு சந்தேகம் வந்தது. அவர் வயதை நினைத்து அல்ல’ Bicycle ஓட்டும் வேகத்தில் என்ன ஆனாரோ என்ற நினைப்பில்தான்.  சென்றமாதம் ஆள் தட்டுப்பட்டார், அதே சைக்கிளுடன்.

 ‘‘அப்பே! லாங் டைம் ரெடி, நெவர் சீ யூ நோ கிவ் 4D டிப்ஸ் வொய்?’ என்றேன்.

அந்தக் குரங்கு வடிவ மரத்தில் ஒரு லாரி மோதிவிட்டதாம்.  உடனே அங்கிருந்த குரங்கு கடவுள் வெளியேறிவிட்டதால்,  ‘‘நோ மோர் டிப்ஸ்’’ என்றார்.

 இப்போதைக்கு அந்த மரத்தில் மோதிவிட்டுப் போன லாரியைத் தேடிக் கொண்டிருப்பதாகச் சொன்னார்.

அந்த லாரி நம்பர் மட்டும் கிடைக்கட்டும். if Khanna! பை சைக்கிளை த்ரோ பண்ணிவிட்டு காடி வாங்கிடுவேன் லா” என்றார்.

 

 thanks: http://thangameen.com/ContentDetails.aspx?tid=352

 

 

நான் முதுகலை அரசியல் மதுரை காமாராஜர் பல்கலையில் படித்தபோது அரசியல்வாதிகளின் பாலியல் விவகாரங்கள் தொடர்பான திறந்த கதையாடல்களைப் பாடங்களோடு இணைத்து நடத்திச் செல்லும் பேராசிரியரின் வகுப்பு என்றுமே நிறைந்து வழிந்தபடிதான் இருக்கும். மேற்கத்திய பாலியல் புரட்சி தமிழ் சூழலில் நிலவும் பாலியல் தொடர்பான விஷயங்களைப் பொருத்தி, வேறுபடுத்தி அவர் அடிக்கும் லெக்சரில் புதுப் புது வதந்திகளையும் சேர்த்து விடுவது அவரின் தனி ஸ்டைல்.

 

வகுப்பு ஆரம்பிக்கு முன்பு ‘‘ஒட்டோவான் பிஸ்மார்க்கின்’’ பொன் மொழியான ‘‘அரசியல் என்பது சாத்தியப்பாட்டுக்குரிய ஒரு கலை’’ என்பதை தினந்தோறும் குறள் சொல்வது மாதிரி சொல்லி ‘எல்லா விதத்திலும் சாத்தியப்பாட்டுக்குரிய’ என்று அவர் ரிப்பீட் பண்ணும்போது செக்ஸைத்தான் சொல்கிறார் என்பது எல்லோருக்கும் புரியும்படியான செய்தி.

 

அரசியல்வாதிகள் தாங்கள் அதிகாரத்தில் இருக்கும்போது செய்யும் ஊழல், அதிகார துஷ்பிரயோகம், நம்பிக்கை மோசடி இப்படி பலவற்றில் கள்ள உறவுகளும் மிக முக்கியமான சாத்தியப்பாடு. இது சிலருக்கு இருக்குமிடத்தை இழக்கச் செய்கிறது. வேறு சிலருக்கு இன்னும் பிரகாசமான அரசியல் எதிர்காலத்தையும் உருவாக்கியிருக்கிறது.

 

ஐரோப்பிய நாடுகளில் பிரிட்டனில்தான் இந்த விவகாரங்களுக்குப் பதவி இழந்த அரசியல்வாதிகள் அதிகம். 1990 களிலிருந்து இந்த விவகாரங்கள் உத்வேகம் அடைந்துவருகின்றன. Mr John Presott துணைப் பிரதமராக இருந்தவர். தனது செக்ரெடரியுடன் கள்ள உறவு வைத்திருந்ததாகப் பிடிபட்டு பதவி இழந்தார். அதேபோல் பாதுகாப்பு அமைச்சராக இருந்த Mr Nicholas ம் தன் அலுவலகத்தில் வேலை செய்த பெண்ணால் குற்றம் சாட்டப்பட்டு பதவி இழந்தார்.

 

1970களில் Mr Jerry Thrope லிபரல் கட்சியின் தலைவர் தன்னுடைய ஆண் நண்பரைக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். கோர்ட்டில் வெளியீடான விபரங்கள் பத்திரிகையில் வெளியிட முடியாத அளவுக்கு மோசமாக இருந்ததால் பத்திரிகைகள் ஒதுங்கிக் கொண்டன.

 

பிரான்ஸ் அதிபர் Mr Francois Mitterend 1980களில் இன்னொரு மனைவி இருப்பதை மறைத்துக் குடும்பம் நடத்தி வந்தது உலகறிந்த விஷயம். பிரான்ஸின் சரித்திரத்தில் இம்மாதிரி விஷயங்களை விட ‘ஊழல்’தான் மிக முக்கிய பதவிக் கொல்லியாக இருந்துள்ளது.

 

இத்தாலிய கோடீஸ்வர பிரதம மந்திரி Mr.Silvio Berlusconi 18 வயதுக்கும் குறைந்த கரீமா ருலியுடன் உறவு கொண்டதாகப் பத்திரிகைகள் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டன. அந்த 74 வயதுக்காரர் பெரும்பாலும் தன் பேத்தி வயதுடைய பெண்களுடனும் விலை மாதர்களுடனும்தான் ‘‘BUNGA BUNGA” என்ற இத்தாலிய நடனம் ஆடுவாராம். இதைப்பற்றிக் கேள்வி கேட்ட எதிர்க்கட்சிகளிடம் ‘‘பெண்களுடன்தானே ஆடினேன். ஆண்களுடன் அல்லவே’’ என்றாராம். இவர் விஷயம் பற்றி மக்கள் அதிகம் கரிசனம் கொள்ளாமைக்குக் காரணம் ‘‘தங்களிடம் கோடிக்கணக்கான பணமும், அதிகாரமும் இருக்கும்போது யாருமே இப்படித்தான் நடந்து கொள்வார்கள்’’ என்ற மக்களின் எண்ணம்தான் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.

 

ரஷ்ய அதிபர் Mr Boris Yeltsin தன்னுடைய செக்ரெடரியின் பிரா கொக்கிகளை ஒரு பார்ட்டியில் கழற்ற முயன்ற விவகாரம், ஏதோ ஒரு வேகத்தில் செய்துவிட்டார் என்பதோடு முடிந்தது.

 

ஜெர்மனியில் ஒரு பத்திரிகை தயவுசெய்து அரசியல்வாதிகள் கள்ள உறவுகளில் ஈடுபடுவதாகத் திரிக்காதீர்கள். வெறும் செக்ஸில்தான் என்று குறிப்பிடுங்கள் என்று தலையங்கம் எழுதியது. சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் Mr Angele Markel வுடன் போட்டியிட்ட அந்தக் கட்சியின் இன்னொரு பெண் வேட்பாளர் தங்களுடைய ‘கிளிவேஜ்’ தெரியும்படி பேனர் போட்டு ‘‘இதற்குமேல் தரிசனம் தருவதற்குக் காத்திருக்கிறோம்’’ என்று தூள் கிளப்பினார்கள், வெற்றியும் பெற்றார்கள்.

 

அமெரிக்காவின் Tharmas Jafferson முதல்  John.F.தி கென்னடி வரை தங்களுடைய கள்ள உறவுகள் பத்திரிகையின் முதல் பக்கத்தை சில நாட்கள் நிறைத்துவிட்டு பரபரப்பை முடித்துக்கொண்டன. ஆனால் இன்றைய இணைய உலகில் மாட்டியிருந்தால் தோரணம் கட்டியிருப்பார்கள்.

 

Jafferson தன்னிடம் 38 வருடங்களாக அடிமையாகயிருந்த பெண்மூலம் பல குழந்தைகளுக்குத் தந்தையானார். 1802ல் நடந்த இந்த விஷயத்தை உலகிற்குத் தெரியப்படுத்த ரேடியோ, டி.வி. கண்டுபிடிக்கப்படவில்லை. அதேபோல் 1960ல் நடந்த கென்னடி-மர்லின் மன்றோ விவகாரத்தைப் பெரிதாக்க இண்டர்நெட் வரவில்லை. 1998ல் கிளிண்டன் வசமாக சிக்கிக் கொண்டார். இதே கிளிண்டன் விவகாரத்தைப் புலனாய்வு செய்த Mr.Newt Gigrich தன்னைவிட 23 வயது குறைவான பெண்ணுடன் உறவு வைத்திருந்ததாக இப்போது பிடிபட்டிருக்கிறார்.

 

பிலிப்பைன்ஸின் 78 வயது எஸ்டர்டோ நம்ம புரட்சித் தலைவர் மாதிரி கொடை வள்ளல். ஆனால் நிறையக் குழந்தைகளுக்கு வெவ்வேறு பெண்களின் மூலம் தந்தையானவர். 1998ல் பிலிப்பைன்ஸின் மிக உயர்ந்த அமைப்பான கத்தோலிக்க சர்ச் இவருக்கு வோட்டளிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டும் இவர் மிகப் பெரிய வெற்றி அடைந்தார். இந்த ஏழைப் பங்காளனை பிலிப்பைன்ஸில் பெண்களை விட ஆண்களே அதிகம் ஆதரித்தார்கள். இவர் ஒரு ‘ரொமாண்டிக் ஹீரோ’ என்றார். ஆனால் 2001 தேர்தலில் ஊழல் விவகாரத்தில் இவரை வீட்டுக்கு அனுப்பினார்கள் இல்லை ஓய்வு கொடுத்துவிட்டார்கள்.

 

ஜப்பானின் முன்னாள் அதிபர் Kakuei Tanaka இரண்டாம் உலகப் போருக்கு முன்பு அந்த நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த தலைவராக கருதப்பட்டவர். அவர் இறந்த பிறகுதான் அவருக்கிருந்த கள்ள உறவு அவர் எழுதிவைத்த உயிலின் மூலம் தெரிய வந்ததாம். போக்கியோ கவர்னர் Shintaro Ishihara தன் ஊழியருடன் படுக்கையில் இருந்தபோது பிடிபட்டும், அதற்குப் பிறகு ஆக அதிக தடவைகள் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதை யாராலும் தடுக்க முடியவில்லை.

 

இந்தோனேஷிய முதல் அதிபர் சுகர்னோ தான் பெண்களை மணந்து கொண்டதை கௌரவமாகச் சொல்லிக்கொள்வார். 1960 களில் ரஷ்ய உளவு அமைப்பு அவர் ரஷ்ய விஜயத்தின்போது பெண்களுடன் கும்மாளம் அடித்ததை ‘வீடியோ’ எடுத்து வைத்துக் கொண்டு ஒரு விஷயத்தில் அவரை வழிக்குக் கொண்டுவர முயன்றது அதற்கு அவர் ‘‘அந்த வீடியோவை அனுப்பி வையுங்கள் திரையரங்குகளில் திரையிட்டு மக்களைக் குஷிப்படுத்துகிறேன்’’ என்றாராம்.

 

ஆனாலும் தற்போது சூழல் மாறிவிடுகிறது. Mr.Yahiya Zaini கொல்கார் கட்சியின் மதப்பிரிவுத் தலைவர் Dangdut பாடகியுடன் கொண்டிருந்த கள்ள உறவை செய்தியாக்க, அவர் உடனே கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

 

மலேசியாவின் அன்வர் விவகாரம் அரசியலில் பாலியல் விவகாரங்கள் எந்த அளவுக்குத் தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதற்கு எடுத்துக்காட்டு ஆகிவிட்டது. முன்னால் சுகாதாரத்துறை அமைச்சர் Chua Soilek ஒரு பெண்ணுடன் ஹோட்டல் அறையில் இருந்த வீடியோ காட்சிகள் வெளியில் கசிய விடப்பட்டு பரபரப்பாகிவிட்டது. ஆனாலும் அவருக்கு அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இப்போது அவர் மலேசிய சீனர் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

 

‘ரோஜாவின் ராஜா’ நேருவுடன் லேடி எட்வினா மெலின்டேட்டனின் உறவு அவர் மறைந்த பிறகுதான் ஊடகங்கள் வெளிப்படையாகப் பேச ஆரம்பித்தன. தன்னுடைய அந்தரங்க விஷயங்கள் வெளியில் தெரியாதபடி கவனமாக நடந்து கொள்வதற்கு இன்றைய இந்திய அரசியல்வாதிகளுக்கு அவர்தான் வழிகாட்டி. நேரு புகைபிடிக்கும் பழக்கமுள்ளவர். ஆனால் அவர் புகைபிடிப்பதை யாரும் பார்க்கமுடியாதபடி நடந்துகொண்டிருப்பதை ஒரு பத்திரிகையாளர் கேள்வி கேட்டபோது ‘‘உஷ், இந்தியக் கடவுள்கள் புகைபிடிக்கமாட்டார்கள்’’ என்று சொன்னாராம்.

 

மற்ற நாட்டு ஊடகங்களுக்கும் இந்திய ஊடகங்களுக்கும் உள்ள மிக முக்கியமான வேறுபாடு, அரசியல்வாதிகளின் படுக்கை அறைப்பக்கம் அவ்வளவாக எட்டிப் பார்ப்பதில்லை. H.K.Dua -முன்னாள் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ எடிட்டர்- இந்திய சமூகம் இதை அவ்வளவாக ரசிப்பதற்கு நேரம் வரவில்லை என்று சொல்கிறார்.

 

ஆனால் இதிலும் பாகிஸ்தான் அரசியல்வாதிகள் தடாலடி மன்னர்கள். Mr.நவாஸ் ஷெரிஃப் எப்போதுமே சட்டையின் முதல் பொத்தானைக் கழற்றிவிட்டுக் கொண்டே காட்சியளிப்பார். அவரிடம் ஒரு நிரூபர் எப்போதுமே ரொமாண்டிக் லுக் விடுகிறீர்கள் என்று கேட்டபோது ‘‘நோ நோ…. எங்கள் தேசம் மிகவும் பாதுகாப்பானது. நான் புல்லட் புரூட் போடவில்லை என்பதைக் காண்பிக்கவே இப்படி செய்கிறேன்” என்றாராம். அதைவிட சௌகத் அலி என்ற முன்னாள் அதிபர் அமெரிக்கா சென்றிருக்கும்போது ‘‘நான் பார்த்த இரண்டு நிமிடங்களில் பெண்களை வீழ்த்திவிட முடியும்’’ என்று ஜோக்கடித்தாராம்.

 

ஆனாலும் ஒன்று, ஊடக சுதந்திரமும் அந்தரங்கத்தைப் பாதுகாக்கும் தனி மனித சுதந்திரமும் ஒன்றுக்கொன்று முரணானவை. ஆரோக்கியமான தளத்தில் இவ்விரண்டின் சமநிலையைப் பாதுகாப்பது மிகப்பெரிய சவால்தான்.

 

அடுத்தவரின் அந்தரங்கமறிய

 

ஆசைப்படாதவர்

 

யாருமில்லையிங்கு

 

ஒழுகிப்போன ஒவ்வொரு

 

அந்தரங்கமும்

 

ஆயிரம் முறைகள் பொழி

 

அடைமழையாய்

 

அந்தரங்கம் அறிதலென்பது

 

யாருக்கும் வெறுப்பதேயில்லை

 

தனதானது தெரு முனையில்

 

சிரிக்கப்படும் வரையிலும்

 

(கவிதை கோகுலன்)

 

 thanks: http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=4428