ஷாநவாஸ் + 65 82858065
பூங்குன்ற பாண்டியன் +65 83602341
சிங்கப்பூர்த் தமிழ் இதழ்கள் 1875 – 1941 பற்றிய தங்களது பேச்சு குறித்துத் தங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப நினைத்தேன். அதைத் தங்கமீன் வழியாகப் பகிர்ந்து கொள்ள முடிவு செய்து – இந்தக் கடிதம்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு கூட்டங்களில் சந்திக்க இயலாத சில ஆளுமைகளை ஒருசேரப் பார்க்கவும், இதுவரை தெரியாத பல செய்திகளை அறிந்து கொள்ளும் ஒரு நிகழ்வாகவும் இந்தக் கூட்டம் அமைந்தது.
தாங்கள் பேச்சின் துவக்கத்திலிருந்து இறுதிவரை குறிப்புகளை எடுத்து முடிக்கும்போது, செய்தித்தாள்களை ‘இதழ்கள்’ என்று குறிப்பிடுவது சரியா என்று கூட்டத்தில் ஒரு கேள்வி எழுப்பப் பட்டவுடன் ‘இந்திரஜித்’ மொழியில் சொல்வதானால், நான் கொஞ்சம் ஆடிப் போய் விட்டேன். வீட்டுக்கு வந்து என் பழைய சிதலமடைந்த குறிப்புகளைத் தேடிப் பார்த்ததில்,
– செய்திகளையும், கருத்துக்களையும், இயற்கால படைப்புகளையும் அறியவும், பகிர்ந்து கொள்ளவும், பாராட்டவும், ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து மீண்டும் மீண்டும் அச்சிட்டு விற்கப்படும் நூல்களை இதழ் என்று கூறுவது வழக்கம்.
கிழமை இதழ்கள்
மாதிகைகள் (மாத இதழ்கள்)
என்ற குறிப்பு இருந்தது.
பழைய குறிப்புகளைச் சாதாரணமாகத் தூக்கிப் போட்டுவிடக் கூடாது என்பது சரிதான் போலும்.
வரலாறு ஒரு விந்தையான விஷயம். ஒரு காலத்தில், முரண்பாடாகத் தோன்றிய விஷயம், சில காலம் கழித்து ஒரே கருத்தின் இரு கூறுகளாகத் தென்படும் என்று சொல்வார்கள். தகுதியான நபர்கள் பத்திரிக்கை நடத்தி இருந்தால், மிகக் குறுகிய காலத்தில் அவை மூடப்பட வேண்டிய நிலைக்கு உட்பட்டிருக்காது என்ற கருத்தை ஒப்பு நோக்க, இப்போது பத்திரிக்கை நடத்தத் தகுதியான நபர்கள் இருக்கிறார்கள். ஆனால் பதிப்பாளர்கள் உற்பத்தியாளர்களாகவும், எழுத்தாளர்கள் முகவர்களாகவும், வாசகர்கள் நுகர்வோர்களாகவும் ஒரு சந்தை உருவாகிக் கொண்டிருக்கிறது.
தனது பார்வை வலியுறுத்தும் இடத்திலிருந்து நின்று பேசுவது என்பது இப்போதும் ஒவ்வொரு பத்திரிக்கையாளருக்கும் வேறுபடவே செய்கிறது.
பாம்பும் நோகாமல், அடிக்கும் கோலும் நோகாமல், பத்திரிக்கையில் தன் எண்ணங்களை எழுதுபவர்களைக் கிண்டல் செய்த தகவல், இன்றைய காலகட்டத்திலும் அந்நிலை தொடரும் அவல நிலையை எண்ணிப் பார்க்க வைத்தது.
நீங்கள் சிங்கை வர்த்தமாணி தொடங்கி, சிங்கைநேசன், தங்கை நேசன், ஸ்நேகன், ஞானசூரியன், சிங்கை விஜய கேதன், இந்து காவலன், சிங்கை ஜனமித்திரன், நூருல் இஸ்லாம், ஞானோதயம், இந்திய நேசன், சிங்கை கிறித்துவ வர்த்தமானி, சிங்கை மித்திரன், மலாய விளக்கம், சிங்கைத் தூதன், பொது ஜன மித்திரன், உதய தாரகை, மலேயா நாடு, தனவர்த்தினி, முன்னேற்றம், மலேயா நண்பன், இன்னும் என்னால் குறிப்பெடுக்க இயலாமல் போன பத்திரிக்கைப் பெயர்களோடு சுமார் 50-க்கும் மேற்பட்ட பத்திரிக்கைகள் அது ஆரம்பித்த வருடம், அதன் ஆசிரியர்கள், அவை ஒவ்வொன்றும் அற்ப ஆயுளில் கதைகள், அவற்றுக்கான காரணங்கள் என்று அடுக்கிக் கொண்டே சென்றது, மிகவும் மலைப்பாக இருந்தது.
நீண்டகால ஆய்வுப் பணியில் தாங்கள் எடுத்துக் கொண்ட சிரமங்கள் ஆச்சரியமாக உள்ளது.
ஒரு பத்திரிக்கை மூடுவிழா நடக்கும்போது, புதிதாக ஒரு பத்திரிக்கையாளன் முளைத்து வந்து எழுத முற்படுகிறான் என்ற செய்தியும், சீனர்கள் தமிழர்களுக்காக நடத்திய தமிழ் பத்திரிக்கை ‘பொதுஜனமித்திரன்’ குறித்த தகவலும் முத்தாய்ப்பான விஷயங்கள்.
இத்துடன் நான் தாங்களிடம் கேட்க நினைத்த கேள்வி, பத்திரிக்கைகளுக்கு மூன்று விதமான இருப்பு நிலைகள் வேண்டும் என்று சொல்கிறார்கள். இகம், பரம், விளம்பரம். நீங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட காலகட்டத்தில் விளம்பரங்கள் பத்திரிக்கை வளர்ச்சியில் பங்காற்றிய குறிப்பு உண்டா ? இதை நான் கேட்க நினைத்துக் கொண்டிருந்தபோது, ‘தங்கமீன்’ பாலு, கடைசிக் கேள்வி என்று ஏற்கனவே சொல்லி முடித்து விட்டார்.
சிங்கப்பூர் நாளிதழ்களின் வரலாற்றில் ஆழ்ந்த அறிவும், நேரடி அனுபவமும் கொண்ட தங்களது பேச்சு எங்களுக்கு ஒரு சிறப்பான அரிதான கூட்டத்தில் கலந்து கொண்ட உணர்வைத் தந்தது. தங்களுக்கும், தங்கமீன் இணைய இதழ் ஆசிரியர் பாலு மணிமாறனுக்கும் நன்றி.
அன்புடன்
ஷானவாஸ்
நிகழ்வைப்பற்றி….
மாதவி இலக்கிய மன்றமும், தங்கமீன் இணைய இதழும் இணைந்து, ‘சிங்கப்பூர்த் தமிழ் இதழ்கள் 1875 – 1941′ என்ற தலைப்பில் திரு. பால பாஸ்கரனின் உரை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. பிப்ரவரி 19, சனிக்கிழமை அன்று அங் மோ கியோ நூலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
பாலபாஸ்கரன், தமிழ் ஆய்வாளர், ஊடகவியலாளர் என்ற பன்முகத் தன்மை கொண்ட ஆளுமை. மலேசியாவில் பிறந்த இவர், தற்போது சிங்கப்பூர் நிரந்தரவாசி. மலாயப் பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளர், தமிழ்நேசன் பத்திரிக்கையாளர், சிங்கப்பூர் மலேசிய வானொலிகளின் ஒலிபரப்பு இதழாளர் என்று பலவகைகளில் பங்காற்றியவர்.
1. Malaysian Tamil Short Story: The Historical Development, 1995 (in Tamil)
2. The Malaysian Tamil Short Stories 1930 – 1980: A Critical Study, 2006 (in English)
இவை இரண்டும் பாலபாஸ்கரன் எழுதியுள்ள புத்தகங்கள்
‘சிங்கப்பூர்த் தமிழ் இதழ்கள் 1875 – 1941’ என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரை அமைந்திருந்தாலும், அவரது 3 வருடத்திற்கும் மேற்பட்ட ஆராய்ச்சி என்னவோ சிங்கப்பூர்-மலேசியா ஆகிய இரண்டு நாடுகளையும் இணைத்ததாகவே இருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் சிங்கப்பூரில் 50க்கும் மேற்பட்ட தமிழ் இதழ்களும், மலேசியாவில் 60க்கும் மேற்பட்ட தமிழ் இதழ்களும் வெளிவந்திருப்பதாகச் சொன்னார் பாலபாஸ்கரன். பத்திரிக்கைகளின் எண்ணிக்கை அதிகம் என்றால் என்ன அர்த்தம்…ஆயுசு குறைவு என்று அர்த்தம்… என்று சொல்லிச் சிரித்தார். ஆனால், இந்தியர்கள் இந்தக் காலகட்டத்தில் ஆங்கிலம், சீனமொழி, மலாய் என அனைத்துமொழியிலும் இதழ்களை நடத்தி இருக்கிறார்கள். சிங்கப்பூரில் வெளிவந்த முதல் மலாய் மொழி செய்தித்தாளும், கோலாலம்பூரில் வெளிவந்த முதல் சீனமொழி செய்தித்தாளும் இந்தியர்களால் நடத்தப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் நிகழ்ச்சிக்கு முன்பாகவே பாலபாஸ்கரன் பகிர்ந்து கொண்ட தகவல்கள்.
தங்கமீன் இணைய இதழ் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளைச் சமூக மற்றும் தமிழ் அமைப்புகளின் உதவியோடு தொடர்ந்து நடத்தும் என்று இதழாசிரியர் பாலு மணிமாறன் தமது அறிமுக உரையில் குறிப்பிட்டார். 80க்கும் மேற்பட்ட தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டார்கள். கலந்துரையாடல் நிகழ்ச்சியில், திரு.அருண் மகிழ்நன், திரு.இலியாஸ், திரு.சோதிநாதன், திரு.தென்றல் ரவி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கேள்விகள் கேட்டார்கள். ஊடகத்துறை சார்ந்த பலரும் கலந்து கொண்டார்கள். செவிக்கு உணவோடு, சென்னை தோசை-யின் வயிற்றுக்கு உணவும் சேர்ந்து மகிழ்வளித்த நிகழ்ச்சி இது,
ஒரு அனுபவம் அது முடிந்த பிறகு
சாதாரணமாகிவிடுகிறது
அது நிகழும் நேரத்தில் பிரவாகமாக
சுழற்றி அடிக்கிறது அதை எதிர்கொள்ள
அறிவு எவ்வகையிலும் உதவுவதில்லை
ஒரு தெரு நாய் முறைத்துப்பார்த்தால் கூட
அறிவும் தர்க்கமும் கண நேரத்தில் ஓடி மறைந்து விடுகின்றன
– ஜெயமோகன்
சென்ற மாதம் எனக்கு வேலை ‘பனால்’ ஆன விசயத்தைச் சொல்கிறேன் என்று முடித்திருந்தேன். அந்தக் காரியத்தை செய்த நண்பரின் நண்பர் என்னைத் தொலைபேசியில் அழைத்து, எதுவரை நான் விவரிக்கப் போகிறேன் என்று மிகவும் கரிசனமாக விசாரித்தார். எனக்குள் பல்ப் எரிந்து விட்டது. அந்த மனிதர் ‘தங்கமீன்’ படிக்கிறார், அதிலும் தன் செயல் வெளி உலகுக்குத் தெரியக்கூடாது என்று நினைக்கிறார். சரி, போகட்டும் விட்டு விடுகிறேன்.
நான் மீண்டும் ‘Classified” Job.com’ என்று அலசிக் கொண்டிருந்தேன். நாட்கள் செல்லச் செல்ல, ஏதாவது ஒரு வேலை கிடைத்தால் போதும் என்ற நிலைவந்து விட்டது ஒருநாள் MRT-யில் ‘டோபி காட்’ ஸ்டேஷனில் ஏறி, எந்த ஸ்டேஷனில் இறங்கலாம் என்ற இலக்கில்லாமல் பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தேன். Kathip MRT நிலையத்தில் இருந்து Yio Chu Kang MRT நிலையத்திற்கு இடையில் உள்ள தூரம் துள்ளியமாக 4.84 கிலோமீட்டர். ஆக, அதிக தூரம். டோபிகாட்டிலிருந்து Brash Basha MRT ஸ்டேஷசனுக்கு 552 மீட்டர் தூரம்தான். இது மிகக் குறைந்ததூரம். காத்திப்பிலிருந்து இயோச்சுகாங்கிற்கு செல்லும் தூரத்தில் ஒரு முறைதான் கதவு திறக்கிறது. ஆனால் இந்தத் தூரத்தில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள சர்க்கிள் லைன் MRT பாதை வழியாகக் பயணம் செய்தால், 6 ஸ்டேஷசன்கள் வந்து போகும். ஆறு முறைகள் கதவு திறந்து மூடும். இதுவே வாழ்வின் சந்தர்ப்பங்கள் என்று நாம் எடுத்துக்கொண்டால் சிலருக்கு குறைந்த இடைவெளியில் அதிக வாய்ப்புகளும், சிலருக்கு வாய்ப்புக்கு அதிக தூரத்திலும் கதவுகள் திறக்கும். எனக்கு அப்படி ஒரு கதவு திறந்தது.
கிளீனிங் கம்பெனியில் என்னுடன் வேலை செய்த நண்பர், கிளார்க்கீயில் (Clarke Quay) உணவகம் திறந்திருந்தார். இரவு வேலை. வெளியில் நின்று ஆர்டர் மட்டும் எடுத்துக் கொடுத்தால் போதுமானது.
கிளார்க்கீ சிங்கப்பூர் ஆற்றில் அமைந்துள்ள உல்லாசத்தளம். ‘மெரினா பே’யிலிருந்து ஆற்றில், படகு சவாரி மிகவும் பிரசித்தம். 5 வெள்ளியிலிருந்து 500 வெள்ளிவரை, ஒரே நாளில், உங்கள் பர்ஸின் கனத்தைப் பொறுத்துச் செலவழிக்கலாம். கிளார்க்கீ, இரவு 9-மணிக்கு மேல் வெளிநாட்டுக்காரர்களின் தனி உலகமாக மாறிவிடும். நான் வேலைக்குச் சேர்ந்த உணவகத்தில், பராட்டோவோடு மாமிசம் கலந்து தயாரிக்கப்படும் ‘முர்த்தபாக்’ ஸ்பெஷல். ஒரு முர்த்தபாக் 10-வெள்ளி. ஒரு முர்த்தபாக் ஆர்டர் எடுத்தால், சம்பளத்துடன் ஒரு வெள்ளி கூடுதலாக கிடைக்கும். ஒரே நேரத்தில் அதிக வாடிக்கையாளர்களைத் தன்பக்கம் இழுக்க, ஒவ்வொரு கடைக்காரரும் போட்டி போட்டுக்கொண்டு இருப்பார்கள். அதே நேரத்தில் சுகாதார பராமரிப்பு நிர்வாகம், வாடிக்கையாளர்களை வற்புறுத்தித் தங்கள் கடைக்குள் இழுக்கும் கடை உரிமையாளர்களுக்குத் தண்டனை கொடுத்து விடுவார்கள்.
வருடத்தில் அதிகபட்சம் 12 குற்றப்புள்ளிகள்தான் வாங்க முடியும். ஏற்கனவே நான் வேலைக்குச் சேர்ந்த கடைக்கு 6 குற்றப்புள்ளிகள் கொடுத்திருந்தார்கள். அதனால் வாடிக்கையாளர்களையும் இழுக்க வேண்டும், ஆனால் நாசூக்காகக் கூப்பிடவேண்டும்.
அதனால் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்று கவனித்து, சிங்கப்பூர் பற்றிய வித்தியாசமான செய்திகளைச் சொல்லி, அடுத்த கடைக்குள் அவரின் கவனம் செல்லாமல் பேச்சுக் கொடுப்பேன். ஏதாவது ஒரு பாயிண்டில் “Oh! Is it” என்று ஆச்சர்யக் குறி அவர்கள் காட்டிவிட்டால், ஒரு முர்த்தபாக் ஆர்டர் வாங்கிவிடலாம் என்று அப்படியே தொடர்ந்து காரியத்தை முடித்துவிடுவேன்.
அப்படியான விசயங்கள் என் நினைவில் இன்னும் மாறாமல் இருக்கின்றன
எல்லோருக்கும் தெரிந்த விசயம்தான். அதைக் கொஞ்சம் பில்ட்-அப் கொடுத்து சொல்லும்போது, பார்ட்டி வலையில் சிக்கிவிடும்.ஒரு அமெரிக்கரைப் பார்த்துவிட்டால், ” ஹலோ, குட் ஈவினிங்! உலகின் மிகச் சிறிய 20 நாடுகளில் எங்கள் சிங்கப்பூர் பளிச்சிடும் ஒரு புள்ளி. அது உங்கள் அமெரிக்காவை விட, 15000 மடங்கு சிறியது. ஆனால், எங்கள் கடையின் ‘முர்த்தபாக்’ உங்கள் நாக்கைச் சப்புக் கொட்டி வைத்துவிடும்.” என்று Singlish பாதி English பாதியாக அள்ளிவிடுவேன்
ஒரு நாள், ஒரு வெள்ளைக்காரர், “அது என்ன வாக்கியத்தின் இறுதியில் ‘லா’ சேர்த்து பேசுகிறீர்கள் ? அது என்ன மொழி?” என்றார். நான் அவரிடம், “அந்த வார்த்தை ஆக்ஸ்போர்ட்டு அகராதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. if you have a time check. Lah, Sinshe என்ற வார்த்தைகள் அகராதியில் உள்ளது.” என்றேன்.
கிளார்க்கீயில் ஒவ்வொரு நாளும் வித்தியாசமான நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும். ஒரு முறை ‘Tea Artist’ கஸ்டமர்களின் டேபிளுக்கு 5 அடி தூரத்தில் நின்று கொண்டு, டேபிளில் உள்ள கப்பில் சரியாக தேநீரை ஊற்றி அசத்துவார்கள். இதில் Kung Fu Tea artist சிலர் இருக்கிறார்கள் அவர்கள் கவாத்தெல்லாம் எடுத்து, தேநீரை ஊற்றி அசத்துவார்கள். அன்று ஒரு வெள்ளைக்காரரிடம் முர்த்தபாக் ஆர்டர் எடுத்துவிட்டு, ” தண்ணி தேதாரிக் வேண்டுமா? ” என்றேன். அவர், “அது தேயா, அல்லது சாயாவா?” என்று கேட்டார்.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்த தேயிலையில் தேநீர் தயாரித்தால், அது – தே! சீனாவிலிருந்து இறக்குமதி செய்த தேயிலை என்றால், அது – சாயா! அந்த வார்த்தை, சீன மொழி Chai-யிலிருந்து வந்தது என்று கொஞ்சம் எடுத்து விட்டேன். “ஜீரொங் நீரூற்று பார்த்துவிட்டீர்களா? அது 30 மீட்டர் உயரம். உலகிலேயே ஆக அதிக உயரமுள்ள நீரூற்று.” என்று சொன்னேன்..
புத்தகங்கள் படித்துக்கொண்டிருக்கும் வெளிநாட்டுப் பயணிகளிடம், “சிங்கப்பூரின் பேய்க்கதை மன்னன் ரஸ்ஸல் லீ புத்தகம் படித்திருக்கிறீர்களா? மொத்தம் 11 வால்யூம்கள் வந்திருக்கின்றன. இதுவரை ஆறு லட்சம் பிரதிகள் விற்பனை ஆகியிருக்கின்றன.” என்று பல விசயங்களைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, சிலர் நழுவி விடுவார்கள். சிலர் நின்று நிதானிப்பார்கள்.
இப்படி அறிவு பூர்வமாக நான் ஆர்டர் எடுத்துக்கொண்டிருக்க, என்னுடன் ஆர்டர் எடுத்துக் கொடுக்கும் பெரியவர் ஆபுதீன், ஒரு நாளில் குறைந்தது 15 முர்த்தபாக் ஆர்டர் எடுத்து அசத்திக் கொண்டிருந்தார். என்னுடைய ஸ்கோர் 5ல் நின்றது. நான் எங்கு தவறு செய்கிறேன் அவர் எதில் ஸ்கோர் பண்ணுகிறார் என்று கவனித்தேன். அவர் கஸ்டமரைப் பார்த்தவுடன், “ஹலோ ஜான், ஹலோ பீட்டர், ஹலோ ஆல்பர்ட்” என்று தென்கிழக்கு ஆசியாவை சேர்ந்தவர்களையும், சீனர்களைப் பார்த்தால், “ஹலோ மிஸ்டர் லீ, ஹலோ மிஸ்டர் லிம், ஹலோ மிஸ்டர் டான்” என்று பெயர் தெரிந்தது மாதிரி அவர்களுடைய கலாச்சாரத்தில் அதிகம் வைக்கப்படும் பெயர்களைக் குறிப்பிட்டு கஸ்டமர்களை சிக்க வைத்துவிடுகிறார். அத்தோடு கடையில் வேலைபார்க்கும் ஆக அதிக வயதானவர் என்ற காரணமும் சேர்ந்து கொண்டு, அவருக்கு அதிக மார்க்குகளைக் கொடுத்துவிட்டது.
ஒரு நாள் ஆபுதீன் நானாவை முந்துவதற்குப் பலத்த யோசனையில் இருந்தேன். எதிரில் நின்றுகொண்டிருந்த அவர், “என்ன ரொம்ப தூரம் யோசனை செய்கிறாய்?” என்றார். நான் அவரை மடக்கும் விதமாக, “அது என்ன குறைந்த தூரம் யோசனை? ரொம்பதூரம் யோசனை? யோசனையில் அப்படி இருக்கிறதா?” என்றேன். அவர் சொன்னார், “ஒரு விரல்- 3/8 இன்ச், 6-விரல் – ஒரு சான், 2 சான் – ஒரு முழம், 2 முழம் – ஒரு கோல், 4-கோல்- ஒரு தண்டம், 500 தண்டம் – ஒரு கூப்பிடு, 4 கூப்பிடு – ஒரு காதம், 4 காதம் – ஒரு யோசனை.” என்றார். அடேங்கப்பா பெரிசு பெரிசுதான். ஆனாலும் என் யோசனையைத் தொடர்ந்து கொண்டிருந்தேன்.
வேலையைத் தக்க வைக்கப் பல கரணங்கள் போட்டுக் கொண்டிருந்தேன். கஸ்டமர்களை வலிய இழுப்பது மனதிற்கு மிகவும் சங்கடமாகயிருந்தது.
ஒரு நாள் “Domim Topple” விளையாட்டு நடந்தது. அதில் 2003ல் சிங்கப்பூரில் 24 வயது சீனப் பெண்மணி நிகழ்த்திய சாதனையை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை. அது வேறொன்றும் இல்லை அபூர்வ சகோதரர்கள் படத்தில் டில்லி கணேசனைக் கொல்லக் குட்டை கமல்ஹாசன் பொருட்களைத் தட்டிவிடுவாரே அதுதான்.
அந்த விளையாட்டு நடந்த இரண்டு வாரங்களில் முர்த்தபாக் விற்பனையை இரண்டு மடங்காக்கிச் சாதனை புரிந்தேன் எப்படியென்றால் முர்த்தபாக்கை கோணவடிவில் வெட்டி ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி ஒவ்வொரு அடுக்கிலும் டொமோட்டாசாஸை வட்டமாக ஊற்றி, Domino முர்த்தபாக் என்று ஆர்டர் எடுக்க ஆரம்பித்தேன்
அப்படிச் சாதனை புரிந்தும் வேலை பனால் ஆகிவிட்டது. கிளர்க்கியீ புதுப்பிப்பு பணிகளுக்கு 3 மாதம் மூடியதால் அந்த வேலை முடிவுக்கு வந்தது. அடுத்தவேலை நான் தொழிலில் கால் ஊன்றுவதற்கு ஒரு கதவைத் திறந்தது.
thanks: http://thangameen.com/Archieves/ContentDetails.aspx?tid=192&iid=33
தை முதல் நாள் பதியம்
வயல்வெளிகளில் நெல்மணிகளின் சலசலப்பிடையே
பானைகளை சூரியனில் சூடேற்றி
தை மாதத்தின் பிறப்பினை சென்ற வருடம்
உன்னுடன் கொண்டாடிய நினைவுடன் நான்
உன் கைபேசி அழைப்புகள் கரும்புச் சாற்றைவிட
ஏனோ இன்று அதிகம் தித்திக்கிறது
சர்க்கரை பாகில் வெந்த அரிசிகளை
வெள்ளைப் பூவாய் எடுத்து நீ பறிமாறிய
சூடு இன்னும் தனியாமல் வேகிறது
சிங்கையில் விளையாத கட்டிடங்களிலிருந்து
வளையாத (தங்கக்) காப்பு வாங்க பதியம் போட்டிருக்கிறேன்
உன் மருதோன்றிக் கைகளில் மறைந்துள்ள எனக்கு
சாஸ்திரக் குறிகளை மட்டும் குறுஞ்செய்தி அனுப்பு
+++++
மின்னல் கீற்றுகள்
நிலம் விட்டு நிலம் பறந்து வந்தேன்
மேகங்கள் திரளாத என் நிலத்தின் கீழிருந்த நான்
விளையாத பயிர் கனவினை மூடிவிட்டு
கட்டிடங்கள் முளைத்த அயல்தேசம் கண்டேன்
எங்கும் இயந்திரங்கள் பெருத்த ஓசைகள்
தங்கச் சுரங்கத்தின் வாயில்களில்
உயிர்ப்புடன் நடமாடும் மனிதர்கள்
நான் என் நிலத்தின் கருணையை நினைத்தவாறிருந்தேன்
காடுகளின் உரையாடலில் என் உயிரின்
இலைகள் துளிர்த்து பூக்களை சூடுகின்றன
வலியெடுக்கும் என் கைகள் நீவும் டாலர்கள்
என் நிலத்தின் மனிதர்களுக்கு வருணபகவானாகின்றன
பொய்த்த மனிதர்களில்லா எந்த பூமியும் பொய்ப்பதில்லை
ஒரு இரவிலோ பகலிலோ
நான் என் நிலம் திரும்பும் சமயம்
கருணை கொண்ட மின்னல் கீற்றுகள்
கொஞ்சம் மேகத்தை துளைக்கட்டும்
நன்றி :தமிழ் முரசு (சிங்கப்பூர்)
© அப்துல்காதர் ஷாநவாஸ்
கடந்த ஞாயிறு ‘03.10.2010’ அன்று சிங்கப்பூரில் புதிய இணைய இதழ் ‘தங்கமீன்’ துவக்கி வைக்கப்பட்டது.
விழா கச்சிதமாக நடந்தது. திரு விசயபாரதி விழாவை வழிநடத்தினார், கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது நிகழ்வு 10 நிமிட தாமதத்தில் முன்னேறிக்கொண்டிருக்கிறது என்று அவ்வப்போது பேச்சாளர்களின் நேரத்தை ஒட்டி அறிவிப்பு செய்தது ரசிக்கும்படி இருந்தது. எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் பேசும்போது விக்கிபீடியாவில் குறைந்த மக்களே பேசக்கூடிய மொழிக் கட்டுரைகளை ஒப்பு நோக்க தமிழில் கட்டுரைகள் குறைவாகப் பதிவு செய்யப்படுகின்றன என்றார். திரு சுப. திண்ணப்பன் விண்மீன் கடல்மீன் தரையில் தங்கமீன் என்று வர்ணித்து, இந்த தங்கமீன் மனதில் தங்கவேண்டும் என்றார். திரு அழகியபாண்டியன் அதிகப்படியான உள்ளடக்கங்களை தொடர்ந்து கட்டிக்காக்க இயலுமா என்று கேள்வி எழுப்பித் தொடர்ந்து பாலுமணிமாறன் கட்டிகாப்பார் என்றார். திரு.செ.ப.பன்னீர்செல்வம் இணைய பத்திரிகை ஆரம்பிக்க தகுந்த சூழல் சிங்கப்பூரில் இருந்தபோதும் இதோ அதோ என்று சொன்னார்கள். ஓரான் லாவா ச்ககாப் சக்கப் தற்போது பாலு அதை நிறைவேற்றிக் காட்டிவிட்டார். நம் சந்ததிகளுக்கு நாம் எதையாவது கொடுத்துவிட்டுச் செல்ல வேண்டும் சரிதானே என்றார். திரு ஜோதிமாணிக்கவாசகம் வாள்முனையை விட பேனா முனை கூர்மையானது என்று சொல்வார்கள் இப்போது எலியின் சிணுங்கல் அதைவிடக் கூர்மையாகிவிட்டது என்றார். திரு.ராம.கண்ணபிரான், ரத்தினசபாபதி, சபா ராஜேந்திரன் மற்றும் தொலைக்காட்சி நடிகர் மதியழகன், நல்லு தினகரன் ஆகியோர் வாழத்திப்பேசினர்.
சிறப்புரை ஆற்றிய திரு அருண்மகிழ்நன் -கொள்கை ஆய்வுக் கழகத் தலைவர்- தன்னுடைய 10 வருடக் கனவை திரு.பாலுமணிமாறன் நிறைவேற்றி விட்டதாகச் சொன்னார். குழுக்களுக்குள்ளும் உள் வட்டங்களிலும் இதை அடக்கி விடாமல் சிங்கப்பூரிலுள்ள பல ஊடகங்களின் செயல்பாட்டுத் தளமாக இது விளங்க வேண்டும் என்றார்.
தனக்கும் 10 வருடக் கனவு இது என்ற எழுத்தாளர் கழகத் தலைவர் ஆண்டியப்பன், அருண் மகிழ்நன் இருவரும் இணைய இதழை துவக்கிவைத்தனர்.
சிங்கப்பூர் ஊடகங்களில் கேளிக்கைகளுக்கும் நுகர்ப் பொருட்களின் மீதான வேட்கைக்கும் அப்பால் என்ன இருக்கிறது என்று http://www.thangameen.com கிளிக் செய்யக் கூட்டத்தினர் ஆர்வத்துடன் பரபரத்தார்கள்.
வழக்கம்போல திரு சாரு அவர்களின் கட்டுரைக்கு எதிர்வினையுடன், ‘தங்கமீன்’ சிணுங்க ஆரம்பித்துவிட்டது.
http://thangameen.com/ContentDetails.aspx?tid=39
thanks:தங்கமீன்.com & உயிரோசை.com
நாட்குறிப்பு எழுதுவது அந்தரங்கமானது ஆனால் ஆபத்தானதும் கூட ஏனெனில் அதை யாராவது படித்துவிட்டால்… என்ற பயம் இருந்து கொண்டேயிருக்கும் எனக்கு ஒரு வித்தியாசமான பழக்கம் சிறுவயதிலிருந்தே தொத்திக் கொண்டது நாட்குறிப்பு எழுதுவதோடு அதில் முக்கியமான நிகழ்வுகள் அனுபவங்களை சிவப்பு மையால் அடிக்கோடிட்டு “ஹைலைட்” பண்ணுவது அத்தோடு இன்னொரு 10 வருடங்களுக்கு பிறகு அந்த நிகழ்வுகளில் ஏற்படப் போகும் மாற்றங்களை கற்பனையாக கிறுக்கி வைப்பது இந்தப் பழக்கம் என் பள்ளி சரித்திர ஆசிரியர் ஆரம்பித்து வைத்தது இன்னும் தொடர்கிறது…
நாமெல்லாம் காலம் என்ற நதியில் பயணித்துக் கொண்டிருக்கிறோம், இறந்த காலம் பின்னால் இருக்கிறது எதிர் காலம் முன்னால் நிற்கிறது இறந்தகாலத்தை முன்னே ஓட்டிவிட்டு பின்னர் வரும் எதிர்காலத்தை இப்போதே கணித்து கற்பனை செய்யும் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள் என்று அடிக்கடி சொல்வார். கால வெள்ளத்தை அவ்வப்போது பத்திகளாக்கிய என் நாட்குறிப்புக்களை எடுத்துப் பார்த்ததில் புத்தகங்கள் மூன்று கரையுள்ள ஆறு என்று தேவதச்சன் சொல்வாரே அதைவிட நாட்குறிப்புக்களில் எத்தனை கரைகள் இருந்திருக்கின்றன கற்பனையையும் தாண்டி என்னவெல்லாம் நடந்து முடிந்திருக்கின்றன. 1980 களுக்குப் பிறகு நாட்குறிப்புக்களுக்கு மவுசு குறைந்துவிட்டது பேஸ்புக்கும் இ-டைரியும் காப்பி பேஸ்ட் பண்ணி உண்மையான பதிவு உணர்வுகளை மறக்கடித்துவிட்டது. 1980க்கு முன்னால் என் நாட்குறிப்பில் பதிவாகிய சிலவற்றையும் 2009ல் அவைகள் தந்த அனுபவங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
04-10-1978
என் சரித்திர ஆசிரியர் திரு.பாலகுருசாமியும் அப்போதைய புத்தாக்க இயக்குநர் மகேந்திரனும் நண்பர்கள் ஸ்டுடன்ஸ் இன்று அவரவர் டைரிகளில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் இந்த பாலகுருசாமி இன்னும் 10 வருடங்களில் டைரக்டர் மகேந்திரனுடன் இணைந்து சினிமா உலகில் பேசப்படும் நபராக இருப்பான் சிவப்பு மையில் தேதி போட்டு குறித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்.
1985 கடந்துவிட்டது அப்படி எதுவும் நடந்து விடவில்லை ஆனால் அவர் ஆசிரியர் வேலையிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். நான் கல்லூரியில் சேர்ந்தவுடன் விடுதி கலை விழாவுக்கு இயக்குநர் மகேந்திரன் சிறப்பு விருந்தினராக அழைத்து வருவதற்கு ஓர் அறிமுகக் கடிதம் கொடுத்தார். நானும் நண்பர் அன்வர் மரைக்காயரும் சென்னையில் இயக்குநர் மகேந்திரன் வீட்டை கண்டுபிடித்து கதவைத் தட்டினோம் ஆனாhல் அவர் வெளியூர் சென்றிருப்பதாகச் சொன்னார்கள் பக்கத்தில் நடிகை லட்சுமி வீடு அவர் வீட்டில் இருந்தார் மகேந்திரன் வருவதற்கு இன்னும் ஒரு மாதம் ஆகும் என்று சொன்னார் எங்களுக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா பள்ளிமுடித்து வீட்டிற்குள் நுழைந்து ‘சூ’-வைக் கழற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாய் தூக்கி எறிந்தார் அதுவரை என் குறிப்புக்கள் துல்லியமாக இருந்தன.
சிவப்பு மையில் நடிகையின் மகள் நடிகையாவாரா? என்பதை “ஹைலைட்“ பண்ணியிருந்தேன் அது பலித்தது.
கல்லூரியில் நடிகர் நடிகைகளை அழைத்து நிகழ்ச்சி நடத்துவதைவிட புதிய இயக்குநர்கள், கவிஞர்களை அழைத்து வருவதற்கு வரவேற்பு ஆரம்பித்த காலம் அது. நாங்கள் இயக்குநரை முயற்சித்து இயலவில்லை கவிஞர் கண்ணதாசனை கல்லூரிக்கு அழைத்து வர முடிவு செய்தோம்.
கண்ணதாசனை கூட்டி வருவதற்கு நேரே சென்றுவிடாதீர்கள் எனது நண்பர் கவி கா.மு.ஷரிப்பை சந்தித்து அவரிடம் ஒரு அறிமுகக் கடிதம் வாங்கிச் செல்லுங்கள் என்றார் எங்கள் விடுதிக் காப்பாளரும் தமிழ்துறைத் தலைவர் புலவர் நெயினார் முஹம்மது.
கவிஞர் கா.மு. ஷரிப் வீட்டைத் தேடிப்பிடித்து உள்ளே நுழைந்தோம் முன் வராண்டாவில் கை பம்பில் தண்ணீர் அடித்துக் குடத்தில் நிரம்பியவுடன் குளியலறைக்கு உள்ளே செல்வதும் வருவதுமாக குளித்துக் கொண்டிருந்தார் கவி ரத்னம், கவிச் செல்வம் கவிக்குரிசில், கவிராயர் கவி நாயகம், கவிதை ஞானி செந்தமிழ்ச் செல்வர் என்ற பட்டங்களை பெற்றவர் வாழ் நாட்களில் பாரதி, பாரதிதாசன் மரபில் உலவி தமிழ் மரபு இஸ்லாமிய மரபு இரண்டையும் சிறப்பித்தக் கவிஞன் வெகு இயல்பாக கொஞ்சம் எனக்காக காத்திருங்கள் என்றார். (அவருடைய பட்டங்கள் திரு.ஜெ.எம். சாலி எழுத்துக் குறிப்புக்களிலிருந்து என் நாட்குறிப்பில் மறு பயனீடு செய்யப்பட்டவை).
“சினிமா நடிகர், நடிகைகளைத்தானே கல்லூரி விழாவுக்கு அழைப்பீர்கள் வித்தியாசமாக கவிஞரை அழைக்க வந்திருக்கிறீர்கள்?’’ ‘’எனக்கு. கவிதைகளில் விருப்பம் அதிகம்’’ என்று நான்தான் வாய் திறந்தேன் நண்பர் அன்வர் மரைக்காயர் அன்றைய தினம் ரிலிஸான சினிமாவை பார்க்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார் எங்கே ஒரு மரபுக் கவிதை சொல்லுங்கள் பார்க்கலாம் என்றார். “ எழுதிய கவிதைகளில் யாப்பு தளை எல்லாம் பிரித்துச் சொல்ல முடியும் ஆனால் தானாக இன்னும் எழுதவரவில்லை என்றேன். நல்ல வேளை அத்தோடு என்னுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார் ஒரு நீண்ட அறிமுகக் கடிதம் எழுதி கண்ணதாசன் உதவியாளரிடம் கொடுக்கச் சொன்னார். சிவப்பு மையில் ஒரு செய்யுள் எழுதி கவி.கா.மு.விடம் பாராட்டுப் பெற வேண்டும் என்பது என் அன்றைய பதிவு.மரபுக் கவிதைக்கும் புதுக் கவிதைக்கும் பொது நிகழ்ச்சிகளில் உரசலாக இருந்த 1980 காலகட்டம் மு. மேத்தா செல்லும் இடங்களிலெல்லாம் மாணவர்களின் உள்ளங்களில் பவனிவர ஆரம்பித்த காலம்.
இலக்கணம் செங்கோல்
யாப்பு சிம்மாசனம்
எதுகைப் பல்லாக்கு
தனி மொழிச் சேனை
பண்டித பவனி
இவை எதுவுமில்லாத
கருத்துக்கள் தம்மைத் தாமே
ஆளக் கற்றுக் கொண்ட புதிய
மக்களாட்சி முறையே புதுக் கவிதை.
என்ற பழக்கத்தில் அன்றைய வயதும் இளமையும் மயங்கிக் கிடந்தது நான் கவி.கா.மு.ஷரிப் அவர்களை சந்தித்தபோது அவர்கள் வள்ளல் சீதக்காதி வரலாற்று நூலை எழுதிக் கொண்டிருந்தார்கள்.
என் மரபுக் கவிதை முயற்சிகளெல்லாம் வெற்றிபெறவில்லை 1994 ல் கவிஞர் காலமாகிவிட்டார்கள்.
Oct 1978
மாணவர்கள் அந்தந்த காலக் கட்டங்களில் உயரிய மனிதர்களிடம் முன்னுரிமை பெறத் தவறுவதில்லை, எங்களுக்கு முன்னால் பார்க்கக் காத்துக் கிடந்தவர்களை அமரச் சொல்லிவிட்டு எங்களை வந்து பார்த்தார் கவியரசு தோளோடு தோள் என்னை அனைத்துக் கொண்டார் எப்போதுமே அவர் பாடல்களை முணுமுணுத்த வண்ணமிருந்தார், அப்போது அவர் அரசவைக் கவிஞராக இருந்தார் வீனாக செலவு வேண்டாம் அரசுக் காரிலேயே திருச்சி வருவதாகச் சொல்லிவிட்டார் உங்கள் கல்லூரியின் ஸ்தாபகர் பற்றி நான் ஒரு கவிதை பாடியிருக்கிறேன் தெரியுமா? என்றார். கண்ணப்பா “இன்னும்போ“ ‘இன்னும்போ” என்று குறிப்புப் புத்தகத்தை புரட்டச் சொல்லிக் கொண்டிருந்தவர் அந்தப் பாடலைப் பார்த்தவுடன் தானே ஒருமுறை படித்துவிட்டு எங்களிடம் தந்தார்கள் அதை நான் என் நாட்குறிப்பேட்டில் விறு விறுவென்று எழுதினேன்.
“சேர்த்துக் காத்து செலவு செய்கின்றதோர்
ஆக்க வழியை அறிந்தவர் வள்ளல்
ஜமால் முஹம்மது தழிழ் மக்களின்
கல்விப் பசிக்கு கனிகள் கொடுத்தவர்
ஊரணிபோல் உலகம் முழுவதும்
உண்ணக் கிடைப்பது உயர்ந்தோர் செல்வம்”
அப்போது அவர் அரசவைக் கவிஞராக இருந்தார் கல்லூரியின் விடுதி விழாவிற்கு வர சம்மதித்தது எங்களுக்கு மகிழ்ச்சியாகவும் இன்னொரு பக்கம் எனக்கு ஆச்சரியமாகவும் இருந்தது அதற்கான அடையாளம் நான் அவரைக் கவிதா ஓட்டலில் தங்கவைத்து விட்டுத் திரும்பும்போது தெரிந்து கொண்டேன். அவர் அப்போது யேசு காவியம் எழுதி முடிக்கும் தருவாயில் இருந்தார். அடுத்து திருகுர்ஆனை மொழியாக்கம் செய்யும் எண்ணத்தில் முஸ்லிம் அறிஞர்களிடையே கருத்துக்களை கேட்டுக் கொண்டிருந்தார் அதற்கான வாய்ப்பாக அந்த விழாவை பயன்படுத்திக் கொண்டார், அவரை சந்தித்து உரையாடி மகிழ்ந்த நாட்கள் அனைத்தும் என் நாட்குறிப்பில் சிவப்பு மை கோடிடப்பட்டு இன்னும் மறையாமல் இருக்கின்றன. கவிஞரும் தன்னுடைய நாட்குறிப்பில் யேசு காவியத்துக்கு பிறகு திருக்குர்ஆன் வசனங்களை மொழியாக்கம் செய்வதென்று ஹைலைட் செய்து கொண்டு விடாப்பிடியாக இருந்தார் என்பது அந்த நாட்களில் அவர் திருச்சியில் சந்தித்த முக்கிய பிரமுகர்கள் மூலம் தெரிந்து கொண்டேன், அவர் ஆரம்பித்து தொடர முடியாமல் விட்டு போன செய்திகளை சாயபு மரைக்காயர் அவரைப்பற்றித் தொகுத்த குறிப்புக்களிலிருந்து என் நாட்குறிப்பில் பதிய வைத்தேன்.
திருக்குர்ஆனின் முதல் அத்தியாயம்
‘அல்பாத்திஹா’ அல்லது தோற்றுவால் என்றழைக்கப்படும் இறைவனின் அருமை பெருமைகளை எடுத்துரைக்கும் இந்த அத்தியாயம் அரபு மொழியில் ஏழு வசனங்களைக் கொண்டதாக இருக்கிறது.
அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமின்
அர்ரஹ்மான் நிர் ரஹிம்
மாலிக்கி யவ்மித்தீன்
இல்யாக்க நஹ்மது வ இல்லாக்க நஸ்தகீன்
இஹ்தி நஸ் ஸிராத்துல் முஸ்தகீம்
ஸிராத்தல்லதீன அன் அம்த அலைஹிம் ஹைரில்
மஹ் லீது அலைஹீம் வலன் ஸல்லின்
25 அரபி சொற்களில் அமைந்துள்ள இந்த ஏழு வசனங்களையும் மனனம் செய்யாத முஸ்லிம்களே உலகில் இல்லை.
அல்பாத்திஹா எனப்படும் இதன் அரபி மூலத்தை தமிழாக்கமாக்கி கவியரசர் கண்ணதாசன் ‘திறப்பு’ என்ற தலைப்பில் மொழியாக்கமாக தந்துள்ளார்.
திறப்பு-
எல்லையில்லா அருளாளன்
இணையில்லா அன்புடையோன்
அல்லாவைத் துணை கொண்டு
ஆரம்பம் செய்கின்றேன்
உலகமெல்லாம் காக்கின்ற
உயர் தலைவன் அல்லாவே
தோன்று புகழ் அனைத்திற்கும்
சொந்தமென நிற்பவனாம்
அவன் அருளாளன்
அன்புடையோன்
நீதித் திருநாளின்
நிலையான பெருந்தலைவன்’’
மொழியாக்கத்திலுள்ள இனிமையும், எளிமையும் முஸ்லிம் அறிஞர்களிடையே வரவேற்பை பெற்றாலும் அவர் தனி மனித ஒழுக்கத்தில் குடிக்கு அடிமையாக இருந்ததால் எதிர்ப்புக் கிளம்பியது அதன்பிறகு மேலும் அவர் தொடராமல் சென்றுவிட்டார்-
Sep- 1979
தி.மு.க மாணவர் சேர்ப்புத் திட்டத்தில் கலந்து கொள்ள நானும் என் நண்பர் ராகாமுஹம்மதுவும் சென்றிருந்தோம் கலைஞரும், பேராசிரியரும் உள்ளே நுழைந்தவுடன் கல்லூரி வாரியாக கணக்கெடுத்தார்கள்.
கலைஞர் கூட்டத்தை ஒருமுறை நோட்டமிட்டார் எல்லோரும் குறிப்பேடு பேனா கொண்டு வந்திருக்கிறீர்;களா? என்றார்இ பாதிப் பேருக்கு மேல் குறிப்பேடு கொண்டு வரவில்லை, பேனா மீதிப்பேரிடம் இல்லை. “இது நாடகமோ, கலைக் காட்சியோ, சினிமாவோ அல்ல பணி மாணவர் பயிற்சிப்பட்டறை குறிப்பேடு இல்லாதவர்கள் வெளியில் சென்று வாங்கி வாருங்கள் என்றார்.
கறாராக சொல்லி விட்டார், பேராசிரியர் அவரை அமைதிப்படுத்திவிட்டுக் கூட்டத்தை தொடர்ந்தார். சிவப்பு மையில் 10 வருடங்களில் பேராசிரியர் தனிக்கட்சி அல்லது கட்சி மாறுவார் என்று எழுதியிருந்தேன்.
அப்படி எதுவும் நடக்கவில்லை இருவரும் தோழமையுடன் இன்றும் தொடர்கிறார்கள்.
Aug-2009
அனுபவங்களின் சுவைகள் எல்லையற்றவை வாழ்க்கை மாறும் தோறும் வண்ணங்கள் மாறுகின்றன. பள்ளிப் பருவத்தில் நம் முன்னே காட்சியளித்த பாவாடை தாவணி இப்போது அரைக் கிழவியாக நிற்கும்போது அனுபவத்தின் விசித்திரம்தான் என்ன!
காகிதத்தின் மீது நான் பதிவு செய்தவை வயதாகிவிட்டதே ஒழிய அந்தந்த காலங்களில் எப்படியெல்லாம் கிளர்ச்சியுறச் செய்தன என்ற நினைப்பு, எட்டுப் புறமும் எல்லைகள் கடந்து ஓடுவது எல்லோருக்கும் என்றும் ஏற்படும் அனுபவம்தான்.
போதுமான வாழ்க்கை அனுபவங்களும் பொதுவான உலக ஞானமும் பிரித்து அறிவதற்கு வாய்ப்புத் தரும் கல்வியுமுள்ள பொறுப்புணர்வு கொண்ட ஒரு தலைமுறை இப்போது உருவாகி வருகிறது. அந்தத் தலைமுறையின் “ஸ்டெர்ய்ட் டைம்ஸில் “ ஒரு கட்டுரை படித்தேன் சிங்கப்பூர் தேசிய தினத்தில் 10-08-2059-ல் என்னென்ன சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கும் என்ற கற்பனை இது கிட்டத்தட்ட என்னுடைய சிவப்புமை நாட்குறிப்பு போன்றே சுவாரஸ்யமாக இருந்தது.
1. நிலவுக்குச் செல்லும் முதல் சலுகை விமானக்
கட்டணம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
அறிவித்திருக்கும்.
2. ஒரு ‘A” ஸ்டார் விஞ்ஞானி சுற்றுச் சூழலில் முதல் நோபல் பரிசை வென்றிருப்பார்.
3. 6 அந்நிய மொழிகளில் முதுநிலைப்பட்டத்தை அறிமுகப்படுத்தி சிங்கப்பூர் பல்கலைக்கழகம் கின்னஸ் சாதனை புரிந்திருக்கும்.
4. குளோனிங் மூலம் பிறந்த ஆமெங் III மனிதக் குரங்கு பொதுவான மொழியில் ஐந்து நிமிடங்கள் ஐரோப்பியருடன் உரையாடல் நிகழ்த்தியிருக்கும்.
இப்படியே புனைவாக சாதனைகள் தொடர்கின்றன எனக்கு இவைகள் அ-புனைவாகத் தோன்றுகின்றன- ஆழமான வேர்களைக் கொண்டிருப்பதால்தான் சிங்கப்பூர் விருட்சமாக வளர்ந்து நிற்கிறது. இவையெல்லாம் சாத்தியமானவைகள்தான் எட்டக்கூடிய கனிகள்தான் எழுதும் பழக்கத்தையே கிட்டத்தட்ட கைவிட்டு விட்ட இளைய தலைமுறை சிங்கப்பூரின் அடுத்த 50 ஆண்டுகால தொடக்கத்தை ஓட ஆரம்பிக்கும் முன்பாக கடந்த 50 ஆண்டுகளின் பாதைகளில் பயணித்து வந்தவர்களின் அனுபவங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அநேகமாக அவர்களிடம் சிவப்பு கோடிட்ட பக்கங்கள் கொண்ட நாட்குறிப்புக்கள் இருக்குமென்றே நம்புகிறேன்.
நன்றி: நாம் காலண்டிதழ்
ஓவியம்: உமாபதி
முரட்டுமனக் குதிரையை எளிதில் கொன்றுவிடலாம்
ஆனால் அதைக் கட்டுக்குள் கொண்டுவந்து
காரியம் நிகழ்த்துவதற்கு
இந்த விழித்திருப்பவரின் இரவுதான்
பயிற்சி கொடுக்கிறது…
நடு நிலையை அசைத்துப் பார்க்கும்
மயக்கும் தேவைகள்
மண்டியிட வைக்கும் இச்சைகள்
உள்ளத்தை குலைக்கும் உணர்வுகள்
இவைகள் பசியால் பாடம் படித்து
பச்சிளம் குழந்தையாய் பண்பாடு காக்கின்றன
பலவீனமான சுயத்திற்கு
இங்குதான் பரிட்சை வைக்கப்படுகின்றது
அதி ருசிகளை பழகிய நாவு அடக்கி ஆளப்படுகின்றது
தாகத்தின் சுவையும் பசியின் புரிதலும்
நாவுகளுக்கு இங்குதான் அறிமுகமாகின்றன
பசியின் ஆழ்கடல் அரன்சூடி நிற்கிறது
பட்டினி ஆயுதத்தால் பாவங்கள் அழிக்கப்படுகின்றன
இந்த உணவு மேஜையில் அச்சம் கோபம் பொறாமை என்று
வெந்து முடிந்த பதார்த்தங்களும்
கருகிப்போன ஆசைகளுக்கும்
நீராவியாகவிட்ட நம்பிக்கைகளுக்கும்
இடமில்லாமல் போகிறது
அறிவுக்கும் ஆன்மாவுக்கும்
வேகைவைத்த கூட்டு வறுத்த
சகிப்புத் தன்மைகள் சரிபாதியாய் பரிமாறப்படுகின்றன
நன்மைகள் அதிநன்மைகள் அடைகின்றன
தீமைகள் சம்மமட்டி அடி அடிக்கப்பட்டு
தட்டி நிமிர்த்த்து நன்மை பக்கமாய் நகர்த்தி வைக்கப்படுகின்றது
ஓங்கிக் சாத்தப்பட்ட நகரத்தின் கதவுகள்
ஆள் அரவமற்று அநாதையாய் நிற்கின்றன
உடைந்த பானையிலிருந்து ஒழுகிக் கொண்டிருக்கும்
இந்த ஆயுளை அர்த்தமாக்கிக்கொள்ள
இந்த பூக்காத மலர் சுரக்கும் தேனுக்காக
நெரிசலில் காத்திருக்கும் மனிதக்கூட்டம்
இன்னும் நீண்டு கொண்டேயிருக்கிறது
ஈத் முபாரக்….
நன்றி: ஒலி 96.8
சுனை மடி
1)
சுழலும் நாற்காலியில் சுற்றினால்
உலகமே சுற்றும் என
அவள்தான் முதலில் சுற்றிக்காண்பித்தாள்
நெல்லிக்கனி தின்று தண்ணீர் குடித்தால்
இனிக்கும் என்று ரகசியம் சொல்லிவைத்தாள்
அவள் கைபிசைந்து ஊட்டிய
”நாஸிலெம்மா” கோழி இப்போது
எந்தக் கடையிலும் கிடைப்பதில்லை
கொரியா துப்பாக்கியால் சுட்டால் மட்டுமே
உதட்டுச் சாயம் வரைந்து
நாக்கு நீட்டி செத்துப்போவாள்
எங்கிருப்பாள் எப்படியிருப்பாள்
அல்லது இருக்கிறாளா
அவள்முகவரியை அம்மா எங்காவது
எழுதி வைத்திருப்பாள் என்று தேடினால்
அமுதா அக்கா முகவரி மட்டும் காணப்படவில்லை
அனைத்துமே பணிப்பெண் என்றே குறிக்கப்பட்டிருந்தது
2)
வெளிச்சம் சேமித்த இரவு
பொழுதுகளோடு நாம் புரிந்த
யுத்தங்களையெல்லாம் முடித்துவிட்டு
இங்குதானே இளைப்பாறுகிறோம்
இந்த நிழலின் இடுக்குகளில்தான்
எங்கோ சிறையிருக்கிறது
நாளையின் விடியல்
இங்கு அடித்த மின்னலில்தான்
காலையில் காளான்கள் முளைக்கின்றன
கூவிக் கொண்டிருக்கும் குயிலையும்
உறுமிக் கொண்டிருக்கும் சிங்கத்தையும்
இங்குதானே கட்டிப் போடுகிறோம்
இங்கு நிலாப்பால் குடிப்பவர்க்கு
நித்தமும் விடிகிறது
மனப்பால் குடிப்பவர்க்கோ
இரவுகள் நீண்டு கொண்டேயிருக்கின்றன.
நன்றி: உயிரோசை (www.uyirmmai.com/Uyirosa)