எஸ்.வேணுகோபாலன் – புஷ்பா தங்கதுரை; ராமச்சந்திரன் – வண்ண நிலவன்; எஸ்.டி.பாஸ்கரன் – சவீதா; சி.எஸ்.லட்சுமி – அம்பை; சோமசுந்தரம் – கலாப்ரியா; டி.ஆர்.ராஜகோபாலன் – ஸிந்துஜா; நம்பிராஜன் –விக்கிரமாதித்தன்; எஸ்.அப்துல் ஹமீது – மனுஷ்ய புத்திரன் ………
புனைபெயர்களுக்கு உரியவர்களின் இயற் பெயர்களைப் பற்றிய அரட்டை இன்று – ஞாயிறு – கோப்பிக் கடையில் களை கட்டியது. 1962ல் ‘இடது ஓரத்தில்’ என்ற சிறுகதையைக் ‘குமுத’த்தில் எழுதி விட்டு, ’இரண்டு ரங்கராஜன்கள்’ குழப்பமாகி விடும் என்ற நிலையில் ஒரு ரங்கராஜன் தன் பெயரை ’சுஜாதா’ என்று மாற்றிக் கொண்டதில் ஆரம்பித்த உரையாடல், சோ.விருத்தாசலம், புதுமைப்பித்தனாக மாறியதைத் தொட்டது. இறுதியில் புனைபெயர் வைத்துக் கொள்ளலாம்; ஆனால் புனைசுருட்டுத்தான் கூடாது என்று ஒரு வழியாகக் கூட்டம் முடிவுக்கு வந்தது. புலம் பெயர்ந்தவர்களின் முதல் பிரச்சினை தன் பெயரை, அந்நாட்டில் உள்ளவர்களின் போக்குக்கு ஏற்ப மாற்றுவதில்தான் ஆரம்பிக்கிறது. அதிகமான பெயர்கள் சுருக்கமாக அழைக்கப்பட்டு, அவையே நிலைத்த பெயராக மாறி விடுகின்றன.
சிங்கப்பூரில் சீனர்களுடைய பெயர்கள் மூன்று எழுத்துக்கள் கொண்டவையாக நறுக்கென்று இருக்க வேண்டும். ஆனால் அவர்களை நாம் அழைக்கும்போது உச்சரிப்பு மற்றும் மரியாதை ஆகியவற்றில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். வாடிக்கையாளர்களின் பெயர்களை ஞாபகம் வைத்துக் கூப்பிட ஆரம்பிப்பதே வியாபாரத்தின் முதல் வெற்றி. வழக்கமாக வாடிக்கையாளர்களின் பெயர்களை முழுவதுமாகக் குறிப்பேட்டில் எழுதிக் கொண்டு அதில் இலகுவான உச்சரிப்புக்கு ஏற்ற சொல்லாக நான் தேர்ந்தெடுத்துக் கொள்ளுவேன்.
வழக்கமாக சாப்பாடு ஆர்டர் பண்ணும் மியான்மர் நாட்டவர் ஒருவரின் முதல் பெயரை எழுதிக் கொடுக்குமாறு கேட்டு வாங்கிக் கொண்டேன். “U kin muang myint”என்ற அவரது பெயர் உச்சரிப்பதற்குச் சிரமமான பெயராக இருந்தது. அவரை “மிஸ்டர் யூ“ என்று கூப்பிடுவது எனக்குச் சுலபமாக இருந்தது. சில நாட்கள் சென்றிருக்கும். கம்பெனி முதலாளியான சீனர் காசோலை கொடுப்பதற்காகக் கடைக்கு வந்திருந்தார்.
“நேரில் வர வேண்டியதில்லையே! மிஸ்டர் யூவிடம் கொடுத்திருக்கலாமே?“ என்றேன்.
“அவர் பெயர் என்ன சொன்னீர்கள்?“ என்று திரும்பத் திரும்பக் கேட்டார்.
எனக்குப் புரிந்து விட்ட்து. தவறான உச்சரிப்பில் அவரை அழைத்து வந்திருக்கிறேன் என்று!
U kin muang myint என்ற பெயரில் முற்பகுதியில் இருக்கும் ‘U’ மரியாதை நிமித்தம் உள்ள சொல். அதாவது மிஸ்டர் என்ற அர்த்தத்தைக் கொண்டிருக்கும் சொல் அது. அதைத் தனது பெயருடனேயே அவர் ஒட்ட வைத்துக் கொண்டிருந்திருக்கிறார். பெரும்பாலான பெயர்கள் ‘U’ வில்தான் ஆரம்பம் ஆகின்றன. இது வரை அவரை இரண்டு மிஸ்டர் போட்டு அழைத்து வந்திருக்கிறேன்! ‘U’ என்பது ஆண்களுக்கும் ‘Daw’ என்பது பெண்களுக்கும் பெயருக்கு முன்னால் வரும் அடைமொழிகள். மியான்மரில் வயதில் மூத்தவர்கள், இளையவர்களை ‘U’ மற்றும் ‘Daw’ என்று அழைக்க வேண்டியதில்லை. அவர்களில் ஆண்களை ‘Ko’ என்றும் பெண்களை ‘Ma’ என்றும் அழைக்கலாம்.
மிஸ்டர் போடுவது மலாயில் ‘Encik’ என்று சொல்லப்படுகிறது. அது கொஞ்சம் மருவி இப்போது ‘Inche’ என்றாகிவிட்டது. காலித் ஹம்சா என்ற பெயருள்ளவரை ‘Inche ஹம்சா’ என்றழைப்பது தவறு. அது அவருடைய தகப்பனார் பெயர். இப்போது காலித் பின் ஹம்சா என்று பெயர் வைத்து விடுவதால் – அதாவது ஹம்சாவின் பிள்ளை காலித் – என்பதால் கூப்பிடுவது கொஞ்சம் சுலபம். அதே போல ‘Binte’ என்பது இன்னாருடைய மகன் என்ற அர்த்தத்தைக் கொடுக்கும். ஃபாத்திமாவை ‘Cik Fathima’ என்று உச்சரிக்கும்போது ‘Che’ என்று மட்டும் ஒலித்தால் போதுமானது.
இவர் காலித் ஹம்சாவைத் திருமணம் செய்து கொண்டால் “Puan Fathima” என்றாகி விடுவார். Puan Chalid என்று அழைப்பது தவறு. மெக்கா புனித யாத்திரை சென்று வந்தவர்கள் Haji ….. Haja…. என்று அழைக்கப்படுவார்கள்.
Inche ஹாஜி அப்துல்லா என்று அழைப்பதை விட துவான் ஹாஜி அப்துல்லா என்று அழைப்பதுதான் சரி. காலித் ஹம்சாவுக்கு டத்தோ பட்டம் அளிக்கப்பட்டால் டத்தோ காலித் ஆகிவிடுவார். அதே போல் அவர் மனைவி ஆட்டோமேட்டிக்காக TANSRI அல்லது PUANSRI ஆகி விடுவார். இந்த டத்தோ பட்டம் காலித் ஹம்சாவுக்குக் கொடுக்கப்படாமல ஃபாத்திமாவுக்கு அவருடைய சேவைக்காக சுல்தானால் அளிக்கப்பட்டிருந்தால் அளித்திருந்தால், அவரை “டத்தோ ஃபாத்திமா“ என்றுதான் அழைக்க வேண்டும்.
சிங்கப்பூரில் உள்ள நம்மவர்களின் கடவுச் சொற்களில் பெயர்கள் சுருக்கமாக இருந்து நான் பார்த்ததில்லை. பெரும்பாலும் கடைசியாகக் குறிப்பிட்டுள்ள தகப்பனார் பெயரையே அழைப்பார்கள். கரடு முரடான உச்சரிப்புக்களைக் கடந்து பெயர் வெளி வருவது வேடிக்கையான நிகழ்வாக இருக்கும். “நேசமணி பொன்னையா“ என்பதை “நாசமா நீ போனியா“ என்று சொன்னதாக ஒரு ஜோக் பரவலாக வலம் வந்தது.
சீனர்களுக்கும் இந்தப் பிரச்சினை உண்டு. சிங்கப்பூரில் லீ டான் வோங் என்ற பெயர்கள் அதிகமாகக் காணப்படும் பெயர்கள். வேலை ஏற்பாடு செய்யும் நிறுவனம் ஒன்றில் “Shen Tiew Lee” என்பவர் வேலை வாய்ப்பு நேர்காணலுக்கு வந்திருக்கிறார். வரவேற்பாளர் “Mr.Lee” என்று முதல் குரல் கொடுத்திருக்கிறார். அறையில் இருந்தவர்களில் பாதிக்கு மேல் எழுந்து கவுன்டரை நோக்கிச் சென்றிருக்கிறார்கள்.
“நோ! ஷான் லீ“ என்று கூப்பிட்டிருக்கிறார்.
“Shen Tiew Lee” என்ற பெயரில் அழைத்தால்தான் எழுந்து போக வேண்டும் என்று பிடிவாதமாக உட்கார்ந்து விட்டார்.
எல்லோரும் காரியம் முடிந்து அறையை விட்டு வெளியேறிய பிறகு, கடைசி ஆளாகக் கவுன்டரில் “Shen Tiew Lee” என்று அழைத்த பிறகுதான் அவரை அழைக்கிறார்கள் எனறு நம்பிக்கை வந்திருக்கிறது.
சீனர்களுக்கு மூன்று பெயர்கள் இருக்கும். முதலில் குடும்பப் பெயர். நடுவில் பரம்பரைப் பெயர், கடைசியாகச் சொந்தப் பெயர். குடும்பப் பெயர் Tan அல்லது Ganல் முடிந்தால், அவர்கள் ஹாக்கீன் அல்லது தியோசோங் இனத்தவர்.Chan அல்லது Wong என்று முடிந்தால் அவர்கள் காண்டனீஷ்.
Gan peck Lee (மூன்று சகோதரர்கள்)
Gan peck Har
Gan peck Gook
அவர்களின் இரண்டு சகோதரர்கள்
Gan Chen Lee
Gan Cheng Meng
திருமணம் ஆகாத பெண் Miss Lim Swee Ai அவருக்கு Shen Tiew Le உடன்திருமணம்ஆகிவிட்டால் MrsShew தான். மேடம் Lim Swee அல்ல. தைவானிலும் சீனாவிலும் டாக்டர் மற்றும் ஆசிரியர் ஆகியோரைப் பெயரைக் குறிப்பிட்டு அழைப்பதில்லை. அவர்களை அழைக்க, பட்டப் பெயர்களையே பயன்படுத்துகின்றனர். சிங்கப்பூர் பல்கலைக் கழகங்களில் உயர் பதவிகளை வகிப்பவர்களைக்கூட மிஸ்டர் என்று விளிப்பது சீன மாணவர்களை ஆச்சரியப்பட வைக்கிறது. அவர்கள் சீனாவில் கம்பெனி மேலாளர்களைக்கூட “LISHI” என்றும் இயக்குநர்களை “ZHUSI” என்றும்அடைமொழியுடனேயேஅழைத்துப்பழக்கப்பட்டவர்கள்.
நான்ஹாங்காங்சென்றிந்த நண்பரின்மனைவியைபோதுசீனநணபர்ஒருவர்தனதுஎனக்குஅறிமுகப்படுத்தினார். இவர்Mr. Wong Tai Tai(மனைவி) என்று சொன்னார். சிங்கப்பூரிலும் ஹாங்காங்கிலும் பெயர்களை அழைப்பது அவ்வளவு வித்தியாசமில்லை. ஆனாலும் அவர் tai tai என்பதை அழுத்தமாகச் சொல்லிப் புரிய வைத்தார்.
இந்தோனேஷியர்கள் இரண்டு மூன்று பெயர்களைத் தவிர்த்து ஒற்றைப் பெயரிலேயே திருப்தி அடைந்து விடுகிறார்கள். ‘SUMA MORO’ என்ற இந்தோனேஷியர் மேற்படிப்பிற்காக ஆஸ்திரேலியா சென்ற போது இவரின் ஒற்றைப் பெயர் அங்கு பல பேருக்குச் சங்கடமாகி விட்டதாம். உடனே தனது பெயரை ’S.SUMA MORO’ என்று மாற்றிக் கொண்டாராம். ’S என்பது குடும்பப் பெயரா’ என்று கேட்பவர்களுக்கு ‘ஆமாம்’ என்று தலையாட்டி விடுவாராம். தன் பெயரையே ‘SUMA MORO SUMA MORO’ என்று இரட்டையாக்கி சமாளித்தது பெரிய விஷயம் என்கிறார். இவ்விஷயத்தை அமெரிக்கா படிக்கச் செல்லும் தன் நண்பன் MOESTONOவிடம் சொல்லி, ’இரண்டு பெயராக இப்போதே மாற்றிக் கொள்’ என்று யோசனை அளித்திருக்கிறார். அவர் உடனே MOESTONO SAYA (அதாவது நான்தான் MOESTONO) என்று மாற்றிக் கொண்டாராம். ஆனால் அமெரிக்காவில் SAYA என்ற கடைசி வார்த்தை மிகவும் பிடித்துப் போய், “மிஸ்டர் “SAYA“ என்றே அழைக்க ஆரம்பித்து விட்டார்களாம்.
இந்தோனேஷியர்களின் மலாய் கொஞ்சம் வேறுபட்டது. முதியவர்களை BEPOK (தந்தையே) என்ற அடைமொழியுடனும் பெண்களை IBU என்ற அடைமொழியுடன் கொஞ்சம் சுருக்கி BU FATHIMA என்ற தொனியில் அழைப்பார்கள். வயதில் இளையவர்களை சகோதரர் என்ற அர்த்தத்தில் BANG என்றும் பெண்களை “NONA” என்றும் அழைப்பார்கள். ஆனால் மற்ற நாடுகளைப் போலவே பட்டங்கள் குறைவில்லாமல் இருக்கும்.
RADAN EMAS
(தந்தை மகன்)
EYANG PUTERI
(தலை மகன்)
பங்களா தேஷ், பாகிஸ்தான் நண்பர்களைப் பற்றிக் கவலை இல்லை. மிஸ்டர் அப்துல்லா மனைவி மிஸஸ் அப்துல்லாதான். என்ன, நம் ஊரில் உள்ள பழக்கம் மாதிரி விஸ்வேஸ்வரைய்யாகாரு, மாதவ ராவ் சிந்தியா, பொட்டி சிவராமுலுகாரு, சுபாஷ் பாபு என்பதைப் போலக் கொஞ்சம் மரியாதை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆரிஃப் சாகேப், பேகம் சாகிபென்றும், இளையவர்களை “Bhai”, பெண்களை Apa (சகோதரி) என்றும் அழைத்துக் கொள்ளலாம். சிலர் கூடுதல் மரியாதையாக ஓட்டுநரைக் கூட ’ட்ரைவர் சாகேப்’ என்பார்கள்.
பல நாடுகளின் கலாச்சாரங்களை அவர்களுடன் பழகியும், கேட்டும், படித்தும் இருக்கிறேன். ஆனால் தல, தளபதி, புரட்சித் தலைவி, கேப்டன் என்பதெல்லாம் நம் ஊரில் ரொம்ப ஓவர்!