ஷாநவாஸ் + 65 82858065
பூங்குன்ற பாண்டியன் +65 83602341
1965-70 களில் “சிங்கப்பூர் பெக்ஷியா” பள்ளியில் ஒரே வகுப்பில் சுமார் 50 தமிழ் மாணவர்கள் படித்திருக்கிறார்கள். திருமதி குணவதி நல்லதம்பி (பள்ளி ஆசிரியை) எண்ணத்தில் இந்த 50 பேரையும் ஒரு சேரப் பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் மேலிட ஒவ்வொரு பூவாக கோர்க்க ஆரம்பித்தார். அத்தனை பேர் விபரங்களையும் திரட்டி பெரிய மாலையாக்கிவிட்டார். அந்த பெக்கிஷியா தோட்டத்தின் பூக்களில் ஒருவர் என் நண்பர் ஹாஜாமைதீன் (தொழிலதிபர்), அவருக்கு என்ன பிரச்சினை என்றால் என்னை விட்டு விட்டு எந்த நிகழ்வுக்கும் போவது அவ்வளவாக பிடிக்காது. உப்புக்கு சப்பானியாக என்னையும் அவர்களுடைய கூட்டத்திற்கு கூட்டிச் சென்றார். அடடா! என்ன ஒரு நெகிழ்ச்சி Mr.குலாம் டிவி புகழ் Mr.லிங்கம் ஒருவருக்கொருவர் கட்டி பிடித்து, சிறுவயது முகங்களைத் தேடி தேடி முகங்களை வருடி புளங்காகிதம் அடைந்தார்கள். ஓரத்தில் தனியாக விடப்பட்ட நான் என் பள்ளி கல்லூரித் தோழர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கற்பனையில் தவித்துக் கொண்டிருந்தேன். அந்தக் கற்பனையை நனவாக்க Mr.காதர் அவர்களிடமிருந்து பளிச்சென ஒரு மின்ன(ஞ்ச)ல் வந்தது. ஜமால் முஹம்மது கல்லூரியின் பழைய மாணவர் சந்திப்புக்கு ஏற்பாடாகியிருக்கிறது என்ற செய்தியுடன்…
நண்பர் ஜலாலுடன் நிகழ்சிக்கு விரைந்தேன், எத்தனைபேர் என் செட்டில் வந்திருக்கிறார்கள் என்ற ஆவல் மேலோங்கி அங்குமிங்கும் கண்களை படரவிட்டுக் கொண்டிருந்தேன்.
1970 71 என்று ஆரம்பித்து எனக்கு 10 வருட முந்தைய செட்டில் பழைய மாணவர்கள் வந்திருந்தார்கள். 80த் தொட்டவுடன் என் பேட்ச் தோழர்கள் இருவர் எழுந்தனர், இளமை முடிந்துவிட்டது ஆனால் இன்னும் மாறா புன்னகை முகத்துடன் எழுந்து நின்றார்கள். எத்தனை எத்தனை அதிகரிகள், வங்கி ஊழியர்கள், மருத்துவர்கள், வியாபாரிகள் சிங்கப்பூரில் இத்தனை நாட்களும் தவறவிட்டோமே என்ற ஆதங்கம் என்னுள் எழுந்தது. தென்னிந்தியாவின் அலிகார் என்று புகழப்படும் ஜமால் முகம்மது கல்லூரிக்கு இந்தவருடம் “வைரவிழா” அதில் தரமான கல்வியை பெற்றவர்கள் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவர்களாக மற்றவர்களுக்கு வழிகாட்டுகிற சிறப்பு பெற்றவர்களாக வாழ்வில் உயர்ந்த இடத்தை அடைந்திருக்கிறார்கள் என்று அந்த கூட்டமே வெளிப்படுத்தியது.
இந்த பழைய மாணவர்கள் நாம் நடந்த டோல்கேட்டில் நடந்தவர்கள், முதன்மை அரண் கதவை (மெயின்கார்டு கேட்) சுற்றியவர்கள், உச்சிப்பிள்ளையார் கோவிலின் 437 படிக்கட்டுகளில் ஏறி இறங்கியவர்கள், சங்கிலியாண்டபுரம் டூரிங் தியேட்டரில் எம்ஜியார் சிவாஜி படம் பார்த்தவர்கள், திவான் ஸ்டூடியோவில் கோட் போட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டவர்கள், ஹாஸ்டலில் குஸ்கா சாப்பிட்டு தூங்கி வகுப்புக்கு கட் அடித்தவர்கள், அத்துடன் திருச்சியின் நல உதவித் திட்டங்களில் என்றும் பங்கெடுத்துக் கொண்டிருப்பவர்கள் எல்லோருடைய அனுபவமும் ஒரே புள்ளியில் சந்தித்து மீண்டன.
திருச்சியில் மொத்தம் 30 கல்லூரிகள் இருக்கின்றன. அதில் நம் கல்லூரியின் சிறப்பையும் பழைய மாணவர்களின் ஈடுபாட்டையும் முன்னெடுத்துச் செல்ல ஜமால் முஹம்மது அலுமினி (சிங்கப்பூர்) முறையாக தொடங்கப்பட்டு அரசாங்கம் அனுமதி அளித்திருக்கிறது.
(Vist @ http://www.jmcalumni.org.sg/ )
வருகிற 30.01.2011 அன்று நாம் அனைவரும் ஒன்று கூடி பயணப்படவேண்டிய இலக்கை முடிவு செய்யவிருக்கிறோம்.
இன்னும் நம் சிங்கப்பூர் நண்பர்கள் பலருக்கு தகவல் சென்று சேரவேண்டியிருக்கிறது.
வாருஙங்கள் கைகோர்ப்போம்
சிங்கப்பூர் ஜமாலியன்களை அடையாளம் கண்டு கூட்டிவாருங்கள்
தொடர்புக்கு :
என்னுடைய அலை பேசி எண்: 82858065
MR.Kader – 96933786 or 63981020
கடந்த ஞாயிறு ‘03.10.2010’ அன்று சிங்கப்பூரில் புதிய இணைய இதழ் ‘தங்கமீன்’ துவக்கி வைக்கப்பட்டது.
விழா கச்சிதமாக நடந்தது. திரு விசயபாரதி விழாவை வழிநடத்தினார், கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது நிகழ்வு 10 நிமிட தாமதத்தில் முன்னேறிக்கொண்டிருக்கிறது என்று அவ்வப்போது பேச்சாளர்களின் நேரத்தை ஒட்டி அறிவிப்பு செய்தது ரசிக்கும்படி இருந்தது. எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் பேசும்போது விக்கிபீடியாவில் குறைந்த மக்களே பேசக்கூடிய மொழிக் கட்டுரைகளை ஒப்பு நோக்க தமிழில் கட்டுரைகள் குறைவாகப் பதிவு செய்யப்படுகின்றன என்றார். திரு சுப. திண்ணப்பன் விண்மீன் கடல்மீன் தரையில் தங்கமீன் என்று வர்ணித்து, இந்த தங்கமீன் மனதில் தங்கவேண்டும் என்றார். திரு அழகியபாண்டியன் அதிகப்படியான உள்ளடக்கங்களை தொடர்ந்து கட்டிக்காக்க இயலுமா என்று கேள்வி எழுப்பித் தொடர்ந்து பாலுமணிமாறன் கட்டிகாப்பார் என்றார். திரு.செ.ப.பன்னீர்செல்வம் இணைய பத்திரிகை ஆரம்பிக்க தகுந்த சூழல் சிங்கப்பூரில் இருந்தபோதும் இதோ அதோ என்று சொன்னார்கள். ஓரான் லாவா ச்ககாப் சக்கப் தற்போது பாலு அதை நிறைவேற்றிக் காட்டிவிட்டார். நம் சந்ததிகளுக்கு நாம் எதையாவது கொடுத்துவிட்டுச் செல்ல வேண்டும் சரிதானே என்றார். திரு ஜோதிமாணிக்கவாசகம் வாள்முனையை விட பேனா முனை கூர்மையானது என்று சொல்வார்கள் இப்போது எலியின் சிணுங்கல் அதைவிடக் கூர்மையாகிவிட்டது என்றார். திரு.ராம.கண்ணபிரான், ரத்தினசபாபதி, சபா ராஜேந்திரன் மற்றும் தொலைக்காட்சி நடிகர் மதியழகன், நல்லு தினகரன் ஆகியோர் வாழத்திப்பேசினர்.
சிறப்புரை ஆற்றிய திரு அருண்மகிழ்நன் -கொள்கை ஆய்வுக் கழகத் தலைவர்- தன்னுடைய 10 வருடக் கனவை திரு.பாலுமணிமாறன் நிறைவேற்றி விட்டதாகச் சொன்னார். குழுக்களுக்குள்ளும் உள் வட்டங்களிலும் இதை அடக்கி விடாமல் சிங்கப்பூரிலுள்ள பல ஊடகங்களின் செயல்பாட்டுத் தளமாக இது விளங்க வேண்டும் என்றார்.
தனக்கும் 10 வருடக் கனவு இது என்ற எழுத்தாளர் கழகத் தலைவர் ஆண்டியப்பன், அருண் மகிழ்நன் இருவரும் இணைய இதழை துவக்கிவைத்தனர்.
சிங்கப்பூர் ஊடகங்களில் கேளிக்கைகளுக்கும் நுகர்ப் பொருட்களின் மீதான வேட்கைக்கும் அப்பால் என்ன இருக்கிறது என்று http://www.thangameen.com கிளிக் செய்யக் கூட்டத்தினர் ஆர்வத்துடன் பரபரத்தார்கள்.
வழக்கம்போல திரு சாரு அவர்களின் கட்டுரைக்கு எதிர்வினையுடன், ‘தங்கமீன்’ சிணுங்க ஆரம்பித்துவிட்டது.
http://thangameen.com/ContentDetails.aspx?tid=39
thanks:தங்கமீன்.com & உயிரோசை.com
நாட்குறிப்பு எழுதுவது அந்தரங்கமானது ஆனால் ஆபத்தானதும் கூட ஏனெனில் அதை யாராவது படித்துவிட்டால்… என்ற பயம் இருந்து கொண்டேயிருக்கும் எனக்கு ஒரு வித்தியாசமான பழக்கம் சிறுவயதிலிருந்தே தொத்திக் கொண்டது நாட்குறிப்பு எழுதுவதோடு அதில் முக்கியமான நிகழ்வுகள் அனுபவங்களை சிவப்பு மையால் அடிக்கோடிட்டு “ஹைலைட்” பண்ணுவது அத்தோடு இன்னொரு 10 வருடங்களுக்கு பிறகு அந்த நிகழ்வுகளில் ஏற்படப் போகும் மாற்றங்களை கற்பனையாக கிறுக்கி வைப்பது இந்தப் பழக்கம் என் பள்ளி சரித்திர ஆசிரியர் ஆரம்பித்து வைத்தது இன்னும் தொடர்கிறது…
நாமெல்லாம் காலம் என்ற நதியில் பயணித்துக் கொண்டிருக்கிறோம், இறந்த காலம் பின்னால் இருக்கிறது எதிர் காலம் முன்னால் நிற்கிறது இறந்தகாலத்தை முன்னே ஓட்டிவிட்டு பின்னர் வரும் எதிர்காலத்தை இப்போதே கணித்து கற்பனை செய்யும் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள் என்று அடிக்கடி சொல்வார். கால வெள்ளத்தை அவ்வப்போது பத்திகளாக்கிய என் நாட்குறிப்புக்களை எடுத்துப் பார்த்ததில் புத்தகங்கள் மூன்று கரையுள்ள ஆறு என்று தேவதச்சன் சொல்வாரே அதைவிட நாட்குறிப்புக்களில் எத்தனை கரைகள் இருந்திருக்கின்றன கற்பனையையும் தாண்டி என்னவெல்லாம் நடந்து முடிந்திருக்கின்றன. 1980 களுக்குப் பிறகு நாட்குறிப்புக்களுக்கு மவுசு குறைந்துவிட்டது பேஸ்புக்கும் இ-டைரியும் காப்பி பேஸ்ட் பண்ணி உண்மையான பதிவு உணர்வுகளை மறக்கடித்துவிட்டது. 1980க்கு முன்னால் என் நாட்குறிப்பில் பதிவாகிய சிலவற்றையும் 2009ல் அவைகள் தந்த அனுபவங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
04-10-1978
என் சரித்திர ஆசிரியர் திரு.பாலகுருசாமியும் அப்போதைய புத்தாக்க இயக்குநர் மகேந்திரனும் நண்பர்கள் ஸ்டுடன்ஸ் இன்று அவரவர் டைரிகளில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் இந்த பாலகுருசாமி இன்னும் 10 வருடங்களில் டைரக்டர் மகேந்திரனுடன் இணைந்து சினிமா உலகில் பேசப்படும் நபராக இருப்பான் சிவப்பு மையில் தேதி போட்டு குறித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்.
1985 கடந்துவிட்டது அப்படி எதுவும் நடந்து விடவில்லை ஆனால் அவர் ஆசிரியர் வேலையிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். நான் கல்லூரியில் சேர்ந்தவுடன் விடுதி கலை விழாவுக்கு இயக்குநர் மகேந்திரன் சிறப்பு விருந்தினராக அழைத்து வருவதற்கு ஓர் அறிமுகக் கடிதம் கொடுத்தார். நானும் நண்பர் அன்வர் மரைக்காயரும் சென்னையில் இயக்குநர் மகேந்திரன் வீட்டை கண்டுபிடித்து கதவைத் தட்டினோம் ஆனாhல் அவர் வெளியூர் சென்றிருப்பதாகச் சொன்னார்கள் பக்கத்தில் நடிகை லட்சுமி வீடு அவர் வீட்டில் இருந்தார் மகேந்திரன் வருவதற்கு இன்னும் ஒரு மாதம் ஆகும் என்று சொன்னார் எங்களுக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா பள்ளிமுடித்து வீட்டிற்குள் நுழைந்து ‘சூ’-வைக் கழற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாய் தூக்கி எறிந்தார் அதுவரை என் குறிப்புக்கள் துல்லியமாக இருந்தன.
சிவப்பு மையில் நடிகையின் மகள் நடிகையாவாரா? என்பதை “ஹைலைட்“ பண்ணியிருந்தேன் அது பலித்தது.
கல்லூரியில் நடிகர் நடிகைகளை அழைத்து நிகழ்ச்சி நடத்துவதைவிட புதிய இயக்குநர்கள், கவிஞர்களை அழைத்து வருவதற்கு வரவேற்பு ஆரம்பித்த காலம் அது. நாங்கள் இயக்குநரை முயற்சித்து இயலவில்லை கவிஞர் கண்ணதாசனை கல்லூரிக்கு அழைத்து வர முடிவு செய்தோம்.
கண்ணதாசனை கூட்டி வருவதற்கு நேரே சென்றுவிடாதீர்கள் எனது நண்பர் கவி கா.மு.ஷரிப்பை சந்தித்து அவரிடம் ஒரு அறிமுகக் கடிதம் வாங்கிச் செல்லுங்கள் என்றார் எங்கள் விடுதிக் காப்பாளரும் தமிழ்துறைத் தலைவர் புலவர் நெயினார் முஹம்மது.
கவிஞர் கா.மு. ஷரிப் வீட்டைத் தேடிப்பிடித்து உள்ளே நுழைந்தோம் முன் வராண்டாவில் கை பம்பில் தண்ணீர் அடித்துக் குடத்தில் நிரம்பியவுடன் குளியலறைக்கு உள்ளே செல்வதும் வருவதுமாக குளித்துக் கொண்டிருந்தார் கவி ரத்னம், கவிச் செல்வம் கவிக்குரிசில், கவிராயர் கவி நாயகம், கவிதை ஞானி செந்தமிழ்ச் செல்வர் என்ற பட்டங்களை பெற்றவர் வாழ் நாட்களில் பாரதி, பாரதிதாசன் மரபில் உலவி தமிழ் மரபு இஸ்லாமிய மரபு இரண்டையும் சிறப்பித்தக் கவிஞன் வெகு இயல்பாக கொஞ்சம் எனக்காக காத்திருங்கள் என்றார். (அவருடைய பட்டங்கள் திரு.ஜெ.எம். சாலி எழுத்துக் குறிப்புக்களிலிருந்து என் நாட்குறிப்பில் மறு பயனீடு செய்யப்பட்டவை).
“சினிமா நடிகர், நடிகைகளைத்தானே கல்லூரி விழாவுக்கு அழைப்பீர்கள் வித்தியாசமாக கவிஞரை அழைக்க வந்திருக்கிறீர்கள்?’’ ‘’எனக்கு. கவிதைகளில் விருப்பம் அதிகம்’’ என்று நான்தான் வாய் திறந்தேன் நண்பர் அன்வர் மரைக்காயர் அன்றைய தினம் ரிலிஸான சினிமாவை பார்க்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார் எங்கே ஒரு மரபுக் கவிதை சொல்லுங்கள் பார்க்கலாம் என்றார். “ எழுதிய கவிதைகளில் யாப்பு தளை எல்லாம் பிரித்துச் சொல்ல முடியும் ஆனால் தானாக இன்னும் எழுதவரவில்லை என்றேன். நல்ல வேளை அத்தோடு என்னுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார் ஒரு நீண்ட அறிமுகக் கடிதம் எழுதி கண்ணதாசன் உதவியாளரிடம் கொடுக்கச் சொன்னார். சிவப்பு மையில் ஒரு செய்யுள் எழுதி கவி.கா.மு.விடம் பாராட்டுப் பெற வேண்டும் என்பது என் அன்றைய பதிவு.மரபுக் கவிதைக்கும் புதுக் கவிதைக்கும் பொது நிகழ்ச்சிகளில் உரசலாக இருந்த 1980 காலகட்டம் மு. மேத்தா செல்லும் இடங்களிலெல்லாம் மாணவர்களின் உள்ளங்களில் பவனிவர ஆரம்பித்த காலம்.
இலக்கணம் செங்கோல்
யாப்பு சிம்மாசனம்
எதுகைப் பல்லாக்கு
தனி மொழிச் சேனை
பண்டித பவனி
இவை எதுவுமில்லாத
கருத்துக்கள் தம்மைத் தாமே
ஆளக் கற்றுக் கொண்ட புதிய
மக்களாட்சி முறையே புதுக் கவிதை.
என்ற பழக்கத்தில் அன்றைய வயதும் இளமையும் மயங்கிக் கிடந்தது நான் கவி.கா.மு.ஷரிப் அவர்களை சந்தித்தபோது அவர்கள் வள்ளல் சீதக்காதி வரலாற்று நூலை எழுதிக் கொண்டிருந்தார்கள்.
என் மரபுக் கவிதை முயற்சிகளெல்லாம் வெற்றிபெறவில்லை 1994 ல் கவிஞர் காலமாகிவிட்டார்கள்.
Oct 1978
மாணவர்கள் அந்தந்த காலக் கட்டங்களில் உயரிய மனிதர்களிடம் முன்னுரிமை பெறத் தவறுவதில்லை, எங்களுக்கு முன்னால் பார்க்கக் காத்துக் கிடந்தவர்களை அமரச் சொல்லிவிட்டு எங்களை வந்து பார்த்தார் கவியரசு தோளோடு தோள் என்னை அனைத்துக் கொண்டார் எப்போதுமே அவர் பாடல்களை முணுமுணுத்த வண்ணமிருந்தார், அப்போது அவர் அரசவைக் கவிஞராக இருந்தார் வீனாக செலவு வேண்டாம் அரசுக் காரிலேயே திருச்சி வருவதாகச் சொல்லிவிட்டார் உங்கள் கல்லூரியின் ஸ்தாபகர் பற்றி நான் ஒரு கவிதை பாடியிருக்கிறேன் தெரியுமா? என்றார். கண்ணப்பா “இன்னும்போ“ ‘இன்னும்போ” என்று குறிப்புப் புத்தகத்தை புரட்டச் சொல்லிக் கொண்டிருந்தவர் அந்தப் பாடலைப் பார்த்தவுடன் தானே ஒருமுறை படித்துவிட்டு எங்களிடம் தந்தார்கள் அதை நான் என் நாட்குறிப்பேட்டில் விறு விறுவென்று எழுதினேன்.
“சேர்த்துக் காத்து செலவு செய்கின்றதோர்
ஆக்க வழியை அறிந்தவர் வள்ளல்
ஜமால் முஹம்மது தழிழ் மக்களின்
கல்விப் பசிக்கு கனிகள் கொடுத்தவர்
ஊரணிபோல் உலகம் முழுவதும்
உண்ணக் கிடைப்பது உயர்ந்தோர் செல்வம்”
அப்போது அவர் அரசவைக் கவிஞராக இருந்தார் கல்லூரியின் விடுதி விழாவிற்கு வர சம்மதித்தது எங்களுக்கு மகிழ்ச்சியாகவும் இன்னொரு பக்கம் எனக்கு ஆச்சரியமாகவும் இருந்தது அதற்கான அடையாளம் நான் அவரைக் கவிதா ஓட்டலில் தங்கவைத்து விட்டுத் திரும்பும்போது தெரிந்து கொண்டேன். அவர் அப்போது யேசு காவியம் எழுதி முடிக்கும் தருவாயில் இருந்தார். அடுத்து திருகுர்ஆனை மொழியாக்கம் செய்யும் எண்ணத்தில் முஸ்லிம் அறிஞர்களிடையே கருத்துக்களை கேட்டுக் கொண்டிருந்தார் அதற்கான வாய்ப்பாக அந்த விழாவை பயன்படுத்திக் கொண்டார், அவரை சந்தித்து உரையாடி மகிழ்ந்த நாட்கள் அனைத்தும் என் நாட்குறிப்பில் சிவப்பு மை கோடிடப்பட்டு இன்னும் மறையாமல் இருக்கின்றன. கவிஞரும் தன்னுடைய நாட்குறிப்பில் யேசு காவியத்துக்கு பிறகு திருக்குர்ஆன் வசனங்களை மொழியாக்கம் செய்வதென்று ஹைலைட் செய்து கொண்டு விடாப்பிடியாக இருந்தார் என்பது அந்த நாட்களில் அவர் திருச்சியில் சந்தித்த முக்கிய பிரமுகர்கள் மூலம் தெரிந்து கொண்டேன், அவர் ஆரம்பித்து தொடர முடியாமல் விட்டு போன செய்திகளை சாயபு மரைக்காயர் அவரைப்பற்றித் தொகுத்த குறிப்புக்களிலிருந்து என் நாட்குறிப்பில் பதிய வைத்தேன்.
திருக்குர்ஆனின் முதல் அத்தியாயம்
‘அல்பாத்திஹா’ அல்லது தோற்றுவால் என்றழைக்கப்படும் இறைவனின் அருமை பெருமைகளை எடுத்துரைக்கும் இந்த அத்தியாயம் அரபு மொழியில் ஏழு வசனங்களைக் கொண்டதாக இருக்கிறது.
அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமின்
அர்ரஹ்மான் நிர் ரஹிம்
மாலிக்கி யவ்மித்தீன்
இல்யாக்க நஹ்மது வ இல்லாக்க நஸ்தகீன்
இஹ்தி நஸ் ஸிராத்துல் முஸ்தகீம்
ஸிராத்தல்லதீன அன் அம்த அலைஹிம் ஹைரில்
மஹ் லீது அலைஹீம் வலன் ஸல்லின்
25 அரபி சொற்களில் அமைந்துள்ள இந்த ஏழு வசனங்களையும் மனனம் செய்யாத முஸ்லிம்களே உலகில் இல்லை.
அல்பாத்திஹா எனப்படும் இதன் அரபி மூலத்தை தமிழாக்கமாக்கி கவியரசர் கண்ணதாசன் ‘திறப்பு’ என்ற தலைப்பில் மொழியாக்கமாக தந்துள்ளார்.
திறப்பு-
எல்லையில்லா அருளாளன்
இணையில்லா அன்புடையோன்
அல்லாவைத் துணை கொண்டு
ஆரம்பம் செய்கின்றேன்
உலகமெல்லாம் காக்கின்ற
உயர் தலைவன் அல்லாவே
தோன்று புகழ் அனைத்திற்கும்
சொந்தமென நிற்பவனாம்
அவன் அருளாளன்
அன்புடையோன்
நீதித் திருநாளின்
நிலையான பெருந்தலைவன்’’
மொழியாக்கத்திலுள்ள இனிமையும், எளிமையும் முஸ்லிம் அறிஞர்களிடையே வரவேற்பை பெற்றாலும் அவர் தனி மனித ஒழுக்கத்தில் குடிக்கு அடிமையாக இருந்ததால் எதிர்ப்புக் கிளம்பியது அதன்பிறகு மேலும் அவர் தொடராமல் சென்றுவிட்டார்-
Sep- 1979
தி.மு.க மாணவர் சேர்ப்புத் திட்டத்தில் கலந்து கொள்ள நானும் என் நண்பர் ராகாமுஹம்மதுவும் சென்றிருந்தோம் கலைஞரும், பேராசிரியரும் உள்ளே நுழைந்தவுடன் கல்லூரி வாரியாக கணக்கெடுத்தார்கள்.
கலைஞர் கூட்டத்தை ஒருமுறை நோட்டமிட்டார் எல்லோரும் குறிப்பேடு பேனா கொண்டு வந்திருக்கிறீர்;களா? என்றார்இ பாதிப் பேருக்கு மேல் குறிப்பேடு கொண்டு வரவில்லை, பேனா மீதிப்பேரிடம் இல்லை. “இது நாடகமோ, கலைக் காட்சியோ, சினிமாவோ அல்ல பணி மாணவர் பயிற்சிப்பட்டறை குறிப்பேடு இல்லாதவர்கள் வெளியில் சென்று வாங்கி வாருங்கள் என்றார்.
கறாராக சொல்லி விட்டார், பேராசிரியர் அவரை அமைதிப்படுத்திவிட்டுக் கூட்டத்தை தொடர்ந்தார். சிவப்பு மையில் 10 வருடங்களில் பேராசிரியர் தனிக்கட்சி அல்லது கட்சி மாறுவார் என்று எழுதியிருந்தேன்.
அப்படி எதுவும் நடக்கவில்லை இருவரும் தோழமையுடன் இன்றும் தொடர்கிறார்கள்.
Aug-2009
அனுபவங்களின் சுவைகள் எல்லையற்றவை வாழ்க்கை மாறும் தோறும் வண்ணங்கள் மாறுகின்றன. பள்ளிப் பருவத்தில் நம் முன்னே காட்சியளித்த பாவாடை தாவணி இப்போது அரைக் கிழவியாக நிற்கும்போது அனுபவத்தின் விசித்திரம்தான் என்ன!
காகிதத்தின் மீது நான் பதிவு செய்தவை வயதாகிவிட்டதே ஒழிய அந்தந்த காலங்களில் எப்படியெல்லாம் கிளர்ச்சியுறச் செய்தன என்ற நினைப்பு, எட்டுப் புறமும் எல்லைகள் கடந்து ஓடுவது எல்லோருக்கும் என்றும் ஏற்படும் அனுபவம்தான்.
போதுமான வாழ்க்கை அனுபவங்களும் பொதுவான உலக ஞானமும் பிரித்து அறிவதற்கு வாய்ப்புத் தரும் கல்வியுமுள்ள பொறுப்புணர்வு கொண்ட ஒரு தலைமுறை இப்போது உருவாகி வருகிறது. அந்தத் தலைமுறையின் “ஸ்டெர்ய்ட் டைம்ஸில் “ ஒரு கட்டுரை படித்தேன் சிங்கப்பூர் தேசிய தினத்தில் 10-08-2059-ல் என்னென்ன சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கும் என்ற கற்பனை இது கிட்டத்தட்ட என்னுடைய சிவப்புமை நாட்குறிப்பு போன்றே சுவாரஸ்யமாக இருந்தது.
1. நிலவுக்குச் செல்லும் முதல் சலுகை விமானக்
கட்டணம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
அறிவித்திருக்கும்.
2. ஒரு ‘A” ஸ்டார் விஞ்ஞானி சுற்றுச் சூழலில் முதல் நோபல் பரிசை வென்றிருப்பார்.
3. 6 அந்நிய மொழிகளில் முதுநிலைப்பட்டத்தை அறிமுகப்படுத்தி சிங்கப்பூர் பல்கலைக்கழகம் கின்னஸ் சாதனை புரிந்திருக்கும்.
4. குளோனிங் மூலம் பிறந்த ஆமெங் III மனிதக் குரங்கு பொதுவான மொழியில் ஐந்து நிமிடங்கள் ஐரோப்பியருடன் உரையாடல் நிகழ்த்தியிருக்கும்.
இப்படியே புனைவாக சாதனைகள் தொடர்கின்றன எனக்கு இவைகள் அ-புனைவாகத் தோன்றுகின்றன- ஆழமான வேர்களைக் கொண்டிருப்பதால்தான் சிங்கப்பூர் விருட்சமாக வளர்ந்து நிற்கிறது. இவையெல்லாம் சாத்தியமானவைகள்தான் எட்டக்கூடிய கனிகள்தான் எழுதும் பழக்கத்தையே கிட்டத்தட்ட கைவிட்டு விட்ட இளைய தலைமுறை சிங்கப்பூரின் அடுத்த 50 ஆண்டுகால தொடக்கத்தை ஓட ஆரம்பிக்கும் முன்பாக கடந்த 50 ஆண்டுகளின் பாதைகளில் பயணித்து வந்தவர்களின் அனுபவங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அநேகமாக அவர்களிடம் சிவப்பு கோடிட்ட பக்கங்கள் கொண்ட நாட்குறிப்புக்கள் இருக்குமென்றே நம்புகிறேன்.
நன்றி: நாம் காலண்டிதழ்
ஓவியம்: உமாபதி
///
2:28 பிற்பகல் இல் ஜூன் 10, 2010
ஷான், அருமையான பதிலடி. சமயோசிதமான கேள்விகள்.
http://bala-balamurugan.blogspot.com/2010/06/blog-post_03.html
முனைவர் எம்.எஸ். ஸ்ரீ லஷ்மி கருத்துபடி ஒரு எழுத்தாளன் என்பவன் எந்தவகையிலும் தன் எழுத்தின் மூலம் முரண்படவே கூடாது. அவனுக்குக் கொடுக்கப்படும் ஒழுக்கத்திலிருந்து அவன் மீளாமல் பரிசுத்த ஆத்மாவாக இருக்க வேண்டும் என்கிற கருத்தை விநியோகம் செய்திருக்கிறார்.
///
கே.பாலமுருகன்
தங்களின் வருகைக்கு நன்றி
என்னைவிட அதிகம் வாசிப்பவர் நீங்கள். என்னிடம் இலக்கிய சர்ச்சை விவகாரத்தில் சில கேள்விகள் எஞ்சியுள்ளன.
முனைவர் லட்சுமி விமர்சனத்தில் சீரியஸாக சில விசயங்களை நாம் விவாதிக்க நினைத்தால் அவர்கள் சொல்லும் பாடு பொருட்கள் “தாய் நாட்டு மண்மனம் காட்டுபவை” என்று ‘பிரம்மா’ என்ற கவிதைத் தொகுப்பை சுட்டியுள்ளார்கள் அந்தப் பொதுப்பண்பு தவறா?
ஒரு கவிஞன் அல்லது எழுத்தாளன் முதலில் தன் வாழ்க்கை மூலம் தானறிந்த அனுபவ விவேகத்தை, இரண்டாவது தான் இலக்கிய வாசிப்பின் மூலம் பெற்ற அறிவை, மூன்றாவதாக தான் வாழும் பொதுவான அறிவுச் சூழலிருந்து பெற்றுக் கொண்ட அறிவைச் சார்ந்து உருவாக்கிக் கொள்கிறான்.
அத்துடன் கிராமம் சார்ந்த வளர்ப்புடைய படைப்பாளிகளின் ஊற்றுக் கண்கள் அவர்களுடைய இளமை அனுபவங்களின் மீது அமைந்துள்ளன என்பது சரியா?
அத்துடன் புலன் பதிவுகள், மொழி பதிவுகள் ஆகியவை கருத்தியல் நிலைப்பாடுகள் உருவாவதற்கு முந்தைய கால கட்டத்திலும் அவனுள் ஆழமாக விதைக்கப்படுகிறது இது சரியா?
///
3:32 பிற்பகல் இல் ஜூன் 9, 2010
தங்கள் எண்ண ஓட்டம் நன்று!
///
அத்திவெட்டி ஜோதிபாரதிக்கு
நன்றி. தங்களுடைய வலைதளத்தை ஆரம்பத்திலிருந்து படிக்க ஆரம்பித்துள்ளேன். கவிதை விமர்சனம் மூலமாக சிறந்த நண்பர்களைக் கொண்டு வந்து சேர்ப்பதற்கு முனைவர் எம் எஸ் ஸ்ரீ லஷ்மி அவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும்.
சிங்கப்பூரில் தமிழ் வளர்க்க பல அமைப்புகள் இருக்கின்றன. இவ்வளவு அமைப்புகள் தேவைதானா என்ற கேள்விகள் ஒருபுறம் இருக்க அவைகள் சிறு சிறு குழுக்களாக தமிழ் மொழி கலாச்சாரத்தை வளர்ப்பதை பாராட்டலாம். ஒவ்வொருவரும் தன்னால் இயன்ற அளவு பாத்திகட்டி பயிர்வளர்க்கிறார்கள். இந்த சூழலில் படைப்புகள் மீது சரியான விமர்சனப் பார்வை இங்கு அரிதாக உள்ளது. அப்படி வைக்கப்படும் விமர்சனப்பார்வைகளும் சொத்தையாக உள்ளன.
சனி ஞாயிற்றுக்கிழமைகளில் இளைஞர்கள் வறட்டுத் தனமான சினிமா மற்றும் மற்ற பொழுது போக்குகளை தவிர்த்து தங்களுக்கு கிடைக்கும் அரிதான நேரத்தை கவிமாலை கவிச்சோலை போன்ற நிகழ்வுகளில் ஆர்வத்துடன் கலந்து கவிதைகள் படைப்பதை கீழறுக்கும் விதமாக விமர்சனங்கள் செய்வது மிகவும் வேதனைக்குரியது.
வயதானவர்கள் இளைஞர்களுக்கு வழிகாட்டிகளாகவும் உற்சாகம் கொடுத்து நல் வழிப்படுத்துவர்களாகவும் இருக்க வேண்டும். அது என்றைக்குமுள்ள தேவை அல்லவா!
கண்மணி குணசேரனின் கவிதை இளமை முதுமை இரண்டுக்கும் பாலம் அமைக்கிறது
மூச்சுக் கட்டி ஊத வேண்டிய
முக்கியமான கட்டத்திலெல்லாம்
சீவாளியைக் கழற்றி
சரிபார்க்கிறது
வயதான நாயனம்
இட்டு நிரப்பிச் செல்கிறது
இளம் தவில்…
நன்றி
ஷாநவாஸ்
அன்பு நண்பர் பாலுமணிமாறன் அவர்களுக்கு …
” நாலுவார்த்தை” மீண்டும் புத்துயிர் பெற்றிருப்பதில் தங்கள் முதல் வாசகன் என்ற முறையில் மகிழ்ச்சி. மீண்டும் ”அப்பாவிச் சோழனாக” மாற வேண்டிய சூழல் தற்போது சிங்கப்பூர் இலக்கிய உலகில் உருப்பெற்று வருகிறது.
நல்ல விமர்சனம், மாற்றுக் கருத்துக்களுக்கான தளம் இங்கு உருவாக வேண்டும் என்று நாம் பலமுறை பேசியுள்ளோம்.
தொல்காப்பியர் 10-வகையான எழுத்துக்கள் குறையுள்ள தன்மையுடையவை என்று சொல்கிறார்.
1. கூறியது கூறல்
2. குறை கூறல்
3. மாறு கொள்ளக் கூறல்
4. மிகை படக் கூறல்
5. பொருள் சில மொழிதல்
6. மயக்கக் கூறல்
7. கேட்போருக்கு இன்னா யாப்பிற்று ஆதல்
8. என்னவகையிலும் மனக் கோள் இன்மை
9. தன்னான் ஒரு பொருள் கருதிக் கூறல்
10. பழித்த மொழியான் இழுக்கக் கூறல்
இதில் திருமதி லெட்சுமி அவர்களின் விமர்சன எழுத்துக்கள் 10 வகையிலும் குறையுடையதாக இருக்கிறது.
நம் கவிதை வரலாறு 2000 ஆண்டுக்கால நீட்சி கொண்டது. இந்த நீண்ட கால பரப்பில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும் உள்ளார்ந்த மனம் மாற்றம் அடையவில்லை. அன்பு, பாசம், காதல் குடும்ப உறவுகள், நட்பு, பிரிவு, மரணம் சார்ந்த, அடிப்படை நிலம் சார்ந்த வாழ்க்கை இவற்றில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை.
கவிதைகள் காலப் பிண்ணனி கொண்டதாக இருக்க முடியுமே தவிர, அது நாம் வாழும் இடத்தின் தன்மைக்கு ஏற்றவாறு மாறுவதில்லை. திருமதி.லெட்சுமி அவர்கள் உண்மையிலேயே கவிதைகளை விமர்சிக்க விரும்பவில்லை என்பதே அனைவரது கருத்தாகவும் உள்ளது. அத்துடன் 21ஆம் நூற்றாண்டின் அடிப்படை ஆவணம் பிறப்புச் சான்றிதலிருந்து தற்போது பாஸ்போர்ட்க்கு மாறிவிட்டது. இந்தச் சூழலில் “குடியேறிகள்” போன்ற சொற்கள் பயன்படுத்துவது நாம் இப்போது என்ன உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று பிரமிக்க வைக்கிறது.
மாதம்தோறும் கவிமாலை கவிச்சோலையில் பரிசுகள் வழங்குவது பற்றிய விமர்சனம் மிகவும் பழைமையானது. நான் 30 வெள்ளி பரிசை வாங்குவதற்கு சனி ஞாயிற்றுக்கிழமைகளில் 60 வெள்ளி சம்பளத்தில் ஒரு ஊழியரை என் கடையில் அமர்த்திவிட்டு செல்கிறேன். எனக்கு கிடைத்த 30வெள்ளி பரிசுகள் என்னைப் பொறுத்தவரை விலை மதிக்க முடியாதவை (உங்களிடமிருந்து கூட ஒரு பேக் (bag) பரிசு வாங்கியிருக்கிறேன்) கவிமாலை, கவிச்சோலைக்கு வரும் நண்பர்களுக்கு ஒவ்வொரு வகையிலும் அவைகள் விலைமதிப்பில்லாதவைதான். அத்துடன் பரிசைப் பற்றி விமர்சிப்பது அதை மனமுவந்து மாதம்தோறும் கொடுக்கும் பரிசளிப்பவர்களின் நோக்கத்தை கீழறுக்கும் செயல்.
வளர்ந்து வரும் பாண்டித்துரையின் கவிதைகள், கவிதையைப் படித்து முடித்தவுடன் கனமான நினைவுகளை எழுப்பிக் கொண்டிருப்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.
நாதஸ்வரத் சப்தத்தோடு
கலைஞரின் வாழ்த்துச்செய்தியை
ஏந்தி வந்த கூட்டத்தை
திரும்பிப் பார்த்தவர்கள்
கவனிக்கத் தவறியிருக்கக்கூடும்
வாய்பொத்தி சிரித்து வந்த
சிறுமி ஒருத்தியையும்
அவளை ஒத்த சிறுவனாக மாற
வாய்பொத்தி சிரித்த என்னையும்
(பாண்டித்துரை – உயிரோசை –e.magazine)
ஒரு பழம் பாடலும் என் நினைவுக்கு வருகிறது.
குட்டுதற்கோ பிள்ளைப் பாண்டியன் இங்கில்லை குறும்பி அளவாய் காதைக் குடைந்து தோண்டி எட்டினமட்டும் அறுப்பதற்கோ வில்லி இல்லை இரண்டொன்றாய் முடிந்து தலை இறங்க போட்டு வெட்டுதற்கோ கவி ஒட்டக் கூத்தன் இல்லை விளையாட்டாய் கவிதைகளை விரைந்து பாடித் தெட்டுதற்கோ அறிவில்லாத் துரைகள் உண்டு தேசமெங்கும் புலவரெனத் திரியலாமே!
எனவே முக்கியமாக படைப்புகள் குறித்து குறைந்த பட்ச விமர்சனம்ப் பார்வைகள் சிங்கப்பூரில் உருவாக வேண்டும் அவைகள் நல்ல படைப்புகளின் உருவாக்கத்திற்கு மிகவும் பயனளிக்கும்.
நம் சிந்தனைக் கடலோரத்தை தினம் அரித்துக்கொண்டிருக்கும் மொக்கையான விமர்சனங்களின் பின்விளைவுகள், நல்ல விமர்சனக் காற்றை வீசட்டும்.
உங்கள் கவிதைகள் மீண்டும் பிறக்கட்டும்.
பாலுவின் பதிவை படிக்க விமர்சனமா…விகாரமா….- சிங்கப்பூர் இலக்கிய விமர்…
அப்துல்காதர் ஷாநவாஸ்
/////எழுதியவர்: அ.ப.சாகுல் ஹமீது
மின்மடல்: amushahul@gmail.com
உரல் : http://amushahul.webs.com/
யாரிது:http://ws.arin.net/cgi-bin/whois.pl?queryinput=117.206.113.111
மறுமொழி
நத்தத்தில் பிறந்து சிந்தனைச் சித்திரமாய்,
சிங்கப்பூர்ச் சீமையில் ரீங்காரமிடும் தேனியாய்,
மணக்கும் மாமலராய்,இனிக்கும் பலாவாய்
திகழும் அன்பு அண்ணனுக்கு இந்த நத்தத்து தம்பி
சாகுல் ஹமீதின் இனிய சலாம்!!
உங்கள் வலைப்பூக்களை முகர்ந்து பார்த்தேன்.
அதில் கடந்த கால நினைவுகளின் சாரல் என்னை
நனைத்தது.நம் பிறந்த மண்ணுக்கே உரிய சாதிக்க
வேண்டும் என்ற உத்வேகத்தில் சிப்பிக்குள் இருந்த
நீங்கள் இன்று முத்தாகப் பிரகாசிக்கிறீர்கள்!
வாழ்க! பல்லாண்டு! வளர்க! உங்கள் எழுத்துப் பணி!
என்றும் அன்புடன்
அ.ப.சாகுல் ஹமீது
த/பெ. உதுமான் கனி////
அன்புத் தம்பி சாகுல் கமீது
உன்னுடைய வலைத்தளம் மற்றும் நத்தம் நண்பர்கள் வட்டம் என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. விக்டர் ஹ்யூகோவின் “லா மிஸரபிள்” என்ற நாவலில் “ஜின் வால் ஜின்” என்ற திருடனுக்கு பாதிரியார் அடைக்கலம் கொடுப்பார், ஆனால் இரவில் தூங்கி எழுந்தவுடன் அவன் அங்கிருந்த குத்துவிளக்கையும் திருடிக் கொண்டு சென்றுவிடுவான். காவலர்கள் அவனைக் கைது செய்து திருடிய குத்துவிளக்குடன் அவனை பாதிரியாரிடம் கூட்டி வருவார்கள். பாதிரியார் அவனைப் பார்த்து எந்த சலனமுமில்லாமல் ஏன் நான் கொடுத்த இன்னொரு குத்துவிளக்கை எடுக்க மறந்து சென்று விட்டாய்? என்று கேட்பார் – இதன் மூலம் நேசித்தால் திருடனும் மனிதனாகலாம் என்பார் விக்டர் ஹ்யூகோ.
ஜெயகாந்தனுக்கும் இதே போன்று ஒரு அனுபவம், நீண்ட நாட்கள் தன் கொல்லைப் புறத் தோட்டத்தில் இளநீர்க் குலைகள் காய்த்துத் தொங்கிக் கொண்டிருந்ததை இன்று பறிக்கலாம், நாளை பறிக்கலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தவர். ஒருநாள் இரவு யாரோ தென்னங்குலைகளை பறித்து கீழே போட்டு மூட்டையில் கட்டுவதைக் கண்டு திடுக்கிட்டு எழுந்தார். இரண்டு திருடர்களும் வந்த வேளையில் மும்மரமாக ஈடுபட்டிருந்தார்கள். ஜேக்கே அமைதியாக ஏனப்பா! நான் எவ்வளவு நாட்கள் காத்திருப்பது இப்போதுதான் வந்து பறிக்க நேரம் கிடைத்ததா என்று சொல்லி அவர்களை தண்டிக்காமல் கூலியும் கொடுத்து அனுப்பினாராம்.
நான் சொல்ல வருவது உன் அப்பா அ.பா அவர்களும் தன் வாழ்வில் இதே அனுபவத்தை பெற்றவர்கள். ஒரு நாள் உங்கள் வீட்டுக் கொல்லையில் ஆசாரி அப்புக்கு கணக்கு செட்டில் செய்து அனுப்பி விட்டு மடக்கு சேரில் முருங்கை மரக் காற்றுக்கு படுக்கப் போனார்கள். அவர்கள் எப்போதுமே இறைவனை “யாரப்பு” என்று கூறிக் கொண்டே வேலையை துவங்குவார்கள், முடிப்பார்கள். உங்கள் வீட்டுக் கொல்லைப்புறத்தில் அப்போதெல்லாம் நிறைய முருங்கை மரங்கள் அடர்த்தியாக வளர்ந்திருக்குமாம். அன்றும் உன் அப்பா அ.பா “யாரப்பு” என்று வழக்கமாக இறைவனை அழைத்திருக்கிறார்கள், அதே நேரம் முருங்கைக்காய் திருடுவதற்கு மரத்தில் ஏறி நின்ற ஆசாரி அப்பு தன்னை எப்படியோ கண்டுபிடித்துவிட்டார் என்று நான்தானப்பு ஆசாரி அப்பு தெரியாமல் செய்துவிட்டேன் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று முன்னால் வந்து நின்றாராம்.
என் நினைவுகளில் எப்போதும் சட்டையில்லாமலும் முண்டாப் பனியனுடன் காட்சிதரும் உன் அப்பா அ.பா அந்த “அப்புவை” மன்னித்து தொடர்ந்து, அவருக்கு “உருப்படிகள்” செய்ய ஆர்டர் கொடுத்த கதை எனக்கு என் அத்தம்மா சொல்லியது. இது கதையல்ல நிசம்! என் அத்தம்மா தேர்ந்த ‘கதை சொல்லி’ நத்தத்தில் அவர்கள் காலத்தில் நடந்த விசயங்களை என்னுள் பதிவுசெய்திருக்கிறார்கள். அவைகள் நெடுங்கதை, குறுநாவல், நாவல் அளவிற்கு என் மனதில் நீண்டு கொண்டேயிருக்கின்றன.
நான் நத்தம் நினைவுகளை தொடர்ந்து பதிவு செய்கிறேன். என் பால்ய நண்பர்களின் தற்போதுள்ள முகவரி கிடைத்தால் மிகவும் மகிழ்வேன்.
1. முதல் ரேங்கிற்கு முதல் வகுப்பு முதல் SSLC வரை என்னுடன் போட்டியிட்ட தியாகராஜன் (பாஸ்கரன் தம்பி)
2. நளிர் (யூசுப் மாமா)
3. முருகன் (பாஸ்கரன் தம்பி)
4. குத்புதீன்
5. அச்சங்குளம் 1977 SSLC நண்பர்கள்
நத்தம் நண்பர்கள் குழு மென் மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்.
அன்பின் ஆர்.அபிலாஷ்
புரோட்டா போட கற்றுக் கொள்ள கைக்குட்டையை தண்ணீரில் நனைத்து இரண்டு முனைகளை பிடித்துக்கொண்டு மறு இரண்டு முனைகளை விசிறி பயிற்சி பண்ண சொல்வார்கள். புரோட்டா பேடாவை கொடுத்தால் நிறைய பேடா வீணாகிவிடும் என்பதால் கைக்குட்டையை பயன்படுத்துவார்கள் அத்துடன் புரோட்டாவில் கிச்சியாக இருப்பவர்தான் சொல்லித்தருவார். பெஸ்ஸா-வெல்லாம் புதியவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஒதுங்கிக் கொள்வார்கள். ஆனால் முதன் முதலில் எழுத ஆரம்பித்த எனக்கு கைக்குட்டைக்கு பதில் புரோட்டா மாவும், கிச்சிகளுக்கு பதில் பெஸ்ஸா எழுத்தாளர்கள் நீங்களும் திரு.மனுஸ்யபுத்திரனும் உற்சாகமும் ஊக்க மொழிகளும் தெரிவித்திருப்பது நான் புரோட்டாவை கருகி விடாமல் பதமாக எடுத்துவிடுவேன் என்ற நம்பிக்கையை தந்துள்ளது. நீங்கள் சென்ற வருடம் “ஹம்மிங்வேயும் உயிரோசையும்” என்ற பத்தியில் சொன்னது மாதிரி நன்கு வெளிச்சமுள்ள சுத்தமான இடமாக உயிரோசை இருப்பதே எங்களை மாதிரி புரோட்டா மாஸ்டர்களுக்கும் தளம் கிடைக்கிறது.
மீ சட்டி – நூடுல்ஸ் வறுக்கும் பாத்திரம்
பண்டாரி – தலைமை சமையல்காரர்
கை பண்டாரி – துணை சமையல்காரர்
கிச்சி – சிறிய
பெஸ்ஸா – பெரிய