Archive for the ‘uyirmmai.com’ Category

 

விமான நிலையம் புறப்பட ஆயத்தமாகும்போது இனிமேல் இந்தியப் பணம் தேவையிருக்காது என்று மீதமிருக்கும் நோட்டுக்களை நண்பர்களிடம் கொடுத்துவிட்டு வருவது என்னுடைய பழக்கம். இந்த முறை நண்பன் விஜயன் ‘ஒரு 500 ரூபாய்தான், எதற்கும் வைத்துக்கொள். உள்ளே சென்றவுடன் உனக்குத் தேவைப்படும்’ என்றான்.

கஸ்டம்ஸில்…

‘‘அட்டைப்பெட்டியில் என்ன இருக்கிறது?’’

‘‘இடியாப்பமாவு’’ என்றேன்.

“இதெல்லாம் சிங்கப்பூரில் கிடைக்காதா?” கேள்வி மேலிருந்து கீழாகப் பார்த்துவிட்டு, ‘‘ஏதாவது இருந்தால் கொடுத்துவிட்டுப் போங்கள்.’’ சட்டம் கை நீட்டியது.

 

சட்டத்திற்குப் புறம்பான காரியங்களை மட்டும் செய்ய லஞ்சம் கொடுப்பது தற்போது நிலைமை. மாறாக சட்டப்படியும் லஞ்சம் வாங்கலாம் என்று லஞ்சத்தின் உருவமே இப்போது மாறிவிட்டது.

சிங்கப்பூரில் குறிப்பிட்ட வேக அளவுக்கு மேல் கார் ஓட்டியதற்காக வழி பறித்த போக்குவரத்து போலீஸிடம் “வெள்ளிதானே கொடுக்கக்கூடாது. மலேசியாவுக்கு வாருங்கள், வேண்டிய உதவிகளைச் செய்கிறேன். இப்போது நான் அவசரமாகப் போக வேண்டும்” என்று சொன்ன மலேசியத் தொழில் அதிபர் லஞ்சம் வாங்க அதிகாரியைத் லஞ்சம் வாங்கத் தூண்டினார் என்று தண்டனை விதிக்கப்பட்டு கம்பி எண்ணினார்.

ஒன்வேயில் சைக்கிள் ஒட்டியதற்காகப் பிடிபட்ட கருப்பசாமி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு “ஸார், 20 வெள்ளி வைத்துக்கொள்ளுங்கள்” என்று போலீஸ்காரர் சட்டைப் பையில் வைத்தார். மேலும் இரண்டு பிரிவுகளில் சேர்த்து வழக்குப் போட்டு உள்ளே தள்ளிவிட்டார்கள். இந்தியாவில் இதுமாதிரி சட்டத்தைக் கடுமையாக்கி தண்டனைகள் கொடுக்க முடியாதா என்று பேசிக் கொண்டிருந்தபோது ஒரு அறிவுஜீவி நண்பர் சொன்னார். ‘இந்தியா என்ன 5 மில்லியன் மக்கள் தொகையுள்ள சின்ன நாடா?’

‘அமெரிக்கா, இந்தோனேஷியா, பிரேசில், பாகிஸ்தான், பங்களாதேஷ், ஜப்பான் இந்த ஆறு நாடுகளின் மக்கள் தொகை மொத்தம் 1.21 பில்லியன்.

2011 சென்சஸ்படி இந்தியாவின் மக்கள் தொகை 1.21 பில்லியன். நீங்கள் சொல்வதெல்லாம் நடக்கிற காரியமா?’ என்றார். அப்பெடியெனில் சென்னையை சிங்கப்பூர் ஆக்குவேன், விருத்தாசலத்தை சிங்கப்பூர் ஆக்குவேன் என்று ஏன் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள் என்றவுடன் நண்பர் அர்த்தத்துடன் சிரித்தார்.

ஒவ்வெரு வருடமும் உலகின் ஊழல் மலிவு சுட்டெண் (1000uption porception index) ஜெர்மனியைத் தளமாகக் கொண்ட நிறுவனம் சர்வே செய்து வெளியிடுகிறது. உலக வங்கியின் சர்வேக்கு கிட்டத்தட்ட நிகரானது.

2010ல் சிங்கப்பூர் 1.07 பெற்று உலகில் ஊழல் ஒழிப்பில் முதலிடம்

ஹாங்காங் & 1.89

ஆஸ்திரேலியா & 2.40

அமெரிக்கா & 2.89

ஜப்பான் & 3.99

தென்கொரியா & 4.64

மக்காவ் & 5.84

சைனா & 6.16

தைவான் & 6.47

மலேசியா & 6.70

பிலிப்பைன்ஸ் & 7.00

வியட்நாம் & 7.11

இந்தியா & 7.21

இந்தோனேஷியா & 8.31

சிங்கப்பூரில் ஊழல் ஒழிப்பு திடீரென்று வந்துவிடவில்லை. சுகந்திரம் பெற்று 1959 லிருந்து 1990 வரை திரு.லீகுவான்யூ பிரதமராக இருந்தார். சுமார் அரை நூற்றாண்டுகளாக மக்கள் செயல் கட்சியே ஆட்சியிலிருக்கிறது. தன்னுடைய முதல் கொள்கையாக ஊழல் ஒழிப்பை முனைந்து 1970 லிருந்தே லீ செயல்படுத்த துவங்கினார். அந்தக் கால கட்டத்தில் ஊழல் ஒழிப்பின் அங்கமாக அரசாங்க ஊழியர்கள் சம்பளம் அவ்வளவாக உயர்த்தப்படவில்லை. அடித்தளம் அமைத்த பின்பு 1980களில் அரசாங்க ஊழியர்கள், பிரதமர், அமைச்சர்கள் சம்பளம் அதிக அளவு உயர்த்தப்பட்டது. அரசு ஊழியர் சட்டங்கள் காமன்வெல்த் நாடுகளில் இந்தியாவைப் போலவே சிங்கப்பூரில் இருந்தாலும் Public service™ இந்த அளவுக்கு ஊழல் ஒழிப்பு வியத்தகு நடவடிக்கை என்கிறார். சென்ற வாரம் The Histiry of singapore public service புத்தகத்தை வெளியிட வந்திருந்த Dr.N.C.Sexana (INDAN NATIONAL ADVISONY COVNCIL)

 

1992ல் சிங்கப்பூர் வந்த சீன அதிபர் Mr. Den Xiaping ஊழல் ஒழிப்பு போன்ற விஷயங்களில் சிங்கப்பூரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது அதிகம் என்றார். சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு

Exellent educated wook force open Trade routes Rule of law Low Tax

என்ற நான்கு காரணங்களுடன் ஊழல் ஒழிப்பும் மிக முக்கியமான காரணங்கள்.

அமெரிக்க அதிபரின் ஒபாமா சம்பளத்தை விட அதிக சம்பளம் சிங்கப்பூர் அமைச்சர்கள் பெறுகிறார்கள் என்ற கேள்வியை தேசிய பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து சிங்கப்பூர் பிரதமர் எதிர்நோக்கினார். அதற்கான தேவைகளும், சூழ்நிலையும் அவர் விளக்கியபோது எதிர்க் கேள்விகளுக்கு இடமில்லாமல் போயிற்று.

ST Forum பகுதியில் ஒரு வாசகர் அப்படி ஒன்றும் மக்கள் பணத்தை சம்பளமாகக் கொடுத்துவிடவில்லை என்பதை இவ்வாறு பட்டியலிட்டார்.

சிங்கப்பூரரின் வருமானத்தில் ஒரு டாலரின் 20 சென்ட்ஸ் GST மற்றும் வரிகள் மூலம் அரசு எடுத்துக் கொள்கிறது. ஒட்டி நோக்க அமெரிக்கா, 40% பிரிட்டன் மதிப்புச் சட்டப்பட்ட VAT வரி சேர்த்து 56% மற்ற நாடுகள் 40 லிருந்து & 60% வரை மக்கள் பணத்தை எடுத்துக் கொண்டு பற்றாக்குறை பட்ஜெட் போடுகிறார்கள்.

ஊழல் ஒழிப்பின் காரணமாக தற்போதைய GDP 43000 டாலர்கள் 2020ல் 55,000 தொடும் என்கிறார்கள். அது சாத்தியமானால் உலகின் 10 பணக்கார நாடுகளில் சிங்கப்பூர் ஒன்றாகிவிடும்.

என்ன இருந்தும் ஜனநாயகம், சுதந்திரம் கூடுதலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இங்கு இருக்கிறதா? என்ற கேள்விக்கு விடையாக இவைகளை வைத்துக் கொண்டுள்ள நாடுகள் மக்களின் அடிப்படை வசதிகளுக்காக அல்லாடுவதைச் சொல்லலாம்.

இவ்வருடம் அநேகமாக மே, ஜூன் மாதங்களில் தேர்தல் நடக்கவிருக்கிறது, வாக்களிப்பது சிங்கப்பூரில் கட்டாயம் தகுந்த காரணங்கள் இல்லாமல் வாக்களிக்காமல் இருப்பது குற்றம். அப்படியும் 2006 தேர்தலில் 72,000 பேர் வாக்களிக்கவில்லை. 60,000 பேர் தகுந்த காரணங்கள் சொல்லி இந்தத் தேர்தலில் 1965க்குப் பிறந்த Post-65 இளந்தலைமுறை வாக்களிக்கவிருக்கிறார்கள். புதிய தலைமுறை வாக்காளர்களுக்காகப் புதிய தலைமுறை வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் அறிவித்து வருகின்றன.

மக்கள் செயல்கட்சி இதுவரை 12 புதிய வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. சென்ற தேர்தலை விட பட்டதாரி வாக்காளர்கள் இரண்டு மடங்காகி இருக்கிறார்கள்.

2006ல் 84க்கு 82ல் வெற்றி பெற்ற மக்கள் கட்சி ஊழல் ஒழிப்பில் குறிப்பிடத்தக்க நகரமாக்கிய இரண்டு லீக்களை விட்டால் அடுத்து யார் என்ற கேள்விக்கு எதிர்க்கட்சிகளிடமிருந்து கூட பதில் இல்லை, ஒரு சமயம் லீ குவான்யூ சொன்னார். ஒரு தடவை இலவசங்கள் கொடுத்துவிட்டால் அதை நாமே நினைத்தாலும் நிறுத்தமுடியாது, அதை விட நாட்டிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் எதுவுமில்லை என்றார்.

அண்டை நாடுகள் ஊழல் ஒழிப்பில் பின்தங்கியிருப்பது சிங்கப்பூரை அவ்வப்போது அசைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

இந்திய ஆயுதத் தொழிற்சாலை இயக்குநர் Sudipto gosh மீதான ஊழல் புகார்களை சி.பி.ஜ விசாரிக்க ஆரம்பித்தபோது அதில் முக்கிய பங்கு வகித்ததாக சிங்கப்பூர் நிறுவனங்கள், சிங்கப்பூர் டெக்னாலஜி மற்றும் மீடியா ஆர்க்கிடெக்ஸ் பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டன.

ஒரு நிகழ்ச்சிக்காக டைரக்டர் – நடிகர் சேரன் சிங்கப்பூர் வந்திருந்தார், இவ்வளவு சுத்தமாக, அழகாக, ஊழலற்ற சிங்கப்பூரிலிருந்து விட்டு ஊருக்கு வந்தவுடன் பழக்கத்தை மாற்றிக் கொள்கிறீர்கள் ஏன் அப்படி? என்று கேட்டு கைதட்டல் வாங்கினார். அவருக்கு உற்சாகம் தொற்றிக் கொண்டது. சட்டத்தினரைப் பார்த்து கேள்வி கேட்க விரும்புபவர்கள் கேட்கலாம் என்றார்.

நண்பர் சசிகுமார் எழுந்து ‘‘இங்கிருப்பவர்களிடம் நல்ல பெயர் எடுப்பதற்கும் கைதட்டல் வாங்குவதற்கும் நம் நாட்டைப் பற்றி தரக் குறைவாகப் பேசும் பல பேச்சாளர்கள் மாதிரி நீங்களும் பேசுகிறீர்கள். நம் நாட்டில் பெருமை கொள்ளும் விஷயங்கள் எதுவும் இல்லையா? என்று கேள்வி எழுப்பினார். சேரன் ‘‘நான் என்ன சீனர்களிடமும் மலாய்க்காரர்களிடமா போய் சொல்கிறேன். தமிழர்களிடம்தான் சொல்கிறேன் என்றார். அதுவரை OK. ஆனால் கூட்டம் முடியும் தருவாயில் சேரன், சசிகுமாரை வம்புக்கிழுத்தார். தள்ளுமுள்ளு ஏற்படும் நிலை உருவானது. கூட்டம் ஏற்பாடு செய்தவர்களுக்குத் தர்மசங்கடமான நிலைமை

 இப்படி சத்தம் போட்டுக் கொண்டிருந்தால் சிங்கப்பூரில் போலீஸ் வந்துவிடும் என்று சொல்லிக் கூட்டத்தைக் கலைத்தோம்

thanks: http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=4188

கிச்சன் நாரதர்

Posted: பிப்ரவரி 26, 2011 in பத்தி, uyirmmai.com

இமெயில் பார்க்காமல் இருப்பதற்கு ஒரு தைரியம் வேண்டும். புத்தகக் கண்காட்சியில் வாங்கி வந்த புத்தகங்களைக் கிடைத்த நேரத்தில் படித்துவிட்டுத்தான் மெயில் பார்ப்பது என்று கஷ்டப்பட்டு ஒரு நாளைக் கடத்திவிட்டேன். ஒன்றும் மெயிலில் விஷயமிருக்காது என்று திடமாக நினைத்துக் கொண்டிருக்கும்போதே அப்படி மெயில் வந்திருக்குமோ என்று வேறு ஆவலாக இருந்தது. கம்ப்யூட்டர் இருக்கும் அறையில் திரும்பத் திரும்ப யாரையாவது அழைத்துப் பேசிக் கொண்டிருந்தேன். புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டேன். எனக்கு ஏதோ கற்பனை ஓடிக் கொண்டிருப்பதாகவும் நினைத்துக் கொண்டேன். எனது கவனத்தை எதுவும் திசை திருப்பவில்லை. மெயில் திறப்பதா வேண்டாமா என்ற நினைப்பு மட்டுந்தான் கவனத்தில் நிரம்பியிருந்தது.

ப்ரீடம் என்று ஒரு சாஃப்ட்வேர் இருப்பதாக என் நண்பர் ஒருவர் சொன்னார். அது மெயில் பார்க்க அனுமதிக்குமாம். ஆனால் இன்டெர்நெட் இல்லாமல் போய்விடும். மறுபடியும் இன்டெர்நெட் பார்க்க நினைத்தால் அது கொஞ்ச நேரம் தயங்கிவிட்டுத்தான் அனுமதிக்குமாம். போகட்டும், ஒரு கிளிக் தானே என்று திறந்தேன். சென்னை வந்து திரும்பும் வரை மெயில் திறந்து பார்க்காமல் இருந்ததில் அவ்வளவு விஷேசமான செய்திகள் எதுவுமில்லை.

 

Inaugural Hawker Master Award முடிவுகள் வந்திருந்தன.

உணவுக் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் மனதை அறியும் மந்திரக் கோல்கள் வைத்திருந்த காலம் மலையேறிவிட்டது. உலகில் எந்த மூலைக்குச் சென்றாலும் வாடிக்கையாளர்களின் விருப்பங்களும், தேவைகளும் புரியாத மொழி பேசி நிற்கிறது. புதிய புதிய ஆயுதங்கள் உணவுத் தொழிலைத் தாக்குகின்றன. அத்துடன் உணவு சமைப்பதில் சுவையும், ஆரோக்கியமும் ஒரே நேர்க்கோட்டில் அமைவது பெரும் சவால்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் போட்டிக்கு சிங்கப்பூர் கிளாசிக்கல் உணவுகள் சிக்கன் ரைஸ், ரொட்டி பரோட்டா, பக்சார்மீ நாஸிலெமாக், லக்ஷா, சாக்வேதியோ தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன.

இதில் பேராசிரியர் டாமிகோ (Tammy Koa)உட்பட மலாய் சீனப் பத்திரிகைகளின் உணவுப்பகுதி ஆசிரியர்கள் நடுவர்களாக இருந்தார்கள்.

பொதுமக்கள் மொத்தம் 14,000 நாமினேஷன்கள் அனுப்பியிருந்தனர்.

அவற்றுள் 3 கடைகள் ரொட்டி பரோட்டா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. மூன்று கடைகளிலும் பரோட்டாவை ருசிபார்த்த நடுவர்கள் எதிர்பார்த்த சுவை அளவை அந்தக் கடைகள் பிரதிபலிக்கவில்லை என்று முடிவு செய்து மற்ற 5 பிரிவுக்கும் பதிவுகளை அறிவித்தார்கள். பரோட்டாவின் தரம் குறைந்து வருவதும் அதை இன்னும் மேம்படுத்த முயற்சிகள் தேவை என்பதும் இந்தப் போட்டி முடிவுகளின் கருத்தாக்கமாக அமைந்தது.

அதோடு ஒரு அங்காடி உணவகத்தில் சமைக்கும் சமையல்காரர் ஓய்வு பெறும்போது இன்னொரு திறமையுள்ள நபர் அந்த இடத்தை நிரப்புவதில்லை என்ற செய்தியும் பரவலாகப் பேசப்பட்டன.

மிகச்சிறந்த சமையல் வல்லுநர்கள் உலக அளவில் புகழ் பெற்றவர்கள். உணவுகளை மட்டும் உண்பதற்கு சுற்றுப் பயணிகள் சிங்கப்பூர் வருவதில்லை. இங்குள்ள தனித்தன்மை உணவுகளைத் தேடி ருசிக்கும் பலர் வருகிறார்கள்.

இந்த மெயிலை எனக்கு அனுப்பியிருந்த (Mr.Ng) இங் உங்கள் கடைக்கு எத்தனை நாமினேஷன்கள் வந்தன என்று கேட்டிருந்தார். அவர் உணவு விளம்பரத் துறையில் தனி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். புத்தக வாசிப்பு பழக்கமுள்ளவர். சீனப் பெருநாளுக்கு அவருடைய அலுவலக ஊழியர்கள் மற்றும் நண்பர்களுடன் என்னையும் அழைத்திருந்தார். இந்தியாவில் விளம்பர நிறுவனம் அமைக்கும் முயற்சியில் இருக்கிறார். சென்னை புத்தகக் கண்காட்சியில் அவருக்குச் சில புத்தகங்கள் வாங்கி வந்திருந்தேன். அவருக்கான சில தகவல்களையும் குறித்து வைத்திருந்தேன். டின்னர் முடிந்தவுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். சமையலில் இந்தியாவில் பலவிதமான எண்ணெய் உபயோகம் பற்றிக் கேட்டார்.

தென்னிந்திய, வட இந்திய சமையலில் கடலை எண்ணெயும், கிழக்கில் கடுகு எண்ணெயும், மேற்குக் கடற்கரை, தெற்குக் கடற்கரை மாநிலங்களில் தேங்காய் எண்ணெயும் தற்போது பரவலாக சூரியகாந்தி, சோயா, பாமாயில் என்று சமையலில் புகுந்துவிட்டன. அந்தப் பகுதியில் அபரிதமாகக் கிடைக்கக் கூடிய எண்ணெய் வித்துக்கள் சார்ந்து அதன் உபயோகங்கள் இருக்கின்றன என்றேன். அவர் வட இந்திய சுற்றுப்பயணம் செய்தபோது பொதுவாக டெல்லி, உத்தரப் பிரதேசம், ஓரிஸ்ஸா மற்றும் தமிழ்நாட்டில் கூட வட இந்திய உணவுகளை ‘‘பஞ்சாபி’’ திஷீஷீபீs என்று சொல்வதாகச் சொன்னார். பஞ்சாப் அடுப்பின் (தந்தூர்) பெயரில்தான் ‘தந்தூரி’ சிக்கன் வகைகள் பெயர் பெற்றதைச் சொன்னேன்.

இந்தியாவில் இரவில் பால் பொருட்கள் சாப்பிடுவது தென்கிழக்கு ஆசியாவின் உணவுப் பழக்கங்களில் மாறுபட்ட விஷயமாக அவர் குறிப்பிட்டார்.

ஒரு பெரிய பெட்டியில் அலுவலக ஊழியர்களுக்கு ‘‘அங்பாவ்’ ((Hangbao) அவர் போட்டு வைத்து எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். பொதுவாகத் திருமணம் ஆகாதவர்கள் 40 வயதைக் கடந்துவிட்டவர்களாக இருந்தபோதும் அங்பாவ் கொடுக்கும் பழக்கம் உள்ளது. புதிய திருமணத் தம்பதிகளுக்கும் கொடுக்கிறார்கள். உண்மையில் சீனக் கலாச்சாரப்படி அவர்களுக்கு இரண்டு சிவப்பு மெழுகுவர்த்திகளைக் கொடுத்து வாழ்வில் வெளிச்சத்தை துவக்கி வைத்து வாழ்த்துவதுதான் சரியான முறை என்று சொன்னார். ‘அங்பாவ்’ கொடுப்பதில் முக்கியமாக சென்ற வருடத்தில் கொடுத்த அங்பாவ்’ இந்த வருடம் குறையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். இவர்களுடைய கலாச்சாரத்திலும் அங்பாவ்’ தொகையை ‘மாமிகளே’ நிர்ணயம் செய்கிறார்கள் என்பதை மாமாக்களிடம் ‘அங்பாவ்’ வாங்கும் குழந்தைகள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

15 நாள் கொண்டாட்டங்களில் ஒரு நாள் எங்கு பார்த்தாலும் ‘கரும்பை’ வாங்கி வீட்டுக்குக் கொண்டு செல்கிறார்கள் ஏன் என்று கேட்டேன். கரும்புத் தோகையிலிருந்து ஆரம்பித்து முழுக் கரும்பையும் தீ சட்டியில் போட்டு எரித்து விடுவோம் என்றார். சீனக் கொண்டாட்டங்களில் ‘கிச்சன் நாரதர்- Zao Jun’s என்று ஒருவர் இருக்கிறார். அவர் 23 வது நாள் அனைத்து வீடுகளுக்கும் விஜயம் செய்து அவர்களுடைய அடுப்படியைப் பார்வையிட்டு, உணவுப் பொருட்களை எப்படி உபயோகப் படுத்தியிருக்கிறார்கள். அடுப்படியைச் சுத்தமாக வைத்திருக்கிறார்களா போன்ற விபரங்களைச் சேகரித்து சொர்க்கத்திலுள்ள The Jude emperor இடம் சென்று பட்டியல் வாசிப்பாராம். அதன் அடிப்படையில் Jude emperor அந்தக் குடும்பத்தை தண்டிப்பதா அல்லது வெகுமதி கொடுப்பதா என்பதைத் தீர்மானிப்பாராம். அதனால் இந்த கிச்சன் நாரதர் Zao Jun’s ன் காகித உருவப் படங்களைத் தேன் தடவி அல்லது கரும்பைக் கூட வைத்து எரித்து Jude emperor இடம் இனிப்பான செய்திகளை சொல்வதற்கும் பசையாக ஒட்டும் அரிசி கேக்கைத் தடவி அவரிடம் குடும்பத்தைப் பற்றித் தவறாகச் சொல்லாமல் வாயை ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளச் செய்வதற்கும் சடங்குகள் செய்வார்களாம்.

மிஸ்டர் இங் ‘‘அங்பாவ்’’ கொடுத்து முடித்த பிறகும் அதிகமான கவர்கள் மிஞ்சியிருந்தன. சீனப் பெருநாள் முடிந்து முதல்நாள் வேலைக்கு வரும் ஊழியர்களுக்கு மறுபடியும் கொடுப்பார்களாம்.

கவரைக் கொடுத்துவிட்டு அந்த வருடத்தை துவக்கி வைப்பது ஒரு நல்ல முதலாளியின் கடமை என்றார்.

இன்னொரு மெயில் வந்திருந்தது.

அங்மோ கியோவில் ஒரு உணவுக்கடை இருக்கிறது. அங்கு சாப்பிட்டுவிட்டு பில் கட்ட மறந்து போனவர்களையும் தப்பித்துப் போனவர்களையும் CCTV கேமராவில் பதிவு செய்து அவர்களுடைய முகத்தை பிரிண்ட் போட்டு ‘EAT and run – Dinner’s’என்ற தலைப்பிட்டு ஒட்டி வைத்திருக்கிறார்களாம். அட, இதுவரை நம் கண்ணுக்குப் படவில்லையே என்று நேரே போய்ப் பார்த்தேன். அந்தக் கடை கிளேபாட் நண்டுக்குப் புகழ் பெற்றது. ஒவ்வொரு டேபிளுக்கும் நேராக கேமரா தொங்குகிறது.

போட்டோவில் உள்ளவர்களைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். வேண்டுமென்றே ஏமாற்றிவிட்டுச் சென்ற முகங்களாகத் தெரியவில்லை.

சப்ளையர் ‘இதில் யாராவது உங்கள் கண்ணில் பட்டால் போன் அடிங்க’ என்று சொல்லிவிட்டு போட்டோவில் உள்ளவர்களை ‘‘சீ பா வாங்கேன்’’ என்றார்.

thanks: உயிரோசை (http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=3982)

ஏழாம் பொருத்தம்

Posted: திசெம்பர் 22, 2010 in பத்தி, uyirmmai.com
குறிச்சொற்கள்:

கல்லூரியில் எண்ணியல் (Arithemetic) வகுப்புதான் நான் அதிகமாக கட் அடித்தது. ஜமால்முகம்மது கல்லூரி பேராசிரியர் ஜியாவுதின் வகுப்பில் நுழைந்தவுடன் போர்டில் கை வைத்துவிட்டால் விடை எழுதிவிட்டுத்தான் திரும்பிப்பார்ப்பார். சிக்கலான கணக்குகளை அவர் தோற்கடித்து வென்றதுபோல சாக்பீஸ்களை இரண்டிரண்டாக உடைத்து கீழே போட்டுக் கொண்டிருப்பார். அவர் போர்டில் செய்முறை செய்யச் சொல்வதுதான் எனக்கு பெரிய சவாலாக இருக்கும். எப்போதாவது சில நேரங்களில் கொஞ்சமாக சிரிப்பார்.

ஒருநாள் வகுப்பிலுள்ள அனைவரையும் 10 வரையுள்ள எண்களை ஒன்றை நினைத்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு ஒவ்வொரு எண்ணாக குறிப்பிட்டு கையைத் தூக்கச் சொல்லி சரிபார்த்தார்.

01, 03, 04, என்று எண்களை யாரும் நினைவில் கொள்ளவில்லை, ஆக அதிகமாக நம்பர் 7 ஐ அதிகம் பேர் நினைத்திருந்தார்கள். ஒரே ஒரு மாணவன் 0 வை நினைத்திருந்தான். பேராசிரியர் அன்று சிரித்தபடி வகுப்பில் எண்களின் வரலாற்றையும் அதன் பண்புகளையும் பற்றிக் கொடுத்த லெக்சர் அவரை நினைவு கொள்ள வைக்கின்றன. விடை சரிதானா என்று ப்ளாக்போர்டின் முன்பு நாம் தடுமாறி நிற்கும்போது ஒரே ஒரு குளு கொடுப்பார். அது ஒரு Fibonacci நம்பர் என்று சொல்லிவிடுவார். 0,1,2,3,5,8,13 இந்த Fibonacc நம்பரை வைத்து கட்டிடக்கலை நுட்பங்கள் பல தோன்றிவிட்டன. ஆனால் என்னிடம் யாராவது மைல் கணக்கை கிலோமீட்டரில் கேட்டால் மட்டும் ஒரு நொடியில் சொல்லி எனக்கு Fibonacc சூத்திரம் தெரியும் என்று காட்டிக்கொள்வேன். பலநூறு ஆண்டுகளாக தீர்க்கப்படாத கொள்கை என்று ஒன்றிருந்தால் அது எண் கொள்கையாகத்தான் இருக்க முடியும் என்று சொல்வார்.

ஒரு 10 பேரிடம் நீங்கள் ஒரு நம்பர் சொல்ல கேளுங்கள், அதிகம் பேர் 7 ஐக் குறிப்பிடுவார்கள். 7 ஒரு அதிசயமான எண். அதனால்தான் ஏழு அதிசயங்கள், ஏழு நிறங்கள், கண்ணுக்குத் தெரியக்கூடிய ஏழு கண்டங்கள், ஏழு தலைமுறைகள், ஏழு ஸ்வரங்கள் எஸ்ரா கூட குழந்தைகள் புத்தகத்திற்கு ஏழு தலை நகரம் என்றுதான் பெயர் வைத்திருக்கிறார்.

Mr.ஞானசேகர் பக்கத்து புளோக்கில் குடியிருக்கிறார், அவரை Mr.சேகா என்றுதான் கூப்பிடுவார்கள். ஞானம், ர் சீனர்கள் வாயில் நுழையாததால் அவருடைய பெயர் அப்படி சுருங்கிவிட்டது. நீண்ட காலமாக டாக்ஸி ஓட்டுகிறார், சிங்கப்பூரில் அவருக்குத் தெரியாத இடங்களில்லை. அநேக நாட்களில் காலையில் வீட்டிலிருந்து கடைக்கு அவர்தான் கூட்டிச்செல்வார். ஹெண்டர்சனிலிருந்து CTE யில் புகுந்து அப்பர் சிராங்கூனில் வெளியேறி 20 நிமிடங்களில் கொண்டு சேர்த்துவிடுவார், அவர் ஒரு கணக்குப்புலி. பயணிகள் டாக்ஸியில் ஏறும்போது இடத்தைச் சொன்னவுடன் தூரத்தைக் கணக்கிட்டு ஹைவேயில் சென்றால் என்ன தொகை வரும் சிட்டிக்குள் புகுந்து Jam இல்லாமல் பயணித்தால் என்ன தொகைவரும் என்று துல்லியமாக சொல்லிவிடுவார். கிட்ட தட்ட அந்த தொகைக்குவந்து நிற்கும்போது என்ன ok வா என்று அவர் கணக்குத் திறமையை அவரோ அங்கீகரித்துக்கொள்வார். வாழ்வின் அனைத்து சம்பவங்களும் எண்களோடு தொடர்பு உள்ளன என்று அழுத்தமாக நம்புவார், அவ்வவ்போது பயணிகளுக்கு நியூமரலாஜி டிப்ஸ் கொடுத்துக் கொள்வார் பெரும்பாலும் அது 4D (அதிஷ்டக்குலுக்கல்) எடுப்பதில் போய் முடியும்.

அவரைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு அசோகமித்ரன் எண்கள் சிறுகதை நினைவுக்கு வந்துவிடும். காலையில் 7 மணிக்கு எழுந்து பக்கத்துகடையில் தினசரிகள் படிக்க முயன்று ஒவ்வொரு தடவையும் யாராவது படித்துக் கொண்டிருப்பார்கள். 8 குடித்தனங்கள் உள்ள வீட்டில் காலைக் கடன்களை முடித்து வேலைக்குப் போவதற்கு முன்பு மற்ற காரியங்கள் சரிந்து விழும் அபாயத்தில் தினசரிகளை படிப்பதையே விட்டுவிடும் கதாநாயகன் போல Mr..செகாவும் 7 மணிக்கு படுக்கையிலிருந்து எழ நேரமாகிவிட்டால் டாக்ஸி ஓட்டமாட்டார். அடுத்தடுத்த வேலைகளை கணக்கிட்டு எந்த வேலையும் செய்யாமல் விட்டிலிருந்து விடுவார் மனைவி கூட இருந்தால்தான் அவரிடம் சுறுசுறுப்பை பார்க்கமுடிகிறது என்பேன். மற்ற வீடுகளைப்போல் நினைக்காதீர்கள் என் வீட்டில் நான்தான் நம்பர் சத்து, மனைவி வெறும் கோஸம் தான் என்பார். ஆனால் அந்த கோஸம் (0) இருந்தால் இயல் எண் ஒன்று முழு எண் பத்தாக ஆகும் என்று புளோக்கில் அனைவருக்கும் தெரியும்.

புதிய இடங்களுக்கு வற்புறுத்திக் கூப்பிடுவார். மரினா ஸ்கைபார்க் திறந்த அன்று என்னையும் கூட்டிச் சென்று கார் நிறுத்த Lot கிடைக்காமல் மனிதர் அல்லாடி விட்டார். உலகின் தலைசிறந்த நினைவுச் சின்னங்களும் கட்டிடங்களும் சென்ற நூற்றாண்டுகளில் மதத்தை பரப்பவும், ஆள்பவர்களின் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்கும் உருவாக்கப்பட்டன. தற்போது நவீன யுகத்தில் கலாச்சாரத்தைப் பரப்புவதற்கும் வர்த்தக வளர்ச்சிக்கும் எழுப்பப்படுகின்றன. நவீன கட்டிடக் கலையின் வளர்ச்சியை ஒரு சமூகவியல் நிகழ்வாக கருதுகின்றனர். பிற அழகியல் துறைகளை ஓவியம் சிற்பம் போன்றவற்றுடன் கட்டிடக் கலை நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தபோதும் மனிதர்கள் உள்ளேயும் சென்று பயன்படுத்தும் தன்மையை தனித்துவமாகக் கொண்டுள்ளன. உலகில் ஆக அதிக உஉயரமுள்ள கட்டிடமாக 1999ல் துபாயின் Barj-al-arab சுமார் 821 மீட்டர். .

தைபேயின் தைபோ 101 சுமார் 501 மீட்டர் உயரமுள்ளது. தெற்காசியாவில் மலேசியாவின் இரட்டைக் கோபுரங்கள் தவிர அதிக உயரமான கட்டிடங்கள் எதுவுமில்லை. குறிப்பாக இந்தியாவில் மும்பையிலும், கல்கத்தாவிலும் சில உயரமான கட்டிடங்கள் தவிர வேறு மாநிலங்களில் பெயர் சொல்லும் உயர்ந்த கட்டிடங்கள் இல்லை.

சிங்கப்பூரில் சமீபத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்கைபார்க் கட்டிடம் ஒரு பொறியியல் அதிசயம் என்று சொல்லலாம். சுமார் 200மீட்டர் உயரத்தில் ஈபில் டவரை படுக்கைவசத்தில் வைத்ததுபோல நீளத்தில் சுமார் 4 1/2 மடங்கு A 380 ஜெட் விமானத்திற்கு ஈடானது. சுமார் 124000 சதுர மீட்டர் பரப்பளவில் ஒரே நேரத்தில் 3900 உள்ளே செல்லமுடியும். மின்னலைத் தாங்குவதற்கு அமைக்கப்பட்டுள்ள Cantilever உலகில் ஆக நீளமானது என்று சொல்கிறார்கள். Mr.சேகா அண்ணாந்து பார்த்துக் கொண்டே இந்த 200 மீட்டர் உயர் கணக்குக்கு கீழே உள்ள தண்ணீரின் ஆழத்தையும் சேர்த்து கணக்கிட்டதா என்றார். அவர் மாதிரியே எனக்கு இன்னம் பல விசயங்களில் சந்தேகங்கள் இருக்கின்றன.

ஒரு நாள் துலாங் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது பல்லில் குத்தி விட்டது. பல் வலி வந்தால்தான் பல் டாக்டர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தேடச் சொல்கிறது. ஒரு வழியாக முன்பதிவு செய்து டாக்டரை பார்த்தால் அவர் ஆண்டி பயாடிக்ஸ் 7 நாட்களுக்கு எடுத்துக் கொள்ளுங்கள் சரியாகிவிடும் என்றார் அது ஏன் 6 நாட்கள் 8, 9 நாட்கள் என்று டாக்டர்கள் கூறுவதில்லை. இந்த 7 நாட்கள் கிருமிகளுக்கு தவணை கொடுக்கிறார்களா அல்லது ஒரு கிருமியை கொல்ல 7 நாட்கள் என்று ஏதாவது கால அட்டவணை உள்ளதா?

கிமு 321ல் ரோமானிய அரசர் கான்ஸ்டாண்டின் (Constantic) ஒருவாரத்தை 8 நாளிலிருந்து 7 நாட்கள் போதும் என்று உலக காலண்டரை மாற்றி அமைத்தார். அப்படியெனில் அவருக்கும் இப்போதுள்ள 7 நாட்கள் கணக்கு தெரிந்திருக்குமோ? சமீபத்திய ஒரு மருத்துவ ஆய்வு சாதாரண வலி காய்சலுக்கு 7 நாட்கள் மருந்து எடுத்துக்கொள்ளச் சொல்வது மருத்துவ ஆராய்ச்சிகளின் படி நிருப்பிக்கப்படாத ஒன்று என்று தெரிவித்திருக்கிறார்கள். அப்படியானால் ஒருநாள் கூடுதலாக சாப்பிடும் லட்சக்கணக்கான மக்களுக்கு உடலின் எதிர்ப்புசக்தி சூப்பர்பக்கை எதிர் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படாதா? இன்னொன்று நோயாளிகளின் நிலைமையை 24 மணி நேரம் கழித்துதான் சொல்லமுடியும் என்று சொல்கிறார்கள். அது பூமி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிக் கொள்வதற்கான நேரமா, இல்லை நோயாளிகள் மருந்துக்கு தாக்குப்பிடிக்கக் கூடிய நேர அளவா?

பங்கு சந்தைகளில் முதலீடு செய்தவர்களுக்கு முதல்நாள் குறியீடு எண் 9.99 இருந்தால் அநேகமாக 10.01 க்கோ அல்லது அதற்குமேலோ ஏறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால் பெரும்பாலும் 10.03க்கு முதல்நாள் குறியீடு இருந்தால் அது அதற்கு மேல் ஏறுவதற்கு பகீரதப் பிரயத்னம் செய்ய வேண்டியிருக்கும். செருப்புக் கடைகளில் 19.95 வெள்ளி செருப்பு விலை சும்மா 0.05 சில்லிங் குறைத்துப் போட்டு விளையாட்டுக் காண்ப்பிக்கிறார்கள் என்று தெரியும். இருந்தாலும் 20.50க்கு செருப்பை நாம் வாங்குவதை விட 19.95 செருப்பைத்தான் வாங்குகிறோம். முக்கியமான இன்னொன்று யாரையாவது சந்திக்க நேரம் கொடுக்கும் போது 9.30க்கு சந்திக்கிறேன் 10.30க்கு சந்திக்கிறேன் என்று சொல்கிறோம். 9.32க்கு சந்திக்கிறேன் 10.26க்கு சந்திக்கிறேன் என்று சொன்னதுண்டா? இவைகளைல்லாம்தான் எண்களின் சித்து விளையாட்டாக இருக்குமோ?

Mr.சேகாவிடம் இந்தவாரம் உங்களைப்பற்றிதான் எழுதப்போகிறேன் என்று சொன்னேன் வயதைமட்டும் குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அத்தோடு ஸ்பெக்ட்ரம் முறைகேடுகளில் எத்தனையோ ஆயிரம் கோடி என்று சொன்னீர்களே அதை மில்லியனில் சொல்லுங்கள் என்றார். எதற்கு கேட்கிறீர்கள் என்றேன் கோஸமெல்லாம் போக நாலு நம்பர் வருமில்லையா! இன்று ஞாயிற்றுக்கிழமை சின்னது 10 வெள்ளி, பெரியது 10வெள்ளி வைத்து அழுத்தலாம் என்றிருக்கிறேன். பரிசு விழுந்தால் ஊரில் ஒருலட்சம் கடன் இருக்கிறது அடைத்துவிடலாம் என்றார்.

thanks: உயிரோசை.Com  ஏழாம் பொருத்தம்

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3753

©அப்துல்காதர் ஷாநவாஸ்
shaaanavas@gmail.com

நண்பர் ஜலால் அடிக்கடி விமானப் பயணம் செய்பவர். இருந்தாலும் அவர் அமெரிக்கா போகிறேன் என்று சொன்னவுடன் அவர் பயணத் திட்டத்தைப் பற்றி அறிந்துகொள்ளும் திரில்லான ஆர்வம் எனக்குத் தொற்றிக்கொண்டது. நாள் நெருங்க நெருங்க அவர் மறந்திருந்தாலும் பயண ஏற்பாடுகளைப் பற்றிக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். தொடர்ந்து 18 மணிநேரம் பயணம். சிங்கப்பூரிலிருந்து ஜப்பானுக்குச் சென்று டிரான்ஸிட் பிளைட் எடுத்து லாஸ் ஏன்ஜெல்ஸ், பிறகு லாஸ் வேகாஸ்க்கு உள்நாட்டு விமானத்தைப் பிடிக்கவேண்டும். அதனால் அவருக்கு ஜெட்லாக் (Jet lag) ஜெட் தளர்ச்சி வந்துவிடுமோ என்று பயம். அவர் ஒரு பிராக்டிகலான ஆசாமி. இரண்டுநாட்கள் உடம்பை அதற்கேற்றவாறு தயார் செய்ய ஆரம்பித்தார். மஸாஜ், பிசியோதெரபி என்று புகுந்துவிட்டார்.

இந்த ஜெட்லாக் என்பது ஒரு கால மண்டலத்திலிருந்து இன்னொன்றுக்குச் செல்லும்போது ஏற்படும் உயிரியல் ஒருங்கமைப்பு விசயம். இரவு, பகல் சுழற்சிக்கேற்ப இசைவடையாமல் உடம்பு எதிர்கொள்ளும் காலதாமதத்தால் ஏற்படும் சோர்வு என்கிறார்கள். அத்துடன் தற்போது விமான நிலையப் பாதுகாப்பு சோதனைகளைக் கடப்பதற்கு டிராவல் எக்ஸ்பர்ட் கன்ஸல்டன்ஸ் வந்துவிட்டார்கள். சிக்காகோ சென்று கொண்டிருந்த விமானத்தில் நைஜீரியர் உள்ளாடைக்குள் வெடிமருந்து வைத்த நிகழ்விற்குப் பிறகு பயணிகளிடம் உள்ளாடைக்குள்ளும் நுழைந்து சோதனை செய்வதற்குப் பாதுகாப்பு விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளனவாம். நீங்கள் கைபடாமல் பாதுகாப்பு சோதனையிலிருந்து வெளியேற சட்டையில் உலோகத்திலான பித்தான்கள், பெண்கள் உள்ளாடைகளின் ஓரத்தில் வயர் இல்லாமலும் உடை அணிந்து கொள்வது உத்தமம்.

விமானப் பயணிகள் திரில்லிங்காகவும் குதூகலமாகவும் இருந்த காலங்கள் மலையேறிவிட்டன. சிங்கப்பூரிலிருந்து ஊருக்கு வருபவர்களை மாதக்கணக்காக பயணம் எப்போது வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டுக்கொண்டிருக்கும் பழக்கம் பழசாகிவிட்டது. அதேபோல் விமானப் பயணங்களுக்கென்று பிரத்யேக உடைகள் அணிவதும் குறைந்துகொண்டே வருகிறது. சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் பாதிக்கு மேல் இப்போது பெர்முடாஸில் விமானம் ஏறுகிறார்கள். சென்னையில் ரியல் எஸ்டேட் செய்துகொண்டிருக்கும் சிங்கப்பூர் நண்பர் ஏர்போர்ட்டில் இறங்கியவுடன் ஜாக்கிங் செல்ல ஏதுவாக ஜாக்கிங் கேன்வாசுடன் இங்கிருந்து விமானம் ஏறுவதாகச் சொன்னார். ஜெட்லாக்கை சமாளிக்க சிலர் மெலமைன் மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறார்கள். அதற்கு மாற்றாக இது light தெரபி என்றார் (நிறைய பயண அனுபவமுள்ளவர். சரியாகத்தான் இருக்குமோ).

1963ல் ‘VIP’ என்று ஒரு ஹாலிவுட் படத்தில் ரிச்சர்ட் பர்ட்டனும், எலிசபெத் டெய்லரும் லண்டன் ஏர்போர்ட்டில் விமானம் கோளாறாகிக் காத்திருக்கும் கதையே அந்தக் காலத்தில் பெரிய ஹிட் கொடுத்ததாம்.

1970களில் ‘ஏர்போர்ட்’, ‘ஏர்போர்ட் 75’, ‘ஏர்போர்ட் 77’, ‘கன்கார்டு 79’ என்று வரிசையாக வந்து திரில்லிங் கொடுத்தன. 2005ல் ‘தி டெர்மினேட்டர்’ மற்றும் கொரியப்படம் ‘ரெட் ஐ’, ‘ஸ்நேக்ஸ் ஆன் தி பிளேன்’ படங்களோடு விமானக் கடத்தல் மற்றும் அனுபவங்களை வைத்து எடுக்கப்பட்ட படங்கள் குறைந்துவிட்டன.விதவிதமான கதைகளைச் சொல்லி தீவிரவாதிகளுக்கு இவர்கள்தான் கதைத் தீனி போடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

நடிகர் சுருளிராஜன் 1980ல் அவர் இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னால் நடிகர் விஜயனுடன் தாமன்ஜீராங்கில் உள்ள என் தந்தையார் கடைக்கு வந்தபோது சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் கொடுத்த டாடி பெர்ப்யூம் மற்றும் விஸ்கி சாப்பாடு பற்றி சென்னை திரும்பும்வரை சிலாகித்துப் பேசிக்கொண்டே இருந்தாராம்.அப்படிக் கொடுப்பதெல்லாம் முடிவுக்கு வந்துவிட்டன. பட்ஜெட் ஏர்லைன்ஸ்களில் வெறும் ஆம்லெட்டை மட்டும் வைத்து மதிய உணவு கொடுக்கிறார்கள். சமீபத்தில் ஓர் ஆய்வில் ஜெட் இன்ஜின் சப்தம் சுவை நரம்புகளை மழுங்கடிக்கச் செய்வதால் பறந்து கொண்டிருக்கும்போது நாக்கின் ருசி பற்றி வாயைத் திறக்காதீர்கள் என்கிறார்கள்.

 தாய்லாந்து புக்கெட் தீவுகளுக்குச் சென்றுவிட்டு சில்க் ஏர் விமானத்தில் சிங்கப்பூர் திரும்பும்போது குளிர்தாங்காமல் என் நண்பர் K ஓவர் கோட் போட்டுக்கொண்டு வந்தார். செக்யூரிட்டி செக்கில் நிறுத்தி கோட்டைக் கழற்றச் சொன்னார்கள். அப்படியெல்லாம் கழற்ற முடியாது என்கிற மாதிரி நின்று கொண்டிருந்தவரை ரூமுக்குள் நெட்டித் தள்ளிக் கொண்டு சென்று திரும்ப கொண்டுவந்துவிட்டார்கள். கோட்டைக் கழற்ற வேண்டியதுதானே என்று கேட்டோம். உள்ளே ஸ்லீவ்லெஸ் மினிகோட் அணிவதற்குப் பதில் முண்டா பணியனைப் போட்டுக்கொண்டு வந்திருக்கிறார்.

மோசமான வானிலை, என்ஜின் கோளாறு என்ற காரணங்கள் 9/11 க்குப் பிறகு பெரிய மாற்றம் கண்டுவிட்டது. கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் லேமனிலிருந்து அனுப்பப்பட்ட Fedex பார்சல் வெடிகுண்டு நிலைமையை இன்னும் மோசமாக்கிவிட்டது. ஓர்லேண்டோ ப்ளோரிடா விமான நிலையத்தில் TSA (Trasnport securtity administration officer) 8 வயது சிறுவனை சட்டையைக் கழற்றி சோதனை செய்திருக்கிறார்கள். விமானத்தில் ஏறுவதற்கு அழகாக டிரஸ் பண்ணிக்கொண்டு வந்திருந்த சிறுவனின் பெற்றோர் அதிர்ந்து விட்டார்களாம். பிள்ளைகளைத் தொட்டு விளையாடுவதற்கு அப்பா அம்மாவுக்கு அடுத்தபடி TSAக்கும் உரிமை உண்டு என்று முக்கிய பாடமாகச் சொல்லி வைக்கலாம். ஆனாலும் சில நேரங்களில் இந்த மாதிரி பாடங்களைத் தீவிரவாதிகள், முன்னாலேயே படித்துத் தேர்ந்துவிடுகிறார்கள்.

சென்ற வருடம் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வந்து திரும்பும்போது நண்பன் சம்சுவும் நானும் பழங்கள் வாங்கி ஆளுக்கு இரண்டு கூடை பேக்செய்தோம். என் கூடைகளில் நெல்லிக்காய், நாவல்பழம், சீத்தாப்பழம் இருந்தன. சம்சு காய்கறிகளை மட்டும் இரண்டு கூடைகளில் பேக் செய்துவிட்டார். சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் கன்வேயர் பெல்ட்டில் ஒரு கூடை மட்டும் சுற்றிக்கொண்டிருந்தது. எனக்கும் முன்னதாக நண்பர் சென்றுவிட்டார். பயணிகள் வெளியேறும் வரை காத்திருந்து ஏர்போர்ட் லக்கேஜ் டேக்கை கொடுத்துக் கூடை காணாமல்போன விபரங்களைச் சொன்னேன். அப்படி எந்தக் கூடையும் இல்லை என்றார்கள். அடுத்தநாள் வந்தால் கேமரா பார்த்துவிட்டுச் சொல்வதாகச் சொன்னார்கள். அங்கு அதிகமாக மறந்து விட்டுப்போன சமாச்சாரங்களில் லேப்டாப், செல்போன், மூக்குக் கண்ணாடி இவற்றுடன் பல் செட்டுகளும் இருந்தன.

 சமீபத்தில் சிங்கப்பூரில் புகழ்பெற்ற வக்கீல் தீபாவளிக்கு ஸ்வீட் எடுத்து வந்திருக்கிறார், அட்டைப்பெட்டி காணாமல்போய்விட்டது. பெட்டியை அன்றே கண்டுபிடித்துக் கொடுத்துவிட்டார்கள். ஆனால் அதற்குள்ளிருந்த ஸ்வீட்டை யாரோ காலிபண்ணிவிட்டார்கள். விசயம் கோர்ட் படியேறி வெளியே ஒரு தொகை கொடுத்து விமான நிறுவனம் செட்டில் பண்ணியது. வக்கீல் அந்த ஸ்வீட்டான தொகையை சிண்டாவுக்கு (இந்தியர் நலச் சங்கம்) நன்கொடையாகக் கொடுத்துவிட்டார்.

என் பழக்கூடையைப் பத்திரமாக சம்சு எடுத்துப்போய்விட்டான். “அல்லாம்மா, வண்டி வந்துவிட்டது. உன்னை காணோம்லா. உன் கூடையை நான் எடுத்துவந்துவிட்டேன். நெல்லிக்காய் சரியான புளிப்பு” என்றான், நான் சொன்னேன், “தண்ணீர் குடி இனிக்கும்” என்று (எரிச்சலுடன்). சமீபத்தில் ஒரு செய்தி, ஹாங்ஹாங்கில் விமானத்தில் ஏறிய வயதான வெள்ளைக்காரர் வான்கோவரில் இறங்கும்போது சீன இளைஞராக மாறிவிட்டிருந்தாராம் (ஆள் மாறாட்டம்). சிங்கப்பூரர் ஒருவர் தன்னுடைய மகன் கடவுச் சீட்டில் தவறாகப் பயணம் செய்து ஹாங்ஹாங்கில் இறங்கும் போதுதான் கவனித்தாராம், தன்னுடைய பாஸ்போர்ட் வீட்டில் பத்திரமாக இருப்பதை. மேய்ப்பர்கள் இருந்தும் ஏமாற்றிச் செல்லும் ஆடுகள்.

 பட்ஜெட் ஏர்லைனில் பயணம் கொஞ்ச மிஞ்சமிருந்த திரில்லிங்கையும் குறைத்துவிட்டது. Ryan air நின்றுகொண்டே பயணம் செய்யும் வகையில் விமானங்களை அறிமுகப்படுத்தவிருக்கிறது (குறுகிய தூரங்களுக்கு). கை லக்கேஜ் எங்கே வைத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. Air Newziland லாஸ் ஏன்ஜெல்ஸ் மற்றும் லண்டன் விமானங்களில் ஜோடிகள் தங்களுடைய இருக்கைகளைப் படுக்கை வசத்தில் மாற்றிக் கொள்ளும் விதமாக (Sky couches ) வரும் ஏப்ரலில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதில் காலியாக இருக்கும் இருக்கைகளை நிரப்புவதாக நினைத்துக்கொண்டு ஜோடிகளை மாற்றிப் படுக்கவைத்துவிட்டால் விமானப் பயணங்கள் ரொம்ப சுவாரஸ்யமாக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன (சும்மா ஒரு கற்பனை). அதுவரை நீங்கள் சீட் பெல்டைக் கட்டிக்கொண்டு இருக்கையில் அமர்ந்து கழிவறைக்கு யாராவது அதுவும் காலைச் சொறிந்து விட்டுச் செல்கிறார்களா என்பதைக் கவனித்துக் கொண்டு பயணம் செய்தால் போதுமானது.

     

thanks:http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3732