பிப்ரவரி, 2021 க்கான தொகுப்பு

அயல் தேசங்களின் கறி மோகம்

Posted: பிப்ரவரி 19, 2021 in வகைப்படுத்தப்படாதது

உலக உணவுக்கலாசாரத்தில் எவராலும் மறுக்க இயலாத தமிழ்ச் சமூகத்திற்கென உள்ள தனித்துவமான அடையாளம் ‘கறி’. தமிழ்ச் சிந்தனை மரபில் குறிஞ்சியில் உணவுகளைச் சுடுவதும், முல்லையில் வேக வைத்தலும், நெய்தல் நிலத்தில் பொரித்தலும், கறி சமைத்தலும் என்ற வகைப் பண்பாட்டுவளர்ச்சி ஆதிகாலந் தொட்டே காணப்படு கின்றது. இஞ்சி, பூண்டு, மிளகு, கிராம்பு, இலவங்கப்பட்டை, ஏலக்காய் பயன்படுத்தி கறி சமைப்பது பண்டைய மரபு. இதில் கி.பி 15ஆம் நூற்றாண்டில் சிலி நாட்டிலிருந்து மிளகாய் தமிழ்நாட்டிற்குள் புகும் வரை உறைப்புச் சுவைக்காக கறுப்பு மிளகினை (கருங்கறி) மட்டுமே பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். இறைச்சி உணவிற்கு அதிகமாக இந்தக் கறியை (மிளகு) பயன்படுத்தியதால் இறைச்சியே கறி என்று பின்னர் வழங்கப்பட்டது என்று பண்பாட்டு அசைவுகள் என்ற நூலில் தொ.பரமசிவம் குறிப்பிடுகிறார்.இது கிட்டத்தட்ட இன்றைய குருமா கறிதான். வெள்ளைப்பூண்டு, வெங்காயம், ஏலக்காய், கிராம்பு, இலவங்கப்பட்டை சேர்த்து உறைப்புக்காக அதிக மிளகு சேர்த்து சமைக்கப்படும் இந்தக் கறிக்குருமா நம் உணவுக்கலாச்சாரத்துக்குச் சொந்தமானது. ஆனால் அது பாரசீகத்திலிருந்து அறிமுகமாகி, வடஇந்திய சமையலில் க்ளாசிக் வகைகளை உருவாக்கிய லக்னோவில் பாதாம், மஞ்சள், மிளகாய் சேர்க்கப்பட்டு குருமா கறியாக கட்டிப்படுத்தப்பட்டு உருமாற்றம் அடைந்ததாக மேலைநாட்டு உணவு ஆய்வாளர்கள் எழுதி முடித்து விட்டார்கள். இது தமிழர்களின் கருங்கறி பற்றிய குறிப்புகளைக் கவனத்தில் கொள்ளாமல் பதிவு செய்யப்பட்டதாகவே படுகின்றது.


கருமிளகு சேர்த்து சமைக்கப்பட்ட இறைச்சி முக்கியமாக ஆட்டிறைச்சி சில வகையான மீன்கள், நண்டு இவற்றை மிளகாய் இல்லாமல் சமைப்பது இன்றும் தனித்துவமான சமையல் வகையில் உள்ளது. மிளகாய் சேர்க்காமல் கறி இல்லை என்ற நிலை 15ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்கியது. ‘உன்னைப் பச்சை வர்ணத்தில் பார்த்தேன். முதிர முதிரச் செவ்வண்ணம் அடைந்ததால் பார்ப்பதற்கு அழகாய் இருக்கிறாய். உணவிற்கு உயிரூட்டுகிறாய். ஆனால் அதிகம் சேர்த்தால் உணவுப் பாதையை அரிப்பதாக இருக்கிறாய். ஏழையின் நாயகனே, உணவுக்குச் சுவை சேர்ப்பவனே, கடித்தால் காரமானவனே… பாண்டுரங்கா நீ அணுகுவதற்கு கடினமானவன் மிளகாய் போல’ என்று 16ஆம் நூற்றாண்டில் புரந்தரதாசர் பாடிய பாடல் கருமிளகுப் பயன்பாட்டை அயல் நாட்டிலிருநது வந்த மிளகாய் பின்னுக்குத் தள்ளிவிட்டதை உணர்த்துகிறது. அந்நியர்களின் வருகையால் நமக்கு அறிமுகமான முட்டைகோஸ், காலிபிளவர், நூர்கோல், ராடிஷ், கேரட், பீட்ரூட், பட்டாணி, பீன்ஸ், உருளைக்கிழங்கு ஆகியவை நம்முடைய மசாலாப் பொருட்களுக்கு இணையில்லை என்பது மேலைநாட்டினரிடையே இன்னும் தொடரும் கறிமோகம் சொல்லும் செய்தி.


இந்தோனேசியாவுக்கு வடகிழக்கில் உள்ள மொலுக்கா என்றழைக் கப்பட்ட தீவு சிறியதாக இருந்தாலும், கிராம்பு, மிளகு உள்ளிட்ட நறுமணப்பொருட்கள் கொட்டிக்கிடக்கும் இடம். அதனாலேயே அது ஸ்பைஸ் தீவு என்று அழைக்கப்பட்டது. மிளகைக் குறிவைத்து இங்கே முதலில் வந்த வெளிநாட்டவர்கள் போர்த்துக்கீசியர்கள். ஏறக்குறைய 80 வருடங்கள் அவர்கள் ராஜ்யம்தான். தாமதமாக வந்தாலும், ஸ்பைஸ் தீவுகளைத் தங்கள் கால்சட்டைக்குள் போட்டுக் கொள்ளாத குறையாக வசப்படுத்தியவர்கள் டச்சு நாட்டுக்காரர்கள். இங்கு கிடைத்த மிளகு, கிராம்பின் உலகத்தரத்தையும் மதிப்பையும் புரிந்துகொண்ட டச்சு கம்பெனி அதை வேறு நாடுகளுக்கு விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. ஸ்பைஸ் தீவுகளை நிர்வகிக்க எவ்வளவு கடுமையான வழிமுறைகளையும் பின்பற்றத் தயாராக இருந்தார்கள். ஸ்பைஸ் தீவுக்கு மட்டுமே உரிய கிராம்பு வேறு இடங்களுக்கும் கொண்டுசெல்லப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகச் சில இடங்களை மட்டும் விட்டுவிட்டு, மற்ற இடங்கள் அனைத்திலும் கிராம்புச் செடிகளை அழித்துவிட்டார்கள். ஸ்பைஸ் தீவுகளில் மையம் கொள்ள நினைத்த ஆங்கிலேயர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது. கிழக்கிந்தியக் கம்பெனியின் பார்வை இந்திய பகற்பம் நோக்கித் திரும்பியது.மஞ்சள், மிளகு, இஞ்சி, கிராம்பு, இலவங்கப்பட்டை, ஏலக்காய், சீரகம், புளி என்று பலதரப்பட்ட மசாலா மணப் பொருட்கள் கலந்து சமைக்கப்படும் கறி இங்கிலாந்தில் கிளாசிக் உணவு வகைகளின் பட்டியலில் உள்ளது.


காஷ்மீரின் சிவப்பு மிளகாய், சர்க்கரைவள்ளிக்கிழங்கு கலந்து செய்யப்படும் ரோகன் ஜோஸ், வடஇந்திய ஆலு பலாக் (கீரைகள், உருளைக்கிழங்கு) நவரத்னா குருமா, ஆலு கோபி, தென்னிந்திய சாம்பார், மிளகு ரசம், மைசூர் பருப்பு, பாசிப்பருப்பு கலவையில் செய்யப்படும் பருப்பு கறி, மத்தார் பன்னீர், தால் மக்னி கலந்த பஞ்சாப் கறி, வறுத்த பருப்பு வகைகளைக் கொண்டு செய்யப்படும் ராஜஸ்தான் கறி வகைகள் வரைக்கும் சமைக்கத் தெரிந்த சமையல்கலை நிபுணர்கள் இந்தியாவை விட இப்போது அயல் நாடுகளில்தான் அதிகம்.அங்கு மிகப் பிரபலமாயிருக்கும் மிர்ச் மசாலா, எட்ச் ஆஃப் ஸ்பைஸ், மிஸ்ஸிஸிபி மசாலா, ஸ்பைஸ் வோர்ல்ட், ஓல்ட் ஸ்பைஸ், சுகர் அண்ட் ஸ்பைஸ், சிக்கன் டிக்கா மசாலா, கரம் மசாலா வகைகள் கறி மகிமை ..இதில் சுவரஸ்யம் ஆங்கிலேயர்களின் பல குடும்பப் பெயர்கள் எட்வின் கறி, டிம் கறி, ஆடம் கறி .அயல்தேசங்களின் கறி மோகம் சுவைக்காக மட்டுமல்ல, அதன் மருத்துவக் குணங்களுக்காகவும்தான். தாய்லாந்து கறியில் நம்முடைய கலவைகள் தவிர்த்து காரமான எலுமிச்சை இலை கூடுதலாகச் சேர்க்கிறார்கள். மலேசியக் கறி வகைகளும், தாய்லாந்து கறி வகைகளும் கிட்டத்தட்ட ஒரே வகையில் உள்ளது.


சீனக்கறியில் மஞ்சள் அதிகம் சேர்ப்பதில்லை. வெள்ளை மிளகுத் தூள், சோயா சாஸ் கலந்திருக்கும். ஜப்பானின் kare raisu மாட்டுக்கறி கலந்த கறி. கொஞ்சம் இனிப்பாக இருக்கும். ஜப்பானுக்குக் கலாச்சார ரீதியில் அதிகம் தொடர்பில்லாத இந்திய மசாலாப்பொருட்கள் அங்கு பிரபலமானதற்கு ஒரு காரணம் சொல்வார்கள். இந்திய மசாலாக்கள்தான் இங்குள்ள குழந்தைகள் உயரமாகவும், உடற்கட்டுடனும் பிறக்க காரணம் என்ற நம்பிக்கை இருந்திருக்கிறது. 1903ல் Osakaவில் மசாலாத் தூள் விற்பனையை முதன் முதலில் துவங்கிய பதிவுகள் Yokohama நகரத்தில் உள்ள Yokohama Curry மியூசியத்தில் உள்ளன.
இந்தோனேசியாவில் சாப்பிடும்போது கேரளா மாநிலத்தின் தேங்காய் பால் அதிகம் கலந்த கறி வகைகள் சுவை இருக்கிறது .. ஆந்திரக் கறி வகைகள் இலங்கை கறி வகைகளை ஒத்திருக்கின்றன. சிங்கப்பூர் கறி என்றால் அது மீன் தலைக்கறிதான். சமீபத்தில் 2000 மீன் தலைகளை ஒரே நேரத்தில் விற்பனை செய்து சாதனை படைத்திருக்கிறது. ஒரு பண்பாட்டை இன்னொரு பண்பாட்டின் அளவுகோலுடன் அல்லது மதிப்பீடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது. ஆனால் நம் உணவுப் பண்பாடு பல அவதாரங்கள் எடுத்தாலும் அடிப்படையில் அனைத்துக் கறி வகைகளிலும் தென்னிந்திய கறி வாசனைதான் வருகிறது.
அயிரை மீன் மூக்கையும், வாலையும் கிள்ளி எறிந்து சட்டியில் அப்படியே கொட்டி அலசி எடுத்து, கஞ்சி போல் திரண்டுவரும் செதில்களைக் கொட்டிவிட்டு புளிச்சாற்றோடு உப்பு கலந்து, சிறிது நேரம் ஊறல் போட்டு மீன் விரைப்பானவுடன் அரிசி கலந்த நீரில் குழம்பை நீர்த்துப் போகாமல் கொதிக்கவிட்டு, மண்சட்டியில் எடுத்து அப்படியே சாப்பிடும் சுவையும் மணமும் அயல் நாட்டு நட்சத்திர உணவகங்களில் கிடைக்குமா?

தோடம் பழம்

Posted: பிப்ரவரி 15, 2021 in வகைப்படுத்தப்படாதது

கிள்ளி வளவன் – தெண்கண் மாக்கிணை முழக்கிச் சென்ற புலவர் எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்க்கு விடியலில் பாம்புத்தோல் போன்ற கலிங்கம், நெய்யில் பொறித்த கறி, மணிக்கலத்தில் தேறலும் . புலவர் கோவூர் கிழார்க்கு வறுத்த உப்புக் கண்டம், கலம் நிறைய பால் வழங்கினான் என்ற குறிப்பு வாசித்தேன் வறுத்த உப்புக்கண்டம் சாப்பிடுவது சங்க காலத்தில் ஒரு மாற்று ருசிப்பண்டமாக இருந்திருக்கிறது .ஆனால் பெரு விருந்துக் கொண்டாட்ட நாட்களில் உப்புக்கண்டம் சாப்பிடுவது மிஞ்சும் இறைச்சியை வீணாக்காமல் பயன் படுத்துவது தமிழர் உணவுக் கலாச்சாரம் ,அது ஒரு சீனப் பெரு நாள் சடங்காக மலேசிய ,சிங்கப்பூர் சீனர்களிடம் எப்படி பரவியது என்று தெரியவில்லை,இந்த ஆண்டு உப்புக் கண்டத்திற்கு இணைய வியாபாரத்தில் அதிக ஆதரவு .பக்வா உப்புக் கண்டம் கிலோ 68 வெள்ளி ஆனாலும் சைனா டவுனில் உள்ள ஒரு புகழ் பெற்ற உப்புக் கண்ட கடையில் நீண்ட வரிசை ஒரு நபருக்கு 50 கிலோவுக்கு மேல் விற்பனையில்லை என்று அறிவிப்பு செய்திருந்தார்கள் ..

பக்வா ,அனேகமாக சிங்கப்பூரில் அனைவருக்கும் தெரிந்திருக்கும் ,ஆடு, மாடு, பன்றி இறைச்சியில் செய்யப்படும் உப்புக் கண்டம் , விழாக்காலங்களில் பன்றி இறைச்சிக்கே முன்னுரிமை அத்தோடு பாரம்பரிய வகையான சுவை என்ற அடிப்படையில் மூலப் பொருளான பக்வா சீனாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது.
விருந்து கொண்டாட்டங்களுக்கு என்னை அழைத்து செல்லும் சீன நண்பர்கள் பக்வாவை என்றுமே என் கண்ணில் காட்டியதில்லை ,பைன் ஆப்பிள் டார்ட் தவிர மிகவும் கவனமாக மாற்று மத நண்பர்களுக்கு உணவுகளை வழங்குவார்கள் . சீனப் பெரு நாள் கொண்டாட்டங்களில் மத சம்பந்தமான சடங்குகளை விட கலாச்சார விழுமியங்களே முதல் நிலை பெறுகின்றன அதற்கு உதாரணமாக மலாய்க் காரர்கள் “யோசுங் “சீனக் கொண்டாடங்களில் கலந்து கொள்ள ஏதுவாக ஹலால் யோசுங் இருப்பது சிங்கப்பூரில் மட்டுதான் ,சீனர்களை படிப்பிலும் ,தொழிலும் இந்தியர்கள் அதிக நண்பர்களாகக் கொண்டது சிங்கப்பூர் ,கடந்த ஆண்டில் மண வாழ்க்கையில் நுழைந்த 5ல் ஒருவர் cheongsam (Chinese ethnic Dress ) ல்மாலை மாற்றிக் கொண்டவர்கள் .


(மாற்று இனத்திலிருந்து தன் இணையத் தேடிக் கொண்டவர்) என்று புள்ளிவிபரங்கள் கூறுகிறது ., என்னிடம் அதிக நாட்கள் வேலை செய்த பல சீனர்கள் தங்கள் வேலையிலும் பழகும் முறையிலும் சீனாக் கலாச்சாரத்தின் மிக உன்னதமான முத்திரைகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் ,மத வேறுபாடுகளை ஒரு துளி கூட நான் உணர்ந்ததில்லை ,இரண்டு தோடம் பழங்களுடன் சீனப் பெரு நாள் முதல் நாளில் என்னை முதலில் பார்த்து விட்டு வேலை ஆரம்பிக்கும் நண்பராக பழகிவிட்ட பக்கத்து கடை சீன ஊழியர் தான் செய்யும் கிளாசிக் கடலுணவை நான் ஒரு முறையேனும் ருசித்து பாராட்ட வேண்டும் என்று விருப்பப்பட்டாலும்
என்னைக் கட்டாயப் படுத்துவதில்லை ,

நீ கொடுக்கும் இறைச்சி பிரியாணியை நான் சாப்பிடுகிறேன் ஆனால் நீ சாப்பிட மறுக்கிறாய் என்று ஒவ்வொரு முறையும் Baozhai நினைத்துக் கொண்டிருப்பார் ஆனால் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் புலவர் ஆவூர் மூலங்கிழாரை கட்டாயப்படுத்தி “என் மேல் ஆணை புலவரே சாப்பிடுங்க என்று சாப்பிட வைக்கும் குறு நில மன்னன் கீரஞ்சாத்தன் போல் நடந்துகொண்டதில்லை 😁

உருளைக்கிழங்கு மகாத்மியம் ..

Posted: பிப்ரவரி 11, 2021 in வகைப்படுத்தப்படாதது


Potato என்றால் இங்கிலாந்தில் ‘அசலான பொருள்’ என்று அர்த்தம்.’Small Potato’ என்ற சொலவடை ‘ஒரு சின்ன விஷயம்’ என்பதைக் குறிக்குமாம். ‘அழுகிய உருளைக்கிழங்கு’ என்று சொன்னால் மோசமான அர்த்தம் என்று நாம் சொல்லும் அழுகிய தக்காளி என்பதை வைத்து யூகித்துக்கொள்ள வேண்டியதுதான்.
ஆஸ்திரேலியாவில் Potator என்று பெண்களைக் கூப்பிடுகிறார்கள். அமெரிக்கா எப்போதுமே தனிதானே. அவர்கள் அகராதியில் ‘டாலர்’ என்று ஓர் அர்த்தமிருக்கிறது.20ஆம் நூற்றாண்டின் ‘‘Couch Potato’’ என்ற புதிய பெயர் எந்நேரமும் சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பவர்களைக் குறிக்கிறது. அதில் இப்போது Mouse Potato என்பதும் சேர்ந்துகொண்டது. இங்கே டிவியை எடுத்துவிட்டுக் கணினியைப் பொருத்தினால் அவர்தான் Mouse Potato.’குலை குலையாய் முந்திரிக்காய்.’ என்ற பாலர் பாட்டு அமெரிக்காவில் உருளைக்கிழங்கு என்று பாடப்படுகிறது. கீழே தவறவிட்ட கிழங்கு ‘Hot Potato’.. இசை வித்தகர் லூயிஸ் ஆம்ஸ்ட்ராங்கின் ‘Potato Head Blues 1927’, பாப் இசைத் தொகுப்பான ‘It is mashed Potato time’’ போன்றவை அந்தந்தக் காலத்தில் ஹிட் அடித்த ஆல்பங்கள். வேக வைத்து, பொரித்து, பொடிமாஸ் செய்து, கறியில் சேர்த்து என பலவகை பயன்பாட்டுக்கு வசதியாகத் திகழும் உருளைக் கிழங்கு, 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை சீனாவில் அறியப்படாமல் இருந்தது. இன்று உலகில் உருளை விளைவிக்கும் நாடுகளின் பட்டியலில் சீனாவும் சேர்ந்துகொண்டது. Eric Jenkins என்ற பிரிட்டிஷ்காரர் ஒரே செடியில் 168 கிலோ உருளைக்கிழங்கு விளைவித்த சாதனையை இதுவரை யாரும் மிஞ்சவில்லை.


உருளைக்கிழங்குக்கு மிகப் பெரிய மரியாதையைப் பெற்றுக் கொடுத்ததே ருசியும், மொறுமொறுப்பும் நிறைந்த அதன் Fries தான். ‘Macdonald’Fries’’ன் ‘Fries’ மாதிரி உலகின் எந்தத் தனிப்பட்ட உணவுக் கண்டுபிடிப்பும் இவ்வளவு பிரபலமாகவில்லை. எனக்கெல்லாம் கெண்டக்கியில் சிக்கன் வாங்குவதோடு சரி .அங்கு சென்றால் fries ஆர்டர் செய்ய மாட்டேன் .
துரித உணவுக் கலாசாரம் பெரும் நம்பிக்கையுடன் உலகில் தனது இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள உதவிய முக்கியமான காரணி Burger – Fries ஜோடிதான் என்பதை 70 கிட்ஸ் கூட ஒத்துக் கொள்வார்கள் .7 சதவிகிதம் சோயா எண்ணெயும், 93 சதவிகிதம் மாட்டுக் கொழுப்பும் சேர்த்து Fries பொரித்து முதல் நிலையைத் தக்கவைத்துக் கொண்டது Mac நிறுவனம்.
‘‘Macdonaldன் கிழங்குப் பொரியல்கள் சுவையாக இருப்பதற்கு அவர்கள் பயன்படுத்தும் தரமான கிழங்குகள் காரணமல்ல. மாறாக, தொழில்நுட்பம்தான்’ என்கிறார் Fast Food Nation என்ற புத்தகத்தை எழுதிய எரிக் ஸ்காலர்.


Mac நிறுவனம் உருவாக்கிய எந்திரங்களைப் பிரதியெடுத்து ‘Fries’செய்த மற்ற நிறுவனங்களுக்கு அந்த மொறுமொறுப்பு கைகூடவில்லை. பொரிக்கும் எண்ணெயில் கலக்கப்படும் ஒருவித இரசாயனமே இந்த மேஜிக் மொறுமொறுப்புக்குக் காரணம் என்கிறார்கள் சிலர்.ஆரம்பத்தில் ஃப்ரைசின் பெரிய சைஸ் என்பதே 50 கிராம்தான் பின்னர் அது படிப்படியாக ஆறாகி, இப்போது எட்டு அவுன்ஸாகி, சூப்பர் சைஸ் என்ற பெயரில் 150 கிராம் அளவில் விற்கப்படுகிறது . இந்த உணவுகளால் குழந்தைகள் பாதிப்படைவர் என்பதை விளக்கும் Super Size Me என்ற குறும்படம் வெளியானதும், சிறிய, நடுத்தர, பெரிய என்று மூவகைகளில் அளவுகளை மாற்றி அமைத்தது Mac நிறுவனம்.


1937இல் Herman L.Way என்ற பாப்கார்ன் கம்பெனிக்காரரால் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்நாக்ஸ் வகை Lay Chips. இது இரண்டாம் உலகப் போருக்குப் பின் இமாலய வளர்ச்சி கண்டது. Fritos Corn Chips, Ruffles, அடுத்து Proctor & Gamble அறிமுகம் செய்த ‘Pringles’ஆகியவை புகழ்பெற்ற ‘Chips’வகைகள். ஒரு லட்சம் பேரைப் பேட்டி கண்டு, மக்கள் அதிகம் விரும்புவது ‘உருளைக்கிழங்கு பொரியலே’ என்று பட்டம் சூட்டியது பெப்சி நிறுவனம். மென் பானத்துக்கும், துரித உணவுக்கும் எப்போதும் ஒரு கூட்டணி உள்ளது போல. பிரிட்டிஷாரின் ‘Crisp’ வகை துரித உணவுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு ‘‘Chips ’ன் கை ஓங்கியது.
உருளைக்கிழங்கில் ‘ஓட்கா’ தயாரிக்கப்படுவதுண்டு. முதலாம் உலகப் போரில் மிதமிஞ்சிய விளைச்சலைக் கண்ட உருளைக் கிழங்கு ஜெர்மனியில் எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.பஞ்சாபின் ‘Aloo Gobi’(’(உருளைக் கிழங்கு, காலி ஃபிளவர்,) ‘Aloo Matar’ (பட்டாணி, உருளை), ‘Aloo Parata’,, தென்னிந்தியர்களின் மசாலா தோசை, ஆங்கிலோ-இந்தியக் கலாசாரத்தின் ‘Aloo Cutlet’ போன்றவை உருளைக் கிழங்கு இந்திய உணவு ரசனையில் ஏற்படுத்திய தாக்கத்துக்கான சான்றுகள்.
1990 ல் மேக்கின் மும்பை கிளை சிப்ஸில் மாட்டுக் கொழுப்பைப் பயன்படுத்துவதாகக் குற்றம்சாட்டப்பட்டு தாக்குதலுக்குள்ளானது. கம்பீரமாகக் கடைக்கு முன் உட்கார்ந்திருக்கும் Mac சிலையின் கழுத்தில் மாட்டுக் குடலை மாலையாகப் போட்டு இந்து உணர்வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


அமெரிக்காவிலும் சுமார் 12 அமைப்புகள் சேர்ந்து நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தன. Macdonald நிர்வாகத்தினர் மாட்டுக் கொழுப்பு உபயோகித்ததைச் சொல்லாமல் மறைத்து சைவ எண்ணெய் பயன்படுத்தியதாகச் சொன்னார்கள் என்பது புகார். இறுதியில் பத்து மில்லியன் கொடுத்து நீதிமன்றத்துக்கு வெளியே வழக்கு ‘பைசல்’ செய்யப்பட்டது.தானியங்கி இயந்திரப் பயன்பாடு, சமையல் நேரத்தையும், வெப்பத்தின் அளவையும் குறைத்துக் கூட்டுவது போன்ற தொழில்நுட்ப வசதிகளை முதலில் பயன்படுத்தியது Mac தான்.Rapid Frying System மூலம் 30லிருந்து 40 வினாடிகள் பொரிக்கும் நேரத்தைக் குறைத்து பல லட்சம் வாடிக்கையாளர்களைத் தாமதமில் லாமல் கையாளும் முறையையும் Mac தான் செயல்படுத்தியது.Macdonald உப்பைப் பொதுவாக வைத்துக்கொண்டு, ஒவ்வொரு நாட்டுக்கும் ‘‘Fries’ உடன் தொட்டுக் கொள்வதற்கான ‘கீச்செப்’ (Ketch up) வகையைத் தேர்ந்தெடுத்துச் செயல்படுத்துகிறது. அமெரிக்கா வில் தக்காளி கீச்செப், இங்கிலாந்திற்கு மால்ட் வினிகர், பெல்ஜியத்திற்கு மயோனிஸ், இந்தோனேசிய சாத்தே சாஸ் போன்றவை இதற்கு கை கொடுக்கும். இதே நோக்கத்துக்கு நெதர்லாந்துக்கும், கனடியர்களுக்கும் உதவுவது வெள்ளை வினிகர். போலந்து நாட்டவருக்கு பூண்டு சாஸ். ஃபிலிப்பைன்ஸ்காரர்களுக்கு சீஸ். சர்க்கரையும், வெண்ணெயும் கலந்த சீஸ் வியட்நாமியருக்கு என்று உலகைப் பகுத்தறிந்து செயல்படுகிறது Mac கரையாத கொழுப்பும், அதிக உப்பும், மிக அதிகமான கலோரிகளும் கிழங்குப் பொரியலைத் தொட்டுக்கொள்ளப் பயன்படுத்தப்படும் சாஸ்களும் உடல்நலப் பிரச்சினைகளை விளைவிக்கும் என்று பல ஆய்வுகள் சொன்னாலும் மூன்றாம் உலக நாடுகளில் Mac ன் விற்பனை அதிகரித்தும் கொண்டே இருக்கிறது .சீனாவும், இந்தியாவும் மரபணு மாற்று உருளைக்கிழங்கு சம்பந்த மான ஆராய்ச்சிகளுக்கு அதிகமாகச் செலவிட்டு வரும் நாடுகள். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் AMAI என்ற மரபணுவை உருளையில் செலுத்தி மும்மடங்கு அதிக உயிர்ச்சத்துள்ள உருளையை உருவாக்கியது. அதன் பெயர் PROTATO🙄

மேகம் தங்கும் மாடம்

Posted: பிப்ரவரி 8, 2021 in வகைப்படுத்தப்படாதது

உலகத்தில் இருக்கும் பல கலாச்சாரங்களிலும் பல மொழிகளிலும் ஏதேன் தோட்டத்தைப் பற்றி, வித்தியாசமான கதைகள் சொல்லப்படுகின்றன. பூமி முழுவதும் மக்கள் சிதறிப்போகும்போது இந்தத் தோட்டத்தைப் பற்றிய நினைவுகளை ஒவ்வொருவரும் எடுத்து சென்றார்கள். காலம் போகப்போக கட்டுக்கதைகளும் மத நம்பிக்கைகளும் அந்தத் தோட்டத்தைப் பற்றிய உண்மைகளோடு கலந்துவிட்டன. இன்றும்கூட பார்ப்பதற்கு அழகாக இருக்கும் உலகின் அழகான இடங்களை, ஏதேன் தோட்டம் போல் இருக்கிறது என்று வர்ணிக்கிறார்கள்.கவிஞர் ஜான் மில்டன், பாரடைஸ் லாஸ்ட்டில் பூமியில் மக்களுக்கு என்றென்றும் வாழும் வாழ்க்கை திரும்பவும் கிடைக்கும் என்பதைச் சிறப்பித்து காட்ட, “பூமி மீண்டும் ஒரு பூஞ்சோலையாக மாறும்” என்ற வார்த்தைகளை எழுதினார். பிறகு, பாரடைஸ் ரீகெய்ன்ட் என்ற காவியத்தையும் அவர் எழுதினார்.ஒவ்வொரு பன்மைக் கலாச்சாரம் உள்ள நாட்டிலும் அந்தந்த நாடுகளின் புகழ் பெற்ற கலை வடிவங்களை தோட்டங்களில் நிறுவி அம்மாதிரி பூஞ்சோலைகளை நிறுவுகிறார்கள்.

இந்திய மற்றும் அமெரிக்க கட்டிடங்கள். சீன, ஐரோப்பிய மற்றும் இஸ்லாமிய கட்டிடக்கலையே உலகின் மூன்று முக்கிய கட்டிடவியல் முறைகளாக கருதப்படுகின்றன. இதில் சீன மற்றும் ஐரோப்பிய கட்டிடவியல் முறைகள் மிக நீண்டகாலம் தழைத்துச் செழித்து, மிகப் பரந்துப்பட்ட அளவில் பரவலாயின. சீனக் கட்டிடவியல் பல வகைகளாக பகுக்கப்படுகின்றது.நகரம், மாளிகை, கோயில், நினைவுக்கல்லறை கோபுரங்கள், துறவியர் மடங்கள், புத்த விகாரைகள், கற்குகைகள், தோட்டங்கள், அரசு அலுவலகங்கள், மக்கள் பொதுவாகக் கூடுமிடங்கள், இயற்கைக் காட்சியிடங்கள், கோபுரம் மற்றும் மாடங்கள், அரச அரண்மனைகள், குடியிருப்பு வீடுகள், பெருஞ்சுவர், பாலங்கள் என அவை வகைப்படுத்தப்படுகின்றன.


1975 களில் நெருக்கடியான தொழிற்பேட்டைகள் அடர்ந்த ஜூரோங் பகுதியில் 13.5 ஹெக்டேர் நிலப் பரப்பில் உருவாக்கப்பட்ட சைனீஸ் கார்டன் பூங்கா இன்றைய நவீன சிங்கப்பூரின் குறிப்பிடத்தக்க பொழுது போக்குத் தளமாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் சீனக் கட்டிடக் கலையில் கட்டப்பட்ட அந்த 7 மாடிக் கொபுரமும் ,13கண் பாலமும் ,கல் படகும் தென்கிழக்காசிய பூங்காக்களிலிருந்து சேகரித்து நடப்பட்ட பொன்சாய் மரங்களும் சூழப்பட்ட ஜூரோங் ஏரியும் பலரின் இளமைக் கால ஆல்பங்களில் தவறாமல் இடம் பெற்றவை ..இதில் நிறுவப்பட்ட மூன்று மாடி இரு கோபுரங்களின் பெயர்கள்.

மேகம் தங்கும் மாடம்
அடுத்தது நிலவு வரும் மாளிகை ..
நாம் முதன் முதலாக அனுபவிக்கும் கலையனுபவங்களும் ,காட்சி அனுபவங்களும் நம் மனதின் முதல் அடுக்கில் படிந்து விடுகின்றன ஆண்டுகள் பல சென்றாலும் மீண்டும் அந்த இடங்களை பார்க்கும்போது முதல்சுவை பீரிட்டுக் கிளம்புகிறது ..இந்தப் பெயர்களை எனக்கு அன்று சொன்ன நண்பர் இன்றும் என் நினைவில் நிற்கிறார் .. ..
பழுத்து உதிர்ந்த இலையின் இடங்களை ஒதுக்கிவிட்டு பசுமையான பொன் சாய் செடிகளின் அருகில் நிற்கச் சொல்லி என்னைப் படம் எடுத்த என் தந்தையின் நினைவுகளோடு , கடந்து சென்ற வசந்தங்களை திரும்பிப் பார்க்கவைத்த
தருணங்கள் .. சிங்கப்பூர் சீனத் தோட்டம்

உடுப்பி விலாஸ் ..தேக்கா ..கறிவில்லேஜ்

Posted: பிப்ரவரி 6, 2021 in வகைப்படுத்தப்படாதது

சிலருக்கு ஒரு குறிப்பிட்ட உணவகத்தில் சாப்பிட்டால்தான் திருப்தியாக இருக்கும்.தேக்காவில் எத்தனை கடை இருந்தாலும் நாம் ஒரு கடையில் தொடர்ந்து சாப்பிடச் செல்வதை நினைத்துப் பாருங்கள் ,அதே போல்தான் தஞ்சோங் பகார் எம் ஆர்டியில் இறங்கியவுடன் கறி வில்லேஜ் உங்க கடை மீ சம்பால். வாசனை எங்களை இழுக்கிறது என்று சில வாடிக்கையாளர்கள் சொல்கிறார்கள் 😎சென்னை எக்மோரில் கென்னத் லேனில் தங்கியிருக்கும்போது அங்கிருக்கும் பல உணவகங்களைத் தவிர்த்து விட்டு, காலையில் இட்லி, தோசை சாப்பிடுவதற்காகவே உடுப்பி woodlands சென்றுவிடுவேன். ஏதோ அங்கு சாப்பிட்டால்தான் ஒரு நிறைவாக இருக்கிறது போன்ற உணர்வு. The Hindu நாளிதழில் ‘மெட்ராஸ் டைரி’எழுதும் மறைந்த எஸ்.முத்தையா அவர்களை திரு செங்குட்டுவன் என் கடைக்கு அழைத்து வந்திருந்தார். நாளிதழை எடுத்தவுடன் ‘மெட்ராஸ் டைரி’ படிக்கும் என் பழக்கத்தைச் சொல்லி, அவர் எழுதிய பல வியக்கத்தக்க தகவல்களை அவருடன் இன்னும் சற்று விரிவாகப் பகிர்ந்துகொண்டேன்.


தன் அசலான சமையல் கலையால் உடுப்பியை உலகளவில் பெயர் பெற வைத்த கிருஷ்ணா ராவின் கதை என்னை மிகவும் ஈர்த்தது. கர்நாடகாவில் உள்ள உடுப்பி கிராமத்தில் மாவு அரைத்து, பாத்திரங்கள் கழுவி, எடுபிடி வேலைகளைச் செய்து 3 ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தவர் கிருஷ்ணா ராவ். தன் சகோதரியின் கணவர் வெங்கண்ணா சென்னைக்கு அழைக்க, தம்பு செட்டித் தெருவில் அதே வேலைக்கு மாதம் 5 ரூபாய் சம்பளத்தில் சேர்ந்தார்.போஸ்ட் ஆபீஸ் தெருவில் உள்ள ஒரு கடையில் வேலைபார்க்கும்போது அவரது சம்பளம் 20 ரூபாயாக உயர்ந்தது. பிறகு ஆச்சாரப்பன் தெருவில் தனியாகக் கடை தொடங்கினார். ஆச்சாரப்பன் தெருக்கடை யில் அந்தக் காலத்தில் காபி 1 1/2 அணா, இரண்டு இட்லி ஒரு அணா, ஒரு ஃபுல்மீல் 4 அணா. கிருஷ்ணாராவின் கைநேர்த்தியால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமானது. ஒரு நாளைக்கு 100 ரூபாய் லாபம் பார்த்தார். தொடர்ந்து அண்ணா சாலையில் ரவுண்டானாவில் உடுப்பி சைவ உணவகம் ஆரம்பித்ததையும், ராயப்பேட்டை வெஸ்லி ஸ்கூல் எதிரில் இராமநாதபுரம் ராஜா கட்டிடத்தை மாதம் 500 ரூபாய் வாடகை 10 வருட குத்தகைக்குப் பேரம் பேசி Woodlands ஆரம்பித்ததையும் அது உலகமெங்கும் கிளை பரப்பியபோது முனியாண்டி விலாஸ் மாதிரி பல Woodlands உலகெங்கும் உருவானதை கிருஷ்ணா ராவ் பெருந்தன்மையுடன் அனுமதித்ததையும் எஸ்.முத்தையா துல்லியமாகப் பதிவு செய்திருக் கிறார். ஆட்டுக்கல்லில் ஆரம்பித்த கிருஷ்ணாராவின் வாழ்க்கை சுயமான சமையல் கலையில் வெற்றி பெற விரும்பிய பல மனிதர் களுக்கு உந்து சக்தியாக இருந்திருக்கிறது.சமையலில் தேர்ந்த பண்டாரிகளிடம் அடிக்கடி பேசியிருக்கிறேன். பல வகை சுவையான கலவைகளை சமையலில் எவ்வாறு சேர்ப்பது என்பதைவிட, ‘ஏன் சேர்க்கிறோம்’ என்று கேட்கும் கேள்வி கேட்டால் பண்டாரிகள்(chief chef) எதையாவாது சொல்லி கம்பி நீட்டிவிடுவார்கள். பண்டாரி தீன் நான் கேட்கும் கேள்விகளுக்கு விலாவாரியாகப் பதில் சொல்லக்கூடியவர். ‘எப்படி இத்தனை அடுப்புகளையும் ஒரே சமயத்தில் மூற்றிவிட்டு கணக்காக சமைக்கிறீர்கள்?’ என்றேன். அவர் ரஜினி ஸ்டைலில் ‘நாலு உணவு வகைகளை ஒரே சமயத்தில் சமைக்கக் கற்றுக் கொள்வதைவிட ஒரே உணவை நாலு வகைகளில் சமைக்க கற்றுக்கொண்டால்தான் சமையல் புலப்படும்’ என்றார். திருமண விருந்தில் சாப்பிட்டுவிட்டு திரும்பும் நபர்கள் சிலர் ‘பாகூஸ்’ (very nice) என்று சொல்வார்கள். சிலர் ‘அல்லாம்மா நோ குட்லா’ என்பார்கள். இந்த நோ-குட் சொல்பவர்களுக்கு தடித்த நாக்கு என்பார் தீன்.உலகில் மூன்று வகையான நாக்கு உள்ளவர்கள் இருக்கிறார்கள். அதிவேக நாக்கு உள்ளவர்களுக்கு மற்றவர்களைவிட கூடுதலான சுவை நரம்புகள் இருக்கும். ருசியைத் துல்லியமாகக் கண்டுபிடித்து விடுவார்கள். இரண்டாவது நாக்கு தடி நாக்கு. உப்பும் இனிப்பும் கூடுதலாக இருந்தால்தான் இவர்களுக்குச் சுவைநரம்புகள் வேலை செய்யும், உப்பில்லாவிட்டால் உணவே சப்பென்று இருக்கிறது என்று ஒரே வரியில் சொல்லிவிடுவார்கள். ருசிக்காக அலைந்து அலைந்து சாப்பிட்டதில் உடம்பு குண்டானதுதான் இவர்கள் கண்ட பலனாக இருக்கும். இவர்களைச் சமாளிக்க அஜினோ மோட்டோ அதிகம் சேர்த்துவிட்டால் பிரச்னை முடிந்தது.


இரண்டிலும் சேராத நாக்கு ஒன்றிருக்கிறது. காய்ச்சல் வந்து விட்டால் துவரம்பருப்பை வறுத்து அரைத்து தரும் சுவையில் மட்டும் ருசி தெரியும் நாக்கு இது. மன நலமும் உடல் நலமுமில்லாமல் போகும்போது சோர்ந்திருக்கும் நாக்குக்கு seasoning பண்ணிய உணவு வகைகள்தான் சரியான பொருத்தம். இத்தனை பொருத்தங்கள் பார்த்து சமைப்பது அல்லாம்மா “லஜ்ஜை” என்பார்.BBC /Master chef நிகழ்ச்சிகளில் நடுவராக வருபவர்கள் தங்கள் நாக்கு எந்த வகையிலானது என்பதை முதலில் தெரிந்துகொண்டு வர வேண்டும் என்ற பிரச்சினை எழுப்பப்பட்டது. இப்போது நடுவர்கள் தங்கள் நாக்கின் உப்பு-சர்க்கரை எத்தனை சதவீதம் என்பதை உறுதிப்படுத்துக்கொண்டு, நிகழ்ச்சியில் தரப்படும் உணவுகளில் அதற்கேற்றவாறு உப்பு சர்க்கரை கலந்து முடிவு அறிவிக்கிறார்கள்.இன்னொன்று, பண்டாரிகள் தான் செய்த சமையலைத் தானே ருசி பார்க்க மாட்டார்கள். சமையலில் சம்பந்தப்படாத பந்தல்காரரைக் கூப்பிட்டு ருசியாக இருக்கிறதா என்று பார்க்க சொல்வார்கள். இதற்கு சமையல்காரர்களின் Nose Fatigue தான் காரணம். அறையில் நீண்ட நேரம் அரட்டை அடித்துக்கொண்டிருக்கும் நாம் உணராத ஒரு கெட்ட வாசனையைத் திடுமென்று உள்ளே நுழைந்த நபர் சுலபமாகக் கண்டுபிடித்துவிடுவது மூக்கின் நுகரும் தன்மையால்தான்.


சமையல் செய்யும்போது, வாசனையை உணரும் சக்தி குறைந்து விடுவதால், சில பண்டாரிகள் சமைத்து முடித்தவுடன் சமையல் கட்டுக்கு காலாற வெளியே நடந்து சென்று ஒரு ‘தம்’ போட்டுவிட்டு வந்து ருசி பார்ப்பார்கள். இதற்கு மத்தியில் பந்திக்கு ஆளாய்ப் பறப்பவர்கள் பண்டாரியின் பந்தாவைப் பார்த்து எரிச்சல் அடைவார் கள். மடங்களில் எப்போதும் ஒரு முழு நேர ஊழியர் சமையல்கட்டில் வெறுமனே உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருப்பார். சமையல்காரர் கள் அவரிடம் உணவைத் தந்து விட்டு பவ்யமாக நின்று கொண்டிருப்பார்களாம். அவரை உண்டுகாட்டி என்பார்கள். உணவை ருசி பார்த்துச் சொல்வதற்கென்றே வேலைக்கு அமர்த்தப்படுபவர் என்கிறார்கள்.
எப்படியோ சமையல்காரருக்கு மூக்கு நன்றாக இருக்கவேண்டும். சமையல்கட்டில் நுழைந்தவுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய் அதனதன் இடத்தில் கச்சிதமாக உள்ளதா என்பதை அறிய வாசனை பிடிப்பதைப் பலர் பார்த்திருக்கலாம். சிறந்த சினிமா இயக்குநர்களுக்கு திறமையான உதவி இயக்குநர்கள் சிலர் அமைவது மாதிரி பண்டாரிகளுக்கும் எப்போதும் ஒரு குழு இருக்கும். சமைத்து வந்தவுடன் சூட்டோடு சூடாகப் பரிமாறுவதில் கவனம் செலுத்துவார்கள். சூடாக சாப்பிட் டால் ஒரிஜினல் ருசி மாறாமல் இருக்கும்.

புத்தகங்களை அப்படியே சாப்பிடுவேன்—மோனோலித்தின்

Posted: பிப்ரவரி 2, 2021 in வகைப்படுத்தப்படாதது

ஏதேன் தோட்டம் மத்திய கிழக்கில் இருந்ததாக சமய நூல்கள் சொல்வதைக் கணக்கிலெடுத்துக் கொண்டால் ஆதாம் ஆப்பிளைச் சாப்பிட்டிருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. ஏனெனில் ஆப்பிள் மத்திய ஆசியாவில் விளைந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றிருக்க அக்காலகட்டத்தில் நூறு சதவீதம் சான்ஸே இல்லை. வேண்டு மானால் பேரிக்காய் அல்லது மாதுளம் பழம் சாப்பிட்டிருக்கலாம் என்கிறார்கள்.எப்படியோ நன்மையோ மையோ தான் விரும்பியதை சாப்பிட மனித மனம் விரும்புவதை ஆரம்பித்து வைத்தவர் ஆதாம்.சுவை நுட்பம் உள்ளவர்கள் ருசித்து சாப்பிடும் சிலராகவும் பசிக்காக நுகர்வோர் பலராகவும் பயிற்சியும் திறனும் இருப்பவர்கள் சுவையாக சமைக்க வல்லவர்களாவும் சமையல்கலை ஆதிகாலந்தொட்டே சுற்றிச் சுழல்கிறது. விருப்பமான உணவுகளுக்காக உயிரை இழந்த மன்னர்களும் வரலாற்றில் இருக்கிறார்கள்.

மன்னன் 16ஆம் லூயி 1792இல் பிரஞ்சு புரட்சியாளர்களால் Varennes என்ற இடத்தில் சிறைபிடிக்கப்பட்டார். பன்றிக்கால் சூப் சாப்பிடுவதற்கு SAINTE MENEHOULD என்ற உணவகத் திற்குச் செல்லும் உணவுப் பழக்கத்தை மோப்பம் பிடித்து அவரைக் கைது செய்தார்கள் .சோவியத் ரஷ்யாவின் முன்னாள் அதிபரான ஸ்டாலினுக்கு வாழைப்பழம் என்றால் உயிராம். அவருடைய சுயசரிதையை எழுதியவர், ‘ஸ்டாலின் கோபத்தின் உச்சிக்கு செல்வது பெரும்பாலும் தரமில்லாத வாழைப்பழம் சாப்பிடும்போதுதான்’ என்கிறார்.ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்தபோது, பிடில் வாசித்ததாகச் சொல்லப்படும் மன்னர் நீரோ உண்மையில் வாசித்தாரோ இல்லையோ காளான் உணவுகளின் பிரியராக இருந்திருக்கிறார். ஆட்சியைப் பிடிக்கவும் காளான் உணவு அவருக்கு உதவியது. தன் வளர்ப்புத்தந்தை Claudius -ஐ அதே காளான் உணவில் அவருடைய நாலாவது மனைவி மூலமாக விஷம் வைத்துக் கொன்று நீரோ அரியணை ஏறினார் என்பது வரலாற்றுக் குறிப்பு.

பிலிப்பைன்ஸ் அதிபராக இருந்த மார்க்கோஸ் வெறுமனே சார்டின், காய்கறிகள் சாப்பிடும் பழக்கம் உள்ளவர். அதிலும் முருங்கைக்கீரை வகைகளுக்கு அடிமை. அது வயதாவதைத் தடுக்கக்கூடியது என்று யாரோ ஆருடம் சொல்ல, கடைசி வரை இதை அவர் விடவில்லையாம்.மா சே துங் உணவின் தரத்தில் கவனமாக இருந்திருக்கிறார். நாட்டின் சுத்தமான நீர் நிலைகளின் நீரில் விளைந்த நெல்லிலிருந்து கிடைக்கும் கைகுத்தல் அரிசி (அதுவும்முனை முறியாமல்)தான் அவர் விருப்பம். மாவோவுக்காவே அரிதான மீன் வகைகள் மற்றும் சீனாவின் தெற்கு நகரமான Hubei -லிருந்து சுமார் 600 கிலோமீட்டர் தூரத்திலிருந்து ஆக்ஸிஜன் ஏற்றப்பட்ட தண்ணீர் பைகள் மூலம் உயிரோடு கொண்டு வரப்படுமாம்.
ரோமாபுரி மன்னன் Vitellius சரியான சாப்பாட்டு இராமன் என்று சரித்திரம் படித்தவர்களுக்குத் தெரியும். அதிலும் மயில் மூளை, பிளமிங்கோவின் நாக்கு போன்றவை இடம்பெறும் விருந்துகளில் கலந்துகொள்ள எப்போதும் தயாராக இருப்பார். அந்த விருந்துகளுக்குத் தன்னை அழைக்கும் குடும்பங்களுக்குப் பரிசு, பட்டங்கள் கொடுத்து ஊக்குப்படுத்துவாராம்.மிக விநோதமான உணவுப் பழக்கங்களையும் சரித்திரத்தில் பார்க்க முடிகிறது. எத்தியோப்பிய அரசர் இரண்டாம் மேனோலித் நீண்ட காலம் வாழும் ஆசையில் பைபிள் புத்தகத்தை கிழித்துத் தின்னும் பழக்கம் கொண்டிருந்தாராம். அது உண்மையோ பொய்யோ 2002இல் உருளைக்கிழங்கு ஸ்டார்ச்சில் தயாரித்த Eat the Book என்ற புத்தகத்தைப் பதிப்பிக்க பதிப்பாளருக்கு மேனோலித்தின் பழக்கம் தூண்டுகோலாக அமைந்தது.


அதிகாரத்தில் இருப்பவர்கள் ஒரு பக்கம் எதிரிகளோடு மல்லுக் கட்டுவதில் மும்முரமாக இருந்தாலும், இன்னொருபக்கம் பிரியமான உணவுகளை ருசிப்பதிலும் விடாப்பிடியான ஆர்வத்துடன் இருந்திருக்கிறார்கள். அதைச் சமைப்பதில் தேர்ந்தவர்களைத் தங்களுடனேயே வைத்துக்கொள்வதற்குப் பலவிதமான வழிமுறைகளைக் கையாண்டிருக் கிறார்கள்.அமெரிக்காவின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன் Samuel Fraunces என்பவரை நீண்ட நாட்களாகத் தன் சமையல்காரராக வைத்திருந்திருக்கிறார். அவர் ஓய்வு பெற்ற பிறகு அடிமைத் தொழிலாளி ஹெர்க்குலஸ் என்பவரின் சமையலில் மயங்கி அவரை சமையல்காரராக வைத்திருந்திருக்கிறார். ஆனால் பென்சில்வேனியா வின் சட்டப்படி ஒரு அடிமைத் தொழிலாளி தொடர்ந்து ஆறு மாதங்கள் ஒரு இடத்தில் வேலை பார்க்க முடியாது. எனவே அவரை ஆறு மாதங்களுக்குள் வெர்ஜினியாவுக்கு மாற்றல் செய்து திரும்ப அழைத்துக் கொள்வாராம். இன்று அரசு அலுவலகங்களில் நாம் பார்க்கும் இடம் மாற்றும் தந்திரங்களுக்கு இப்படி பல முன்னுதாரணங்கள் இருக்கின்றன.


பிரபலங்களின் வாழ்க்கையை விரிவான வரலாறாக எழுதினால், அவர்களின் சமையல்காரர்களுக்குக் கண்டிப்பாக இடம் ஒதுக்கியே ஆக வேண்டும். நம்பிக்கைக்குரியவர்கள், நம்பிக்கைத் துரோகிகள் என இரண்டுவிதமான பார்வைக்கும் சமையல்காரர்கள் உட்படுத்தப் பட்டிருக்கிறார்கள். ரஷ்ய அதிபர் ஸ்டாலின் விரும்பும் உணவைப் பல சமையல்காரர்கள் தனித்தனியாகச் செய்து முடித்துக் காத்திருப் பார்கள். பிறகு அவரே ஒரு சமையல்காரரைத் தேர்ந்தெடுத்து அவர் செய்த உணவைச் சாப்பிடுவார். மாசேதுங் இவ்விஷயத்தில் நேரெதிர். தன் மெய்க்காப்பாளர்கள் உணவைப் பரிசோதித்து தனக்குத் தருவதை எப்போதும் அனுமதி வழங்கியதில்லை .1967லிருந்து 1989 வரை ரோமானியாவை ஆண்ட Nicolae Ceausesue தனக்காக உணவு வண்டி ஒன்றை வைத்திருப்பாராம். அவரது நேரடிக் கண்காணிப்பில் உணவு தயாராகும். அந்த உணவை வண்டியில் வைத்து பூட்டி சாவியைத் தன்னிடமே வைத்துக்கொள்வா ராம். யாருக்குமே அந்தப் பூட்டின் சங்கேத எண் தெரியாதாம்.சர்வாதிகார அரசியலில் உச்சத்தைத் தொட்ட ஹிட்லரை எவ்வளவு சந்தேகங்கள் ஆட்டிப்படைத்திருக்கும்? ஹிட்லர் 1923இல் தன்னுடைய பிறந்த நாளை ஒரு வீட்டில் நண்பர்களுடன் கொண்டாடினார். ஆனால் பிறந்த நாள் கேக்கில் ஒரு துண்டுகூட ஹிட்லர் சாப்பிட வில்லை. ஹிட்லரின் மெய்க்காப்பாளர் Ernst Hanfstaengl இதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, “நீயெல்லாம் ஒரு மெய்க்காப்பாளரா? இந்த வீட்டின் உரிமையாளன் ஒரு யூதன் என்பது உனக்கு தெரியாதா” என்றாராம். இந்த மெய்க்காப்பாளரும் கடைசியில் ஹிட்லரின் சந்தேகத்துக்குள்ளாகி, விலக்கி வைக்கப்பட்டார்.
உலகையே அச்சுறுத்திய செங்கிஸ்கானையும் ஒரு அச்சம் ஆட்டிப் படைத்தது. தன்னுடைய பன்னிரெண்டாவது வயதில் தன் தந்தையை ஒரு சமையல்காரர் விஷம் வைத்துக் கொன்றதை மறக்கவே முடிய வில்லை. அதனால் தன் சமையல்காரர்களை எப்போதும் தீவிரக் கண்காணிப்பில் வைத்திருப்பாராம்.


உகாண்டாவின் சர்வாதிகாரி இடிஅமீன் மனித மாமிசம் சாப்பிடுபவர் (cannibal)) என்று நேரில் பார்த்ததுபோல எல்லோரும் பேசுகிறோம். ஆனால் அவர் நர மாமிசம் சாப்பிட்டதை தான் பார்த்ததில்லை என்கிறார் அவருடைய சமையல்காரர் Otonde Odera. இடிஅமீனின் பேச்சுதான் நரமாமிசக் கதைகளைக் கிளப்பியிருக்கவேண்டும். ‘உன்னை மாற்றிவிடுவேன். டிஸ்மிஸ் செய்து விடுவேன்’ என்ற ரீதியில் இடி அமீன் யாரிடமாவது கோபப்படும்போதெல்லாம் “உன் இதயத்தை தின்று விடுவேன். உன் குழந்தைகளைக் கொன்று தின்ன ஆசையாக இருக்கிறது” போன்ற வார்த்தைகளும் தவறாமல் வெளிப்படும் என்கிறார் அவரிடம் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த Henri Kyemba..இந்த வார்த்தைகளை பரப்பி நரமாமிசம் அளவுக்கு கொண்டு சென்றது மீடியாக்கள் வடகொரியாவின் ராணுவ ஆட்சியாளராக இருந்த இரண்டாம் கிம் ஜோங் தான் நீண்ட நாட்கள் வாழ தன் தந்தையர் பெயரில் ஒரு ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கினார். அங்கு பணிபுரிந்த டயட்டீசியன்ஸ்களிடம் ரிசல்ட் கேட்டு நச்சரிப்பாராம். அதில் யாரோ ஒரு ஆராய்ச்சியாளர் நாயின் உறுப்பைத் தொடர்ந்து சாப்பிடும்படி கிம்முக்கு சிபாரிசு செய்திருக்கிறார். குறைந்தபட்சம் 7 சென்டி மீட்டருக்குக் குறையாமல் இருக்க வேண்டும் என்று நிபந்தனையும் விதித்தாராம். இரண்டாம் கிம் ஜோங் உடல் நலத்தைப் பராமரிப்பதில் அதே கவனம் எடுத்துக்கொண்டாலும் அது காலங்கடந்த முயற்சியாகவே இருந்தது. நாற்பது வயதுகளில் கிம் நீரிழிவு நோயால் மிகவும் கஷ்டப்பட்டார் ,நாயால் வந்த வினைப் பயன் .